நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 6 ஜூன், 2025

பன்மொழி அறிஞர் முத்தழகு மெய்யப்பன்

 

முத்தழகு மெய்யப்பன்

 [முத்தழகு மெய்யப்பன் சிங்கப்பூரில் வாழ்பவர். பிறந்த ஊர் காரைக்குடி (செல்வரசன்கோட்டை). சென்னை, புதுதில்லி, கத்தார் முதலிய இடங்களில் பணிபுரிந்தவர். பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவர். கோல்ப் விளையாட்டின் வழியாகச் சப்பானியர்களின் அன்பைப் பெற்றவர். இவரின் சப்பானிய மொழிப் புலமையை அறிந்த சப்பானிய அரசு இவரை அந்நாட்டுக்கு அழைத்துச் சிறப்பித்துள்ளது. ஆத்திசூடியைத் தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் மொழிகளில் அமைத்து, நூலாக்கியவர். பத்துமொழிகளில் அமைந்த உடனடி  ஒலி மொழிபெயர்ப்புச் சாதனத்தில் தமிழ் இடம்பெறுவதற்குக் காரணமாகப் பணியாற்றியவர்] 

சிங்கப்பூரின் ஒவ்வொரு மணிப்பொழுதும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும். சிங்கப்பூரின் வைகறைப் பொழுதின் வனப்பினைச் சுவைக்கவேண்டும் என்று நண்பர் கவிஞர் வச்சிரவேலனிடம் முன்பே நான் கேட்டுக்கொண்டதால், அதற்குத் தகுந்தவாறு விடியல் நான்கு மணிக்குச் சிங்கப்பூர் எல்லையை அடைந்தோம். மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு இந்த முறை தரை வழியாக எம் பயணம் இருந்தது. 

சிங்கப்பூர் செல்வதற்கு வாய்ப்பாக மலேசியாவிலிருந்து பேருந்திலும், மகிழுந்திலும் வந்தவர்கள் எல்லைக்கு அருகில் குவிந்தவண்ணம் இருந்தனர். நாங்கள் பேருந்தில் வந்ததால் மற்றவர்களைப் போல் தரையிறங்கிக் குடியேற்றப் பணிகளை முடித்துக்கொண்டு, நகரின் உள்பகுதியை அடைவதற்கு அருகிலிருந்த தொடர்வண்டி நிலையத்தில் தொடர்வண்டிக்குக் காத்திருந்தோம். 

முதல் தொடர்வண்டி இயங்க இன்னும் அரைமணி நேரம் ஆகும் என்பதால் ஒரு வாடகை உந்தினை அமர்த்திக்கொண்டு, கவிஞர் வச்சிரவேலனின் இல்லம் அடைந்தோம். 

அழகான அடுக்குமாடிக் குடியிருப்பில் வச்சிரவேலனாரின் இல்லம் இருந்தது. அங்குக் காலைப்பொழுதில் மூன்று மணிநேரம் ஓய்வெடுத்துக்கொண்டேன். காலை உணவைக் குடியிருப்புக்கு அருகில் இருந்த அழகிய உணவகத்தில் முடித்தோம். அதன் பிறகு வச்சிரவேலனாரின் அலுவலகம் சென்றுசேர்ந்தோம். ஒருமணி நேரம் அவரின் முதன்மைப் பணிகளை முடித்துக்கொண்டு, எங்கள் மகிழுந்து நகரம் நோக்கி விரைந்தது. 

எங்கள் உரையாடலின் ஊடாக, சிங்கப்பூரில் சந்திக்க வேண்டிய நண்பர்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தேன். அந்த நேரத்தில், இன்று முதன்மையான ஒரு அறிஞரைச் சந்திக்க உள்ளோம் என்று வச்சிரவலேனார் தெரிவித்தார். சந்திப்போமே! என்று நானும் ஆர்வமாக  அவர் பேச்சினை வரவேற்றேன். அரை மணி நேரத்தில் நாங்கள் சந்திக்க விரும்பிய அறிஞர் இல்லத்துக்குச் சென்றோம். சாலையின் ஒரத்தில் மகிழுந்தை நிறுத்திவிட்டு மின்தூக்கியில் அவர்தம் இல்லத்தை அடைந்தோம். 

எங்களின் வருகையை முன்பே அறிந்திருந்த பன்மொழி அறிஞர் முத்தழகு மெய்யப்பனார் எங்களை அன்பொழுக வரவேற்றார். அவர்களின் துணைவியார் யசோதா அம்மா அவர்கள் குளிர்க் குடிப்பும், பழமும் நல்கி வரவேற்றார்கள். முத்தழகு மெய்யப்பனாரின் பிறந்த ஊர் காரைக்குடி(செல்வரசன்கோட்டை) என்பதறிந்து மகிழ்ச்சி மேலிட்டது. “காரைக்குடியெல்லாம் கல்விப்பயிர் வளர்த்த” வள்ளல் அழகப்ப செட்டியாரும் அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட பேராசிரியர் வ. சுப. மாணிக்கனாரும் எங்கள் உரையாடலில் வந்துபோனார்கள். 

முத்தழகு மெய்யப்பன் அன்பும் எளிமையும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற பெருமகனார் என்பதைச் சற்று நேரத்தில் உணர்ந்தேன். தம் கடுமையான உழைப்பால் பல்துறை அறிவுபெற்று, பல ஊர்களில் – நாடுகளில்- பல நிலைகளில் பணியாற்றி, இப்பொழுது சிங்கப்பூரில் அமைதி வாழ்வு வாழ்ந்து வருவதை அறிந்துகொண்டேன். இவர்தம் வாழ்வு தன்னம்பிக்கை மிகுந்த வாழ்வு; பிறருக்கு உதவுவதைக் குறிக்கோளாகக் கொண்ட வாழ்வு; தமிழ்மொழிப் பற்று நிறைந்த வாழ்வு; நட்பைப் போற்றி மதிக்கும் உயரிய வாழ்வு; நன்றி மறவாத வாழ்வு என்பதைச் சிறிது நேர உரையாடலில் உணர்ந்துகொண்டேன். 

முத்தழகு மெய்யப்பனாரின் உரையாடல் வழியாக அவரின் பன்முக ஆற்றலை அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு  அமைந்தது. தன்னம்பிக்கை வாழ்வை விரும்புவோர் படிக்க வேண்டிய புத்தகமாக இவரின் வாழ்க்கைப் பக்கங்கள் உள்ளன. அரைமணி நேரம் எங்களின் உரையாடல் நீண்டது. என் நூல்களை அவர்களுக்கு அளித்து, நினைவுக்குச் சில படங்களை எடுத்துக்கொண்டோம். அதுபோல் அவரின் நூல்களையும் எனக்கு வழங்கி, வாழ்த்தினார்கள். உணவு நேரம் என்பதால் அருகில் இருந்த உணவகத்துக்குச் சென்றோம். அமைதியான சூழலும், தூய்மையும் அந்த உணவகத்தை மக்கள் நாடி வருவதற்குக் காரணங்களாகும். அங்கு உணவருந்தியபடி முத்தழகு மெய்யப்பனாரின் முழுமையான வாழ்வியலைத் தெரிந்துகொண்டேன். 

முத்தழகு மெய்யப்பனாரின் தன்னம்பிக்கை வாழ்வு 

முத்தழகு மெய்யப்பன் காரைக்குடி (செல்வரசன்கோட்டை)யில் 19.01.1949 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் முத்தழகு, நாச்சம்மை என்பதாகும். தொடக்கக் கல்வியைக் காரைக்குடி செஞ்சைப் பள்ளியில் பயின்றவர். உயர்நிலைக் கல்வியைக் காரைக்குடி அழகப்பா மாதிரி உயர்நிலைப் பள்ளியில் நிறைவுசெய்தவர். அழகப்பா கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்.

வளமான குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும், இளம் அகவையிலேயே வேலை தேடிச் சென்னைக்குச் சென்றவர். 1966 ஆம் ஆண்டுகளில் அங்குப் பல்வேறு நிறுவனங்களில் ஒப்பந்த வேலைகளைச் செய்து வளம்பெற முனைந்தார். இவர்தம் சென்னை வாழ்வு துயரம் நிறைந்ததாகும். உணவின்றியும் கடும் உழைப்பில் கரைந்தும் உழன்றவர்.  நமக்குக் கண்ணீரை வரச்செய்யும் கதைப்பகுதியாக இவரின் இளமை வாழ்க்கை அமைந்திருந்தது. சென்னை வாழ்வில் தம்மை ஆதரித்தவர்களை இன்றும் நன்றியுடன் நினைவுகூர்வது இவரின் நன்றி மறவாப் பண்புக்கு எடுத்துக்காட்டாகும். எம். ஆர். எப். கம்பெனியில் பணியில் இணைந்தபொழுது மலையாளம் கற்றுக்கொண்டதையும், குறைந்த ஊதியத்தில் மூன்று முறைகளில்(ஷிப்டு) பணியாற்றி ஊதியம் பெற்று, தட்டச்சு, சுருக்கெழுத்து முறைகளைக் கற்றுக்கொண்டதையும் இவரின் வாய்மொழியாக அறிந்தபொழுது உழைப்புச் சூழலிலும் கல்வியில் இவருக்கு இருந்த நாட்டத்தை அறிந்துகொள்ளலாம். 

தம் வாழ்வில் உயர்நிலையை எட்ட வேண்டும் என்ற நோக்கில் புதுதில்லிக்கு 1968 ஆம் ஆண்டு சென்று, பல நிறுவனங்களில் பணியாற்றியவர். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பலருக்கும் உதவும் நோக்கிலும் தம் வாழ்வை மேம்படுத்திக்கொள்ளும் வகையிலும் கத்தார் நாட்டுக்கு 1976 ஆம் ஆண்டு சென்றவர், தம் நண்பர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குப் பொறுப்பேற்று, அந்த நாட்டிலிருந்து மிகுந்த ஊதியம் பெற்ற நிலையிலும் வெளியேறினார். நண்பர்களைக் காப்பாற்றும் உயர்ந்த நெஞ்சர் என்பதற்குக் கத்தார் நிகழ்வுகள் கட்டியம் கூறுகின்றன. அடுத்து, அமெரிக்கா செல்லும் நோக்கில் இருந்த முத்தழகு மெய்யப்பன்  தம் நண்பர் ஒருவரின் உதவியால் 1979 முதல் சிங்கப்பூரில் வாழும் சூழல் ஏற்பட்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். 

1983 ஆம் ஆண்டு யசோதா அவர்களைத் திருமணம் செய்துகொண்டு, இல்லறப் பயனாய் (1) அமுதா மெய்யப்பன் (2) கவிதா மெய்யப்பன் என்னும் மக்கள் செல்வங்களைப் பெற்று, மகிழ்ச்சியான வாழ்க்கையைச் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றார். ஆத்திரேலியாவுக்குக் குடிபெயர நினைத்தவருக்குத் தம் பிள்ளைகளின் விருப்பத்துக்கு ஏற்ப மீண்டும் சிங்கப்பூரில் வாழும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். 

முத்தழகு மெய்யப்பன் வாய்ப்பு அமைந்தபொழுதெல்லாம் பிறமொழிகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுபவர். எந்த மொழியைக் கற்றுக் கொண்டாலும் அந்த மொழிபேசும் மக்களுடன் உரையாடி, அவர்களின் அன்பைப் பெறுபவர். அந்த வகையில் இவருக்குத் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி, சீனம், மலாய், கொரியன், சப்பான், தாய், செர்மனி, இத்தாலி, பர்மீசு, இசுபானிசு, முதலான பதினைந்து மொழிகள் தெரியும். இன்னும் ஆறுமொழிகளைக் கற்க வேண்டும் என்ற இலக்குடன் பயிற்சிபெற்று வருகின்றார். 

சப்பான் மொழியைக் கற்றுக்கொண்டு, சிங்கப்பூர் வானொலியில் தமிழர்களின் மொழிச்சிறப்பு, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் முதலானவற்றை ஓராண்டுக்கும் மேலாகப் பேசி, அனைவரிடத்தும் செல்வாக்குப் பெற்றவர். சப்பான் மொழி சார்ந்த பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு, சப்பானியர்களை விட அதிகப் புள்ளிகள் எடுத்துப் பரிசுகளைப் பெற்றவர். இவர்தம் சப்பானிய மொழிப்புலமையைச் சிங்கப்பூர் ஏடுகளும் சப்பானிய ஏடுகளும் பாராட்டி அந்த நாளில் எழுதியுள்ளன. இவர் மகளும் சப்பான் மொழியில் நல்ல புலமைபெற்றவர். இவர்தம் சப்பான் மொழிப் புலமையை உணர்ந்து, சப்பான் அரசு இவரைச் சிறப்பு விருந்தினராக அழைத்துப் பெருமை செய்துள்ளது. சப்பானியர்களுக்கு விருப்பமான “கோல்ப்” விளையாட்டில் மிகுதிறம் பெற்று, அதற்கென ஓர் அமைப்பை நிறுவிப் பலராலும் புகழப்படும் நிலைக்கு உயர்ந்தார். “கோல்ப்” பயிற்சியின் வழியாகப் பெரும் பொருள் ஈட்டிப் பொருளாதார வளம் பெற்றதையும் நன்றியுடன் பகிர்ந்துகொண்டார். 

மு.இளங்கோவன், முத்தழகு மெய்யப்பன்

தன் பிறந்த ஊரான காரைக்குடி(செல்வரசன்கோட்டை) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மெய்யப்பன் - யசோதா அறக்கட்டளையை நிறுவி, மாணவர்களின் திறனை வளர்க்க நிதியுதவியை ஆண்டுதோறும் செய்துவருகின்றார். 

சிங்கப்பூரில் நான்கு மொழிகள் ஆட்சிமொழி என்பதை நாம் அறிவோம். அவ்வாட்சி மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழி அறிவிப்புப் பலகையில் எங்கேனும் பிழையுடன் எழுதியிருந்தால், உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டுசென்று, அத்தவறுகளைச் சரிசெய்வதை வழக்கமாகக் கொண்டவர். அதுபோல் தமிழ் இடம்பெறாத அறிவிப்புப் பலகைகளைக் கண்டால், உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, தமிழை நிலைபெறச் செய்யும் தமிழ்ப்பற்றாளர் நம் மெய்யப்பன் ஆவார். 

மெய்யப்பனார் தமிழ்ப்பணிகளுள் முதன்மையானது உடனடி மொழிபெயர்ப்புச் சாதனத்தில் தமிழை இடம்பெறச் செய்தமை எனலாம்.  

2003 ஆம் ஆண்டு சூலை மாதம் 30 ஆம் நாள் சிங்கப்பூரின் Straits Times இதழில் வெளிவந்த, “ஆசிய நாட்டு 9 முக்கிய மொழிகளில் ஒருவரோடு கலந்துரையாட இனிமேல் மொழி ஒரு தடையே இல்லை. உடனடி  ஒலி மொழிபெயர்ப்புச் சாதனம் உருவாக்கப்படவுள்ளது” என்ற செய்தியைக் கண்ணுற்ற மெய்யப்பன் அந்த மொழிகளுள் தமிழ் இல்லாமையை எண்ணி வருந்தினார். உடனடியாக A*STAR  நிறுவனத்தின் பேராசிரியர் லி ஹய்ச்சோ ( Prof LI Haizhou) அவர்களைச் சந்தித்து, அவரின் தாய்மொழியான சீனத்தில் பேசி, தமிழின் சிறப்புகளை எடுத்துரைத்து, உடனடி ஒலி மொழிபெயர்ப்புச் சாதனத்தில் தமிழ் இடம்பெற வழிகண்டார். அதற்காக ஆயிரக்கணக்கான குரல் ஒலிப்பதிவுகளைத் திரட்டி வழங்கி, அன்னைத் தமிழுக்கு ஆக்கம் சேர்த்தமை பாராட்டினுக்கு உரிய செயலாகும். 

இந்திய மக்கள் பேசும் மொழிகளிடையே  நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஆங்கிலம் வழியாக ஐந்து இந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ளும் வகையில் யுடீயுப் பாடங்களை உருவாக்கி வழங்கியுள்ளமையும் இவரின் பணிகளுள் குறிப்பிடத்தக்கதாகும். அவ்வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் பாட உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

தூய்மை நிறைந்த சிங்கப்பூரில் உள்ள தொடர்வண்டி நிலையங்களில் ஏதேனும் குப்பைகள் கிடந்தால் அவற்றைத் திரட்டி, உரிய இடத்தில் சேர்க்கும் தூய்மைத் திட்டத்தையும் முறைப்படி அரசு அனுமதி பெற்றுச் செய்தார். தன்னை வளமாக வாழவைத்த சிங்கப்பூர் நாட்டுக்குத் தாம் செய்யும் நன்றிக் கைம்மாறு இது என்று பெருமையுறச் சொல்லும் மெய்யப்பன் அவர்கள் விளையாட்டு, இலக்கியம், மொழிப்பணி, வானொலி ஒலிபரப்பு, மொழிபெயர்ப்பு என்று பன்முக அறிஞராக விளங்குகின்றார். இவர்தம் பணிகளால் தமிழர்களால் கொண்டாடத் தகுந்த பெருமைக்குரியவர் இவர் என்பது விளங்கும். 



மெய்யப்பனின் வாழ்க்கை வரலாறு “பன்மொழித் தமிழன் முத்தழகு மெய்யப்பன்” என்னும் பெயரில் நூலாகியுள்ளது. இவர் ஆத்திசூடியைத் தமிழ், ஆங்கிலம், மலாய், சீனம் என நான்கு மொழியில் அமைத்துப்  பிற மொழியினர் படித்துப் பயன்படுத்த வழிசெய்துள்ளமை பாராட்டினுக்கு உரியது. 

அழகப்பா முன்னாள் மாணவர் சங்கம், தூய்மை சிங்கப்பூர் இயக்கம், கவிமாலை இலக்கிய அமைப்பு, அரிமா சங்கம், இந்திய – சிங்கப்பூர் கழகம், சிங்கப்பூர் சப்பானிய சங்கம் முதலான பல்வேறு அமைப்புகளின் வழியாக மக்கள் பணிகளைச் செய்துவருகின்றார். 

சிங்கப்பூர்த் தமிழர் முத்தழகு மெய்யப்பனால் தமிழும் தமிழினமும் பெருமையுறட்டும்!. 

நல்ல உள்ளம் கொண்ட தமிழ்ப் பெருமகனைச் சந்தித்த மனநிறைவோடு என் விடுதி அறைக்குத் திரும்பினேன். 

நன்றி:

பாவலர் தெ. வச்சிரவேலன், சிங்கப்பூர்

முனைவர் இரா. அருள்ராசு - பன்மொழித் தமிழன் முத்தழகு மெய்யப்பன்

புதன், 4 ஜூன், 2025

மலேசியாவில் முத்தமிழ்ப் படிப்பகம் …

 

முத்தமிழ்ப் படிப்பகம் வாயில்

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வாழ்ந்த நெல்லை இரா. சண்முகம் அவர்கள் தொல்காப்பியம் குறித்து ஆழமாகச் சிந்தித்தவர்; தம் எண்ணங்களை எழுத்துகளாக்கி, இதழ்களில் வெளியிட்டவர்.  1951 - 52 ஆம் ஆண்டுகளில் தொல்காப்பியம் குறித்த பல ஆழமான கட்டுரைகளை வரைந்து, சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு நாளிதழில் வெளியிட்டவர். இவ்வுண்மைகள் தெரியத் தொடங்கிய நாளிலிருந்து மலேசியாவில் வாழ்ந்துவரும் ஆசான் மன்னர் மன்னன் மருதை, இசைத்தென்றல் நா. மாரியப்பனார், எழுத்தாளர் செ. குணாளன் முதலானவர்களைத் தொடர்புகொண்டு இரா. சண்முகனார் குறித்த மேலதிக விவரங்களைப் பெற்று வருகின்றேன். இரா. சண்முகனாரின் நூல்கள், கட்டுரைகளைத் தொகுப்பதும், அவரின் வாழ்வியலைத் தெரிந்துகொள்வதும் என் முதன்மை நோக்கமாக இப்பொழுது உள்ளது. 

மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் வாழ்ந்துவரும் மூத்த அறிஞர்கள் பலரிடம் இரா. சண்முகம் குறித்து வினவிப் பார்த்தேன். எனினும் நான் எதிர்பார்த்த அளவுக்குச் செய்திகள் அவர்களிடமிருந்து கிடைத்தில. அடுத்து, மலேசியாவில் உள்ள நூலகங்களில் இரா. சண்முகனாரின் நூல்களும் அவரைக் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளும் இருக்கும் என்ற நம்பிக்கையில் அங்குள்ள நூலகங்களைப் பற்றித் தேடத் தொடங்கினேன். அப்பொழுதுதான் கோலாலம்பூரின் செந்தூல் பகுதியில் முத்தமிழ்ப் படிப்பகம் என்னும் பெயரில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருவதை அறிந்தேன். முத்தமிழ்ப் படிப்பகத்தின் தலைவர் பெ. இராமன் அவர்களின் தொடர்பு எண்ணைப் பெற்று, இரா. சண்முகனாரின் நூல்கள் தங்கள் படிப்பகத்தில் உள்ளனவா? எனவும் அவர் குறித்த மேலதிக விவரம் கிடைக்குமா? எனவும் கேட்டேன். நூலகப் பொறுப்பாளரைக் கேட்டு மறுமொழி தருவதாகத் திருவாளர் பெ. இராமன் அவர்கள் தெரிவித்தார்கள். எளிமையாகத் தொடர்புகொண்டு, உதவிபெறும் வகையில் பெ. இராமன் அவர்களின் நட்பு கிடைத்தமை மகிழ்ச்சியளித்தது. 

முத்தமிழ்ப் படிப்பகம் அறுபத்தேழு ஆண்டுகளுக்கு(1958) முன்னர்த் தொடங்கப்பட்ட படிப்பகம் எனவும், இங்கு அரிய நூல்கள் பல பாதுகாக்கப்படுகின்றன எனவும் நண்பர்கள் வழியாக அறிந்தேன். எனவே இந்த நூலகத்தைப் பார்வையிட வேண்டும்  என்ற எண்ணம் நெஞ்சில் மேலெழுந்தவண்ணம் இருந்தது. அதற்குரிய நாளுக்காகக் காத்திருந்தேன்.

அண்மையில் முத்தமிழ்ப் படிப்பகத்தைப் பார்க்கும் சூழல் கனிந்தது. படிப்பகத்தின் தலைவர் பெ. இராமன் ஐயாவுக்கு என் வருகையைத் தெரிவித்தேன். நூலகப் பார்வைக்காக மலேசியாவுக்குச் செல்லத் திட்டமிட்டேன். கோலாலம்பூர் அருகில் உள்ள பெட்டாலிங்கு செயாவில் அமைந்துள்ள அருக்காணி மையத்தில் இரவில் தங்குவதற்குரிய உதவியை மருத்துவர் செல்வம் செல்லப்பன் செய்திருந்தார். அதன்படி இரவு சென்று அருக்காணி மையத்தில் ஓய்வெடுத்தேன்.  ஆசான் மன்னர் மன்னன் மருதை அவர்களும் நானும் திட்டமிட்டபடி மறுநாள் காலைப்பொழுதில் சந்தித்தோம். காலையில் பசியாறிவிட்டு, மகிழுந்தில் செந்தூல் பகுதியை அடைந்து, நூலக வாயிலில் காத்திருந்தோம். சில நொடிப்பொழுதில் பெ. இராமன் அவர்கள் வந்து, எங்களை வரவேற்றுப் படிப்பகத்துக்கு அழைத்துச் சென்றார். அழகிய மாடிக்கட்டடத்தில் முத்தமிழ்ப் படிப்பகம் இயங்குவதை அறிந்து பெரும் மகிழ்ச்சியுற்றேன். பேழைகளில் தமிழ் நூல்கள் பாதுகாக்கப்படுவதும் ஆர்வலர்கள் வருகைபுரிந்து, நூல்கள், செய்தி ஏடுகளைப் படிப்பதும் வழக்கமாக உள்ளதை அறிந்தேன். நூல்களின் பட்டியல் கணினி வடிவப்படுத்தும் முயற்சி நடந்து வருவது பாராட்டத்தக்கது.

பெ. இராமன் அவர்களைச் சிறப்பிக்கும் மு.இளங்கோவன். 
அருகில் மன்னர் மன்னன். 

முத்தமிழ்ப் படிப்பகத்தின் தலைவர் பெ. இராமன் அவர்களின் முன்னோர் ஊர் காரைக்குடியை அடுத்த தேவகோட்டை ஆகும். இவர் மலேசியாவின் பெட்டாலிங்கு செயாவில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை மலேசியாவில் முடித்து, கல்லூரிப் படிப்பைத் தமிழகத்தில் நிறைவுசெய்தவர். நீண்ட காலமாக மலேசியாவில் வாழ்ந்து வரும் இவர் தணிக்கைத் துறையில் மிகுதியான பட்டறிவுகொண்டவர். முத்தமிழ்ப் படிப்பகத்தில் தணிக்கைப் பணிகளில் ஈடுபட்டு, உழைத்தவர். பின்னாளில் முத்தமிழ்ப் படிப்பகத்தைத் தலைமை தாங்கி, மிகச் சிறப்பாக வழிநடத்தும் பெரும்பணியைச் செய்து வருகின்றார். முத்தமிழ்ப் படிப்பக வளர்ச்சிக்கு இவரின் பங்களிப்பு பெருந்துணையாக உள்ளது. படிப்பகத்துக்குப் புதுப்புது வசதிகளை ஏற்படுத்தித் தருவது, புதுப்புது நூல்களை வாங்கிச் சேர்ப்பது, அறிஞர்களை வரவேற்று, நூலகச் சிறப்புகளை எடுத்துரைத்து விருந்தோம்பி, வழியனுப்புவது, இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது, மாணவ, மாணவியர்கள் நூலகத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில்  அவர்களுக்கு உரிய வழிகளைக் காண்பது என்று முனைப்புடன் செயல்பட்டு வருகின்றார். 

முத்தமிழ்ப் படிப்பகம் 14.04.1958 ஆம் ஆண்டு, இரயில்வே பட்டறையில் பணியாற்றிய 19 தமிழார்வலர்களால் கீற்றுக் கொட்டகையில் தொடங்கப்பட்டது என்று அறிந்தேன். மகா மாரியம்மன் ஆலயத்தின் தலைவராக விளங்கிய திருவாளர் மா. சொக்கலிங்கம் அவர்கள்தான் “முத்தமிழ்ப் படிப்பகம்” என்ற பெயரைச் சூட்டினார் என்றும் அறிந்தேன். 

முத்தமிழ்ப் படிப்பகத்தின் நோக்கங்கள்: 

1.   மலைநாட்டில்  தமிழ் மொழியின் நிலையை உயர்த்துவதற்கு இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் வளர்த்தல்

2.   அரசியல் கலப்பில்லாத தமிழ்ச் சங்கங்களுடனும் நிறுவனங்களுடனும் இணைந்து பணிசெய்தல்

3.   மலைநாட்டுத் தமிழ் மக்களிடையே தமிழ்க் கல்வி வளர்ச்சிக்குப் பரப்புரை செய்தல்

4.   நன்கொடையாக நிதியையும் நூல்களையும் வழங்கும்படி உறுப்பினர்களையும் நலன் விரும்பிகளையும் ஊக்குவித்தல்

5.   படிப்பகத்தில் நூல்களைப் படிப்பதற்கும் இரவல் பெற்றுச் சென்று வாசிப்பதற்கும் உறுப்பினர்களையும் நலன் விரும்பிகளையும் ஊக்குவித்தல்

6.   கூட்டங்கள், கொண்டாட்டங்கள், போட்டிகள், சொல்லாடல்கள், விழாக்கள், காட்சிகள், நாடகங்கள் முதலியவற்றை நடத்துதல்

7.   மேற்கண்ட நோக்கங்களைச் செயலாக்க, நடைமுறையில் உள்ள அரசாங்க விதிகளுக்கேற்ப மாத, வார, தினசரி அச்சுத் தாள்களைத் தயாரித்து வெளியிடுவதுடன், துண்டுப் பிரசுரங்களையும் உறுப்பினர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் பொதுமக்களுக்கும் விநியோகித்தல்

 


முத்தமிழ்ப் படிப்பகம் என்ற பெயரில் 20.03.1959 இல் இப்படிப்பகம் பதிவுசெய்யப்பட்டது. 1960 ஆம் ஆண்டிலிருந்து தீபாவளி, தைப்பூசம் போன்ற நாட்களில் உண்டியல் ஏந்தி காசு, திரட்டிப் படிப்பகத்தைப் படிப்படியாகத் தமிழார்வலர்கள் வளர்த்தெடுத்தனர். இசைக்கச்சேரிகள், இலக்கிய நிகழ்வுகள் நடத்தியும், திரைப்படங்களை வெளியிட்டும் காசு திரட்டினர். தன்னலம் கருதாமல் தமிழ்நலம் கருதி உழைத்த, அப்பெருமக்கள் யாவரும் நம் நன்றிக்கும் வணக்கத்துக்கும் உரியவர்கள். 27.06.1971 இல் முத்தமிழ்ப் படிப்பகம் 65, ஜாலான் செந்தூல் என்ற முகவரிக்கு இடம் மாறியது. இந்தக் கட்டடத்தின் உரிமையாளரான சீனர் ஒருவர் இந்தக் கட்டடத்தை 48, 250 ம.ரி. விற்க முன்வந்தார். இதனைப் பயன்படுத்திப் படிப்பகத்தின் அறங்காவலர்களும் பொறுப்பாளர்களும் பல வழிகளில் முயன்று படிப்பகத்திற்காக இக்கட்டடத்தை வாங்கியுதவினர். ஒவ்வொரு ஆண்டும் படிப்பகத்தின் பொறுப்பாளர்கள் கூடி, பொதுக்குழுவைக் கூட்டுவதையும், புதிய பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதையும் வழக்கமாகச் செய்து, படிப்பகத்தை நல்ல நிலையில் நிர்வாகம் செய்துவருகின்றனர். படிப்பகத்தின் சார்பில் மாமாங்க மலர், வெள்ளி விழா மலர், மணிவிழா மலர் முதலியன வெளியிடப்பட்டுள்ளன. முத்தமிழ் என்னும் பெயரில் செய்தி மலரும் வெளியிடப்பட்டுள்ளது. முத்தமிழ்க் கதிர் என்னும் பெயரில்  காலாண்டுச் செய்தி இதழ் ஒன்றும் வெளிவருகின்றது.

 

நூல் பேழைகளின் அருகில் மு.இளங்கோவன்


மு.இளங்கோவனை வரவேற்கும் தலைவர் பெ. இராமன், 
அருகில் ஆசான் மன்னர் மன்னன்


முத்தமிழ்ப் படிப்பகம் நூலகமாகச் செயல்படுவதுடன் மாணவர்களுக்குக் கல்விக்கூடமாகவும் செயல்படுகின்றது. மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்குக் கணினிக் கல்வியை இலவசமாக வழங்குவதற்கு உரிய வசதிகளும் இப்படிப்பகத்தில் உள்ளது. 

முத்தமிழ்ப் படிப்பகத்திற்கு மலேசியாவுக்கான இந்தியத் தூதர்களும், இலங்கைத் தூதர்களும் வருகைபுரிந்துள்ளனர். அவர்களால் இயன்ற பங்களிப்புகளை இந்தப் படிப்பக வளர்ச்சிக்கு வழங்கியுள்ளனர் என்பதை அறிந்தபொழுது மகிழ்ச்சி ஏற்பட்டது. அதுபோல் மலேசியாவின் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள், தமிழறிஞர்கள் வருகைபுரிந்து, முத்தமிழ்ப் படிப்பகத்துக்குத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துள்ளனர். தமிழகத்திலிருந்து செல்லும் தமிழறிஞர்கள் பலரும் முத்தமிழ்ப் படிப்பகத்தின் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டியுள்ளனர். அவ்வகையில் சிலம்புச்செல்வர் ம. பொ. சிவஞானம், உவமைக்கவிஞர் சுரதா, பாவலரேறு பெருஞ்சித்திரனார்(09.05.1974), முனைவர் தமிழண்ணல், முனைவர் மு. தமிழ்க்குடிமகன், முனைவர் கு. ஞானசம்பந்தன், பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன், இரவி தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன், தீபம் பார்த்தசாரதி, மருத்துவர் இரா. கலைக்கோவன், எம்.எஸ். உதயமூர்த்தி, முதலானவர்கள் வருகைபுரிந்த பெருமை இம் முத்தமிழ்ப் படிப்பகத்திற்கு உண்டு.

 பாவலரேறு பெருஞ்சித்திரனார் கையொப்பம்


உவமைக் கவிஞர் சுரதா கையொப்பம்

முத்தமிழ்ப் படிப்பகத்தில் சற்றொப்ப இருபத்தைந்தாயிரம் நூல்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றுள் தமிழ் நூல்கள் 22519 எனவும், 2013 நூல்கள் ஆங்கில நூல்கள் எனவும், 1055 மலாய் நூல்கள் எனவும் புள்ளிவிவரங்கள் உள்ளன. மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் அச்சான நூல்களுடன் தமிழகத்தின் புகழ்பெற்ற பதிப்பகங்கள், எழுத்தாளர்கள் வெளியிட்ட நூல்களும் இங்கு உள்ளன. நான் எழுதிய சில நூல்களையும் அன்பளிப்பாக நூலகத்துக்கு வழங்கினேன்.  இரா. சண்முகம் குறித்த அரிய நூல்கள், விளக்கங்கள் சிலவற்றை இப் படிப்பகத்தில் படித்துப் பயன்கொண்டேன். தேவையான குறிப்புகளைப் படமாக்கிக்கொண்டேன். இந்த நூலகத்தின் நினைவுகளைச் சுமந்துகொண்டு பெட்டாலிங்கு செயாவில் மாலையில் நடைபெறும் அடுத்த நிகழ்வுக்கு ஆயத்தமானேன்….