நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
மொழிபெயர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழிபெயர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 மார்ச், 2016

பேராசிரியர் கா. பட்டாபிராமன்



பேராசிரியர் கா. பட்டாபிராமன்

தமிழ்மொழியின் நுட்பங்களை உணர்ந்தவர்கள் மிகச் சிலராகவே உள்ளனர். தமிழின் ஒலிப்புமுறைகள், சொல்புணர்ச்சி முறைகள், ஒற்றுப்பிழையால் விளையும் ஊறுகள், மொழிபெயர்ப்பில் நேரும் பொருள் குழப்பங்கள் பற்றி நுட்பமாகக் கவனித்து வரும் அறிஞர்களுள் பேராசிரியர் கா.பட்டாபிராமன் அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். இவர்களைப் போலும் செம்மல்கள் தமிழர்களால் கவனிக்கப்படாமல் உள்ளமை தமிழுக்கு நேரும் போகூழாகவே யான் உணர்கின்றேன்.

யான் வேலூர் மாவட்டம் கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றியபொழுது அவ்வப்பொழுது விரும்பிச் சென்று சந்தித்து உரையாடும் பெருமகனார் பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களாவார். வேலூரில் அவர்தம் இல்லம் செல்லும்பொழுதெல்லாம் பேராசிரியர் அவர்கள் அன்புடன் விருந்தோம்பி, மொழி, இலக்கியம் பற்றி நெடுநாழிகை உரையாடுவார்

. “அருட்பெருஞ்சோதி” என்று எழுதாமல் “அருட்பெருஞ்ஜோதி” என்று தமிழர்கள் சொற்புணர்ச்சி குறித்த அறிவின்றி எழுதுகின்றனரே என்று வருந்துவார். ஆங்கிலத் தாக்கம் தமிழில் பொருள் மாற்றத்தை எவ்வாறு உருவாக்கிவிட்டது என்று கூறி ஒரு நிமையத்தில் பத்து எடுத்துக்காட்டுகளை அள்ளி வீசுவார். மொழியின் இயக்கத்தை இந்த அளவு நுட்பமாகக் கவனித்து வருகின்றாரே என்று வியப்பேன். இவர்களிடம் ஆங்கில மரபுகளை அறியலாமே என்று ஒவ்வொரு நாளும் நினைப்பேன். இந்த நொடிவரை அது கைகூடாமல் உள்ளது.

பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்கள் வேலூர் வள்ளலார் நகர் பகுதியில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். பலவாண்டுகளாக மூச்சு நோயிலும், இருமல் நோயிலுமாகத் துன்பப்படுபவர். ஆயினும் தமிழாய்விலோ, மொழியாய்விலோ தொய்வில்லாமல் பணியாற்றுகின்றார். இவர்களைப் போலும் உண்மையான மொழியறிஞர்களால்தான் தமிழ்மொழி வாழ்ந்துகொண்டுள்ளது. தமிழாய்வுகளும் தொடர்ந்துகொண்டுள்ளன.

பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களுடன் பலவாண்டுகள் பழகியவன் யான். புதுச்சேரிக்குப் பணிமாற்றம் அமைந்து பிரிந்துவந்த பிறகும் அச்சான்றோருடன் மின்னஞ்சலில் தொலைபேசியில் தொடர்பில் இருந்து நலம் வினவி மகிழ்வேன். என்னைப் போலும் பலர் அவரின் தமிழ், ஆங்கிலப் புலமையை அறிந்துள்ளனர். தத்தம் ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொண்டுள்ளனர்.

வட தமிழகத்தின் பலபகுதிகளில் அரசு கல்லூரிகளில் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ள பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களின் தமிழ் வாழ்க்கையை அறிவதற்கு மீண்டும் நேற்று (02.03.2013) எனக்கு வாய்ப்பு அமைந்தது. பேராசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கையையும் இலக்கியப் பணிகளையும் இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களின் தமிழ் வாழ்க்கை

கா. பட்டாபிராமன் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் ஒன்னுபுரம் என்னும் ஊரில் 01.02.1939 இல் பிறந்தவர். பெற்றோர் திரு. காளிங்கராயன்- சுப்புலட்சுமி ஆவர். தமிழில் முதுகலை(1959), பி.டி(1960), எம்.பில்(1980) பட்டங்களைப் பெற்றவர்.

சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற பெருமைக்குரியவர். அப்பொழுதே பல ஏடுகளில் எழுதத் தொடங்கினார்.

1960-65 இல் சென்னை எழும்பூர் அரசு பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் இணைந்தார்.

1965-71 இல் சேலம் அரசு கல்லூரியில் தமிழ்த்துறையில் துணைப்பேராசிரியராகப் பணியில் இணைந்தவர். 1971-80 இல் கிருட்டிணகிரி கல்லூரியில் பணிபுரிந்தார். 1981-82 இல் ஆத்தூர் கல்லூரியில் பணிபுரிந்தவர். 1982-1997 இல் திருவண்ணாமலையில் தமிழ்த்துறையில் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். 2000-2001 இல் செங்கம் அருண்கிருஷ்ணா கல்லூரியில் முதல்வராகவும் பணிபுரிந்தவர்.

கால்டுவெல் ஒப்பிலக்கணச் சுருக்கம் இவரின் முதல் படைப்பாக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து மொழித்திறன், அலுவலக மொழிபெயர்ப்பு ஏடுகள், மொழிபெயர்ப்பு நுட்பங்கள் முதலியன வெளிவந்தன. மாணவர்களின் விருப்பதிற்கு ஏற்ப  மொழிபெயர்ப்புக்கலை, மொழிப்பயன்பாடு ஆகிய நூல்களையும் வரைந்துள்ளார்.

2002 இல் வெளிவந்த ஒற்று மிகல்-மிகாமை விதிகளும் விளக்கமும் என்ற நூல் பத்தாண்டுகள் முயன்று உழைத்துப் பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

மெய்ப்புத் திருத்தக் கலை, திருக்குறள் மனப்பாடப் பதிப்பு, தமிழ்நடை உள்ளிட்ட நூல்களை விரைவில் அச்சிடப் பேராசிரியர் அவர்கள் முயன்றுவருகின்றார்.

பலவாண்டுகளுக்கு முன்பே கணினியை இயக்கப் பழகித் தம் நூல்களைப் பிழையின்றித் தட்டச்சிட்டு வெளியிடுவதுடன் பிறர் நூல்கள் வெளியிடவும் துணைநிற்கின்றார். மற்ற நண்பர்களுக்காக அவ்வப்பொழுது மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டுப் பல நூல்களை மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

பேராசிரியரின் தமிழ்க்கொடைகளுள் குறிப்பிடத்தக்கன:

  1. கால்டுவெல் ஒப்பிலக்கணச் சுருக்கம் (1982)
  2. மொழிபெயர்ப்பு நுட்பங்கள் (1994)
  3. ஒற்றுமிகல் மிகாமை விதிகளும் விளக்கமும்
  4. தமிழ்வழியில் ஆங்கிலம் கற்பீர்(Learn English Through Tamil) 2008
  5. மொழிபெயர்ப்புக்கலை 2007

தமிழ் மொழி பயிற்சி ஏடுகள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார்.

பேராசிரியரின் தொடர்புமுகவரி:

பேராசிரியர் கா. பட்டாபிராமன்
ஜி 55, பூங்கா நகர், வள்ளலார்,
வேலூர்- 632 009

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

"செவாலியே" மதனகல்யாணியின் மொழிபெயர்ப்பில் “தந்தை கோரியோ” புதினம்



செவாலியே மதனகல்யாணி அவர்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பிரெஞ்சு எழுத்தாளர் ஒனொரே தெ பல்சாக்( Honore De Balzac 1799-1850) எழுதிய லெ பேர் கோரியோ(Le pere Goriot) என்ற நூல் செவாலியே மதனகல்யாணி அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு “தந்தை கோரியோ” என்ற பெயரில் சாகித்ய அகாதெமி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரெஞ்சு சமூகத்தையும் பாரிசு நகரத்தையும் அந்த நகரத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், நடையுடை பாவனைகளையும் இந்தப் புதினம் சிறப்பாக விளக்கியுள்ளது.

கோரியோ என்ற தந்தை தம் இரு மகள்களின் மேல்கொண்ட பாசத்தை இந்தப் புதினம் மிகச்சிறப்பாக விளக்கியுள்ளது. கதையைப் புரிந்துகொள்ள மொழிபெயர்ப்பாளர் பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரான்சுநாட்டு வரலாற்றை விளக்கியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல்வேறு புரட்சிகள் பிரான்சுநாட்டில் நடைபெற்று மக்களை அலைக்கழித்தது. அதே நேரத்தில் மிகச்சிறந்த இலக்கியங்கள் உருவாயின. இந்நூற்றாண்டில் புனைவியம், நேரியம்(ரியலிசம்), குறியீட்டு இலக்கியம் என்ற மூவகை இலக்கிய இயக்கம் இருந்ததை மொழிபெயர்ப்பாளர் குறிப்பிட்டுள்ளார். எளிய நடையில் இந்தப் புதினம் அமைந்துள்ளது.



நூல்: “தந்தை கோரியோ”

மொழிபெயர்ப்பாளர்: ச.மதனகல்யாணி

விலை:220-00
பக்கம்: 434
வெளியீட்டு ஆண்டு: 2012

கிடைக்குமிடம்: சாகித்ய அகாதெமி நிறுவனம்