நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
சிவம் வேலுப்பிள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவம் வேலுப்பிள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 நவம்பர், 2016

நாள் மங்கல வாழ்த்து!



எங்கள் வாழ்க்கையில் இணைந்த தமிழுறவே!
தேயம் கடந்த தங்களின் வாழ்க்கை
நேயம் மலிந்ததை நினைத்துப் பார்க்கின்றோம்!
பற்பல ஆண்டுகள் பாரில் வாழினும்
நிற்கும் படியான நிலைத்த செயல்களைச்
சிற்சிலர் மட்டும் செய்து வைப்பர்;
அத்தகு மாந்தரின் அரும்பெரும் வரிசையில்
படிக்கும் மாணவர்க்குப் பல்திற உதவியை
நொடிக்கு நூறுமுறை செய்து உவந்தீர்!
காட்டிலும் கரம்பிலும் வாழ்ந்த உறவிற்கு
வீட்டினை அமைத்திட விரும்பி அளித்தீர்!
உறுப்புகள் இழந்தவர்க்கு ஓடோடி உதவி
பொறுப்பினைக் காட்டிப் புவியில் உயர்ந்தீர்!
அண்டையில் வாழ்வோர் அலமரல் உற்றால்
முண்டியடித்து முதலில் நீளும் உம்கை!
விழாக்கள், நிகழ்வுகள், விருந்துகள் என்றால்
அழையா விருந்தாய் அவர்க்கும் உதவுவீர்!
இல்லம் வந்திடும் விருந்தினர் தம்மை
அல்லும் பகலும் ஆரத் தழுவிக்
கொடுப்பன கொடுத்து, கொள்வன கொண்டு,
சான்றோர் போலப் போற்றல் நும்கடன்!
தமிழர் மொழியும் தகைசால் வாழ்வும்
நிமையம் தோறும் நிமிர்தல் பொருட்டே
இயற்றிய பணிகள் எண்ணில வாகும்!
தமிழ்மணம் நடத்தித் தமிழராய் நிலைத்தீர்!
குறள்நூல் பதித்து அறப்பணி செய்தீர்!
இப்படிப் பற்பல ஈடில் பணிகளைச்
செப்படி போலும் செய்த ஏந்தலே!
பிறந்த நாளில் திருவடி தொழுதோம்!
சிறந்த நாளில் சிறப்புகள் எய்துகவே!

 நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளுடன்

முனைவர் மு.இளங்கோவன்

26.11.2016

குறிப்பு: கனடாவில் வாழும் திரு. சிவபாதசுந்தரம் வேலுப்பிள்ளை அவர்களின்  பிறந்தநாள் நினைந்து பாடியது.

சனி, 20 ஆகஸ்ட், 2016

திருக்குறள்- புதிய பதிப்பு






திருக்குறள் நூல் அறிஞர்களால் காலந்தோறும் சிறப்பாகப் பதிப்பிக்கப்பெற்று, உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. கனடாவில் வாழும் திரு. சிவம் வேலுப்பிள்ளை அவர்கள் தம் மகள் சி. ஆர்த்திமருமகன் . பிரசாத் ஆகியோரின் திருமணநாளில் (20.08.2016) திருக்குறளுக்குப் புதிய பதிப்பு ஒன்றை வெளியிடுகின்றார். மணவிழாவுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்குக் கையுறைப் பொருளாகத் திருக்குறள் நூல் வழங்கப்பட உள்ளது. 464 பக்கம் கொண்ட இத்திருக்குறள் பதிப்பில் திருக்குறள் மூலம், முனைவர் பா. வளன் அரசு உரை, தவத்திரு போப் அடிகளாரின் ஆங்கில மொழிபெயர்ப்பு, தவத்திரு டுரூ, இலாசரசு ஆகியோரின் ஆங்கில விளக்கம் ஆகியன அமைந்துள்ளன. தமிழர்களின் இல்லந்தோறும் இருக்க வேண்டிய இந்த நூல் தமிழறியாத பிறமொழியினரும் பயன்படுத்தும் வகையில் ஆங்கில மொழிபெயர்ப்பு, ஆங்கில விளக்கத்துடன் பதிப்பிக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

திருக்குறள் பதிப்பு விவரம்
திருக்குறள்  - ஆசிரியர்: திருவள்ளுவர்
உரை - முனைவர் பா.வளன் அரசு
ஆங்கில மொழிபெயர்ப்பு: தவத்திரு. போப் அடிகளார்
ஆங்கில விளக்கம்: தவத்திரு. டுரூ, இலாசரசு

பதிப்பாசிரியர்கள்:
சிவம் வேலுப்பிள்ளை
மு.இளங்கோவன்
விலை: உருவா 250
பக்கம்: 464