நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
குடந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்


சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பேட்டை நாணயக்காரத் தெருவில் பெருமைக்குரிய அறிவுத் திருக்கோயிலாக விளங்குவது சிவகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையம் ஆகும். கும்பகோணத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து அறப்பணிகள் செய்த கோபு சிவகுருநாதன் செட்டியார் பி.. பி.எல் (1865-1926) அவர்கள் நினைவாக நிறுவப்பெற்றுள்ள இந்த நூல் நிலையம் 1954 இல் நிறுவப்பெற்றது. தனிக்கட்டடத்தில் இயங்க வேண்டி முனைவர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்களால் 21.05.1958 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டடம் உருப்பெற்று 09.11.1959 இல் சர். பி. டி. இராசன், பார் அட் லா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. தமிழ்நூல்களுக்காக அமைந்த இந்த நூலகத்தில் இன்று நாற்பதாயிரம் நூல்கள் உள்ளன.

இந்த நூலகத்திற்கு அறக்கட்டளையாக மயிலாடுதுறை வட்டம் சென்னியநல்லூர் வல்லம் என்னும் சிற்றூரில் 03.05.1962 இல் 24-46 ஏக்கர் நிலம் எழுதிவைக்கப்பட்டது. நில உடைமைச்சட்டம் 58/ 1961 இன் படி தமிழக அரசு 17-88 ஏக்கர் நிலத்தை எடுத்துகொண்டு இழப்பீடாக 1977 இல் பத்திரங்களை வழங்கியுள்ளது. இப்பொழுது ஐந்து ஏக்கர் நிலத்தின் வருவாயில் நூலகம் பாதுகாக்கப்படுகின்றது.

இந்த நூலகத்தில் உள்ள நூல்கள் பல தொகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டு  முதல் தொகுதி 1954 இலும் அடுத்த இருதொகுதிகளாக 1971 இலும் புத்தகப்பட்டியல் அச்சிடப்பட்டுள்ளன. இந்த நூலகத்திற்குப் பல பெரியோர்கள் நூல்களை அன்பளிப்பாகத் தந்துள்ளனர்.
இந்த நூலகத்திற்கு வியாழக்கிழமைதோறும் விடுமுறை. பிற விடுமுறை நாள்கள் முன்கூட்டியே அறிவிக்கப்படும்.

காலை 9 மணி முதல் பகல் பகல் 12 மணிவரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நூலகம் திறந்திருக்கும்.
இந்த நூலகத்தைப் பயன்படுத்த எந்த வகையான கட்டணமும் இல்லை.

இந்த நூலகத்தில் உள்ள நூல்கள்  கீழ்வரும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  • புராணம்
  • தலபுராணம்
  • சாத்திரமும் தோத்திரமும்
  • திருமுறை
  • சமயம்
  • சங்க நூல்கள்
  • பிரபந்தங்கள்
  • அந்தாதி
  • உலா
  • கலம்பகம்
  • குறவஞ்சி
  • கோவை
  • சதகம்
  • தூது
  • பரணி
  • பிள்ளைத்தமிழ்
  • மாலை
  • வெண்பா
  • இதிகாசம்
  • கீதை
  • வைணவம்
  • நீதிநூல்கள்
  • இசை
  • புதுமைக்கவி
  • மொழிபெயர்ப்பு
  • கட்டுரைகள்
  • அகராதி
  • நிகண்டு
  • இலக்கணம்
  • கல்வெட்டு
  • வாழ்க்கை வரலாறு
  • தமிழக வரலாறு
  • உலக வரலாறு
  • அரசியல்
  • உளவியல்
  • யாத்திரை
  • அறிவியல்
  • உடற்பயிற்சி
  • மருத்துவம்
  • சோதிடம்
  • மாந்திரீகம்
  • கைத்தொழில்
  • நாவல்கள்
  • கணிதம்
  • நாடகம்
  • இசுலாம்
  • கிறித்தவம்
  • பலவகை நூல்கள்
  • பத்திரிகைகள்


நூலகம் உள்பகுதி



 நூல்களின் பாதுகாப்பு
பொறியாளர் கோமகன், திரு. கோடிலிங்கம்
முனைவர் மு.இ, திரு. கோடிலிங்கம்
தமிழ் நூல்களைப் பார்வையிடும் பொறியாளர் கோமகன்

குறிப்பு: இக்கட்டுரைக் குறிப்புகளை எடுத்தாளுவோர் எடுத்த இடம் குறிப்பிட மகிழ்வேன்.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

பேராசிரியர் முனைவர் அ. ம. சத்தியமூர்த்தி அவர்கள்



முனைவர் அ. ம. சத்தியமூர்த்தி அவர்கள்

பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த அம்மாசத்திரத்தில் வாழ்ந்த திருவாளர் அ.மகாலிங்கப் படையாட்சி அவர்களுக்கும் அஞ்சலைக்கும் ஒரே மகனாகப் பிறந்தவர்(22.05.1954). மராட்டிய அரசரின் மனைவி  பெயரில் உருவாக்கப்பட்ட சத்திரம் - அம்மணி அம்மாள் சத்திரம் என்று பெயர்பெற்றுக் காலப்போக்கில் அம்மாசத்திரம் என்று இவரின் ஊர் பெயர் பெற்றது. இந்த ஊரில் சத்திரத்தில் இருந்த தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றவர்(1958-63). அதனை அடுத்துத் தேப்பெருமாள் நல்லூரில் அமைந்த நடுநிலைப்பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்புவரை(1963-66)பயின்றவர். அதனைத் தொடர்ந்து கும்பகோணம் சிறியமலர் உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பயின்றவர்.

முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள் பள்ளிக்கல்வியை முடித்தபிறகு குடந்தைக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் இயற்கை அறிவியல் பிரிவில்(Natural Science) சேர்ந்து பயின்றவர். குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் 1971-74 வரை பயின்றவர். முதுகலைக் கல்வியும் இக்கல்லூரியில் அமைந்தது. முதல் வகுப்பில் முதல் மாணவராகத் தேறிய பெருமைக்குரியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பொற்கோ மேற்பார்வையில் தொல்காப்பிய மரபியல் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டார். தமிழ் நாட்டுப்புறக் கதைகள் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார்(1980-84).

30.03.1977 இல் பானுமதி அவர்களை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுத் திருமணம் புரிந்துகொண்டவர். மக்கட்செல்வங்களாகச் செந்தமிழ்ச்செல்வி, அன்பரசி என்ற பெண் மக்களும், மகேந்திரன் என்ற ஆண் மகவும் உள்ளனர். திருமதி பானுமதி சத்தியமூர்த்தி அவர்கள் குடந்தைத் தமிழ்ப்பேரவை என்னும் அமைப்பை நிறுவித் தமிழறிஞர்களுக்கு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியும், அரிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டும் தமிழ்ப்பணியில் இணைந்துகொண்டார்.

முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள் 13.09.1984 இல் இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியில் இணைந்தவர். பின்னர் விழுப்புரம், தஞ்சாவூர், குடந்தைக் கல்லூரிகளில் பணியாற்றி இப்பொழுது சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிவருகின்றார். முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்களின் மேற்பார்வையில் மூவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பத்திற்கும் மேற்பட்டோர் இளம் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். அரசு கல்லூரி ஆசிரியர் கழக உறுப்பினாரக இருந்து ஆசிரியர்களின் மேம்பாட்டுக்காக நடைபெற்ற பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறையில் இருந்தவர்.

முனைவர் ம.சத்தியமூர்த்தி அவர்களுக்கு இலக்கணம், இலக்கியம், பதிப்பியல், நாட்டுப்புறவியல், தமிழுலகம் நினைக்க மறந்த தமிழறிஞர்களின் வாழ்வியல், ஒடுக்கப்பட்டோர் வாழ்வியல் உள்ளிட்ட துறைகளில் ஈடுபாடு உண்டு.

முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்களின் தமிழ்க்கொடைகள்:

1.   தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் வாழ்வும் பணியும் 1992
2.   தமிழுலகம் நினைக்க மறந்த தமிழறிஞர்கள்  1994
3.   தியாகச் செம்மல் எல்.கிருஷ்ணசாமி பாரதியார்  1995
4.   தமிழ் நாட்டுப்புறக் கதைகள் ஓர் ஆய்வு  1997
5.   திருப்புறம்பயத் தமிழறிஞர் இரா. கிருஷ்ணமூர்த்தி 1997
6.    இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சர்தார் பு.ம.ஆதிகேசவ நாயகர் 1999
7.   தொல்காப்பிய மரபியல் ஓர் ஆய்வு 2000
8.    தமிழுலகம் நினைக்க மறந்த தமிழறிஞர்கள்(விரிவாக்கப் பதிப்பு) 2001
9.   ஒடுக்கப்பட்டோர் உரிமைப்போரில் சமூகநீதிக் காவலர் 2002
10. குடந்தைக் கல்லூரித் தமிழறிஞர்கள் 2004

முனைவர் ம.சத்தியமூர்த்தி பதிப்பித்த நூல்கள்

1.   ஆய்வுலகில் பண்டாரத்தார் பணிகள் (1992)
2.   தி.வை.சதாசிவப் பண்டாராத்தார் ஆய்வுக்கட்டுரைகள் (1998)
3.   மன்னான் சின்னாண்டிக் கதைப்பாடல் (1999)

முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள் சதாசிவப் பண்டாரத்தார் நூற்றாண்டு விழா, கு.கோதண்டபாணி நூற்றாண்டு விழா, ஆதிகேசவ நாயகர் நூற்றாண்டு விழாவையும், மயிலை சீனி.வேங்கடசாமி நூற்றாண்டு விழாவையும் பாவாணர் நூற்றாண்டுக் கருத்தரங்கினையும், மேலும் பல இலக்கிய நிகழ்வுகளையும் பொறுப்பேற்று நடத்திய பெருமைக்குரியவர்.

திங்கள், 19 ஜூலை, 2010

தமிழாய் வாழ்ந்த தமிழ்வாணன் ஆவணப்படம்


தமிழாய் வாழ்ந்த தமிழ்வாணன் ஆவணப்படம்

பாவாணர் பைந்தமிழ்த்தொண்டரும் குடந்தைப் பகுதியிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தனித்தமிழ்ப்பணிகளை முன்னெடுத்தவருமான குடந்தைக் கதிர். தமிழ்வாணன் அவர்கள் மறைந்து ஓராண்டாகிறது.ஐயாவின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் முயற்சியில் அவரின் குடும்பத்தினரும் தமிழன்பர்களும் ஈடுபட்டுத் தமிழாய் வாழ்ந்த தமிழ்வாணன் என்ற ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதற்காகக் கடுமையாக உழைத்துப் பணிபுரிந்துள்ள இயக்குநர் சி.எம்.மணி அவர்கள் நம் அனைவரின் பாராட்டிற்கும், நன்றிக்கும் உரியவர். ஒரு மணி நேரம் ஓடும் இந்தக் குறுவட்டில் கதிர். தமிழ்வாணன் அவர்களின் ஆளுமை மிகச்சரியாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளது.

தமிழுக்கு உழைத்த கால்டுவெல், போப் அடிகளார், சீகன் பால்கு, வீரமாமுனிவர், பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர்ந்து தொடங்கப்பெறும் இக்குறும்படம் கதிர். தமிழ்வாணன் அவர்கள் பிறந்த தஞ்சை மாவட்டக் கதிராமங்கலம் பகுதியையும் அதன் அடையாளமாகக் காவிரி வளத்தையும் காட்டும் காட்சிகள் சிறப்பு. கதிர். தமிழ்வாணன் அவர்களின் இளமைக்காலத்தை நினைவுகூர சில காட்சிகளைப் படைத்துக்காட்டியுள்ளமை இயக்குநரின் ஆளுமைத்திறனுக்கு நல்ல சான்று. மாணவப்பருவத்தில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரைகேட்டுத் தமிழ்வாணன் அவர்களுக்குத் தமிழ்ப்பற்று உண்டான வரலாறு மிகச்சிறப்பாகப் பதிவாகியுள்ளது.

கதிர். சுப்பையன் என்ற பெயர்கொண்ட ஐயா தமிழ்வாணனாக மலர்ந்துள்ளமையும் அவர்களின் முதல்மனைவியாரின் இல்லறச் சிறப்பும், இரண்டாம் மனைவியார் ஐயாவின் மறைவுக்குப் பிறகு ஆற்றிவரும் பணிகளும் மிகச்சிறப்பாகப் பதிவாகியுள்ளன. கதிர். தமிழ்வாணன் அவர்களின் இல்லத்தில் உள்ள நூலகம், அவர் பயன்படுத்திய பொருட்கள், திருக்குறள் சுழற்சிமுறையில் எழுதிய பாங்கு திருக்குறள் தம் வீட்டிலிருந்து ஒலிபரப்பிய செயல் யாவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் எசு.எம்.உபயதுல்லா அவர்கள் கதிர். தமிழ்வாணன் அவர்களின் சிறப்பைப் பலபடப் புகழ்ந்துரைத்துள்ளமை போற்றுதலுக்கு உரியது. கதிர். தமிழாவணன் கல்வி பெற்றதும், அவருக்குப் பயிற்றுவித்த ஆசிரியப்பெருமக்களும் பள்ளிகளும் நன்கு அறிமுகம் செய்யப்பெற்றுள்ளன.

கதிர்.தமிழ்வாணனை அறிந்தோர் உரிய இடங்களில் பேசி ஐயாவின் பெருமைகளை நினைவுகூர்ந்துள்ளதும் சிறப்பு. கதிர். தமிழ்வாணன் அவர்கள் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபொழுது ஆற்றிய மிகச்சிறந்த தமிழ்ப்பணிகள் சான்றுகளுடன் காட்டப்பட்டுள்ளன. பிற ஊர்களுக்குச் சென்று தனித்தமிழ் வகுப்புகள் நடத்தியமை, திருமணம், புதுமனைப் புகுவிழா, கோயில் குடமுழுக்கு நடத்தியுள்ள பாங்குகளும் தக்கபடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
உடல் நலம் குன்றிப் புதுச்சேரி மகாத்துமாகாந்தி மருத்துவமனையில் ஐயா பண்டுவம் பெற்றுவந்த பொழுது நான் எடுத்து வைத்திருந்த சில அரிய படங்களையும் இயக்குநர் நன்கு பயன்படுத்தியுள்ளார்.அவர்க்கு என் நன்றி.

பின்னணி இசையும்,காட்சிப்பொருத்தங்களும் சிறப்பு. 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என ஒலிக்கும் இசையமைப்பாளர் செல்வநம்பியின் பாடலும் இசையும் நெஞ்சில் நிலைக்கும். அதுபோல் ஒளியோவியம் வரைந்து காட்சிப்படுத்திய பிரேம்குமார், படத்தொகுப்பில் ஈடுபட்ட வீரா உள்ளிட்ட கலைஞர்களுக்கு நம் பாராட்டுகள்.தமிழார்வமுடையவர்கள் கண்டு மகிழ வேண்டிய அரிய ஆவணப்படத்தின் குறுந்தகடு தொடர்பாக விவரம் வேண்டுவோர் இயக்குநர் திரு.சி.எம்.மணி அவர்களுடன் தொடர்புகொள்ளலாம்.

அவர் செல்பேசி எண் + 91 9843990686
மின்னஞ்சல் cm.mani@gmail.com
குறுவட்டின் விலை 180 உருவா

திங்கள், 2 மார்ச், 2009

குடந்தைக் கதிர். தமிழ்வாணன் அவர்கள் இயற்கை எய்தினார்



உலகத் தமிழ்க்கழகத்தின் பொதுச்செயலாளரும் குடந்தைப் பகுதியில் தங்கித் தமிழாசிரியர் பணியும் தமிழ்ப்பணியும் புரிந்தவரும் பாவாணர் கொள்கைகளில் ஆழமான பிடிப்பு கொண்டவருமான குடந்தைக் கதிர். தமிழ்வாணன் அவர்கள் இன்று 02.03.2009 காலை 6.35 மணியளவில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கதிர்.தமிழ்வாணனார், இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்புற்று அண்மையில் புதுச்சேரி மகாத்துமா காந்தி மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்தார்.சிறிது முன்னேற்றம் கண்ட அளவில் குடந்தையில் உள்ள அவர்தம் இல்லத்தில்(54 பாவாணர் இல்லம், சான் செல்வராசு நகர், குடந்தை(புதிய பேருந்து நிலையம் கீழ்ப்புறம்) ஓய்வெடுத்து வந்தார்.அவர்களை இரண்டு முறை நேரில் சென்று கண்டு நலம் வினவி வந்தேன்.

இன்று காலை நான் வகுப்பறையில் இருக்கும்பொழுது செல்பேசி வழியாகப் பேராசிரியர் குணசேகரன் அவர்கள் இத் தகவலைத் தெரிவித்தார்.உடன் கதிர் ஐயா அவர்களின் துணைவியாரிடம் பேசி என் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டேன்.

கதிர் ஐயா அவர்கள் காலை 6.35 மணியளவில் மாநிலச் செய்திகேட்டுக்கொண்டிருந்ததாகவும் நல்ல நிலையிலேயே அவர் உயிர் பிரிந்ததாகவும் கூறினார்கள்.கண் கொடை வழங்க முன்பே உறுதிமொழி செய்திருந்தார்.அதன் பிறகு உடற்கொடை செய்யவும் ஆவணம் தயாரித்து வைத்திருந்தார்.அதன்படி பகல் ஒரு மணியளவில் இல்லத்திலிருந்து உடல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பெற்று கண் கொடை வழங்கி, இங்கிருந்து தஞ்சாவூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. வாய்ப்பிருப்பவர்கள் ஐயாவின் உடலை நேரில் கண்டு அக வணக்கம் செய்யலாம்.
இவர் பற்றி முன்பே என் பதிவில் செய்திகள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு

பேராசிரியர் அ.குணசேகரன் அவர்களைத் தொடர்புகொள்ளலாம்
அவர் செல்பேசி எண் : 9487031795

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

குடந்தை அரசினர் கலைக்கல்லூரியில் மின்மூலங்கள் குறித்த ஆய்வு மாநாடு

கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில்(ஆடவர்) அமைந்துள்ள தமிழ்த்துறையின் சார்பில் மாநில உயர்கல்வி மன்ற நிதியுதவியுடன் "மின்கற்றல் மூலங்களைப் பயன்படுத்தித் தமிழ்மொழி,இலக்கியங்களைத் திறம்படக் கற்பித்தல்" என்னும் பொருளில் ஆய்வு மாநாடு நடைபெற உள்ளது.

இடம் : அண்ணா கலையரங்கம், அரசினர் கலைக்கல்லூரி, கும்பகோணம்
நாள் : 19,20-02-2009(வியாழன், வெள்ளி)

தொடக்கவிழா-19-02-2009 காலை 10 மணி

முனைவர் தி.அரங்கநாதன், முனைவர் க.துரையரசன், முனைவர் பழ.இராசமாணிக்கம், முனைவர் இராம.சந்திரசேகரன், பொறிஞர் சோ.அசோகன்,முனைவர் சா.சிற்றரசு உரையாற்ற உள்ளனர்.

மாநாட்டுக் கருத்துரையாளர்களாக முனைவர் ச.பாசுகரன் (இணையப் பயன்பாடுகளில் தமிழ்), முனைவர் மு.இளங்கோவன் (மின் நூலகங்கள்), முனைவர் சி.மனோகரன் (கல்விசார் இணையத்தளங்கள்), முனைவர் மு.பழனியப்பன் (இணையம் தரும் முத்தமிழ் அமிழ்தம்), முனைவர் தி.நெடுஞ்செழியன் (தமிழ் இணைய இதழ்கள்) ஆகியோர் ஆய்வுரை வழங்க உள்ளனர்.

20.02.09 வெள்ளிக் கிழமை பிற்பகல் நடைபெறும் நிறைவு விழாவில் முனைவர் சொ,இரவி அவர்கள் நிறைவுப்பேருரையாற்ற உள்ளார்.

மாநாட்டில் பங்குகொள்ள விரும்புவோர் அமைப்பாளர் முனைவர் க.துரையரசன் அவர்களுடன் தொடர்புகொள்ளலாம் (செல்பேசி எண் : 94424 26552)

திங்கள், 8 அக்டோபர், 2007

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார்(28.05.1914- 09. 06.1981)

 தமிழிசை வளர்ச்சிக்குப் பலரும் பல வகையில் தொண்டு செய்துள்ளனர். நூற்றாண்டுதோறும் இத்தொண்டின் தன்மை வேறுபட்டு வந்துள்ளதைத் தமிழிசை வரலாற்றைக் கற்கும்பொழுது அறியமுடிகின்றது. இளங்கோவடிகள் காலத்திலும், காரைக்கால் அம்மையார் காலத்திலும், நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்திலும், சேக்கிழார் காலத்திலும், தமிழிசை மூவர்கள் காலத்திலும் இசைத்தொண்டினை அவரவர்க்கு உகந்த வகையில் செய்தனர். ஆபிரகாம் பண்டுவர், விபுலாநந்தர், வீ.ப.கா.சுந்தரம் காலத்தில் தமிழிசைத்தொண்டு என்பது பிறமொழி இசையிலிருந்து தமிழிசையை மீட்பது, பழந்தமிழகத்தில் வழக்கிலிருந்த தமிழிசை, இசைக்கருவிகளை அடையாளம் காட்டுவது என்று அடிப்படைக் கட்டமைப்பைச் சான்றுகளுடன் நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இத்தகு அறிஞர்களின் வரிசையில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இசைத்தமிழுக்குத் தொண்டு செய்த அறிஞர்களுள் ஒருவரான பண்ணாராய்ச்சி வித்தகர் என அனைவராலும் அழைக்கப்பெற்ற குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் வரலாற்றினை இக்கட்டுரை நினைவுகூர்கிறது.

ப.சுந்தரேசனார் இளமை வாழ்க்கை

 ப.சுந்தரேசனார் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் குடந்தையில் வாழ்ந்த பஞ்சநதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோரின் மகனாக 28.05.1914 இல் பிறந்தவர். (ப.சுந்தரேசனார் அவர்களின் தாயார் பிறந்த ஊர் சீர்காழி ஆகும். இவ்வூரில்தான் ப.சுந்தரேசனார் பிறந்தார்). நான்காம் வகுப்புவரை கல்விபயின்ற இவர் வறுமை காரணமாக மேற்கொண்டு கல்வி பெற இயலாமல் போனது. பெற்றோர் இளம் அகவையில் நகைக் கடை யொன்றில் பணியில் சேர்த்தனர். இவரிடம் இருந்த இசையார்வம் இசைத்தட்டுகளைக் கேட்டு இசையறிவு பெறும் வாய்ப்பை உண்டாக்கியது. பள்ளிப்படிப்பு இவருக்கு வாய்க்காமல் போனாலும் பல நூல்களைத் தாமே கற்று அறிவு பெற்றார், இசையீடுபாட்டால் ஆபிரகாம் பண்டுவரின் கருணாமிர்தசாகரம், பேராசிரியர் சாம்பமூர்த்தியின் இசைநூல்கள் கற்று இசையறிவைச் செழுமை செய்துகொண்டார்.

 திருவநந்தபுரம் இலக்குமணபிள்ளை அவர்களிடம் தமக்கிருந்த இசையீடுபாட்டைச் சொல்லி இசை கற்பிக்கும்படி வேண்டினார். ப.சுந்தரேசனாரின் இசை ஈடுபாட்டைப் பாராட்டிய இலக்குமணபிள்ளை அவர்கள் அங்குத் தங்கிப்படிக்க வாய்ப்பின்மையைச் சொல்லிக் குடந்தைக்கு அனுப்பி வைத்தார்.

 ப.சுந்தரேசனார் முதன்முதல் (பிடில்) கந்தசாமி தேசிகர் என்பவரிடம் இசைபயின்றார். பின்பு வேப்பத்தூர் பாலசுப்பிரமணியம் அவர்களிடம் சிலகாலம் இசைபயின்றார். அதன்பின்னர் 1935 முதல் ஏறத்தாழப் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக குடந்தையில் வாழ்ந்த வேதாரண்யம் இராமச்சந்திரன் அவர்களிடம் செவ்விசை பயின்றுள்ளார். ப.சுந்தரேசனார் அவர்களுடன் சுவாமிமலை சானகிராமன், ஐயாசாமி முதலானவர்கள் உடன் பயின்றுள்ளனர். வி.பி.இராசேசுவரி என்பவரும் உடன்பயின்றவர்.

ப.சுந்தரேசனார் அவர்களின் இல்லறவாழ்க்கை

 ப.சுந்தரேசனார் அவர்கள் 1944 இல் திருவாட்டி சொர்ணத்தம்மாளை மணந்தார் அன்புடன் வாழ்ந்த இவர்களுக்கு 1947 ஒரு குழந்தை பிறந்து, இறந்தது. அதன்பிறகு குழந்தைப்பேறு இல்லாமல் போனது. வறுமையிலும், துன்பத்திலும் ஒன்றாக வாழ்ந்த இந்தத் தமிழிசைக் குடும்பத்தினர் உலகக் குழந்தைகளைத் தம்குழந்தைகளாக எண்ணி வாழ்ந்தனர்.

 ப.சுந்தரேசனார் வாழ்ந்த பேட்டை நாணயக்காரத்தெருவில் வாழ்ந்தவர்கள் பலரும் சைவசமயச் சார்பும், இசையறிவும் பெற்றவர்களாக இருந்தனர். எனவே இவருக்கு இயல்பாகவே இசைச்சூழல் வாய்த்தது. இவர்தம் வீட்டருகே தேவாரப் பாடசாலையும், சைவச்சார்புடைய மடத்துத் துறவியர்களின் தொடர்பும் அமைந்ததால் சைவத்திருமுறைகள், சாத்திர நூல்களில் இவருக்குப் பயிற்சி ஏற்பட்டது .தமிழ், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் மொழிகளையும் அறிந்தார்.

 ப.சுந்தரேசனார் அவர்கள் சிலப்பதிகாரம்,திருமுறைகள்,சிற்றிலக்கியங்கள் இவற்றில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதபடியான இசைப்பயிற்சி பெற்றவர். இந்நூல்களின் பாடல்களை இவர்வழியாகக் கேட்கவேண்டும் என்று அறிஞர்கள் புகழும் வண்ணம் பேராற்றல் பெற்றவர். ஓவ்வொரு ஊராகச் சென்று பெரியபுராணம், திருவிளையாடல்புராணம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களைப் பாடி விரிவுரை செய்தவர். மூவர் தேவாரத்தை முறையுறப் பாடி அதில் அமைந்துகிடக்கும் பண்ணழகையும், பண்ணியல்பையும் எடுத்துக்காட்டுவதில் வல்லவர். குமரகுருபரரின் தொடுக்கும் கடவுள் பழம்பாடலை இவர் குரலில் கேட்கத் தமிழையின் ஆற்றல் விளங்கும். இவர்தம் பண்ணாராய்ச்சித் திறம் அறிந்தோர் இவருக்குப் பண்ணாராய்ச்சி வித்தகர் என்னும் சிறப்புப்பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளனர். 

 ப.சுந்தரேசனார் அவர்களின் இசையில் ஈடுபாடுகொண்ட அன்பர்கள் பலரும் பல ஊர்களில் இவரை அழைத்துத் தொடர் சொற்பொழிவாற்ற வேண்டினர். அவ்வகையில் ஆடுதுறையில் 1946 இல் அப்பர் அருள்நெறிக் கழகம் ஏற்படுத்தப்பட்டுத் தொடர் இசைப்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றன. ஆடுதுறை திரு வைத்தியலிங்கம் அவர்கள் இப்பணியில் முன்னின்றார். நாகைப் பட்டனத்தில் அந்நாள் வாழ்ந்த கவிஞர்கோ கோவை.இளஞ்சேரன் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பெற்ற நாகைத்தமிழ்ச்சங்கத்தில் ப.சுந்தரேசனார் சிலப்பதிகாரத்தை மாதந்தோறும் சொற்பொழிவாக நிகழ்த்தி அப்பகுதியில் தமிழிசை ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தினார். குறிப்பாக அனைவராலும் புறக்கணிக்கப்படும் சிலம்பின் அரங்கேற்று காதை அனைவராலும் விரும்பும்படி நடத்தப்பட்டத்து.

 1949 முதல் 1952 வரை திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் வகுப்பு இசையாசிரியராகவும்.1952சூலை முதல் 1955 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேவார இசை விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபொழுது இவர் அங்கிருந்து சிலரால் வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு சிதம்பரம் சென்றாலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகழகத்தின் பக்கம் செல்வதில்லை. பணியிலிருந்து வெளியேறிய ப.சுந்தரேசனார் பல ஊர்களுக்கும் சென்று பள்ளி, கல்லூரி, கோயில்கள், இலக்கிய அமைப்புகளில் இசைச்சொற்பொழிவு செய்து வறுமையோடு வாழ்ந்து வரலானார்.

 பொதுமக்களிடம் இசையைக்கொண்டு செல்லும் பொழுது மக்கள் விரும்பும்வண்ணம் நகைச்சுவையுடன் உரையாற்றும் திறனில் வல்லவரானார். மிகவும் அரிய செய்திகளையும் அனைவருக்கும் புரியும்படி எளிமையாக வெளிப்படுத்தியதால் இவர்புகழ் குமரிமுதல் வடவேங்கடம் வரை பரவியது. அருட்செல்வர் நா.மகாலிங்கனார், நீதியரசர் செங்கோட்டு வேலனார் முதலானவர்கள் ப.சுந்தரேசனார் இசையில் திளைத்தனர். இவர்தம் அருமை அந்நாள் முதலமைச்சர்கர்களாக விளங்கிய கலைஞர் மு. கருணாநிதி. ம. கோ. இராமச்சந்திரனார் முதலானவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதும் இவருக்குப் பல்வேறு சிறப்புகள் கிடைத்தன.

 ம.கோ.இராமச்சந்திரனார் வள்ளுவர்கோட்டத்தில் இவர்தம் பாடலைக்கேட்டு வியப்புற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் அவர்களால் சிலகாலம் தமிழிசை ஆய்வுக்குப் பணியமர்த் தப்பட்டுள்ளார்.

ப.சுந்தரேசனார் பெற்ற பட்டங்கள்.

 ப.சுந்தரேசனார் அவர்களுக்கு விபுலானந்தரின் தொடர்பு கிடைத்ததும் சிலப்பதிகார இசையாய்வில் தோய்ந்தார். குடவாசல் என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்கொள்ளம்பூதூர் (திருக்களம்பூர்) என்ற ஊரில் 1947 இல் நடைபெற்ற விபுலானந்தரின் யாழ்நூல் அரங்கேற்ற விழாவில் அடிகளார் வியந்து போற்றும் வண்ணம் ப.சுந்தரேசனார் அரியவகையில் யாழ்நூலின் சிறப்பினை விளக்கியபொழுது அடிகளார் வியந்து பாராட்டினார்.தாம் தொகுத்து வைத்திருந்த 103 பண்களின் பெர்களையும் தந்து இவற்றை விரிவாக ஆராய்ந்து பண்ணாராய்ச்சி செய்யவேண்டும் என வேண்டினார். அன்று முதல் ப.சுந்தரேசனார் விபுலானந்தர் வழியில் சிலப்பதிகார ஆய்வில் ஈடுபட்டார்.

 சிலப்பதிகாரத்தின் இசையழகு விளங்கும் இடங்களைப் பாடிக்காட்டும் பொழுது தமிழக மக்கள் தங்களின் அரிய பெருஞ்செல்வம் கிடைத்துவிட்டதாக உணர்ந்தனர். சமய நூல்களைப் பண்ணோடு பாடியதாலும் பழம் பண்களின் உண்மை வரலாற்றை எடுத்துரைத்ததாலும் ப.சுந்தரேசனார்க்குப் பல்வேறு சிறப்புகளைத் தமிழக மக்கள் செய்தனர்.அவருக்குப் பல்வேறு பட்டங்களை வழங்கி மகிழ்ந்தனர். அவற்றுள் பண்ணாராய்ச்சி வித்தகர் (மதுரை ஆதீனம்). திருமுறைக் கலாநிதி(தருமையாதீனம்), ஏழிசைத் தலைமகன் (குன்றக்குடி ஆதீனம்),இசையமுது உள்ளிட்ட பட்டங்கள் குறிப்பிடத்தக்கன. பாவாணர் தமிழ்க்குடும்பம்(நெய்வேலி) என்னும் அமைப்பு இவரை உயர்வாகப்போற்றி மதித்தது.

ப.சுந்தரேசனார் எழுத்துப்பணிகள்

 சுந்தரேசனார் அவர்கள் தம் எண்ணங்களை அவ்வப்பொழுது கட்டுரையாகவும், நூல்களாகவும், சொற்பொழிவுகளாகவும் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இவை யாவும் முறையாகத் தொகுக்கப்படாமலும், பதிவுசெய்யப்படாமலும் போனமை தமிழர்களின் பேரிழப்பாகக் கருதவேண்டும். பதிவுசெய்து வைத்துள்ள அன்பர்கள் அவற்றை வெளியுலகிற்குக் காட்டாமல் மறைத்து வைத்துள்ளமை அவை காணாத செல்வப்பட்டியலில் இணைந்துவிடுமோ என்னும் அச்சத்தை உண்டாக்குகிறது. ப.சுந்தரேசனார் அவர்கள் பாடியுள்ள பாடல்களை வைத்திருப்பவர்கள் புவிக்குள் கிடைக்கும் பொருள்கள் அரசுக்கு உரிமையுடையது என ஒப்படைப்பதுபோல் தமிழுலகிற்கு வழங்கவேண்டும். இவ்வகையில் இலால்குடி (திருத்தவத்துறை) ப.சு.நாடுகாண்குழு அன்பர்கள் திருமுருகாற்றுப்படை,சிவபுராணம் உள்ளிட்ட ஒலிநாடாக்களை வெளியிட்டுள்ளமைக்கு இத்தமிழ்கூர் நல்லுலகம் என்றும் நன்றியுடன் போற்றும்.

 ப.சுந்தரேசனார் பாடியுள்ளனவாகப் பல ஒலிநாடாக்கள் பற்றிய விவரம் தெரியவருகின்றன. வெளிநாட்டுஅறிஞர் ஒருவர் பரிபாடல் என்னும் இலக்கியத்தைப் ப.சுந்தரேசனார் வழியாகப் பாடச்செய்து பதிவுசெய்துள்ளதை அறியமுடிகிறது. அதுபோல் வானொலி நிலையங்களில் அவர் பாடிய ஒலிப்பதிவுகள் இருக்க வாய்ப்பு உள்ளது. கோவைப்பகுதியில் ப.சுந்தரேசனார் அவர்களை அழைத்துப் பாடச்செய்த அன்பர்களிடமும் இருக்க வாய்ப்பு உண்டு. இன்னும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல அன்பர்களிடமும் இருக்கும் ஒலிநாடாக்களத் திரட்டி வெளியிடுவது தமிழுக்கு மிகப்பெரிய ஆக்கமாக அமையும். ப.சுந்தரேசனார் அவர்களின் வழிவழி வாரிசுகளாகச் சிலரை உருவாக்கியுள்ளார் அவர்களுள் திரு. வயித்தியலிங்கம், திரு. கோடிலிங்கம் குறிக்கத்தக்கவர்கள். பல ஆண்டுகள் இவர்கள் ப.சுந்தரேசனார் அவர்களிடம் பாடம் கேட்டுள்ளதால் இவர்களிடம் ஆசிரியரின் சார்பு இசையைக்கேட்டு மகிழமுடியும்.

  ப.சுந்தரேசனார் அவர்கள் நித்திலம் என்னும் ஏட்டிலும்,கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களின் தமிழர்நாடு என்னும் ஏட்டிலும் எழுதியுள்ளார். இவர் பஞ்சமரபு (1975) நூலுக்கு உரைவரைந்தமையும் குறிப்பிடத்தக்க செயலாகும். இவருக்குப் போதிய ஒத்துழைப்போ, ஊதியமோ அமையாததால் எண்ணியவாறு பல பணிகளைச் செய்யமுடியாமல் போனது. 1. இசைத்தமிழ்ப் பயிற்சி நூல்(1971) திருப்பத்தூர் (முகவை)த் தமிழ்ச்சங்க இசைத்தமிழ் வெளியீடு 2. முதல் ஐந்திசைப்பண்கள் (1956) பாரி நிலையம், 3. முதல் ஐந்திசை நிரல், 4. முதல் ஆறிசை நிரல், 5. முதல் ஏழிசை நிரல் முதலான நூல்களை எழுதியவர்.

 மேலும் ஓரேழ்பாலை, இரண்டாம் ஐந்திசை நிரல், இரண்டாம் ஏழிசை நிரல், பரிபாடல் இசைமுறை, பாணர்கள் பயிற்றுவித்த இசைமுறை, இசைத்தமிழ்ப் பயிற்சி நூல், இசைத்தமிழ் அகரநிரல், வேனிற்காதை இசைப்பகுதி விளக்கம், சேக்கிழார் கண்ட இசைத்தமிழ், சமையக்குரவர்கள் கைக்கொண்ட இசைத்தமிழ், பெரும் பண்கள் பதினாறு, நூற்றுமூன்று பண்கள், தாளநூல்கள் 1 முதல் 6 வரை, கடித இலக்கிய இசைத்தமிழ்க் குறிப்புகள், இசைத்தமிழ்-தமிழிசைப் பாடல்கள், இசைத்தமிழ் வரலாறு முதலான இவர்தம் நூல்கள் வெளிவராமல் போயின. மதுரையில் இவர் பணியின் நிமித்தம் விடுதியில் தங்கியிருந்தபொழுது மஞ்சள்காமாலையால் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அன்பர்களின் உதவியால் திருச்சிராப்பள்ளியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஈரல்பாதிக்கப்பட்ட காரணத்தால் மருத்துவம் பயனளிக்காது என மருத்துவர் கைவிரித்தனர். எனவே குடந்தையில் உள்ள ப.சுந்தரேசனார் இல்லத்தில் (கடைசி வரை வாடகை வீட்டில் வாழ்ந்தவர்) அன்பர்கள் இவருக்கு விருப்பமான திருவையாற்றுப் பதிகத்தில் இடம்பெறும் பாடல்களைப் பாட, அன்னாரின் உயிர் 09.06.1981 இல் பிரிந்தது. தமிழகம் எங்கும் இசைத்தமிழைப் பரப்பிய தமிழிசைத்தென்றல் குடந்தையில் அடங்கித் தமிழுலகம் மதிக்கும்வண்ணம் புகழ்வாழ்வு வாழ்ந்துவருகிறது.

 இவர்தம் தமிழிசைப்பணியைப்போற்றும் வண்ணம் அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்கள் ப.சுந்தரேசனார் மறைவுக்குப் பிறகு அவர்தம் மனைவிக்கு நிதியுதவி செய்தமை நன்றியுடன் குறிப்பிடத்தகுந்ததது.

ப.சுந்தரேசனார் அவர்களின் தமிழிசை குறித்த சில முடிவுகள்:

1.தமிழ்மக்கள் இசையை உணர்ந்தது குழற்கருவிகள் வழியாகும்.

2.முல்லை நில மக்களே குழற்கருவிகளையும், யாழ்க்கருவிகளையும் கண்டுபிடித்தனர்.

3.முதலில் குழல்கருவி ஐந்து துளைகளைக்கொண்டிருந்தது. அதுபோல் ஐந்து நரம்புகள் கொண்ட யாழ் பயன் படுத்தப்பட்டது.

4.ஐந்து துளைகளின் வழியாக எழுந்த ஐந்து இசைகளே ஆதி இசையாகும்.

5.குழற்கருவி முந்தியது எனினும் யாழ்க்கருவியின் வாயிலாகவே இசை வளர்ச்சியுற்றது.

6.இசைத்தமிழில் முதல் இசைக்குப் பெயர் தாரம்.

7.முதல் ஐந்திசைபண்ணின் இசைநிரல் முதலியன 1.தாரம், 2.குரல், 3.துத்தம், 4.உழை, 5.இளி என்பன

8.முதற்பண்ணாகிய தாரம் என்பது ஆசான் எனவும், ஆசான்திறம் எனவும், காந்தாரம் எனவும் பல பெயர்களில் வழங்கின. இன்று மோகனம் என்று வழங்கப்படுகின்றது.

9.இரண்டாவது பண் குரல் பண் என்பது செந்திறம், செந்துருதி,செந்துருத்தி என முன்பு வழங்கப்பட்டு இன்று மத்தியமாவதி எனப்படுகிறது.

10.மூன்றாவதாகிய துத்தப்பண் இந்தளம்,வடுகு எனப் பண்டு பெயர்பெற்று இன்று இந்தோளம் எனப்படுகிறது.

11.நான்காவதாகிய உழைப்பண் சாதாளி எனப்பட்டு இன்று சுத்தசாவேரி எனப்படுகிறது.

12.ஐந்தாம் பண்ணாகிய இளிப்பண் தனாசி எனும் பெயர்பெற்று, இன்று சுத்த தன்யாசி எனப்படுகிறது.

13.தென்னிந்திய இசைக்கு அடிப்படையான இசை பழந்திழகத்தில் வழங்கப்பட்ட இசையேயாகும்.

14. பழைய பண்முறைகள் இன்றளவும் தமிழ்நாட்டில் தேவாரங்களிலும்,திருவாய்மொழியிலும் மற்றும் பிற திருமுறைகளிலும் உள்ளன.

நன்றி :திண்ணை இணைய இதழ் (27.09.2007)