பணம்பறிக்கும் எழுத்தாளர் கூட்டம் எல்லாம்
பச்சையான செய்திகளை எழுதித் தாளில்
பிணமாக்கி இளைஞர்களை உழல வைக்கும்
பேயாட்சி புரிகின்ற இந்த நாட்டில்
மணங்கமழும் செந்தமிழை மலர்த்தித் தூக்க
மறவனெனத் தோன்றியவெம் புலவரேறு,
பிணக்கமிலாக் கொள்கையினை வகுத்துக் கொண்டோன்
பீடுமிகு பாவேந்தப் பெரியோர் தாமே!
தந்தையவன் பெரியாரின் தன்னே ரில்லாத்
தன்மான இயக்கத்தில் இணைந்து நின்று
முந்தியசீர் எண்ணிடவே புலவோர் தம்மை
மொத்துலக்கைப் பாட்டாலே அடித்தெழுப்பிச்
சிந்தனையை ஊற்றெடுக்க வைத்த என்றன்
செங்கோவின் பிளிறொலியாம் வரிகள் எல்லாம்
இந்தவளர் தலைமுறையும் ஒலிப்பதெண்ண
எரியென்றே அன்னவனை ஒப்பம் செய்வோம்!
மங்கையவள் தருகின்ற இன்பம் எல்லாம்
மாத்தமிழின் சுவையினுக்கு ஈடாய் ஆமோ?
எங்கள்தமிழ் சீரெல்லாம் பிழைக்க வந்தோர்
ஏமாற்றி மறைத்தேதான் சென்றா ரென்று
பொங்குசின அரிமாவாய் முழங்கி இந்தப்
புவியோர்க்கு மறவுணர்வை ஊட்டி நின்று
சங்கெடுத்து முழக்கம்செய் பாவேந்தன்போல்
சாற்றுதற்கும் ஆளுண்டோ? உண்டா இங்கே!
மக்களினை ஏய்க்கின்ற மடயர் எல்லாம்
மாற்றுவழி பின்பற்றிப் பதவி தேடி
இக்காலம் தன்னிலேதான் அலைவதெண்ணிப்
பாவேந்தன் எரிமலையாய் வெடித்துச் சொன்னான்!
முக்காலம் புகழ்நிலைக்க வேண்டும் என்றால்
முத்தமிழை ஆள்வோரே காப்பீராக!
திக்கிகழ இம்மொழிக்குக் கேடு செய்தால்
தீப்பந்தம் கொளுத்திடுவோம் என்றான் வீரன்!
ஆள்வோரால் பாவேந்தன் அந்த நாளில்
அலைக்கழிக்கப் பட்டாலும் அவனை ஏத்தி
வேள்என்றே புகழ் விரும்பிக் கத்துகின்றோம்!
வீறுணர்வைப் பெற்றோமா? வீரம் உண்டா?
மீள்வதற்கே அவன்பாட்டை நினைத்தோமா?நாம்
மேன்மைஎழ விழாவெடுப்போம்! மேலே உள்ள
ஆள்வோர்கள் தமிழ்மொழிக்குக் கேடு செய்தால்
அனல்கக்கும் பாவேந்தன் மறவ ராவோம்!
14.03.1991
மரபுப்பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரபுப்பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 19 அக்டோபர், 2010
புதன், 13 அக்டோபர், 2010
வெண்பா விருந்து
பாவேந்தர் பாடிய பாட்டு!
செந்தமிழ்ப் பாணர்க்குச் சீர்பரிசில் நல்கியே,
வந்திடும் மாற்றாரை வாளுக்(கு) இரையாக்கும்
மாவேந்தர் என்றாலும் மண்டியிடச் செய்யுமே
பாவேந்தர் பாடிய பாட்டு!
வெற்றிகொள்வோம்!
ஏழை உழைப்பையெல்லாம் ஏய்த்துச் சுரண்டுகின்ற
கோழை முதலைகளின் கொள்ளையினைத் - தோழர்காள்!
இற்றைக்கு நாம்நிறுத்தி ஈடில் உழைப்பெடுக்க
வெற்றிதனைக் கொள்வோம் விரைந்து!
சிலைவைக்க தடை ஏன்?
அறம்பொருள் இன்பத்தை யாரும் உணரத்
திறம்படத் தீங்குறள் தந்த முனியைத்
தலைவைத்துக் கூத்திடா தண்கரை நாடே!
சிலைவைக்க என்னதடை செப்பு.
இலக்கணம் கற்போம்!
ஆங்கிலம் இந்தி அரபுமொழி மற்றெல்லாம்
ஈங்குளோர் பேசி இழிந்திட- ஏங்கிக்
கலக்கமுறும் என்தமிழ் கண்ணீர் துடைக்க
இலக்கணம் கற்போம் இனிது
தமிழ் விளி
கடல்கோளில் தப்பிக் கழகத்தில் ஓங்கி
வடமொழிக்கும் தாயான வஞ்சிச்-சுடரே
அமிழ்தே! அழகே! அருமையென் தாயே!
தமிழே பணிந்தேனுன் தாள்.
இவன்
குமரி நிலந்தோன்றிக் கோவால் வளர்ந்த
இமய வரையோரும் ஏத்தும் – தமிழைக்
களங்கமிலாச் சீர்பனசைக் கல்லூரி தன்னில்
இளங்கோவன் கற்றான் இனிது
செந்தமிழ்ப் பாணர்க்குச் சீர்பரிசில் நல்கியே,
வந்திடும் மாற்றாரை வாளுக்(கு) இரையாக்கும்
மாவேந்தர் என்றாலும் மண்டியிடச் செய்யுமே
பாவேந்தர் பாடிய பாட்டு!
வெற்றிகொள்வோம்!
ஏழை உழைப்பையெல்லாம் ஏய்த்துச் சுரண்டுகின்ற
கோழை முதலைகளின் கொள்ளையினைத் - தோழர்காள்!
இற்றைக்கு நாம்நிறுத்தி ஈடில் உழைப்பெடுக்க
வெற்றிதனைக் கொள்வோம் விரைந்து!
சிலைவைக்க தடை ஏன்?
அறம்பொருள் இன்பத்தை யாரும் உணரத்
திறம்படத் தீங்குறள் தந்த முனியைத்
தலைவைத்துக் கூத்திடா தண்கரை நாடே!
சிலைவைக்க என்னதடை செப்பு.
இலக்கணம் கற்போம்!
ஆங்கிலம் இந்தி அரபுமொழி மற்றெல்லாம்
ஈங்குளோர் பேசி இழிந்திட- ஏங்கிக்
கலக்கமுறும் என்தமிழ் கண்ணீர் துடைக்க
இலக்கணம் கற்போம் இனிது
தமிழ் விளி
கடல்கோளில் தப்பிக் கழகத்தில் ஓங்கி
வடமொழிக்கும் தாயான வஞ்சிச்-சுடரே
அமிழ்தே! அழகே! அருமையென் தாயே!
தமிழே பணிந்தேனுன் தாள்.
இவன்
குமரி நிலந்தோன்றிக் கோவால் வளர்ந்த
இமய வரையோரும் ஏத்தும் – தமிழைக்
களங்கமிலாச் சீர்பனசைக் கல்லூரி தன்னில்
இளங்கோவன் கற்றான் இனிது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)