நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 31 ஜனவரி, 2025

மும்பையில் கிடைத்த நெல்லை இரா. சண்முகம்(கோலாலம்பூர்) ஆவணங்கள்…

  

படத்தில்: தமிழப்பன், தமிழம்மாள், நெல்லை இரா.சண்முகம், அழகம்மாள், 
இலட்சுமி அம்மாள்

[நெல்லை இரா. சண்முகம் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள அங்கமங்கலத்தில் பிறந்து கோலாலம்பூரில் வாழ்ந்தவர். தமிழறிஞர். பன்னூலாசிரியர். இரண்டாம் உலகப் போரின் பொழுது, நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்துக்காக வானொலி வழியாக எழுச்சியுரையாற்றி இளைஞர்களை இராணுவத்தில் சேர்வதற்கு ஊக்கப்படுத்தியவர். தந்தை பெரியார், தமிழவேள் கோ. சாரங்கபாணி, வினோபா பாவே (Vinoba Bhave) உள்ளிட்ட தலைவர்களுடன் பழகியவர். தொல்காப்பியச் சிறப்புரைக்கும் நூலெழுதிய பெருமைக்குரியவர். இவர்தம் வரலாற்றை அறிவதற்கு மும்பை சென்று ஆவணங்களைத் திரட்டிய முயற்சி இப்பதிவில் இடம்பெற்றுள்ளது]

மும்பையில் வாழ்ந்துவரும் பொறியாளர் சு. குமணராசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த தொல்காப்பியத் திருவிழாவில்(25,26-01.2025) கலந்துகொள்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே வானூர்திச் சீட்டினைப் பதிந்திருந்தேன். அந்த நேரத்தில்தான் நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த நெல்லை இரா. சண்முகம் (கோலாலம்பூர்) அவர்களைப் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாகத் தெரியவந்தன

என் நண்பர் சித்தநாதபூபதி அவர்கள் வழியாக இரா. சண்முகம் அவர்கள் பிறந்து, வாழ்ந்த திருச்செந்தூருக்கு அருகில் உள்ள அங்கமங்கலம் செல்லும் வாய்ப்பு அமைந்தது. அந்த ஊர்தான் தொல்காப்பியத் தொண்டர் இரா. சண்முகனாரின் சொந்த  ஊராகும்.  திருச்செந்தூரில் வட்டாட்சியர் பணியில் உள்ள இரா. கோபாலகிருஷ்ணன் அவர்களின் பேருதவியால் அங்கமங்கலம் சென்றதும், சண்முகனாரின் குடிவழியினரைச் சந்திப்பதும் எளிதாக இருந்தது. இரா. சண்முகனாரின் இரண்டாம் மகளார் அழகம்மாள் மற்றும் உறவினர்கள் பொங்கல் திருவிழாவுக்காகப் பிறந்த ஊர் வந்திருந்தனர். அவர்களுடன் உரையாடிய பொழுது, இரா. சண்முகனாரின் தங்கைவழிப் பெயரன் மும்பையில் வாழ்ந்து வருவதாகவும் அவர் பெயர். . இளங்கோவன் என்பதும் தெரியவந்தது. அவரின் தொடர்புஎண்ணைப் பெற்றுக்கொண்டு ஊர் திரும்பினேன்

இரா. சண்முகனாரின் தமிழ்ப்பணிகளால் ஈர்ப்புண்டு கிடந்த நான் அவர்தம் வாழ்க்கையைக் குறித்து, தெரிந்த – அறிந்த  விவரங்களைக் கொண்டு ஒரு நினைவோட்ட உரையை வரைந்து என் வலைப்பதிவில் முன்பொருநாள் பதிந்தேன். வெளியிட்ட ஒரு நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு, என் முயற்சியைப் பாராட்டியவண்ணம் இருந்தனர். அவ்வாறு திருவாளர் நீலகண்டன் ஐயா வரைந்தனுப்பிய பாராட்டுக் குறிப்பு இது

அடர்ந்த ஆளரவமற்ற வனத்தில் கிடைத்தற்கரிய ஒரு மூலிகைச் செடியினைத் தேடித் தேடி அயராது அலைகிற அர்ப்பணிப்பினை உங்களில் (கண்டு)வியக்கிறேன். தமிழ்த் தாய்க்கு(ப்) பெரும் பேறு” (19.01.2025). 

தொலைபேசியிலும், புலனத்திலும் நண்பர்கள் பாராட்டிய வகையில் கிடைத்த ஊக்கமொழிகளால் இரா. சண்முகனார் குறித்துத் தேடும் ஆர்வம் மேலும் பன்மடங்கு உயர்ந்தது. அந்த நிலையில்தான் வலைப்பதிவில் நான் எழுதியதைப் படித்து, மும்பையிலிருந்து இளங்கோவன் அவர்கள் தொலைபேசியில் அழைத்து, உரையாடி, இரா. சண்முகனார் குறித்து நான் தேடியலைந்து விவரம் திரட்டியமைக்குப் பாராட்டுத் தெரிவித்ததுடன், தம்மிடம் மேலும் சில படங்களும், விவரங்களும் உள்ளன என்று குறிப்பிட்டதுடன் ஓரிரு படங்களை எனக்கு அனுப்பியும் வைத்தார்

அவருடன் அமைந்த உரையாட்டின்பொழுது, நான் மும்பைக்குத் தொல்காப்பியத் திருவிழாவுக்கு வர உள்ளமையைத் தெரிவித்தேன். அதுபொழுது அவரைச் சந்திக்க விரும்புகின்றமையையும் எடுத்துரைத்தேன். மும்பை . இளங்கோவனார் என்னைக் கண்டு உரையாட ஆர்வமாக இருப்பதைத் தெரிவித்ததுடன், வாய்ப்பு அமைந்தால் வானூர்தி நிலையத்தில் வரவேற்க ஆர்வமாக இருப்பதையும் தெரிவித்தார். அவருக்குத் தொல்லை தர விரும்பாமையால் நான் நேரடியாக விழாக்குழுவினரின் ஏற்பாட்டில்மும்பை  வானூர்தி நிலையத்திலிருந்து, நிகழ்வு நடைபெற உள்ள இடத்துக்கு அருகில் உள்ள விடுதிக்குச் சென்றேன்

மும்பை சென்ற என்னைக் காரை. இரவீந்திரன் அவர்கள் அன்புடன் வரவேற்று விடுதிக்கு அழைத்துச் சென்றார்கள். காரைக்குடியைச் சேர்ந்த காரை. இரவீந்திரன் நீண்ட காலமாக மும்பையில் தங்கியுள்ள தமிழ் ஆர்வலர். தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய பட்டறிவு கொண்டவர். மிகச் சிறந்த பண்பாளர் என்பதை உரையாடலின்வழித் தெரிந்துகொண்டேன். இருவரும் செட்டிநாட்டு விருந்தோம்பல் சிறப்பைப் பற்றி உரையாடியவண்ணம் மும்பையில்வாசி” என்னும் நகரப் பகுதிக்குச் சென்றோம். அங்குதான் தமிழ்த்தொண்டர் சு. குமணராசனாரின் அலுவலகம் உள்ளது

நாங்கள்வாசி”ப் பகுதியை அடைவதற்கும் குமணராசனார் தம் அலுவலகம் வருவதற்கும் சரியாக இருந்தது. நிகழ்ச்சிக்கு முதல்நாளும் நிகழ்ச்சி நாளன்றும் அனைவரும் செய்ய வேண்டிய பணிகளைத் திட்டமிட்டோம். முதலில் நிகழ்ச்சி நடைபெற உள்ள தமிழ்ச்சங்கம் சென்று, அரங்கத்தைப் பார்வையிட்டோம். அடுத்ததாக என் கைச்சுமையை விடுதியில் வைத்துவிட்டு, தொல்காப்பிய ஆவணங்களைக் காட்சிக்கு வைப்பதற்கு உரிய வகையில் சு. குமணராசன் அவர்களிடம் ஒப்படைத்தேன். நெல்லை இரா. சண்முகனாரின் வாழ்க்கைக் குறிப்பைத் தேடி, . இளங்கோவன் ஐயாவைச் சந்திக்க விரும்பும் என் விருப்பத்தைச் சு. குமணராசன் அவர்களிடம்  தெரிவித்தேன். ஐயாவிடம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு, . இளங்கோவன் அவர்களுக்கு  என்னை வந்து, அழைத்துக்கொண்டு, அவர் இல்லம் செல்லுமாறு வேண்டிக்கொண்டேன்

திருவாளர் . இளங்கோவனார் அவர்கள் சற்றொப்ப இரண்டு மணிநேரத்தில் விடுதிக்கு வந்து தம் மகிழுந்தில் என்னை அழைத்துக்கொண்டு அவர் இல்லம் நோக்கிப் புறப்பட்டார்.  மும்பையில் பரந்து விரிந்திருக்கும் சாலையோரங்களில் மிகப்பெரிய அடுக்குமாடி வீடுகளும், வளமனைகளுமாகக் கண்ணில் தென்பட்டன. சாலையெங்கும் இந்தி எழுத்துகளே மின்னி மிளிர்ந்தன. போக்குவரவு நெருக்கடி மிகுதியாக இருந்தது. மக்கள் அனைவரும் சாலை நெறிமுறைகளைப் பின்பற்றியமை மகிழ்ச்சியளித்தது. மகிழுந்துகளும், இரு சக்கர வண்டிகளும் சாலையோரத்தில் முறையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.  

நாங்கள் . இளங்கோவன் அவர்களின் இல்லத்துக்குச் செல்வதற்குச் சற்றொப்ப நான்கு மணி நேரம் ஆனது. இரண்டு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தொலைவுதான் என்றாலும் நடுவண் அமைச்சர் ஒருவரின் வருகையால் சாலைகளில் போக்குவரவு மாற்றப்பட்டிருந்தது. மாலைநேரத்தில் அலுவலகம் முடிந்து அனைவரும் வீடு திரும்புவதும் இணைந்துவிட்டதால் போக்குவரவின் கடும் நெருக்கடியில் சிக்கிச், சென்றுகொண்டிருந்தோம்

நான்கு மணிநேரப் பயணத்தையும் பயனுடையதாக அமைத்துக்கொள்ளும் வகையில் . இளங்கோவன் அவர்களுடன் மகிழுந்தில்  அமர்ந்தபடி உரையாடி, நெல்லை இரா. சண்முகம் ஐயாவின் வாழ்க்கைக் குறிப்பை ஓரளவு அறிந்துகொண்டேன்

இரா. சண்முகம் அவர்களை அவர்களின் தாய்மாமன் மலேசியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது சற்றொப்ப இருபத்தைந்து வயதுடையவராக இரா. சண்முகம் இருந்திருக்கலாம். அதன் பிறகு இரா. சண்முகம் தம் உறவினர்களை ஒவ்வொருவராக மலேசியாவுக்கு அழைத்துச்சென்று, கடைகளில் பணிபுரிய வாய்ப்பமைத்தார்

இரா. சண்முகம் அவர்களுக்கு வேலு என்ற தம்பியும் பிரமு அம்மாள் என்ற தங்கையும் இருந்தனர். இரா. சண்முகம் அவர்களுக்கு ஒரே மகன் தமிழப்பனும், மகள்களாகத் தமிழம்மாளும், அழகம்மாளும் பிள்ளைச் செல்வங்களாய் வாய்த்தனர். அதுபோல் வேலு அவர்களுக்குத் தமிழ்ச்செல்வம், முருகேசன், சுதந்திரம், தமிழரசன், பூங்கொடி என்று ஐந்து பிள்ளைச் செல்வங்கள் வாய்த்துள்ளனர். பிரமு அம்மாவுக்கு வைணவப்பெருமாள் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். முதல் பிள்ளை பெண்பிள்ளை ஆகும். அடுத்துக் கல்யாணசுந்தரம், அருணாசலம், செல்வராஜ் ஆகியோர் பிறந்தனர். 

1935 அளவில் தம் தங்கை மகன் கல்யாணசுந்தரத்தை இரா. சண்முகம் அழைத்துச் சென்று மலேசியாவில் பணியில் அமர்த்தினார். இவர்களின் கடை கோலாலம்பூர் நகரில் சிறப்பாக இயங்கியுள்ளது. நல்ல வருவாயும் இவர்களுக்குக் கிடைத்துள்ளது. அந்த நாளில்தான் இரண்டாம் உலகப் போர் மூண்டது(1941 அளவில்). சப்பானியப் படைகள் மலேசியாவைக் கைப்பற்றின. மலேசியாவும் சிங்கப்பூரும் அப்பொழுது ஒரே நாடாக இருந்தன. சப்பானியர்கள் நம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இந்திய தேசிய இராணுவத்துக்கு ஆதரவாக இருந்தனர். சிங்கையிலும் மலேசியாவிலும் இருந்த தமிழர்கள்இந்தியர்கள் பெருமளவு நேதாஜி அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து, அந்நாளில் போர்ப் பயிற்சி பெற்றனர்

இரா. சண்முகம், நடுவில் உறவினர், வலப்பக்கம் கல்யாணசுந்தரம்

இந்திய தேசிய இராணுவத்தில் (INA) இளைஞர்கள் இணைந்து இந்திய விடுதலைப்போருக்குப் பணிபுரிவதற்கு வானொலி வழியாக உரையாற்றி, இளைஞர்களை ஈர்த்தவர் நம் இரா. சண்முகம் என்ற செய்தியை இளங்கோவன் பகிர்ந்துகொண்டார். 1942 முதல் 1945 வரை இந்தப் பணியை இரா. சண்முகம் மேற்கொண்டிருக்கு வாய்ப்பு உண்டு. மேலும் க. இளங்கோவனின் தந்தையார் வை. கல்யாணசுந்தரம் அவர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் பயிற்சிபெற்ற வீரர் என்ற செய்தியையும் பகிர்ந்துகொண்டார். இவர்களின் படங்கள் தம் இல்லத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியதால் என் மும்பைப் பயணம் பயனுடையதாக அமைந்துள்ளது  என்று நினைத்து ஊக்கம்பெற்றேன். 

. இளங்கோவன் அவர்கள் தம் தந்தையார் கல்யாணசுந்தரம் மலேசியாவில் பணிபுரிந்த சூழலையும், தம் குடும்பத்தை வளர்த்தெடுக்க கல்யாணசுந்தரம் எடுத்த முயற்சிகளையும் என்னிடம் பகிர்ந்துகொண்டார். தம் தந்தையார் கல்யாணசுந்தரம் - தாயம்மாள் இணையரின் திருமணம் அங்கமங்கலத்தில் நடைபெற்றதையும்  நாங்கள் ஐந்து  பிள்ளைகள் (1.கோபால் 2. பூங்கோதை, 3. இளங்கோவன், 4. தமிழ்ச்செல்வி, 5. மதியழகன்) என்பதையும் என்னிடம் தெரிவித்தார். அனைவரும் அங்கமங்கலத்தில் பிறந்து கல்வி கற்றோம் என்று க.இளங்கோவன் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார். மலேசியாவிலிருந்து கல்யாணசுந்தரம் அவர்கள் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை அங்கமங்கலம் வந்தமையையும், ஓராண்டு வரை ஊரில் தங்கியிருந்துவிட்டு, மீண்டும் மலேசியா செல்வதையும் வழக்கமாகக் கொண்டவர். இறுதியாக 1999 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து திரும்பிய கல்யாணசுந்தரம் பின்னாளில் இயற்கை எய்தினார் என்ற விவரத்தையும் அவர் வழியாகத்  தெரிந்துகொண்டேன். மேலும் தாம் மும்பையில் கப்பல் பொறியியல் துறைசார்ந்த பணியில் முப்பதாண்டுகள் புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியாற்றிய திறனையும் பகிர்ந்துகொண்டார். முன்பு தாம் மும்பையின்வாசி” என்ற பகுதியில் குடியிருந்ததையும் பின்னர் இப்பொழுது மேற்குப் போரிவலி (Borivali West) என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியுள்ளதையும் பகிர்ந்துகொண்டார்

நெல்லை இரா. சண்முகம், தந்தை பெரியார்(மலேசியா)



தந்தை பெரியாருடன் இரா. சண்முகம் உள்ளிட்ட தமிழன்பர்கள்(மலேசியா)

இரா. சண்முகனார் மலேசியாவில் வாழ்ந்தபொழுது, தந்தை பெரியார் மலேசியாவுக்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்துள்ளார். தந்தை பெரியார் அவர்களை  வரவேற்ற மலேசிய அன்பர்களில் நம் இரா. சண்முகனாரும் முதன்மையானவராக இருந்துள்ளார். தந்தை பெரியாருடன் இரா. சண்முகனார் அமர்ந்து எடுத்துக்கொண்டுள்ள படம் இதற்குச் சான்று என்று குறிப்பிட்டார். மேலும் அன்னை மணியம்மையார், தந்தை பெரியார், மலேசியத் தமிழன்பர்கள் அனைவரும் இயல்பாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபொழுது எடுக்கப்பட்ட படம் ஒன்று எங்கோ இடம் மாறி உள்ளது என்ற விவரத்தையும் சொன்னார்

பூமிதான இயக்கத் தலைவர் வினோபா பாவே (Vinoba Bhave) அவர்கள் தமிழகம் வந்தபொழுது திருச்செந்தூருக்கு அருகில் உள்ள குரும்பூரை அடுத்த அங்கமங்கலத்திற்கு வந்ததாகவும், தம் தாத்தா இரா. சண்முகனாரை இல்லம் தேடிவந்து வினோபாவா பார்த்து, இருவரும் உரையாடி மகிழ்ந்தனர் என்ற விவரத்தையும் க.இளங்கோவன் என்னிடம் பகிர்ந்துகொண்டார்

இரா. சண்முகனாரின் பரந்துபட்ட குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் அவர்கள் பணியின் பொருட்டுப் பல ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர் என்பது பற்றியும் அறிந்துகொண்ட நிறைவில் அவர் எழுதிய நூல்கள் ஏதேனும் இருப்பில் உள்ளதா? என்று கேட்டபொழுது, யாரிடமும் நூல்கள் இல்லை என்று குறிப்பிட்டார். நீண்ட உரையாடல் நிகழ்ந்துகொண்டிருந்தபொழுது க. இளங்கோவன் ஐயாவின் வீடு கண்ணில் தென்பட்டது…. 

பயணக்களைப்பால் இருவரும் சோர்ந்திருந்தோம். ஏழாம் தளத்தில் இருந்த இல்லம் சென்று, முகம் கழுவி, சோர்வு நீக்கினோம். ஓரிரு ஆரஞ்சுப் பழங்களை உரித்து, நீர்வேட்கையைத் தணித்துக்கொண்டேன். அதற்குள் மிகச் சிறந்த தேநீர்க் குவளையுடன் இளங்கோவன் வந்து அமர்ந்தார். தேநீரைச் சுவைத்து மகிழ்ந்தோம். என் கவனம் முழுவதும் இரா. சண்முகனார், வை. கல்யாணசுந்தரம் ஆகியோரின் படங்களைப் பார்ப்பதில்தான் இருந்தது. தம் மடிக்கணினியை எடுத்து, அதில் இருந்த படங்களை ஒவ்வொன்றாகக் காட்டி, இரா. சண்முகனாரின் வாழ்வியலையும் பணிகளையும் உயிரோட்டமாக எனக்கு விளக்கினார். அந்தப் படங்களை எனக்கு வழங்கியுதவுமாறு கேட்டுக்கொண்டேன். முழு மனத்துடன் வழங்கி என் ஆய்வு முயற்சியையும் தேடலையும் ஊக்கப்படுத்தினார். ஒரு மணி நேரம் தங்கியிருந்தோம். இரவு உணவுக்கு ஒரு விடுதிக்குச் சென்றோம். அரேபிய உணவு ஒன்றை அறிமுகப்படுத்தி, உண்ணச்செய்தார். உண்டு மகிழ்ந்தோம். என் ஆய்வுக்கு வேண்டிய விவரங்களைப் பெற்றுக்கொண்டு, மீண்டும் நவி மும்பை நோக்கி இரவு 11 மணியளவில் புறப்பட்டோம். 

நள்ளிரவுப் பொழுதானதால் இப்பொழுது சாலைகள் நெருக்கடி இல்லாமல் ஒரளவு இடைவெளியாக இருந்தன. நாங்கள் மீண்டும் உரையாடலைத் தொடர்ந்து, பேசியபடியே நவி மும்பை நோக்கி வந்தோம். நான் தங்கியிருந்த நவி மும்பை விளையாட்டுக் கழகத்துக்கு (Sports Association) உரிமையான விடுதியை அடையும்பொழுது நள்ளிரவு 12.30 மணியாகும். க. இளங்கோவன் அவர்கள் என்னைப் பாதுகாப்பாக விடுதியில் கொண்டு வந்து சேர்த்த மனநிறைவுடன் தம் இல்லத்துக்கு மீண்டும் பயணமானார். நான் மறுநாள் பேசுவதற்கு உரிய குறிப்புகளையும், கவியரங்கில் பாடுவதற்குரிய கவிதைகளையும் எழுதத் தொடங்கினேன்…

மு.இளங்கோவன், க. இளங்கோவன்


ஆவணங்களைப் பார்வையிடும் மு.இளங்கோவன்

வியாழன், 30 ஜனவரி, 2025

மும்பையில் நடைபெற்ற தொல்காப்பியத் திருவிழா!

 

முகப்புப் பதாகை

மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் காவல்துறைத் தலைவர் த. சிவானந்தன் அவர்கள் தொல்காப்பியக் கண்காட்சியைப் பார்வையிடுதல். அருகில் சு. குமணராசன், மு. இளங்கோவன்



மேற்கு வங்க மாநிலத்தின் மேனாள் தலைமைச் செயலாளர் கோ. பாலசந்திரன் அவர்கள் தொல்காப்பியக் கண்காட்சியைப் பார்வையிடுதல். அருகில் சு. குமணராசன், மு.இளங்கோவன்

    மும்பையில் அமைந்துள்ள இலெமுரியா அறக்கட்டளையின் சார்பில் தொல்காப்பியத் திருவிழா  2025, சனவரி 25, 26 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் நடைபெற்றது. மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் காவல்துறைத் தலைவர் த. சிவானந்தன் இந்த விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். மகாராட்டிர மாநிலத்தில் அமைந்துள்ள பல்வேறு தமிழமைப்புகளின் பொறுப்பாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பெரிய அளவில் வருகைபுரிந்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை “இலெமுரியா” நிறுவுநர் சு. குமணராசன் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார். 

நவி மும்பை, வாசி, திருவள்ளுவர் சாலையில் அமைந்துள்ள  நவிமும்பைத் தமிழ்ச்சங்கத்தின் முதல் தளத்தில் தொல்காப்பியக் கண்காட்சியும், இரண்டாம் தளத்தில் உள்ள ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அரங்கில் தொல்காப்பியத் திருவிழாவும் இரண்டுநாள் நடைபெற்றன.  

மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் காவல்துறைத் தலைவர் த. சிவானந்தன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தொல்காப்பியக் கண்காட்சியைத் திறந்துவைத்து, அமைப்பாளர்களைப் பாராட்டினார். மேலும் தொல்காப்பியத்தின் சிறப்புகளை எடுத்துரைத்துத் தலைமையுரை ஆற்றினார். காரைக்குடி சேது பாஸ்கரா கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் சேது குமணன் கலந்துகொண்டு மும்பையிலிருந்து வெளிவந்து, இடையில் நின்றுபோன தமிழ் இலெமுரியா இதழின் சிறப்புகளை எடுத்துரைத்து, மீண்டும் இந்த இதழைக் கொண்டவர வேண்டும் என்ற தம் விருப்பத்தைத் தெரிவித்தார். 

பொறியாளர் சு. குமணராசன் எழுதிய Classical Tamil Literature: An Introduction  நூலும், முனைவர் மு. இளங்கோவன் எழுதிய தொடரும் தொல்காப்பிய மரபு என்னும் நூலும் அறிஞர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டன. 

மு. இளங்கோவனைச் சிறப்பிக்கும் மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் காவல்துறைத் தலைவர் த. சிவானந்தன் அவர்கள். அருகில் சு. குமணராசன், முனைவர் சேது குமணன்.

மாணவர்களுக்குத் தனித்தமிழ்ப் பேச்சுப்போட்டி இந்த நிகழ்வை ஒட்டி  நடைபெற்றது. மும்பையில் பயிலும் தமிழ் மாணவர்கள் அறிவார்ந்த தலைப்புகளில் உரையாற்றிப் பரிசுகளைப் பெற்றனர். மேலும் பார்வையாளர்களுக்கான தனித்தமிழ்ப் பேச்சுப்போட்டியும் நடைபெற்றது. இந்த நிகழ்வுகள் அரங்கினரை மகிழ்ச்சிப்படுத்தின. பிறமொழியைக் கலவாமல் தூய தமிழில் பேசியவர்களுக்குப் பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் நிறைவாக அரங்கில் உரையாற்றியவர்கள் பயன்படுத்திய பிறமொழிச் சொற்களுக்கு உரிய தனித்தமிழ்ச் சொற்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

இந்த நிகழ்வின் ஒரு கூறாகப் பல்வேறு துறைகளில் புகழுடன் விளங்கும் மும்பைத் தமிழ்ப்பெருமக்களுக்கு விருதுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.

பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் மேற்கு வங்க மாநிலத்தின் மேனாள் தலைமைச் செயலாளர் கோ. பாலசந்திரன், மும்பை காவல்துறையின் இணைக் காவல் ஆய்வாளர் (நிர்வாகம்), சூ. ஜெயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். 

அறிஞர் சீனிவாசன் அவர்களுக்குத் தொல்காப்பிய விருது வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்படுதல்.

இலெமுரியா அறக்கட்டளை சார்பில் எழுத்தாளர் சீனிவாசன் அவர்களுக்கு இருபத்தைந்தாயிரம் உருவா விருதுத்தொகையுடன் தொல்காப்பிய விருது வழங்கிப் பாராட்டப்பட்டது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் எட்டுத்தொகை என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. முனைவர் மு. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில், கவிஞர் புதிய மாதவி, கவிஞர் இறை ச. இராசேந்திரன், கவிஞர் இராசு. மாதவன், கவிஞர் பிரவீனா சேகர், கவிஞர் வெங்கட் சுப்பிரமணியன், கவிஞர். வ. ரா. தமிழ்நேசன், கவிஞர் நெல்லைப் பைந்தமிழ், புலவர் கார்த்தியாயினி ஆகியோர் எட்டுத்தொகை நூல்களின் சிறப்புகளை மிகச் சிறப்பாகக் கவிதையில் பாடினர். 

இலெமுரியா அறக்கட்டளையின் நிறுவுநர் சு. குமணராசன் தலைமையில் தொல்காப்பியக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து கலந்துகொண்ட முனைவர் இ. வளனறிவு தொல்காப்பியம் எழுத்ததிகாரம் என்ற தலைப்பிலும் முனைவர் மு. இளங்கோவன் தொல்காப்பியம் - சொல்லதிகாரம் என்ற தலைப்பிலும் முனைவர் அரங்க. மல்லிகா தொல்காப்பியம் - பொருளதிகாரம் என்ற தலைப்பிலும் உரையாற்ற்றினர். 

இரண்டாம் நாள் நிறைவு நிகழ்ச்சியாகப் பரிசுபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், தமிழ்த்தொண்டு, சமூகத் தொண்டில் ஈடுபட்டவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

கண்காட்சியைப் பார்வையிட்டோர்(குழுப்படம்)


தொல்காப்பிய ஆவணங்களின் கண்காட்சி

தொல்காப்பிய ஆவணங்களின் கண்காட்சி


கண்காட்சியைப் பார்வையிடுவோர்


மாணவர்களின் நாட்டியம்

தொல்காப்பியம் குறித்து உரையாற்றிய அரங்க. மல்லிகா, இ. சூசை, மு.இளங்கோவன் சிறப்பிக்கப்படுதல்


பார்வையாளர்கள்


பரிசுபெறும் மாணவர்கள்

பேச்சுப்போட்டியில் முதல் பரிசுபெற்ற மாணவி

சனி, 18 ஜனவரி, 2025

"தொல்காப்பியத் தொண்டர்" நெல்லை இரா. சண்முகம் – கோலாலம்பூர் (1901 – 1983)

 

நெல்லை இரா. சண்முகம், கோலாலம்பூர் 

["தொல்காப்பியத் தொண்டர்" இரா. சண்முகம் நெல்லை மாவட்டம் குறும்பூரை அடுத்துள்ள அங்கமங்கலத்தில் பிறந்து, கோலாலம்பூரில் வாழ்ந்தவர். தமிழ்ப்பற்றாளர்; திராவிட இயக்க உணர்வினர். தொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். இவரின் கட்டுரைகள் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு இதழில் வெளிவந்தவை. மலேசிய வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கியவர்; தமிழ்நெறித் திருமணங்களை நடத்தியவர். இரா. சண்முகம் அவர்களின் மகன் மருத்துவர் தமிழப்பன் விருதுநகரை அடுத்த குன்னூரில் அரசு மருத்துவராகப் பணியாற்றியபொழுது பாம்பு கடித்து இறந்தமையால், அறிஞர் இரா. சண்முகனாரின் குடும்பம் பெருந்துயரத்தைச் சுமந்தது]

கனடாவில் நடைபெற்ற உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில்(2024) தொல்காப்பியக் கண்காட்சி நடத்துவதற்குத் தொல்காப்பிய அறிஞர்களைப் பற்றிய ஆவணங்களைத் திரட்டும் பெரும்பணியில் நான் ஈடுபட்டிருந்தபொழுதுதொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம்” (1957) என்னும் நூலைக் கண்ணுறும் வாய்ப்பு அமைந்தது. அந்த நூலின் ஆசிரியர் நெல்லை இரா. சண்முகம், கோலாலம்பூர் என்று பெயர் இருப்பதைப் பார்த்து வியப்புற்றேன். உடனடியாக, மலேசியாவில் வாழும் ஆசான் மன்னர் மன்னன் மருதை அவர்களிடத்தும், எழுத்தாளர் நவீன் அவர்களிடத்தும் ஊடகவியலாளர் செ. குணாளனிடத்தும், இசைத்தென்றல் மாரியப்பனாரிடத்தும், இன்ன பிற தமிழார்வலர்களிடத்தும் இரா. சண்முகம் ஐயாவின் பெயரைக் குறிப்பிட்டு, தொல்காப்பியர் தமிழ் நிலையம், 126, பெரிய தெரு, கோலாலம்பூர், மலேயா என்னும் முகவரியில் வாழ்ந்துள்ள இப்பெருமகனாரைக் குறித்த மேலதிக விவரம் வேண்டும் என்று கேட்டேன். இரா. சண்முகம் ஐயாவைப் பற்றி முதலில் யாருக்கும் தெரியவில்லை. சில மணித்துளிகளில் இசைத்தென்றல் மாரியப்பனார் மட்டும் தொடர்புகொண்டு, மலேசியாவில் இரா. சண்முகம் ஐயா தமிழ்ப்பற்றுடன் வாழ்ந்துள்ளமையை அங்குள்ள அன்பர்களிடத்து வினவி, உறுதிப்படுத்தினார்கள். 

தொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம்”  என்ற அந்த நூலின் முன்னுரையில் இடம்பெற்றுள்ள பினாங்கு அன்பர் கே. ஏ. பண்டிதர் குறித்து, என் பினாங்கு நண்பர் செ. குணாளன் அவர்களிடத்து மேலதிக விவரம் வேண்டினேன். அதன் வழியாக இரா. சண்முகம் ஐயா பற்றி அறியலாம் என்பது என் நோக்கமாக இருந்தது. நண்பர் குணாளனும் பண்டிதர் குறித்த தொடர்பினை அறிய, அவரின் பெயரன் அம்பிகாபதி அவர்களுடன் எனக்குத் தொடர்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் பயன் கிட்டவில்லை. 

தொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம் நூலில், இந்நூல் கிடைக்குமிடம் என்று, “தொல்காப்பியர் தமிழ் நிலையம், அங்கமங்கலம், குறும்பூர் அஞ்சல், திருநெல்வேலி” என்று ஒரு முகவரி இருந்தது. இது இரா. சண்முகம் ஐயாவின் ஊர் முகவரியாக இருத்தல் வேண்டும் என்னும் நோக்கில் நெல்லையில் வாழ்ந்துவரும் பேராசிரியர் பா. வளன் அரசு அவர்களிடம் விவரம் கேட்டேன். அவர்களுக்கு இரா. சண்முகம் பற்றிய அறிமுகம் இல்லை. அதனை அடுத்து, நெல்லை அன்பர் முனைவர் வே. ஆனந்தன் அவர்களிடம் குறும்பூர் அடுத்துள்ள அங்கமங்கலத்தில் இரா. சண்முகம் ஐயாவின் உறவினர்கள் யாரேனும் உள்ளனரா? என்று வினவிப்பார்க்குமாறும், தொடர்பு எண், முகவரி கிடைத்தால் அனுப்புமாறும் சொல்லியிருந்தேன். 

அருந்தமிழ்ப் பற்றாளரான வே. ஆனந்தன், அடுத்த சில மணி நேரத்தில், அங்கமங்கலத்தில் வாழ்ந்து வரும் இரா. சண்முகம் ஐயாவின் தம்பி மகன் வழியில் அமைந்த பேரனான மு. பாலகுமார் அவர்களின் தொடர்பு எண்ணை அனுப்பினார்கள். திருவாளர் மு. பாலகுமாரிடம் பேசும்பொழுது, இரா. சண்முகம் ஐயாவைப் பற்றிய விவரங்கள் தெரியத்தொடங்கின. இரா. சண்முகம் ஐயாவுக்கு மருத்துவர் ச. தமிழப்பன், ச. தமிழம்மாள், ச. அழகம்மாள் என்ற சவுந்தரவல்லி என்னும் மூன்று மக்கள் செல்வங்கள் வாய்த்தனர் எனவும் அதில் தலைமகனார் மருத்துவர் ச. தமிழப்பன் அவர்கள் மருத்துவப் பணியாற்றிக்கொண்டிருந்த பொழுது பாம்பு கடித்து, இறந்துவிட்டார் என்ற விவரமும் தெரிந்தது. 

மருத்துவர் ச.தமிழப்பன்
தமிழம்மாள்


அழகம்மாள் என்ற சவுந்தரவல்லி

தலைமகனார் மருத்துவர் ச. தமிழப்பன் பாம்பு கடித்து இறந்த சோகத்தில் இரா.சண்முகம் அவர்களின் ஒட்டுமொத்த வளமார்ந்த குடும்பமும் நிலைகுலையத் தொடங்கியது என்ற விவரங்களை அறிந்து எனக்குக் கண்ணீர் பெருக்கெடுத்தது. இவற்றைத் தவிரப் பிற விவரங்கள் எதனையும் அவர்களிடமிருந்து என்னால் பெறமுடியவில்லை. தமிழறிஞர் ஒருவரின் குடும்பக் கோபுரம் ஒன்று இவ்வாறு சரிந்து, நிலைகுலைந்தமை என் நெஞ்சை வாட்டத் தொடங்கியது. கடந்த மூன்று மாதங்களாக இரா. சண்முகம் ஐயாவின் பெரும்பணியை அறிந்துகொள்ள  அவர்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டத் தொடங்கினேன். 

இரா. சண்முகம் ஐயா சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு ஏட்டில் பல கட்டுரைகளை 1951-1952 ஆண்டுகளில் எழுதியுள்ளார் என்பது அறிந்து அந்த ஏடுகளைப் பார்ப்பதற்குச் சிங்கப்பூர் அன்பர் எம். இலியாஸ் அவர்களைத் தொடர்புகொண்டேன். அவரின் வழிகாட்டலின்படி தமிழ் முரசு பழைய ஏடுகளைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. அதுபோல் மலேசியா, கோலாலம்பூரில் வாழ்ந்த “சுதந்தர இந்தியா” நாளிதழ் ஆசிரியர் சி. வீ. குப்புசாமி அவர்கள் நம் இரா. சண்முகம் ஐயாவுடன் நல்ல தொடர்பில் இருந்துள்ளமையை அறிந்து அவரைப் பற்றி அறியும் முயற்சியும் நடந்தது. குப்புசாமியார் பற்றியும் விரிவாக அறியமுடியவில்லை. 

இரா. சண்முகம் ஐயாவின் மகனார் மருத்துவர் தமிழப்பன் அவர்களின் மறைவு அவர் குடும்பத்தை எவ்வாறு தாக்கியதோ அதுபோல் ஈடுசெய்ய இயலாத அவரின் இழப்பு என் மன அமைதியையும் கெடுத்தது. மருத்துவர் தமிழப்பன் எங்கு இறந்தார்? எந்த ஆண்டில் இறந்தார்? மருத்துவக் கல்வியை எங்குப் பயின்றார்? அவருடன் பயின்றவர்கள் – பணியாற்றியவர்கள் யாரேனும் உள்ளனரா? என்று தேடிக்கொண்டிருந்தேன். இரா. சண்முகனார் குறித்தோ, மருத்துவர் தமிழப்பன் குறித்தோ உரிய விவரங்கள் அவர் குடும்பத்தினருக்குச் சரியாகத் தெரியாமல் இருந்தன.

மருத்துவர் தமிழப்பன் குன்னூரில் இறந்தார் என்றும் அவருக்கு அந்த ஊர் மருத்துவமனையில் சிலை ஒன்று உள்ளது என்றும் ஒரு செய்தியைக் குடும்பத்தினர் பொதுவாகச் சொன்னார்கள். ஊட்டியை அடுத்த குன்னூரில் உள்ள மருத்துவமனையில் வினவிப்பார்த்தேன். அங்கு அதுபோல் சிலை எதுவும் இல்லை என்றனர். இராமநாதபுரத்தை அடுத்துள்ள குன்னூர் என்று குடும்பத்தில் ஓரிருவர் தெரிவிக்க, அங்கும் வினவினோம். அங்கும் விவரம் கிடைக்கவில்லை. சென்னையை அடுத்துள்ள குன்னூர் என்றதால் அங்கும் வினவினோம் அங்கும் தமிழப்பன் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. பின்னர்தான் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலை அடுத்த குன்னூர் என்ற ஊரில்தான் மருத்துவர் தமிழப்பன் பணியாற்றினார் என்ற விவரம் தெரிய வந்தது. 

துபாய் நாட்டில் பணியாற்றிவரும் என் அருமை நண்பர் பொறியாளர் சித்தநாதபூபதியிடம் தொடர்புகொண்டு, விருதுநகரை அடுத்துள்ள குன்னூரில் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாரேனும் உள்ளனரா? என்று வினவினேன். மருத்துவர் தமிழப்பன் குறித்த விவரம் தெரிவித்து மேலதிக விவரம் தெரிந்துகொள்ளும் என் விருப்பதைத் தெரிவித்தேன். என் நண்பர் சித்தநாதபூபதி அவர்கள் மருத்துவர் அந்த ஊரில்தான் பணியாற்றினார் என்ற விவரத்தை அவர்தம் உறவினர் வழியாக ஒரு மணி நேரத்தில் அறிந்து உறுதிப்படுத்தினார். மருத்துவருக்கு அங்குச் சிலை இல்லை எனவும், மாறாக ஒரு புகைப்படம் மட்டும் குன்னூர் அரசு மருத்துவனையில் இருந்தது எனவும் இப்பொழுது பராமரிப்புப் பணிக்காக அந்தப் படமும் கழற்றி வைக்கப்பட்டுள்ளது எனவும் அறிந்துகொண்டேன். 

அடுத்து மருத்துவர் தமிழப்பன் தம் மருத்துவப் படிப்பை எங்குப் படித்தார்? என்று வினவியபொழுது அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயின்றவர் என்ற விவரம் தெரிந்தது. தஞ்சையில் உள்ள மருத்துவ வல்லுநர் குலாம் மொகைதீன் அவர்களிடம் தொடர்புகொண்டு ஸ்டான்லி மருத்துவமனையில் 1965- 1968 காலகட்டத்தில் மருத்துவம் பயின்ற மருத்துவ மாணவர்களுள் தமிழப்பன் பற்றி அறிந்தோர் யாரேனும் உள்ளனரா? என்று வினவிப் பார்த்தேன். மருத்துவர் குலாம் மொகைதீன் அவர்களும் தம் மருத்துவத் துறை தொடர்புகொண்டு, மருத்துவர் தமிழப்பன் அவர்களைப் பற்றி அறிவதற்குரிய முயற்சியில் துணைநின்றார். பயனொன்றும் விளையவில்லை. 

இரா. சண்முகம் ஐயாவின் உறவினர் பெங்களூரில் வாழ்ந்துவரும் திரு. சுதந்திரம் அவர்களிடம் உரையாடியபொழுது, மருத்துவர் ச. தமிழப்பன் அவர்களைப் பற்றி வினவியவுடன் ஐம்பதாண்டுகளைக் கடந்த பிறகும் தமிழ்ப்பன் நினைவு மேலிட்டுக் கண்ணீர் கரைபுரள, பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தார். 

இரா. சண்முகம் ஐயாவின் முதல் மகள் தமிழம்மாள் இயற்கை எய்திவிட்டார்(2005). கடைசி மகள் அழகம்மாள் என்ற சவுந்தரவல்லி சென்னையில் தம் இளைய மகன் இலக்குமணன் அவர்களுடன் வாழ்ந்து வருகின்றார். அவரின் மூத்த மகன் இராம்குமார் நாகர்கோவிலில் உள்ளார். அழகம்மாள் அவர்களிடம் உரையாடித் தந்தையாரைப் பற்றிய சில விவரங்களைத் தொலைபேசியில் பேசித் தெரிந்துகொண்டேன். 

இரா. சண்முகம் என்ற தமிழறிஞரின் ஒரே வாரிசாக எஞ்சியிருக்கும் அழகம்மாள் அவர்களை நேரில் சந்தித்து உரையாடும் நாளுக்குக் காத்திருந்தேன். இரா. சண்முகம் அவர்களின் குடும்பத்தாருடன் தொடர்ந்து உரையாடுவதும் விவரங்களைத் திரட்டுவதுமாக இருந்தேன். அவர்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையில் இருப்பதை உணர்ந்து, எப்பொழுது ஓரிடத்தில் ஒன்றுகூடுவார்கள் என்று காத்திருந்தேன். நல் வாய்ப்பாகப் பொங்கல் திருநாளில் அனைவரும் ஒன்று கூடுவார்கள் என்றும் அந்த நாளில் வந்தால் சந்திக்கலாம் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர்கள் குறிப்பட்ட நாளில் திருவண்ணாமலையில் தமிழ் வள்ளலாக விளங்கும் சி.சி. துரை அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் திருவிழாவில் நான் உரையாற்ற வேண்டியிருந்தது. இது இரண்டு மாதங்களுக்கு முன்பே ஒப்புக்கொண்ட நிகழ்வு என்பதால் அதனை முடித்துக்கொண்டு 17.01.2025 காலை 10 மணியளவில் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள குறும்பூரை அடுத்துள்ள அங்கமங்கலத்தில் அனைவரும் சந்திக்கத் திட்டமிட்டோம். 

திருச்செந்தூரில் யாரேனும் இரா. சண்முகனாரை அறிந்தவர்கள் இருப்பார்களா? என்ற நோக்கில் மதுரையில் வாழ்ந்துவரும் முனைவர் நேரு அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டேன். திருச்செந்தூரில் வாழ்ந்துவரும் தம் ஆங்கிலப் பேராசிரியர் ஆழ்வார் குறித்த, விவரங்களைச் சொல்லி, அவரின் தொடர்பு எண்ணையும் எனக்கு அனுப்பி உதவினார்கள். பேராசிரியர் ஆழ்வார் அவர்களுடன் தொடர்புகொண்டு உரையாடியபொழுது இரா. சண்முகனாருக்குத் திருச்செந்தூரில் பாவேந்தர் மன்றம் சார்பில் 1972 ஆம் ஆண்டில் பாராட்டு விழா எடுத்த நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். 

என் நண்பர் சித்தநாதபூபதி அவர்களுக்கு வழக்கம்போல் என் திருச்செந்தூர்ப் பயணத்திட்டம் பற்றி சொன்னேன். தொடர்வண்டி, பேருந்து யாவும் பொங்கல் திருவிழாவின் பொருட்டு, முன்பதிவாகிவிட்டதால் மகிழுந்தில்தான் செல்ல வேண்டும் என்று சொன்னேன். பயணத்திற்காக வாடகை மகிழுந்து சொல்லிவிட்டேன் எனவும் திருச்செந்தூரில் யாரேனும் தொடர்புடையவர்கள் இருந்தால் எனக்கு அங்கமங்கலத்திற்கு வழிகாட்டி உதவுமாறும் வேண்டிக்கொண்டேன். 

சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் என் நண்பர் கோ. சந்தன்ராஜ் அவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தபொழுது புதுச்சேரியிலிருந்து திருச்செந்தூர் சற்றொப்ப ஐந்நூறு கி.மீ. தூரம் எனவும் எனவே, தொடர்ந்து மகிழுந்தில் பயணிக்காமல் மதுரையில் உள்ள தம் விடுதியில் தங்கிச் செல்லுமாறும் அறிவுறுத்தினார். அத்துடன் தம் விடுதி மேலாளர் ரிச்சர்டு அவர்களிடம் என் வருகையைத் தெரிவித்தார்கள். திரு. ரிச்சர்டு அவர்களும் என்னை அன்புடன் வரவேற்க முன்வந்தார்கள். அவரிடம் அடுத்த முறை கட்டாயம் மதுரை வரும்பொழுது விடுதிக்கு வருகின்றேன் என்று சொல்லிவிட்டு, தொடர் பயணமாக ஒன்பது மணிநேரம் பயணித்து, திருச்செந்தூருக்கு 17.01.2025 வைகறை நான்கு மணிக்குச் சென்றுசேர்ந்தோம். 

முன்பே திட்டமிட்டவாறு விடுதியில் தங்கி, மூன்று மணி நேரம் ஓய்வெடுத்தேன். காலையில் குளித்து முடித்து, விடுதி வரவேற்பறையில் காத்திருந்தோம். 

என் நண்பர் சித்தநாதபூபதி அவர்களின் ஏற்பாட்டில் அவரின் குடும்ப நண்பரும் தமிழ்ப்பற்றாளருமான திருச்செந்தூரில் வட்டாட்சியராகப் பணியாற்றும் இரா. கோபாலகிருஷ்ணன் அவர்கள் எங்களை வரவேற்று, காலையில் விருந்தோம்பினார். 

    மேலும் என்னைத் திருச்செந்தூரில் வாழ்ந்துவரும் பேராசிரியர் ஆழ்வார் அவர்களின் இல்லத்துக்குக் கோபாலகிருஷ்ணன் அழைத்துச் சென்றார்கள். பேராசிரியர் ஆழ்வார் அவர்கள் நம் இரா. சண்முகனார் அவர்களுக்கு 1972 இல் ஒரு பாராட்டு விழாவைத் திருச்செந்தூரில் பாவேந்தர் மன்றத்தின் சார்பில் நடத்திய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். 

19.07.1981, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30  மணிக்குத் திருச்செந்தூர், சரவணய்யர் நடுநிலைப்பள்ளியில் தொல்காப்பியத் தொண்டர் இரா. சண்முகனார்க்குப் பாராட்டு விழா நடந்துள்ளது. ஆதித்தனார் கல்லூரியின் முதல்வரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான பேராசிரியர் இரா. கனகசபாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முனைவர் தி. வைத்தமாநிதி, முனைவர் ந. கல்யாணசுந்தரம், முனைவர் அ. அப்துல்ரசாக், பேச்சிமுத்து (தூத்துக்குடி), புலவர் மரியசூசை (நாலுமாவடி), பெ.மு.சுப்ரமண்யம்(சாத்தான்குளம்), பேராசிரியர் அ. பாஸ்கர பால்பாண்டியன், ஜி. இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் கேசவ ஆதித்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  இச்செய்திகளை நாளிதழ்களும் படத்துடன் வெளியிட்டுள்ளன. 

பேராசிரியர் மா.பா.குருசாமி, பேராசிரியர் கி.ஆழ்வார் ஆகியோர் பாவேந்தர் மன்றம் சார்ந்த பொறுப்பாளர்கள் ஆவர். இரா. சரவணன் (திருச்செந்தூர்), பி. கெங்கை ஆதித்த நாடார் (நாலுமாவடி), நெல்லை நெடுமாறன் (நாலுமாவடி) ஆகியோர் பாவேந்தர் மன்றத்தின் புரவலர்களாக இருந்து இந்த விழாவினை நடத்தியுள்ளமையை அறிந்துகொண்டேன். 

அடுத்து நாங்கள் அம்மன்புரத்தில் வாழ்ந்துவரும் வழக்கறிஞர் மா. பாரிக்கண்ணன் அவர்களின் இல்லத்துக்குச் சென்றோம். வழக்கறிஞர் மா. பாரிக்கண்ணன் அவர்களின் தந்தையார் தமிழ்மாறன் என்னும் தமிழாசிரியர் பெருமகனார் ஆவார். தமிழ்மாறன் ஐயாவின் பேச்சைப் பலவாண்டுகளுக்கு முன் கேட்டு மயங்கிய பட்டறிவு எனக்கு உண்டு என்பதையும் அவர்தம் பேச்சுகள் அடங்கிய ஒலிப்பேழை என்னிடம் உள்ளதையும் சொல்லிப் பாரிக்கண்ணன் ஐயாவுடன் உரையாடி மகிழ்ந்தேன். இரா. சண்முகம் ஐயா பயன்படுத்திய நூல்கள் பல அவர்களின் இல்லத்தில் பாதுகாக்கப்படுவது அறிந்து மகிழ்ந்தேன். 


இரா.கோபாலகிருஷ்ணன், மு.இளங்கோவன், மா.பாரிக்கண்ணன்

அந்த நூலகத்தில் இரா. சண்முகம் ஐயா எழுதிய நூல்கள் உள்ளனவா? என்று மோலேட்டமாகத் தேடிப்பார்த்தோம். ஒன்றும் கிடைக்கவில்லை. அவர்களிடம் மீண்டும் வருவதாக விடைபெற்றுக்கொண்டு, அருகில் உள்ள அங்கமங்கலம் சென்றோம். இடையில் எங்களுக்காக, சேரன்மாதேவியை அடுத்த சுத்தமல்லி ஊரைச் சேர்ந்தவரும், தற்பொழுது நியூசிலாந்து நாட்டில் பணியாற்றி வருபவரும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்தவருமான தங்கவேல் அவர்கள் தம் துணைவியார் தேவியுடன் எங்கள் பயணத்தில் இணைந்துகொண்டார். 

எங்களின் வருகையை அறிந்த இரா. சண்முகம் அவர்களின் குடும்பத்தினர் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டுநின்று எங்களுக்கு வரவேற்பு நல்கினர். அவ்வாறு வரவேற்ற அவர்கள் அனைவரையும் அழகம்மாள் என்ற சவுந்தரவல்லி எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அனைவரும் உரையாடி மகிழ்ந்தோம். உணர்ச்சியால் ஒன்றுபட்டு நின்ற நாங்கள் இப்பொழுது மீண்டும் இரா. சண்முகம் ஐயாவின் நினைவுகளையும் சிறப்புகளையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து அறிந்துகொண்டோம். 

அழகம்மாளும், குடும்பத்தாரும் சண்முகம் அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்தல்

இரா.சண்முகம் அவர்களின் குடும்பத்தாருடன் குழுப்படம்

குழுப்படம்

இரா. சண்முகம் ஐயாவின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் யாவரிடத்தும் தமிழ்ப்பணியாற்றிய அப்பெருமகனார் குறித்த முழுமையான விவரங்கள் எதுவும் இல்லை. பிறந்த நாள், மறைந்த நாள் விவரங்கள் கூட அவர்களிடம் இல்லை. அவர் இயற்றிய நூல்களும் இல்லை. சில புகைப்படங்கள், சில செய்தித்தாள் வெட்டுருவங்கள், அழைப்பிதழ்கள் மட்டும் இருந்தன. அவற்றையெல்லாம் என் அருமை நண்பர் தங்கவேல் அவர்களும் அவர்களின் துணைவியார் தேவி அவர்களும் எங்களுக்கு எங்கள் புகைப்படக் கருவிகளில் படியெடுத்தும் படமெடுத்தும் வழங்கினர். தங்கவேல் அவர்களின் தமிழ்ப்பற்றை எண்ணி எண்ணி வியக்கின்றேன். 

இரா.கோபாலகிருஷ்ணன், அழகம்மாள், மு.இளங்கோவன்

இரா. சண்முகம் ஐயாவின் மரபுவழியினர்களுடன் நாங்கள்

இரா. சண்முகம் அவர்களின் விரிவான வாழ்க்கையையும் பணிகளையும் எழுத வேண்டும் என்று நினைத்துள்ளேன்.  அவர் பற்றி நான் அறிந்துகொண்ட சில விவரங்களை முதன்முதலாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன். மேலதிக விவரம் தெரிந்தவர்கள் தெரிவித்தால் அவற்றை நன்றியுடன் பெற்றுப் பயன்கொள்வேன் (என் தொடர்பு எண் +91 9442029053, மின்னஞ்சல்: muetamil@gmail.com ) 

இரா. சண்முகம் அவர்களின் தமிழ் வாழ்க்கை: 

இரா. சண்முகம் அவர்கள் நெல்லை மாவட்டம் (தற்பொழுது தூத்துக்குடி மாவட்டம்) குறும்பூரை அடுத்துள்ள அங்கமங்கலத்தில் வாழ்ந்த இராமன், கனி அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். இவர் பிறந்த ஆண்டு 1901 என்று தெரியவருகின்றது. இவருடன் பரமு அம்மாள், வேலு ஆகியோர் உடன் பிறந்தவர்கள். இரா. சண்முகம் அவர்கள் பர்மா, இலங்கை (கொழும்பு), மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். மலேசியாவில் நீண்டகாலம் தங்கி, தம் வாழ்க்கையைத் தொடர்ந்தாலும், தமிழகத்திற்கு அவ்வப்பொழுது வந்துசெல்லும் வழக்கம் உடையவர். தமிழ்ப்பற்றும், திராவிட இயக்க ஈடுபாடும் நிறைந்தவர். தந்தை பெரியாருடன் அமர்ந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் கிடைக்கின்றது. மலேசிய வானொலியில் உரையாற்றிய பெருமைக்குரியவர்.

இரா. சண்முகம் அவர்களின் மனைவி பெயர் இலட்சுமி அம்மாள். இவர்களுக்கு மருத்துவர் தமிழப்பன்(1938 ? - 1971), தமிழம்மாள், அழகம்மாள் என்ற சவுந்தரவல்லி ஆகிய மூன்று மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். மருத்துவர் தமிழப்பன் அவர்கள் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குன்னூர் அரசு மருத்துவமனையில் மருத்துவப்பணியாற்றியபொழுது பாம்புகடித்து இயற்கை எய்தியவர் (10.12.1971). 

இரா. சண்முகம் அவர்களின் முதல் மகள் தமிழம்மாள், சென்னை, புரசைவாக்கத்தைச் சார்ந்த செல்வராசு அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர்(19.09.1969). இவர்களின் திருமணம் அங்கமங்கலத்தில் தமிழ்முறைப்படி நடந்தது. இத்திருமணத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் பலர் வருகைபுரிந்து, மணமக்களை வாழ்த்தினர். இவர்களுக்கு முரளி, சிவக்கொழுந்து, கல்யாணராமன், உமா மகேஷ்வரி என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். தமிழம்மாளின் திருமணச்செய்தி அந்த நாளில் பத்திரிகைச் செய்தியாகப் பதிவாகியுள்ளது. 

இரண்டாம் மகள் அழகம்மாள் என்ற சவுந்தரவல்லி அவர்களுக்குச் சுப்பிரமணியன் அவர்களுடன் திருமண வாழ்க்கை அமைந்தது. இவர்களுக்குச் சுபாஷினி, இராம்குமார், இலெட்சுமணன் என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். சண்முகனார் அவர்களின் பெருமையை நினைவுகூரும் வாரிசாக அழகம்மாள் அவர்கள் இருந்து, தந்தையாரின் பெருமைகளை நமக்கு நினைவுகூர்கின்றார். 

இரா. சண்முகம் அவர்கள் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு ஏட்டில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ் முரசு ஆசிரியர் கோ. சாரங்கபாணியுடன் நல்ல தொடர்பில் இருந்துள்ளார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து அக்காலத்து அறிஞர்களின் கருத்துகளை மறுத்து எழுதியும் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் குறித்த கட்டுரைகளை, நூல்களை எழுதியும் தமிழ்ப்பணியாற்றியுள்ளார். பல்வேறு தமிழ்த் திருமணங்களை மலேசியாவில் நடத்திவைத்துள்ளார். இரா. சண்முகம் அவர்களின் நூல்கள், வாழ்க்கைக் குறிப்புகள் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கும்பொழுது இவரின் தமிழ் வாழ்க்கை முழுமையாக நமக்குத் தெரியவரும். 

தொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம் என்ற தலைப்பில்இவர் இயற்றிய நூல் 1957 இல் வெளிவந்துள்ளது. 160+18 = 178 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் 2 ரூபாய் விலைகொண்டது. ரத்தினம்(கிளை) அச்சகம், 65 திருப்பள்ளி தெரு, சென்னை - 1 என்ற அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நூலில் 10 கட்டுரைகள் உள்ளன. இவற்றுள் பெரும்பான்மையான கட்டுரை சிங்கப்பூர் தமிழ் முரசில் வெளியானவை. ஒரு கட்டுரை மலேசியாவில் கோலாலம்பூரில் வெளியான தமிழ்ச்செல்வன் வார இதழில் 1934 இல் வெளிவந்துள்ளது. 



இந்த நூலில் நூலாசிரியர் படம், தொல்காப்பியர் படம், தொல்காப்பியம் அரங்கேற்றப்படும் அவையின் படம் என்று படங்கள் உள்ளன. 

1. தனித்தமிழ் ஆசிரியர்களும் “வ.ரா.” அவர்களும் 2. தமிழ் பாண்டிய மன்னர்களின் சொத்து 3. தொல்காப்பியர் உள்ளம் 4. தமிழ்கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் 5. எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி 6. தொல். பிறப்பியல் 7. எழுத்துக்களின் பிறப்புக்குப் புறனடை 8. தொல்காப்பியரும் நச்சினார்க்கினியரும் 9. தொல்காப்பியரும் குணவீர பண்டிதரும் 10. தொல்காப்பியரும் குணவீர பண்டிதரும் பவணந்தி முனிவரும் என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரைகள் இந்த நூலை அழகுறச்செய்கின்றன. 

இரா. சண்முகம் அவர்களின் தமிழ்க்கொடை: 

1.       காந்தி அடிகளும் நாகரிகமும் (அல்லது) உலக அமைதிக்கு வழி

2.       தொல்காப்பியர் பொருளுக்கு இலக்கணம் வகுத்த தமிழ்ப் பெரியார்

3.       தமிழ் முரசின் சிறந்த தமிழ்த்தொண்டு

4.       தாயின் திருவடியில் தலை சாய்ந்தார் பண்டிதர்

5.       இளைஞர் வாழ்வு (அச்சில்)

6.       தொல்காப்பியரின் தொன்மைத் தமிழ் நெறி

7.       தொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம் (1957)

 

இவர்களுக்கு நன்றி:

  • பொறியாளர் சித்தநாதபூபதி (துபை)
  • இரா. கோபாலகிருஷ்ணன், வட்டாட்சியர், திருச்செந்தூர்
  • வழக்கறிஞர் மா. பாரிக்கண்ணன், அம்மன்புரம்
  • பொறியாளர் தங்கவேல், பொறியாளர் தேவி, நியூசிலாந்து
  • செ.குணாளன், மலேசியா
  • முனைவர் கோ. சந்தன்ராஜ், சிங்கப்பூர்
  • பாலமுருகன், ஓட்டுநர், புதுச்சேரி
  • இரா. சண்முகம் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள்

 

குறிப்பு: இக்கட்டுரைக் குறிப்புகளையும் படங்களையும் எடுத்தாள நினைப்போர் எடுத்த இடம் சுட்டுங்கள்.