நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 4 மே, 2024

முனைவர் க. இரவிசங்கர் மறைவு

முனைவர் க. இரவிசங்கர் 

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னைப் பேராசிரியர் முனைவர் . இரவிசங்கர் அவர்கள் இன்று (04.05.2024) அதிகாலை 1.30 மணிக்குப் புதுச்சேரியில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.  பேராசிரியர் க. இரவிசங்கர் அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். இன்று மாலை 4 மணிக்கு க.இரவிசங்கர் அவர்களின் உடல் புதுச்சேரியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

 பேராசிரியர் க. இரவிசங்கர் அவர்கள் 07.06.1954 இல் கும்பகோணத்தில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். பழகுதற்கு இனிய பண்பாளர். மொழியியல் அறிஞராகத் தமிழாய்வு  உலகில் அறியப்பட்டவர். பல்வேறு நூல்களின் ஆசிரியர். இவரின் ஆய்வேடு  Intonation Patterns in Tamil என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளது. தமிழ் ஒலிப்பு முறை குறித்து விரிவாக ஆராயும் நூல் இதுவாகும். இந்திய மொழிகளைக் குறித்து, குறிப்பாகத் திராவிட மொழிகளின் ஒலிப்புமுறை குறித்து ஆராயும் அறிஞர்களுக்குப் பெரும்துணைபுரியும் முன்னோடி நூல் இதுவாகும். இத் துறையில் ஆய்வு செய்த அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர். பல்வேறு ஆய்வரங்குகளில் – பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியவர்.

 தெற்குக் குசராத்துப் பல்கலைக்கழகத்தில் தம் பணி வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பின்னர் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் மொழியியல் துறையில் பணியாற்றியவர். அயல்நாட்டு மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் பாட நூல்களை உருவாக்கியதுடன் பலருக்குத் தமிழ் கற்பித்த பெருமைக்குரியவர். புதுச்சேரியில் பணியாற்றும் பிற மாநிலத்து உயரதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் தமிழ் பயிற்றுவிக்கும் பெரும்பணியைச் செய்தவர். முனைவர் க. இரவிசங்கர் அவர்களின் மறைவு ஆய்வுலகிற்குப் பேரிழப்பாகும்.





முனைவர் க. இரவிசங்கர்

அயல்நாட்டு மாணவர்களுடன் முனைவர் க. இரவிசங்கர்

 


 

 

 

புதன், 1 மே, 2024

தொல்காப்பிய உரையாய்வு அறிஞர் முனைவர் ச. குருசாமி

 

முனைவர் . குருசாமி 

[பேராசிரியர் ச. குருசாமி அவர்கள் சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தொல்காப்பியத்திற்கு எழுதப்பட்டுள்ள பழைய உரைகளை முழுமையாகக் கற்று, ஆய்வு செய்த பேரறிஞர். தம் ஆய்வுப் பரப்பாகத் தொல்காப்பிய உரையாசிரியர்களை அமைத்துக்கொண்டு இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், பேராசிரியர், கல்லாடர்  உள்ளிட்டவர்களின் உரைகளை ஆராய்ந்து தனித்தனி நூலாக வெளியிட்ட பெருமைக்குரியவர். களவியல் உரை, யாப்பருங்கல விருத்தியுரை குறித்தும் சிறந்த ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளவர். இராணி பதிப்பகம் என்ற பெயரில் இவர்தம் பதிப்பகம் வழியாக இவரின் நூல்கள் வெளிவந்துள்ளன.] 

முனைவர் ச. குருசாமி அவர்கள் நாமக்கல் மாவட்டம் குட்டாம்பட்டி என்னும் ஊரில் 06.06.1951 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் சி. கு. சர்வம் ஐயா – கெங்கம்மாள் ஆகும். இவர்தம் பெற்றோர் உழவுத்தொழிலைச் செய்துவந்த பெருமக்கள் ஆவர். எளிய குடும்பப் பின்னணியில் தோன்றித் தம் கடும் உழைப்பால் முன்னேறித் தமிழ் அறிஞராக மிளிர்ந்தவர் பேராசிரியர் ச. குருசாமி. 

முனைவர் ச. குருசாமி அவர்கள் தம் இளமைக் கல்வியைப் பிறந்த ஊரான குட்டாம்பட்டியில் படித்தவர். புகுமுக வகுப்பினைச் சேலம் அரசு கலைக்கல்லூரியில் பயின்றவர்(1967-68). இளங்கலை வகுப்பினை ஈரோடு சிக்கைய நாயக்கர் கல்லூரியில் பயின்றவர் (1970-73). முதுகலைப் பட்டத்தைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று, பெற்றவர்(1973-75). “சங்க காலச் சேரர் அரசியல் நெறிமுறைகள்” என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக முனைவர் பட்டம் பெற்றவர்(1991). 

பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக 1975 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து, 2009 இல் பணி ஓய்வு பெற்றவர். 

பணிச்சூழலும் ஆய்வுநூல் உருவாக்கமும்: 

பேராசிரியர் ச. குருசாமி அவர்கள் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயிலும்பொழுதே இலக்கண ஈடுபாடு உடைய மாணவராக விளங்கியவர். பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் க. ப. அறவாணன் அவர்கள் ஒருமுறை ’தொல்காப்பியம் - நன்னூல் ஒப்பீடும் வேற்றுமைகளும்’ குறித்து ஒரு கட்டுரை வரையுமாறு சொன்னபொழுது, மிகச் சிறந்த கட்டுரையை உருவாக்கிய இவரைப் பேராசிரியர் அறவாணனார் பாராட்டி ஊக்கப்படுத்தினார். பேராசிரியர்கள் அ. மு. பரமசிவானந்தம், இரா. சீனிவாசன், கலைமாமணி இரா. குமரவேலன் உள்ளிட்ட பேராசிரியர்களிடம் பயின்றமையை இவர் நன்றியுடன் குறிப்பிடுவது உண்டு. இவர் பேராசிரியராகப் பணியாற்றியபொழுது பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர்.  முதுகலை மாணவர்களுக்கு இலக்கணத்தைப் பாடமாகப் பயிற்றுவிக்கும் வாய்ப்பினைப் பெற்ற முனைவர் ச.  குருசாமி அவர்கள் அப்பொழுது ஆர்வமாகத் தொல்காப்பியத்தைப் பயிற்றுவித்தார். சற்றொப்ப இருபதாண்டுகள் தொல்காப்பியத்தைப் பயிற்றுவித்த பட்டறிவு உடையவர். 

பச்சயைப்பன் கல்லூரியில் “பச்சையப்பன் ஆய்வரங்கம்” என்ற பெயரில் ஆய்வரங்கம் நடைபெறுவது வழக்கம். ஆய்வரங்கின் பயனாக ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் “தமிழ் ஆராய்ச்சி நூல்” உருவானது. அதில் “நிகண்டுகள்” குறித்து முனைவர் ச. குருசாமி ஆய்வுக்கட்டுரை எழுதினார். தமிழ் ஆராய்ச்சி நூலின் இரண்டாம் தொகுதிக்கு “உரையாசிரியர்கள்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதுமாறு பேராசிரியர் தெ. ஞா. நம் பேராசிரியர் குருசாமியாரைப் பணித்தார். இவர்களும் உரையாசிரியர் குறித்து ஆழமாகச் சிந்தித்தார். ஆனால் இரண்டாம் தொகுதி வெளிவரவில்லை. இவ்வாறு உரையாசிரியர்கள் என்று பொதுவாகச் சிந்தித்த குருசாமியார் பின்னாளில் தொல்காப்பிய உரையாசிரியர்கள் குறித்துத் தனித்தனியாக நூல் எழுதும் வாய்ப்பினைப் பெற்றார். 

2007 - 2008 ஆம் ஆண்டுகளில் இளம்பூரணர் உரைநெறி, சேனாவரையர் உரைநெறி, பேராசிரியர் உரைநெறி, நச்சினார்க்கினியர் உரைநெறி குறித்த இவர்தம் ஆய்வு நூல்கள் வெளிவந்தன. இச் சூழலில் அந்த நூல்களின் வெளியீட்டு விழா 2009 ஆம் ஆண்டில் பேராசிரியர் இரா. குமரவேலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 

நூல்கள் வெளியீட்டு விழா (2009)

இளம்பூரணர் உரைநெறி நூல் குறித்து முனைவர் இராம. குருநாதனும், சேனாவரையர் உரைநெறி குறித்து முனைவர் இ. சுந்தரமூர்த்தியும், பேராசிரியர் உரைநெறி குறித்து முனைவர் க. ப. அறவாணனும், நச்சினார்க்கினியர் உரைநெறி குறித்து முனைவர் தெ. ஞானசுந்தரமும் அறிமுகவுரையாற்றினார். முனைவர் ஔவை. து. நடராசனார் அவர்கள் சிறப்புரையாற்றி, நூலாசிரியர் ச. குருசாமியைப் போற்றிப் பாராட்டினர். 

தொல்காப்பிய உரையாசிரியர்களின் உரைநெறிகள் குறித்த நான்கு நூல்களையும் கண்ணுற்ற மொழியியல் அறிஞர் முனைவர் இரா. கோதண்டராமன் அவர்கள் செம்மொழி நிறுவனத்திற்காகத் தெய்வச்சிலையார் உரைநெறியை எழுதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். பேராசிரியர் ப. மருதநாயகம், முனைவர் க. இராமசாமி உள்ளிட்ட அறிஞர்களின் நெறிகாட்டலில் தெய்வச்சிலையார் உரைநெறி நூல் செம்மொழி நிறுவனத்தின் வாயிலாக உலகுக்குக் கிடைத்தது. 

முனைவர் ச. குருசாமியார் ஆய்வார்வம்: 

ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராக இருந்து, பலர் பட்டம் பெறுவதற்குக் காரணமாக விளங்கியவர். பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கியுள்ளதுடன், பல பயிலரங்குகளில் கருத்தாளராக அழைக்கப்பெற்று, உரையாற்றிய பெருமைக்குரியவர். 

புகுமுக வகுப்பில் படிக்கும் காலத்திலேயே (1967-68) மொழிப் போராட்டங்களில் கலந்துகொண்டு, தம் மொழிப்பற்றை வெளிப்படுத்தியவர். 

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கிளைத் தலைவராகவும் சென்னை மண்டலச் செயலாளராகவும் சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றியவர். ஆசிரியர் இயக்கங்கள் சார்ந்த போராட்டங்களில் கலந்துகொண்டு, உரிமைகளை மீட்பதற்குச் சிறைசென்றவர். 

இல்லற வாழ்வு: 

பேராசிரியர் ச. குருசாமியார் அவர்கள் 02.06.1978 இல் திருவாட்டி இராணி அவர்களைத் திருமணம் செய்து, இல்லற வாழ்வை இனிதே நடத்தி வருபவர். இவர்களுக்குப் பனிமலர், இரேகா என்னும் இரண்டு பெண் மக்கள் வாய்த்தனர். இவர்கள் இருவரும் உயர்கல்வி கற்று, உயர் பணிகளில் உள்ளனர். 

ச. குருசாமியார் தம் வாழ்நாள் பணியாகத் தொல்காப்பிய உரையாசிரியர்களின் உரைகளை நுட்பமாக ஆராய்ந்து, அவர்களின் தொல்காப்பியப் புலமையையும் உரைவரையும் பெரும்புலமையையும் தமிழுலகத்திற்கு நூல்களின் வழியாக அறிமுகம் செய்த பெருமைக்குரியவர். இவர்போல் தொல்காப்பிய உரைகள் என்ற ஒற்றைப் புலத்தைத் தேர்ந்தெடுத்து, உழைத்து, ஆராய்ந்து, அறிவுமுத்துகளை வெளிக்கொணர்ந்த பேராசிரியர்கள் அரிது எனலாம். இவர்தம் பணிகளைப் போற்றிப் புதுவையில் உள்ள உலகத் தொல்காப்பிய மன்றம் இவருக்குப் பாராட்டு விழாவினை விரைவில் நடத்த உள்ளது. 

முனைவர் ச. குருசாமி அவர்களின் நூல்களில் தொல்காப்பிய உரைகளின் பதிப்பு வரலாறு, உரையாசிரியர்களின் வரலாறு, உரைநெறிகள் யாவும் மிகவும் நுட்பமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அரிய குறிப்புகளை எடுத்துக்காட்டுவதும், பழைய இதழ்களில் வெளியான செய்திகளைத் தேடித் திரட்டி, ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதும் இவரின் ஆய்வு ஆர்வத்தைக் காட்டுவன. தம் ஆய்வுப்பணிகளுக்குப் பெரிதும் துணைநின்ற அறிஞர்களை நன்றியுடன் நினைத்து உருகும் முனைவர் ச. குருசாமி அவர்கள் தம்முடன் பணியாற்றிய முனைவர் ம. இரா. அரசு அவர்களின் துணையையும் ஒத்துழைப்பையும் தொல்காப்பிய ஆய்வுக்குத் தம்மை ஆற்றுப்படுத்தியமையையும் நன்றியுடன் போற்றுவது இவர்தம் சால்புக்குச் சான்றாகும். 

பேராசிரியர் ச குருசாமி அவர்களின் தமிழ்க்கொடை: 

1.   இளம்பூரணர் உரைநெறி (2007)

2.   சேனாவரையர் உரைநெறி (2007)

3.   நச்சினார்க்கினியர் உரைநெறி (2008)

4.   பேராசிரியர் உரைநெறி (2008)

5.   கல்லாடனார் உரைநெறி (2017)

6.   தெய்வச்சிலையார் உரைத்திறன் (2019)

7.   தெய்வச்சிலையார் உரைநெறி (2022), செ.த.ம.நிறுவனம்.

8.   களவியல் உரைநெறி (2022)

9.   விருத்தியுரைகாரர் உரைநெறி (2022)







ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

சிட்னியில் யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளாருக்குச் சிலைத் திறப்பு…

  

விபுலாநந்த அடிகளார் சிலைத் திறப்பு விழா- சிட்னி (29.03.2024)
குணரத்தினம் ஐயா, மனோ அம்மா, பேராசிரியர் பாலசுந்தரம், சந்திரிகா சுப்பிரமணியம், அனகன் பாபு, மன்னர் மன்னன், மு.இளங்கோவன்

விபுலாநந்த அடிகளார் சிலைத் திறப்பு விழா- சிட்னி

  ஆத்திரேலியா நாட்டின் சிட்னி மாநகரில் யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளாருக்குச் சிலை ஒன்று நிறுவ வேண்டும் என்று அங்கு வாழும் உதயசூரியன் இதழாசிரியர் திரு. குணரத்தினம் அவர்கள் பலவாண்டுகளாக முயற்சி செய்துவந்தார்கள். 2019 ஏப்ரல் திங்களில் நான் முதல் முறையாக ஆத்திரேலியா சென்றபொழுதும் என்னிடம் நேரில் நினைவூட்டினார்கள். அன்று முதல்  ஒற்றை மாந்தராகக் கடுமையாக உழைத்து, ஒரு சிலையை நிறுவுவதற்குப் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்து, நிறைவாகச் சிலையைத் திறப்பதற்கு நாளும், நேரமும் குறித்தார்கள். சிலைத்திறப்பின் பொழுது அடிகளாரின் பெருமைகளை நினைவுகூரும் கட்டுரைகள், வாழ்த்துச் செய்திகளைத் திரட்டி, நினைவு மலர் ஒன்று வெளியிடவும் முனைந்தார்கள். 

விபுலாநந்த அடிகளார் சிலைத்திறப்பு நிகழ்வில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ் அன்பர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பிக்க வேண்டும் என்ற வகையில் பலரையும் மகிழ்ச்சியுடன் விழாக்குழுவினர் அழைத்தார்கள். அவ்வகையில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை உருவாக்கி, அடிகளாரின் பெருமைகளை உலக அரங்கில் அனைவரும் மீண்டும் நினைவுகூர்வதற்கு வழியேற்படுத்திய நானும் பங்கேற்க வேண்டும் என்று விரும்பி, திருவாளர் குணரத்தினம் ஐயா  அவர்களும் அவர்களின் துணைவியார் மனோ அம்மா அவர்களும் எனக்கும் அன்பு அழைப்பு விடுத்தார்கள்.  கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தாலும் பணிச்சுமையும், முன்பே ஏற்றுக்கொண்ட சில பணிகளும், குடும்பப் பொறுப்புகளும் மனத்துக்குள் தயக்கத்தை ஏற்படுத்தின. இருப்பினும் திரு. குணரத்தினம் ஐயா அவர்களின் அன்பும் அம்மா அவர்கள் என் மீது காட்டும் பாசமும் ஆத்திரேலியாவுக்குச் செல்ல வேண்டும் என்ற உந்துதலை எனக்குத் தந்தன. 

அந்த நாட்டிற்குச் செல்வதற்கு நுழைவுச் சீட்டு எடுக்கும் பணியில் முனைந்தபொழுது என் கடவுச்சீட்டைப் புதுப்பித்தல் நலம் என்று பயண முகவர் குறிப்பிட்டார். உடன் கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டேன். இரண்டு கிழமையில் கடவுச்சீட்டின் புதுப்பித்தல் பணி முடிந்தது. பின்னர் நுழைவுச்சீட்டினைப் (விசா) பெறுவதற்குரிய ஆவணங்களைத் திரட்டி, அதனையும் குறிப்பிட்ட நாளுக்குள் பெற்றேன். இவை யாவும் முடிவதற்குள் விழா நடைபெறும் நாளும் நெருங்கியது. இறுதி நேரத்தில் பயணத்தை உறுதிப்படுத்தியதால் வானூர்திச் சீட்டு விலை அதிகமாக இருந்தது. எனினும் ஆத்திரேலியா நாட்டிற்குச் செல்வதையும் அடிகளார் குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதையும் மகிழ்ச்சியான தமிழ்க் கடமையாக ஏற்றுக்கொண்டு, புறப்பட்டேன். 

ஆயிடை, 

சிட்னியில் 29.03.2024 இல் நடைபெறும் விபுலாநந்த அடிகளார் சிலைத்திறப்பு விழாவில் கனடா நாட்டிலிருந்து பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்களும், அவர்களின் துணைவியாரும், மலேசியாவிலிருந்து ஆசான் மன்னர் மன்னன் மருதை அவர்களும், இலங்கையிலிருந்து மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்துப் பொறுப்பாளர்களும், மெல்பர்ன் நகரத்திலிருந்து எழுத்தாளர் செயராம சர்மா, பொறியாளர் நடேசன் சுந்தரேசன், வழக்கறிஞர் “பாடும்மீன்” சிறீ கந்தராசா உள்ளிட்ட தமிழ் அன்பர்களும் கலந்துகொள்ள உள்ளதை அறிய முடிந்தது. அனைவரும் முதல் நாளே சிட்னிக்கு வந்துசேர்ந்திருந்தார்கள். 

29.03.2024 மாலை 5 மணிக்கு, சிட்னி, துர்க்கையம்மன் கோவிலின் அரங்கத்தில் விழாவில் கலந்துகொள்ளும் நோக்கில் விபுலாநந்த அடிகளார் மீது அன்புகொண்டிருந்த தமிழன்பர்கள் ஒன்றுதிரண்டிருந்தனர். திரு. குணரத்தினம் ஐயா அவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் நண்பர்களும் திரண்டிருந்தனர். எழுத்தாளர் மாத்தளை சோமு ஐயா, வழக்கறிஞர்  மாறன் நந்தன் சிதம்பரம், வழக்கறிஞர் சந்திரிகா சுப்பிரமணியன், தொழிலதிபர் அனகன் பாபு, “இன்பத் தமிழ் ஒலி” பிரபாகரன் பாலசிங்கம், “தாயகம் ஒலிபரப்புச் சேவை” பாலா விக்னேஸ்வரன், ஒளி ஓவியர் இலாவண்யன், கண்ணன் உள்ளிட்ட நண்பர்களை அரங்கில் கண்டு உரையாடியமை மகிழ்ச்சியளித்தது. அரங்கத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த விபுலாநந்த அடிகளாரின் சிலை, அறிஞர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. மலர்தூவி அனைவரும் அடிகளார் படிமத்தை வணங்கினோம். பின்னர் அரங்கில் நடைபெற்ற மேடை நிகழ்வில் அடிகளாரின் பெருமைகளை விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களாகிய நாங்கள் அரங்கில் இருந்த ஆர்வலர்களுக்கு எடுத்துரைத்தோம். விழா மலரும், நினைவு விருதும் எங்களுக்கு வழங்கப்பட்டன. 

இலங்கையின் மட்டக்களப்பை அடுத்துள்ள காரைதீவில் பிறந்த விபுலாநந்த அடிகளார் யாழ் நூல் உருவாக்கியமையாலும், சிவாநந்த வித்தியாலயம் உள்ளிட்ட கல்வி நிலையங்களைத் தோற்றுவித்ததாலும், இராமகிருஷ்ண மடத்தின் துறவியாக இருந்து, சமயப்பணிகள் பல ஆற்றியதாலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் பணியாற்றி, அளப்பரிய தமிழ்த்தொண்டாற்றியதாலும் நம் நெஞ்சங்களில் என்றும் நிலைபெற்று வாழ்வார். அடிகளாரின் சிலையைச் சிட்னியில் நிலைபெறச் செய்தமையால் திரு. குணரத்தினம் அவர்களும் நீடுபுகழ் பெற்று, நெடுவாழ்வு வாழ்வார் என்பதில் ஐயமில்லை.


குணரத்தினம்  அவர்கள் மு.இளங்கோவனுக்குச் சான்றிதழ் வழங்குதல்


விபுலாநந்த அடிகளார் சிலைத் திறப்பு விழா- சிட்னி


மாத்தளை சோமு, ந. சுந்தரேசன், மு.இளங்கோவன், இலாவண்யன்








ஒளி ஓவியர் கண்ணன், மு.இளங்கோவன்



 

செவ்வாய், 26 மார்ச், 2024

தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிப்பு!

 


 முனைவர் மு. இளங்கோவன் தொல்காப்பியர் சிலைக்கு மாலை அணிவிப்பு. அருகில் முனைவர் நெய்தல்நாடன், பாவலர் தமிழ்நெஞ்சன் உள்ளிட்ட தமிழன்பர்கள்.

 புதுவைத் தமிழ்ச் சான்றோர் பேரவையின் சார்பில் தமிழ் இலக்கணத் தந்தை ஒல்காப் புகழமைந்த தொல்காப்பியனாரின் திருவுருவச் சிலைக்கு முழுமதி நாள் மலர் வணக்கம் செய்யும் பத்தாம் திங்கள் நிகழ்வு 25.03.2024(திங்கள்) காலை 10.00 மணி அளவில் நடைபெற்றது

 புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு புதுவைத் தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவுநர் கலைமாமணி முனைவர் நெய்தல்நாடன் தலைமையில்  நடைபெற்றது.


  புதுவை அரசின் காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறை  இணைப்பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன்  தொல்காப்பியர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் வணக்கம் செலுத்தியதுடன், தொல்காப்பியச்  சிறப்புரைக்கும் உரை  நிகழ்த்தினார்.  

 நிகழ்வுக்கு வந்திருந்தவர்களைக்  கவிஞாயிறு  முருகு. மணி வரவேற்றார். நிகழ்ச்சியின் நிறைவில் பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் நன்றி கூறினார். காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவர் பாவலர் வேணு. ஞானமூர்த்தி, புதுவைத் தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் . திருநாவுக்கரசு, .ரா.பூபதி அறக்கட்டளைச் செயலர் செந்தமிழ்த்தொண்டர் சவரி. பத்மநாபன், ஆன்மிகச் செம்மல் . முத்துஐயாசாமி, கவிச்சுடர் கே.சி.செயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

திங்கள், 25 மார்ச், 2024

பேராசிரியர் தா.வே.வீராசாமி

 


பேராசிரியர் தா.வே.வீராசாமி

 

 [பேராசிரியர் தா.வே. வீராசாமி அவர்கள் அகராதிக்கலை வல்லுநர்; பதிப்புக்கலை அறிஞர்; இலக்கியத் திறனாய்வாளர்; மொழிபெயர்ப்பு வல்லுநர் எனப் பன்முக அறிஞராக அறியப்படுபவர். புதினங்கள் (நாவல்கள்) குறித்த திறனாய்வு நூல்களை வழங்கியவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய பெருமைக்குரியவர். ] 

திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் ஆய்வு மாணவனாக இருந்தபொழுது (1993-97), மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது. நண்பர்களின் வேண்டுகோளின்படி சில காலம், விடுதியின் செயலராகவும் இருந்தேன். அப்பொழுது முனைவர் வீர. முத்துக்கருப்பன் அவர்கள் துணைவேந்தராகவும், முனைவர் சி. தங்கமுத்து அவர்கள் பதிவாளராகவும் இருந்து, பல்கலைக்கழகத்தை வழிநடத்தினர். அப்பல்கலைக்கழத்தில் அமைய இருந்த பாரதிதாசன் உயராய்வு மையத்திற்கு விரிவுரையாளராக, பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வுசெய்துகொண்டிருந்த என்னைப் பணியமர்த்தும் ஒரு சூழல் பல்கலைக்கழகத்தில் நிலவியது. மாண்புநிறை துணைவேந்தர் அவர்களும் மதிப்பிற்குரிய பதிவாளர் அவர்களும் எனக்குப் பணிவழங்க ஆர்வமாக இருந்தனர். ஆயின் அது நடைபெறுவதற்குத் தடையும் தோன்றியதால் என் பட்டம் பெறுவதே முதல் பணி என்றும், பட்டம் இருந்தால் எங்கும் வேலை பெற்றுக்கொள்ளலாம் என்றும் நினைத்து, பல்கலைக்கழகத்துப் பணியை நினைவிற்கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்திவந்தேன். இது நிற்க. 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உயராய்வு மையத்திற்குப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவராகப் பேராசிரியர் தா. வே. வீராசாமி ஐயா அவர்கள் 01.12.1995 இல் பணியமர்த்தப்பட்டார்கள். பாரதிதாசன் படைப்புகள் குறித்து ஆய்வு செய்து நூல் வெளியிட்ட சிறப்புணர்ந்து, பல்கலைக்கழகம் அவருக்குப் பணி ஆணை வழங்கியது. பேராசிரியர் தா.வே.வீ. அவர்கள் விருந்தினர் விடுதியில் தங்கவும், மாணவர் விடுதியிலிருந்து அவர்களுக்கு உணவு செல்லவும் பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியிருந்தது. தா. வே. வீ. அவர்களை முன்பே நூல்களின் வழியாக அறிவேன் எனினும் அப்பொழுதுதான் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. விடுதியிலிருந்து உணவு செல்வதால் விருந்தினர் இல்லத்தில் தனித்து உண்ணாமல் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்த விரும்பிய பேராசிரியர் தா.வே. வீ அவர்கள் விடுதிக்குச் சில பொழுதுகளில் வந்துவிடுவார்கள். நான் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் ஆய்வு செய்ததால் என்மீது அளவுக்கு அதிகமான அன்பும் ஈடுபாடும் நம் பேராசிரியருக்கு இருந்தது. உண்பதற்கு முன்பாக என் அறைக்கு வந்து, என்னையும் அழைத்துச் செல்வார்கள். சில நாள்களில் இருவரும் இணைந்தே அலுவலகம் செல்வதும் விடுதிக்குத் திரும்புவதுமாக இருப்போம். அவர்தம் அலுவலகம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலகம் அருகில் இருந்தது. ஓர் அறையில் தா.வே.வீ அவர்களும் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்களும் அமர்ந்து அவரவர் ஆராய்ச்சிப்பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள். நடைப்பயிற்சியின்பொழுது தமிழகத்துக் கல்வி நிலை, அவர்தம் கல்வியார்வம், ஆய்வு ஆர்வம், திரைப்படம் பார்க்கும் ஆர்வம், அடிக்கடி சினம் கொள்ளும் இயல்பு யாவற்றையும் என்னிடம் ஒரு வகுப்புத் தோழரைப் போல் கூறி மகிழ்வார். 

 நண்பர்களுடன் உணவு விடுதிகளுக்குச் சென்றால் நம்மைப் பணம் கொடுக்க அனுமதிக்க மாட்டார். மாணவர்கள் பணநெருக்கடியில் இருப்பார்கள் என்பதே காரணம். நேரந் தவறாமை, கடும் உழைப்பு, இலக்கியத்தை நுட்பமாக நோக்கிப் பார்க்கும் புதிய பார்வை யாவும் அவரிடம் நான் கண்ட உயர்பண்புகளாகும். தம் ஆசிரியர் வ. ஐ. சுப்பிரமணியம் அவர்களின் சிறப்புகளையும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் பணியாற்றிய தம் பட்டறிவுகளையும், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த நினைவுகளையும் ஒவ்வொரு நாளும் பேராசிரியருடன் அமையும் உரையாடலின்பொழுது அறிந்துகொள்வேன். பல மாதங்கள் பேராசிரியர் தா.வே.வீ. அவர்களுடன் பழகிய நான் வேறு நிறுவனத்தில் பணியாற்றச் சென்றதால் தா.வே.வீ. அவர்களின் தொடர்பு பின்னாளில் குறைந்தது. 

பாரதிதாசன் ஆய்வுகளில் முன்னின்று உழைத்த பெருமகனார் தாவே.வீ. அவர்கள் சிலவாண்டுகளுக்குப் பின்னர் இயற்கை எய்திய துன்பச் செய்தியறிந்து அந்நாளில் துயருற்றேன். அதன் பிறகு தா.வே.வீ. அவர்களின் தமிழ்ப்பணிகளைத் தமிழுலகுக்கு அறிமுகம் செய்து எழுத வேண்டும் என்று நினைத்தும் சிறிய அளவில்தான் என்னிடம் குறிப்புகள் இருந்தன. போதிய குறிப்புகள் கிடைப்பதில் காலம் தாழ்ந்தது. அண்மையில் பேராசிரியர் சோ. பாண்டிமாதேவி அவர்கள் தா.வே. வீராசாமி அவர்களின் வரலாற்றை நூலாக எழுதியுள்ளார்கள் என்று அறிந்து மகிழ்ந்தேன். அந்நூலைப் பெற்று தா.வே.வீ. அவர்களின் ஆளுமையை முழுவதுமாக அறிந்துகொண்டேன். அவர்தம் நூலில் தா.வே. வீராசாமி குறித்த விரிவான செய்திகளும் அவரின் படைப்புகள் குறித்த மதிப்பீடுகளும் விரிவாக இடம்பெற்றுள்ளன. தா.வே.வீ. அவர்களின் வாழ்வியலை ஆவணப்படுத்திய முனைவர் சோ. பாண்டிமாதேவி அவர்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன்பட்டுள்ளது. தா.வே.வீ. அவர்களின் திருமகனார் திருவாளர் கண்ணப்பனார் அவர்களும் தம் தந்தையார் குறித்த விவரங்களை உரையடலில் மகிழ்வுடன் பகிர்ந்துகொள்வார். 

பேராசிரியர் தா.வே. வீராசாமி அவர்களின் இளமைப் பருவம்: 

தா. வே. வீராசாமி அவர்கள் 01.02.1931 இல் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பிறந்தவர். பெற்றோர் பெயர் வேங்கடாசலம் – தெய்வானை அம்மாள் ஆகும். இளம் அகவையிலேயே தந்தையார் இயற்கை எய்திய காரணத்தால் தமையனார் தா.வே. சுந்தரம் அவர்களால் வளர்க்கப்பெற்றவர். தாராபுரம் நாட்டாண்மைக் கழக உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். அப்பள்ளியில் பணியாற்றிய கா. காழிப்பனாரிடம் தமிழ் பயின்றவர். காழிப்பனார் சீர்திருத்தக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். தா. வே. வீ. பள்ளியிறுதி வகுப்பினை 1948 இல் நிறைவு செய்தவர். பள்ளிக் கல்வி வரைதான் தொடர் படிப்பு இருந்தது. அதன்பிறகு தம் சொந்த முயற்சியால் படித்து, உயர்நிலையை எய்தினார்.  1958 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக வித்துவான் தேர்வில் தேறியவர். 1959 இல் இளங்கலைத் தமிழ் பயின்றவர். 1961 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கலை முதுவர் பட்டம் பெற்றவர். 

தா. வே. வீராசாமி அவர்கள் 1949 இல் எழுத்தராகத் தம் பணியைத் தொடங்கினார். 1951-53 இல் கோவை பெரியநாயக்கன்பாளையம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயிலவும் பணியாற்றவும் வாய்ப்பு அமைந்தது. 1953-58 வரை கோவை இராமலிங்கம் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1958 முதல் 1968 வரை கோவை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 



திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம் அவர்களை நெறியாளராகக் கொண்டு, பெரியபுராணம் இலக்கணம் – சொல்லடைவுகள் (Grammatical Study of Periyapuranam with Index ) என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றார் (1962- 1966). அதன் பிறகு கோவை  பூ. சா. கோ. கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் (1967-69), 1969 முதல் 1972 வரை கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகவும், 1972 முதல் 1973 வரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறைத் தலைவராகவும், 1973 முதல் 1975 வரை மதுரை காமராசர் பல்கலைக்கழத்தின் தமிழ்த்துறையின் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். 

1975 முதல் 1983 வரை சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். 1983 முதல் 1991 வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பியல் துறைப் பேராசிரியராகவும், பெருஞ்சொல்லகராதியின் முதன்மைப் பதிப்பாசிரியராகவும் கூடுதல் பணியாற்றியவர். 1992 முதல் 1993 வரை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அகராதித் துறையின் முதன்மைப் பதிப்பாசிரியராகவும் 1994 முதல் 1995 வரை திருவனந்தபுரம் உலகத் திராவிட மொழியியல் ஆய்வுப்பள்ளியின் சிறப்புநிலை ஆய்வாளராகவும் பணியாற்றியவர். 01.12.1995 முதல் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயராய்வு மையத்தின் பேராசிரியராகப் பணியாற்றிப் பாவேந்தர் பாரதிதாசனின் மணிமேகலை வெண்பாவுக்கு அடைவு தயாரித்து வழங்கியவர். 

பேராசிரியர் தா. வே. வீராசாமி அவர்கள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், செர்மன் உள்ளிட்ட மொழிகளை அறிந்தவர். சாகித்ய அகாதெமிக்காக அலாகரஞ்சன் தாஸ் குப்தாவின் புத்த தேவ போஸ் என்னும் நூலை மொழிபெயர்த்துள்ளார். அதுபோல் நேருவின் வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்துள்ளார். 

தா. வே. வீராசாமி அவர்கள் 23 - க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். 250 - மேற்பட்ட கட்டுரைகளை வரைந்துள்ளார். இவரின் மேற்பார்வையில் பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பல்வேறு பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இவர்தம் பணிக்காலத்தில் நாவல்கள் குறித்த ஆய்வுகள் முதன்மையிடத்தில் இருந்ததால் இவரின் நூல்கள், கட்டுரைகள் யாவும் நாவல்கள் குறித்து மிகுதியாக இருந்தன. இவரின் மாணவர் அறிவழகன் (கவிஞர் அறிவுமதி அவர்களின் உயிர்த்தோழர்) (கடலூர்) ஜெயகாந்தன் ஆய்வடங்கள் நூலை வெளியிட்டவர். 

தா. வே. வீராசாமி அவர்களுக்கு 08.07.1957 இல் திருமணம் நடைபெற்றது. மனைவியின் பெயர் இராமலெட்சுமி ஆகும். இவர்களுக்கு மணிமேகலை, கண்ணப்பன் என்ற இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். 

தமிழ் ஆய்வுலகில் தனித்ததோர் அடையாளம் பெற்றிருந்த அறிஞர் தா.வே. வீராசாமி அவர்கள் தாம் முன்னாளில் பயின்ற பள்ளியில் சிறப்பு விருந்தினராகச் சென்று, உரையாற்றிக்கொண்டிருந்தபொழுது மாரடைப்பு ஏற்பட்டு, 11.07.1997 இல் இயற்கை எய்தினார். 

முனைவர் தா. வே. வீராசாமியின் தமிழ்க்கொடைகள்: 

1.   உழைப்பின் வெற்றி (1962)

2.   வெற்றியின் இருமுகம் (1969)

3.   பொன்குஞ்சு (1970)

4.   தமிழ்ச்சுடர் (1970)

5.   பட்டறையிலே பாரதிதாசன் (1971)

6.   தமிழ் நாவல் – ஓர் முன்னோட்டம் (1973)

7.   Tamil An Intensive Course (Co – Author) 1973

8.   ஆய்வுக் கதிர் (1974)

9.   தொல்காப்பியம் அகத்திணையியல் உரைவளம் (ப.ஆ.) (1975)

10. தமிழ் இலக்கியக் கொள்கை தொகுதி 1 (1975)

11. கல்கி அகிலன் படைப்புக்கலை (1977)

12. தமிழ் சமூக நாவல்கள் (1978)

13. தமிழ் நாவல் வகைகள் (1979)

14. தமிழ் நாடக வரலாற்றில் பாரதிதாசன் (1981)

15. தந்திவனப் புராணம் (ப.ஆ) (1981)

16. தமிழ்ப் பண்பாட்டு மரபுச்செல்வம் (1981)

17. பாரதி இலக்கியம்: ஒரு பார்வை (1982)

18. புத்த தேவ போஸ் (1982)

19. பெரியபுராணச் சிறப்புப் பெயரகராதி (1986)

20. தமிழ் நாவல் இயல்(1986)

21. பெருஞ்சொல் அகராதி தொகுதி 1 (1988)

22. தமிழ்க் காப்பியக்கொள்கை- கம்பராமாயணம், வில்லிபாரதம் (1988)

23. அகராதிக் கலை (1989)

24. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் (1985)

25. பாரதிதாசன் கவிதைகளில் அருஞ்சொல்லகராதி (மணிமேகலை வெண்பா) 1996 







நன்றி: முனைவர் சோ. பாண்டிமாதேவி அவர்கள்

 

 

ஞாயிறு, 24 மார்ச், 2024

“யாப்பு விளக்கம்” தந்த பாவலர் ப. எழில்வாணன்

பாவலர் . எழில்வாணன் 

[பாவலர் . எழில்வாணன் அவர்கள் மரபு பாடல்கள் இயற்றுவதிலும், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் வரைவதிலும் ஈடுபாடு கொண்டவர். பள்ளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்யாப்புத்துறையில் பேரீடுபாடு கொண்டவர். இவர் இயற்றிய செந்தமிழ்ச் செய்யுட்கோவை, யாப்பு விளக்கம் என்னும் நூல்கள் இவருக்குப் பெரும்புகழை ஈட்டித் தந்தவை.] 

 தென்மொழி, தமிழ்ச்சிட்டு உள்ளிட்ட தூய தமிழ் ஏடுகளைப் படித்தவர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் பாவலர் ப. எழில்வாணன் என்பதாகும். தமிழ்ப்பற்றும், தமிழ்ப் புலமையும் ஒருங்கே வாய்த்த இப்பெருமகனார் ஆசிரியர் பணியின் வழியாகவும், நூலாக்கப் பணிகளின் வழியாகவும் தூய தமிழ்த்தொண்டாற்றி வருபவர். அன்பும் எளிமையும் ஓருருக் கொண்டமை போல உருத்தோற்றம் கொண்ட இத்தமிழ்த்தொண்டரின் வாழ்வியலையும் பணிகளையும் அறிதல் தமிழர் கடமை. 

 பாவலர் ப. எழில்வாணன் அவர்களின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். அது வடமொழிப் பெயர் என்பதால் எழில்வாணன் எனத் தம் பெயரை மாற்றி அமைத்துக்கொண்டவர். இவர் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் விருப்பாச்சி என்னும் ஊரில் 01.02.1950 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் பழனியப்பன் – காளியம்மாள் என்பதாகும். விருப்பாச்சி என்னும் ஊர் மேற்குமலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்து வேளாண்மையாலும், மலை வாழைப்பழத்தின் சிறப்பாலும் புகழ்பெற்ற ஊராகும். 

 ப. எழில்வாணன் பள்ளிக் கல்வியை விருப்பாச்சியிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும்(1955-60), நடுநிலைக் கல்வியை அவ்வூரில் உள்ள ஆர். சி. பாத்திமா நடுநிலைப் பள்ளியிலும், பின்னர் உயர்நிலைக் கல்வியைக் கருவூர் மாவட்டத்திலுள்ள பள்ளபட்டி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர்(1964-67). 

 பழனி அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியில் புகுமுக வகுப்பினை முடித்த ப. எழில்வாணன் மேலூர் அரசினர் ஆதாராப் பயிற்சிப் பள்ளியில் ஈராண்டுகள் பயின்று இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். 

 1973 ஆம் ஆண்டில் பள்ளபட்டி உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியேற்றவர். ஆசிரியர் பணியில் இருந்தவாறே படித்துப் புலவர் பட்டமும் இலக்கிய இளையர் பட்டமும் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழியாக, இளைஞர் இலக்கியம் – பள்ளிப்பறவைகள் –ஓர் ஒப்பாய்வு என்னும் தலைப்பில் பாரதிதாசன்- பாவலரேறு பெருஞ்சித்திரனார் நூல்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து மெய்ம்மவியல் முதுவர் (எம்.ஃபில்) பட்டம் பெற்றவர். பள்ளபட்டி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக, முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி 31.05.2008 இல் பணி நிறைவு பெற்றவர். 

 ப. எழில்வாணன் பிற அன்பர்களுடன் இணைந்து பல நூல்களை எழுதியுள்ளார். இயற்கை வடிவங்கள், நீதிகேட்ட நெடும்பயணம், வாழ்த்துகிறோம், மனிதனைத் தேடுகின்றேன், கூடிக்கூவும் குயில்கள், நெம்புகோல்கள், காவிரி, புதியதோர் உலகு செய்வோம். இன்றைய குலுக்கல்கள், தமிழ்த் தொண்டர் கா.சு, உழைப்புச் செம்மல் கலைஞர், பாவலர் நெஞ்சில் பேராசிரியர் உள்ளிட்ட நூல்களில் இவர்தம் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. 



 தமிழ் உணர்வு கொண்ட பல படைப்புகளைத் தமிழகத்தின் முன்னணி ஏடுகளில் எழுதியவர். அவ்வகையில் மாலைமுரசு, வல்லமை, ஏர் உழவன், செந்தமிழ்ச் செல்வி, தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம், இயற்றமிழ், குறளியம், வள்ளுவர் வழி, குறள் மணம், தமிழ்ப்பாவை, எழுகதிர், வண்ணப்பூங்கா, தமிழ்நேசன் (மலேசியா), கவிக்கொண்டல், குயில், தேவி (கிழமை இதழ்), எழுத்துலகம், தமிழ்ப்பேழை, துளி, அன்பே, திறவுகோல், பன்மலர், புதுவெள்ளம், நிலா, ஏழைதாசன், தமிழ்வளம் உள்ளிட்ட பல ஏடுகளில் எழுதித் தமிழ்த்தொண்டாற்றியவர். 

 மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடு(1987), மும்பையில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்குகள் எனப் பல்வேறு மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு தம் பங்களிப்பை நல்கியவர். 

 ப. எழில்வாணனின் சிறப்புகளை உணர்ந்து, பல்வேறு தமிழ் அமைப்புகள் இவரைப் பாராட்டியுள்ளன. அவ்வகையில் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை “கவிமாமணி” விருதினையும், இலக்கணப் புலவர் சரவணத் தமிழன் அவர்கள் “பைந்தமிழ்ப் பாவலர்” விருதினையும், இயற்றமிழ்ப் பயிற்றகம் “யாப்புப் புலவர்” என்ற விருதினையும், உலகத் திருக்குறள் உயராய்வு மையம் “திருக்குறள் விருதி”னையும், தமிழ்ச் சான்றோர் பேரவை “மொழிப்போர் மறவர்” என்ற விருதினையும்(1999), தமிழ்நாடு அரசு “நல்லாசிரியர்” விருதினையும், “தமிழ்ச் செம்மல்” விருதினையும், சென்னைப் பாவேந்தர் பாசறை “பாவேந்தர் விருதி”னையும் வழங்கியுள்ளனர். 

 ப எழில்வாணன் அவர்கள் 2014 இல் வெளிவந்த ஒக்கேனக்கல் என்னும் திரைப்படத்தில் பூவே பூவே ஏனோ நாணமோ என்னும் பாடலை எழுதியுள்ளார். எதிர்வினை என்னும் திரைப்படத்திற்கும் பாடல் புனைந்துள்ளார். 

 ப. எழில்வாணனின் சிறப்பினைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் கீழ்வரும் பாடலில் சிறப்புறப் புகழ்ந்து பாடியுள்ளார். 

தப்பெழுதாமல் எழுதும் தனித்தமிழ்ப் பெரும்பற்று; தகைசால் பண்பு;

கொப்புளித்துப் பிறமொழிச்சொல் துப்பிவிட்டுத் தூய தமிழ் கூறும் வேட்கை;

அப்பழுக்கில்லாத உள்ளம்; அணையாத நல்லுணர்வு; இங்கு ஆருக்கென்றால்

மெப்புதலுக்கில்லாமல் உரைக்கின்றேன் எழில்வாணன் விழிமுன் நிற்பார். 

புலவர் ப. எழில்வாணன் எழுதிய நூல்கள்: 

1.   ஒரு சொட்டுக் கண்ணீர்(1985)

2.   நீ தமிழ் மகனா (1987)

3.   செந்தமிழ்ச் செய்யுட்கோவை(1990)

4.   கலைஞரின் வாகையும் மார்கழிப் பாவையும்(1990)

5.   தமிழ்ச்சோலை(2010)

6.   பன்மலர்த்தேன்(2010)

7.   துன்பம் நீக்க வள்ளுவர் கூறும் வழிகள்(2014)

8.   குறும்பாவியங்கள்(2014)

9.   சிறுவர் புரட்சிக் கதைகள் (2017)

10. இளைஞர் இலக்கியமும் பள்ளிப்பறவைகளும்(2017)

11. வெற்றி பெறுவோம் (2019)

12. யாப்பு விளக்கம் (2021)