நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
நினைவுநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 ஜூன், 2014

இன்று பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நினைவுநாள் (09.06.1981)




பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்

(28. 05. 1914 - 09. 06. 1981)


தமிழின மீட்சிக்கு உழைத்த தந்தை பெரியார் போலவும், தமிழ்மொழி மீட்சிக்கு உழைத்த மொழிஞாயிறு பாவாணர் போலவும், தமிழிசை மீட்சிக்கு உழைத்தவர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடந்த அரிய இசை நுட்பங்களைக் குறிப்பாகச் சிலப்பதிகாரத்தின் இசைக்கூறுகளை, தமிழர்களின் செம்மாந்த இசைப்புலமையை எளிய தமிழில் எடுத்துரைத்தவர். தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களிலும், பொது அரங்குகளிலும் மக்கள் மன்றத்தில் பாடிக்காட்டி விளக்கிய இப்பெருமகனாரை அவரின் நினைவுநாளில் நினைவுகூர்வோம்.


குடந்தை ப. சுந்தரேசனார் பாடிய பாடல்களைப் பரப்புவோம். அவர் நூல்களை அறிஞர் உலகத்திற்கு அறிமுகம் செய்வோம். மீண்டும் தமிழகத்தில் தமிழர் இசைமுழக்கம் கேட்க வழிசெய்வோம். 

“தமிழுக்குத் தொண்டுசெய்வோர் சாவதில்லை” என்னும் பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம்.

வியாழன், 21 ஏப்ரல், 2011

பாவேந்தர் நினைவுநாள் காட்சிகள்


பாவேந்தர் சிலை(நினைவில்லத்தில்)

பாவேந்தரின் 47 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று புதுச்சேரியில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது. புதுச்சேரி பெருமாள்கோயில் தெருவில் உள்ள பாவேந்தர் அருங்காட்சியகத்தில்(நினைவில்லம்) காலை பத்துமணிக்குத் தமிழறிஞர்கள், பேராசிரியர்கள்,அரசு அதிகாரிகள், திராவிட இயக்கம்சார்ந்த தோழர்கள், பாவேந்தர் குடும்பத்தினர், பாவேந்தர் பற்றாளர்கள் வந்து சேர்ந்தனர்.

பாவேந்தரின் இளைய மகள் அம்மா வசந்த தண்டபாணி அவர்கள் முன்னதாகவே வந்து சேர்ந்தார்கள். பாவேந்தர் நினைவுகளை அவர் வழியாக அறிந்தேன். பாவேந்தர் எழுதிய பாட்டுச் சூழல்களை வசந்தா அம்மா அவர்கள் நினைவுகூர்ந்தார்கள். அவற்றைச் சிறிது நேரம் ஒலிப்பதிவு செய்துகொண்டேன்.

பாவேந்தரின் திருமகனார் ஐயா மன்னர்மன்னன் அவர்களும் பாவேந்தரின் பெயரர் பாவலர் பாரதி அவர்களும் பாவேந்தர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நினைவில்லம் வந்தனர். அவர்களின் வருகையை ஒட்டிக் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர், சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமிநாராயணன் உள்ளிட்டவர்கள் வந்தனர்.

கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் அவர்கள் பாவேந்தர் சிலைக்கு மலர்தூவி அகவணக்கம் செலுத்தினார். அதன்பிறகு ஒவ்வொருவராக மலர்தூவி வணக்கம் செலுத்தினோம். பாவேந்தர் பற்றாளர்கள் பாவேந்தரை நினைவுகூர்ந்து உரையாடினர். சிலர் பாவேந்தரின் இசைப் பாடல்களைப் பாடி மகிழ்ச்சியூட்டினர். பாவேந்தரின் நினைவு தமிழ் வாழும் காலம் எல்லாம் இருக்கும் என்பதை இந்த நிகழ்வு காட்டியது.


சட்டமன்ற உறுப்பினர் இ.இலட்சுமிநாராயணன் மலர்தூவி வணங்குதல்


முனைவர் மு.இளங்கோவன் மலர்தூவி வணக்கம் செலுத்துதல்


பாவேந்தரின் கொள்ளுப்பெயர்த்தி,மன்னர்மன்னன்,மு.இளங்கோவன்,சிவ.இளங்கோ


பாவேந்தரின் இளையமகள் வசந்தா,மு.இ


மு.இளங்கோவன்,மன்னர்மன்னன்,கோ.பாரதி