நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
திருவையாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவையாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 ஜூன், 2015

தமிழிசை மீட்சி குறித்த ஆவணம்…





  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் தமிழிசை வளர்ச்சிக்கு ஓர் இலக்கிய நிகழ்வு 1972 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் நாள் மாலை ஆறுமணிக்கு நடைபெற்றுள்ளது. அக்காலத்தில் தமிழ் உணர்வு தழைத்த உணர்வாளர்கள் முன்னின்று இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளனர்.  தஞ்சை மாவட்ட உலகத் தமிழ்க் கழகம் இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திரு. சு.அறிவுறுவோன் அவர்களும், பெரம்பூர் ப. கண்ணையன் அவர்களும் சிறப்பாகச் செயல்பட்டமையை அறியமுடிகின்றது. பாவலர் தரங்கை. பன்னீர்ச்செல்வனார். பேராசிரியர் இரா. இளவரசு, புலவர் எண்கண் மணி உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியுள்ளார். எம் ஆவணப்படத்தில் இணைக்கத் தகுந்த இந்த அழைப்பிதழ் ஆவணம் நேற்றுதான் கிடைத்தது (26.06.2015). திருவாரூரில் புலவர் எண்கண் மணி ஐயா இல்லிலிருந்து நன்றியுடன் பெற்றுவந்தேன். 

சனி, 11 ஏப்ரல், 2015

திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் அறிமுகம்!




மு.இளங்கோவனுக்கு இலக்கியச் செம்மல் என்ற விருதினைத் திருவையாற்றில் வழங்கிப் பாராட்டும் காட்சி. தஞ்சை மருத்துவர் கலைமாமணி சு. நரேந்திரன், புலவர் தங்க.கலியமூர்த்தி, 
இசைக்கல்லூரி முதல்வர் ஸ்ரீ வித்யா, தமிழறிஞர்கள், மாணவர்கள் 

   திருவையாறு அரசு இசைக்கல்லூரியும், திருவையாறு இளங்கோ கம்பன் இலக்கியக் கழகமும் இணைந்து பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் வாழ்க்கை குறித்த ஆவணப்படத்தைத் திரையிட்டு மாணவர்களுக்குப் பண்ணாராய்ச்சி வித்தகரின் பணிகளை அறிமுகம் செய்தன. குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் இந்தக் கல்லூரியில்  விரிவுரையாளர் பணியில் முதன்முதல் இணைந்து தேவாரம் உள்ளிட்ட திருமுறைகளை மாணவர்களுக்குப் பயிற்றுவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஆவணப்பட அறிமுக நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களைக் கல்லூரி முதல்வர் முனைவர் அ. ஸ்ரீவித்யா வரவேற்று உரையாற்றினார்., இக்கல்லூரியில் தொடக்க காலத்தில் பணியாற்றிய குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் வாழ்க்கையையும், தமிழிசைப்பணிகளையும் எங்கள் மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய முன்வந்த தமிழறிஞர்களுக்கு நன்றி என்று ஆர்வமுடன் தம் உரையில் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இசைத்துறை மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்வதற்கு இந்த ஆவணப்படம் பெரும் தூண்டுகோலாக இருக்கும் என்று பேராசிரியர் அ.ஸ்ரீவித்யா நம்பிக்கை தெரிவித்தார்.

குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழிசை வாழ்வையும் ஆராய்ச்சியையும் அறிமுகம் செய்யும் இந்த ஆவணப்படத்தின் பாடல்களைக் கேட்டும், பார்த்தும் சுவைத்த இசைத்துறை மாணவர்கள் படத்துடன் ஒன்றிப் பலரும் கண்ணீர்விட்ட காட்சி அவையினரின் உள்ளத்தை அசைத்தது. இசைத்துறைப் பேராசிரியர்கள் பலரும் தங்கள் கல்லூரியின் மூத்த பேராசிரியரின் வாழ்வு ஆவணமானது குறித்துப் பெரிதும் நன்றி தெரிவித்தனர்.

  புலவர் தங்க. கலியமூர்த்தி அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, அறிமுக உரையாற்றினார்.

  நிகழ்ச்சியில் தஞ்சை மருத்துவர் சு. நரேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு ஆவணப்பட இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு இலக்கியச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். குடந்தை ப. சுந்தரேசனார் தமிழிசை உலகுக்கு மிகப்பெரிய பணியாற்றியவர். அவர்தம் வாழ்வும் பணியும் அறியப்படாமல் இருந்த சூழலில் இன்று உலகம் முழுவதும் அவரின் தமிழிசைப்பணிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதனைச் செய்த மு.இளங்கோவனை நெஞ்சாரப் பாராட்டுகின்றேன் என்று மருத்துவர் சு. நரேந்திரன் குறிப்பிட்டார். இசைப்பேராசியர் சு. வெங்கடேசன் நன்றியுரை வழங்கினார்.

  மாலையில் திருவையாறு ஓய்வூதியர்கள் சங்க அரங்கில் பொதுமக்களுக்கான திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்களும் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களுடன் பழகியவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் தமிழிசைப் பணிகளை நினைவுகூர்ந்தனர்.

   தஞ்சைப்பகுதியில் வாழும் தமிழறிஞர்கள் இராம. செல்வராசு, கரந்தை செயகுமார், தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் பா. ஜம்புலிங்கம், புலவர் அறிவுறுவோன், புலவர் மா. திருநாவுக்கரசு, திருச்சி இமயவரம்பன், திருவாரூர் புலவர் எண்கண் சா. மணி, புரவலர் அ.மோகன்தாசு, திருச்சி ஈகையரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 இசைக்கல்லூரி முதல்வர் சு. ஸ்ரீவித்யா அவர்களின் வரவேற்புரை

மருத்துவர் சு. நரேந்திரன் அவர்களின் பாராட்டுரை


 ஆவணப்படத்தை ஆர்வமுடன் பார்க்கும் இசைக்கல்லூரி மாணவர்கள்

வெள்ளி, 20 ஜூன், 2014

தமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்முக. செல்வகணபதி


முனைவர் சண்முக. செல்வகணபதி 

  தமிழ் இலக்கியங்களிலும், தமிழிசையிலும் ஆழ்ந்த புலமைபெற்று, எழுத்தாலும் பேச்சாலும் தமிழ்ப்பணி செய்து வருபவர்களுள் முனைவர் சண்முக. செல்வகணபதி அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். திருவையாறு அரசர் கல்லூரியில் முதல்வர் பொறுப்பேற்றுத் திறம்படப் பணியாற்றிய பேராசிரியர்  சண்முக. செல்வகணபதி அவர்கள் இன்றும் இலக்கியக்கூட்டங்களின் வழியாகவும், சமயச் சொற்பொழிவுகள் வழியாகவும் மக்களிடம் தம் கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் உள்ளார். குடந்தை ப. சுந்தரேசனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள பேராசிரியரின் தமிழ்ப்பணிகளை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

முனைவர் சண்முக. செல்வகணபதி அவர்கள் மரபு வழியாகப் பெரும் இசைக்குடும்பத்தில் பிறந்தவர். திருவீழிமிழலை என்னும் பாடல்பெற்ற ஊரில் 15. 01. 1949 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் கி. சண்முகம், குப்பம்மாள் ஆவர். தொடக்கக் கல்வியைத் திருவீழிமிழலையில் பயின்றும், புகுமுக வகுப்பைக் குடந்தை அரசு கல்லூரியில் பயின்றும் பி.ஓ.எல், முதுகலைப் பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றும் தமிழ்ப்புலமையை வளர்த்துக்கொண்டவர்.

டாக்டர் வ.சுப. மாணிக்கனாரின் நாடகங்கள் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் 1987 இல் இளம் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1991 இல் ஒப்பியல் நோக்கில் பாரதிதாசன்- கார்ல் சாண்ட்பர்க்கு என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

05.12.1974 இல் திருச்சிராப்பள்ளி - திருவெறும்பூர்  நாவலர் நெடுஞ்செழியன் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியைத் தொடங்கி 29 ஆண்டுகள் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றி, திருவையாறு அரசர் கல்லூரியின் முதல்வர் பொறுப்பேற்றுப் பணி நிறைவு பெற்றவர்.

 தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராக இரண்டு ஆண்டுகள்( 2007-2009) பணியாற்றித் தமிழ் நாட்டிய ஆசிரியர்களின் இந்தியப் பண்பாட்டுப் பங்களிப்பு என்ற தலைப்பில் ஆய்வேடு வழங்கிய பெருமைக்குரியவர். தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் இயலிசை நாடக மன்றத் திட்டத்தின் சார்பில் பத்துப்பாட்டில் இசைக்குறிப்புகள் என்ற ஆய்வேட்டை உருவாக்கி வழங்கியவர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வுத் தகைஞராக இருந்து, சிலப்பதிகாரம் வழி அறியலாகும் ஆடல் அரங்கேற்ற நுட்பங்கள் என்ற தலைப்பில் ஆய்வேட்டை ஒப்படைத்துள்ளார(2011, நவம்பர்).

பேராசிரியர். சண்முக. செல்வகணபதி அவர்கள் பல்வேறு கல்விநிறுவனங்களின் அழைப்பின்பேரில் சிறப்புரைகள், சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ள்ளார். உலக அளவிலான கருத்தரங்குகள் பதினைந்திலும், தேசியக் கருத்தரங்குகள் இருபத்தெட்டிலும், இதரக் கருத்தரங்குகள் எழுபத்தியிரண்டிலுமாகக் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்கியுள்ளார். இதுவரை 85 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

இராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம்  நூலினை இசைச்சித்திரமாக 15 பொழிவுகளாகத் திருச்சிராப்பள்ளி வானொலியில் வழங்கியுள்ளார்(2009 சூன் முதல் 2009 ஆகத்து முடிய). இதுவரை 650 மேற்பட்ட மேடைகளில் இலக்கியப் பொழிவுகளாற்றியுள்ளார்.

 திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் திருப்புகழ்ப் பொழிவுகளும்(90 பொழிவுகள்), திருவீழிமிழலை ஆலயத்தில் திருமுறைப்பொழிவுகளும்(110) திருத்தவத்துறை ப.சு. நற்பணி மன்றத்தின் சார்பில் திருப்புகழ் இசைவிளக்கமும்(64 பொழிவுகள்), திருவரங்கம் செண்பகத் தமிழ் அரங்கில் இசைத்தமிழ் அறிஞர் தொடர்ப்பொழிவும் நிகழ்த்தியுள்ளார். தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவை சார்பில் இசைத்தமிழ் அறிஞர் என்ற தலைப்பில்(38) பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.

பேராசிரியர்  சண்முக. செல்வகணபதி அவர்களின் தமிழ்ப்பணியையும் இசைப்பணியையும் போற்றிய பல்வேறு இலக்கிய அமைப்புகள் செந்தமிழ் அரசு, விரிவுரை வித்தகச் செம்மல், முத்தமிழ் நிறைஞர், தமிழிசைச்செம்மல், செந்தமிழ் ஞாயிறு, திருப்புகழ்த் தமிழாகரர், உயர்கல்விச்செம்மல், இயலிசை நாட்டிய முத்தமிழ் வித்தகர்,  செந்தமிழ்ச்செம்மல், தமிழ்ச்சுடர், தமிழ்மாமணி, முத்தமிழ்ச்செம்மல், குறள்நெறிச் செம்மல், பண்ணாய்வுப்பெட்டகம், தொல்காப்பியர் விருது, பெரும்பாண நம்பி( பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நினைவு தமிழிசை விழாக்குழு) உள்ளிட்ட விருதுகளை வழங்கிப் பாராட்டியுள்ளன.

பேராசிரியர்  சண்முக. செல்வகணபதி அவர்களின் தமிழ்க்கொடை:

·         ஒப்பிலக்கிய நோக்கில் தமிழ் இலக்கணம்
·         மொழியியல் நோக்கில் தமிழ் இலக்கணம்
·         கல்வி உளவியல் மனநலமும் மனநலவியலும்
·         தனியாள் ஆய்வு
·         வரலாற்று மொழியியல் நோக்கில் தமிழ் இலக்கணம்
·         தமிழ் மொழியியல் மைச்சுருள் அச்சு
·         தமிழிசை ஆதி மும்மூர்த்திகள், சீர்காழி அருணாசலக்கவிராயர்
·         தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
·         மொழிபெயர்ப்பியல்
·         பாரதிதாசன் கார்ல் சாண்ட்பர்க்கு ஓர் ஒப்பியல் ஆய்வு
·         ஒப்பிலக்கிய வரம்பும் செயல்பாடும்
·         திருவீழிமிழலை திருத்தலம்
·         நன்னூல் தெளிவுரை
·         சீர்காழி மூவர்
·         தமிழ்க்கலைகள், இசைக்கலை நுட்பங்கள்(ஆறு பாடங்கள்)
·         தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
·         அருணகிரியாரின் அருந்தமிழ் ஆளுமைகள்
·         இடைநிலைக் கல்வி நூல் தமிழ்ப்பாடம்
·         சித்தர் கருவூரார் வரலாறும் பாடல்களும்
·   பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் வாழ்வும் வாக்கும்.
·         மேனிலைக் கல்விநூல் தமிழ் ( 3 பாடங்கள்)
·         இசைத்தமிழ் அறிஞர்கள் தொகுதி 1
·         இராவ் சாகிப் தஞ்சை மு. ஆபிரகாம் பண்டிதர்
·         தஞ்சை தந்த ஆடற்கலை
·         தொல்காப்பியம் செய்யுளியல்
·         அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் திருத்தலப் பெருமை
·         கட்டளைகள் ஒதுவார் பட்டயப் படிப்பு பாட நூல்(அச்சில்)
·         தமிழிசை மூவர்- ஓதுவார் பட்டயப் படிப்பு பாடநூல்
·         திருமங்கலமும் ஆனாய நாயனாரும்(அச்சில்)

தொடர்பு முகவரி:

பேராசிரியர்  சண்முக. செல்வகணபதி,
2802, நாணயக்கார செட்டித்தெரு,
தஞ்சாவூர்-613 001
செல்பேசி: 94427 68459


குறிப்பு: கலைக்களஞ்சியம் உருவாக்குவோர், கட்டுரை வரைவோர், நூல் எழுதுவோர் இக்குறிப்புகளை, படத்தை எடுத்தாளும்பொழுது எடுத்த இடம் சுட்டுக.