நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 ஆகஸ்ட், 2010

பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனாருக்கு நூற்றாண்டுவிழா

 இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரும் குறுந்தொகை, ஐங்குறுநூறு, பரிபாடல்,பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்கப்பனுவல்களுக்கு உரை வரைந்த பேரறிஞருமான மேலைப்பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனாரின்(05.09.1909) நூற்றாண்டு விழாவை அவர் பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம்,திருத்துறைப்பூண்டி வட்டம் மேலைப்பெருமழையில் 05.09.2010(ஞாயிற்றுக் கிழமை) ,மாலை நான்கு மணிமுதல் இரவு ஏழு மணிவரை கொண்டாட விரும்புகிறோம்.

 புலவர் பெருமான் அவர்கள் தமிழ் நினைவில் தோய்ந்திருந்ததால் குடும்பவளர்ச்சியில் நாட்டமில்லாமல் திகழ்ந்துள்ளார். அவர் பிள்ளைகளுக்கே ஐயாவின் பெருமை முழுமையாகத் தெரியாமல் உள்ளது.அவர் ஊரினரும் ஓரளவே ஐயா பற்றி அறிவார்கள்.இந்த நிலையில் மேலைப்பெருமழை ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் திருவாளர் சோ. இராசமாணிக்கம் அவர்களும் இன்றைய ஊராட்சி மன்றத்தலைவர் திருவாட்டி வேதவள்ளி இராசமாணிக்கம் அவர்களும், மேலைப்பெருமழையில் பிறந்து, தஞ்சாவூரில் வாழ்ந்து வரும் திரு.சிவபுண்ணியம் அவர்களும் புலவர் பெருமானின் நூற்றாண்டு விழாவை நடத்த இயன்ற உதவிகள் செய்ய ஆர்வமுடன் உள்ளனர்.

 தமிழுக்கு உழைத்த பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனாரின் பெருமையை உலக அளவில் தெரிவிக்கவும் பதிவு செய்யவும் விரும்புகிறோம்.

 ஆர்வமுடைய தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், புலவர்கள், தமிழ் ஆர்வலர்கள்,அயல்நாடுகளில் வாழும் தமிழன்பர்கள் இணைந்து ஐயாவின் பெருமையினை நினைவுகூரப் பணிவுடன் அழைக்கின்றேன். ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப நிகழ்வாக இதனைக் கருத வேண்டும்.
பெருமழைப் புலவரின் அறிவாற்றலையும் தமிழ்ப்பணிகளையும் குறித்துக் கருத்துரைக்க விரும்புபவர்கள் அவரவர் சொந்தப் பொறுப்பில் வந்து சிறப்பிக்கவேண்டும் என்று விரும்புகின்றோம்.

 பெருமழைப் புலவருக்கு விழா ஒன்று எடுத்து அவர் நினைவைப் போற்ற வேண்டும் என்ற என் விருப்பத்தை முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ ஐயா அவர்களிடம் தெரிவித்துக் கலந்துரையாடினேன்.துணைவேந்தர் அவர்களுக்கு அந்த நிகழ்வில் பங்கெடுக்கும் பேரார்வம் இருந்தும் குறிப்பிட்ட நாளில் தவிர்க்க இயலாத காரணத்தால் அவர்கள் சென்னையில் இருக்கவேண்டிய நிலை உள்ளதை உணர்த்தினார்கள். எனினும் அவர்களின் பேரன்பையும் நிறைந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள்.அவர்களை அடுத்துச் செந்தமிழ் அந்தணர் மதுரைப்புலவர் இரா. இளங்குமரனார் அவர்களைக் கலந்துகொள்ள வேண்டினேன்.புலவர் அவர்கள் அன்றைய நாளில் அரியலூரில் ஒரு திருமணம் நடத்திவைக்கவேண்டிய கடப்பாட்டில் உள்ளார்கள். அதனால் மாலையில் வைத்தால் கலந்துகொள்ள இயலும் என்ற தம் தமிழார்வத்தைப் புலப்படுத்தித் தம் அன்பான வாழ்த்தைத் தெரிவித்தார்கள்.

 சிங்கப்பூர் தமிழ் அன்பர் திரு முஸ்தபா அவர்கள் பெருமழைப்புலவரின் மேல் பெருவிருப்பம் கொண்டவர்கள்.அவர்களின் தமிழ்ப்பணியைப் போற்றும் வகையில் ஒரு திட்டம் வரைந்து வழங்கும்படியும் வேண்டினார்கள்.அன்றைய நாளில் வேறொரு முதன்மையான பணியில் இருப்பதால் இன்னொரு வாய்ப்பில் தாம் கலந்துகொள்வதாக உறுதி செய்து வாழ்த்தினார்கள்.
புலவரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரைக்கவும் நிகழ்ச்சி சிறக்கவும் பலர் ஆர்வம்காட்டி ஊக்கமூட்டி வருகின்றனர்.

 நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு புலவர்பெருமானின் அறிவாற்றலையும், சங்க இலக்கியத் தமிழ்ப்பணிகளையும் நினைவுகூரும் அறிஞர்களின் பட்டியல் பின்வருமாறு:

முனைவர் மு.இளமுருகன், தமிழ்ப்பேராசிரியர்,த.உ.ம.கலைக்கல்லூரி,தஞ்சாவூர்

முனைவர் அரங்க.சுப்பையா, தமிழ்ப்பேராசிரியர்(பணிநிறைவு),தஞ்சாவூர்

புலவர் உதயை மு.வீரையன் அவர்கள்,சென்னை

முனைவர் ஒப்பிலா.மதிவாணன் (இயக்குநர்,பதிப்புத்துறை,சென்னைப்பல்கலைக்கழகம்)

பேராசிரியர் சு.தமிழ்வேலு, அ.வ.கல்லூரி,மன்னம்பந்தல்,மயிலாடுதுறை

முனைவர் நா.தனராசன், தமிழ்த்துறைத் தலைவர், திரு.வி.க.அரசு கலைக்கல்லூரி,திருவாரூர்

புலவர் நாச்சிகுளத்தார் (பெருமழைப்புலவரின் மாணவர்)

திரு.நாகை எழில்கோ, தமிழாசிரியர்,தென்னம்புலம்

முனைவர் மு.இளங்கோவன் (பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி,புதுச்சேரி),

அன்பர்களின் வருகைக்கு ஏற்ப விழா அரங்கில்தான் சிறப்புரை, கருத்துரைஞர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும். ஆனால் நிகழ்ச்சி வசதிக்காக ஒரு கிழமையில் ஒரு மாதிரி நிகழ்ச்சி நிரல் ஒழுங்கு செய்யப்பெறும்.

விழாக்குழுவினருடன் தொடர்புகொள்ள விரும்புவோர் பின்வரும் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

திரு.சோ.பசுபதி(புலவரின் தலைமகன்,மேலைப் பெருமழை) + 91 9698985730
திரு.சோ.இராசமாணிக்கம் (ஊ.ம.தலைவர், மேலைப் பெருமழை) + 91 9842425215
திரு.சி.சிவபுண்ணியம்(தஞ்சாவூர்) + 91 9443126615
திரு.இரவி(திருத்துறைப்பூண்டி) + 91 9443806094
முனைவர் மு.இளங்கோவன்(புதுச்சேரி) + 91 9442029053

திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை சாலையில் பாண்டி என்ற ஊரில் இறங்கி மேலைப்பெருமழையை எட்டுக் கல் தொலைவு தானியில்/ பேருந்தில் அடையலாம்.

குறிப்பு: பெருமழைப்புலவரின் குடும்பநிலையையும் சிறப்பையும் வெளியுலகுக்கு எடுத்துக்காட்டிய தினமணி இதழுக்கு இந்த இடத்தில் நன்றி கூறுவது பொருத்தமாகும்.


செவ்வாய், 10 மார்ச், 2009

தமிழறிஞர் புலவர் கா.கோவிந்தன் அவர்கள்


சட்டப்பேரவைத் தலைவராகப் புலவர் கா.கோவிந்தன் அவர்கள்

 தமிழிலக்கிய உலகில் மிகச்சிறந்த அறிஞராக விளங்கித் தமிழகச் சட்டப்பேரவையில் தலைவராக அமர்ந்து கடமையாற்றி அனைவராலும் மதிக்கத் தகுந்தவராக விளங்கியவர் புலவர் கா. கோவிந்தன் அவர்கள் ஆவார். வடார்க்காடு மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை மாவட்டம்) செய்யாறு பகுதியில் வாழ்ந்த திரு. காங்கன் முதலியார் சுந்தரம் அம்மாளுக்கு மகனாக வாய்த்தவர் புலவர் கா.கோவிந்தன் அவர்கள். 15.04.1914 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியைச் செய்யாறு உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர்.

 1932 இல் எட்டாம் வகுப்பில் பயின்ற பொழுது வீரபத்திரப்பிள்ளையிடம் படித்தவர். அவர் மாற்றலாகி வேலூருக்குச் சென்றபொழுது அந்த இடத்திற்கு ஔவை.சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் பணிக்கு அமர்ந்தார். அவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை வகுப்பிலும் தனியாகவும் கற்றுப் புலமை பெற்றவர் நம் புலவர் அவர்கள். 1934 இல் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றவர். ஔவை. துரைசாமிப் பிள்ளையின் ஊக்கத்தால் பத்துப்பாட்டு, எட்டுத்தொகையினை நன்கு கற்றவர்.

  கா. கோவிந்தனார் 1935 இல் காவிரி என்ற தலைப்பில் கட்டுரை எழுதி முதற்கண் வெளிவரச் செய்தவர். வாலி வழக்கு என்ற நூல் எழுதிய புரிசை முருகேச முதலியார் அவர்கள் முன்னின்று நடத்திய பானுகவி மாணவர் கழகம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளில் மாணவப் பருவத்தில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர் புலவர். படிக்கும் காலத்திலேயே கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, ஞானியார் அடிகள், மறைமலையடிகள் உள்ளிட்டவர்களுடன் பழகிய பெருமைக்கு உரியவர். செய்யாறு பகுதியில் தமிழ் உணர்வு தழைத்து வளரப் பாடுபட்டவர்களில் புலவரின் பங்களிப்பு மிகுதி. இவருக்கு அணுக்கமாக இருந்தவர் மாவண்ணா தேவரசான் அவர்கள் ஆவார். மாவண்ணா தேவராசன் பெரியார் பிள்ளைத்தமிழ் எழுதிய பெருமைக்கு உரியவர் (என் முனைவர் பட்ட ஆய்வேடு, பொன்னி பாரதிதாசன் பரம்பரை நூலில் இவர் பற்றி விரித்து எழுதியுள்ளேன்).

 1942 இல் வேலூரில் தம் ஆசிரியர் துரைசாமியார் பணிபுரிந்த அதே பள்ளியின் பணியில் புலவர் கா. கோவிந்தனார் இணைந்து பணிபுரிந்தார். 1944 வரை பணி தொடர்ந்தது. தமிழில் வித்துவான் பட்டம் பெற்ற பின்னர் பி.ஓ.எல். பட்டம் பெற்றவர். தமிழ் ஆங்கில மொழிகளில் வல்லவர்.

 வேலூரில் பணிபுரிந்துகொண்டிருந்தபொழுது கழக ஆட்சியர் சுப்பையா பிள்ளை அவர்கள் சென்னையில் தெ.பொ.மீ. தலைமையில் கூட்டிய நற்றிணை மாநாட்டில் உரையாற்ற அழைத்தார். அதன் பிறகு அவரின் நட்பு வளர்ந்தது. பல நூல்கள் கழகம் வழி வெளிவர அந்தச் சந்திப்பு காரணமானது.

 புலவரின் முதல் நூலான திருமாவளவன் என்னும் நூல் 1951 இல் வெளிவந்தது. அதன் பிறகு சங்க காலப் புலவர் வரிசை என்ற வரிசையில் 16 நூல்களையும் அரசர் என்ற வரிசையில் ஆறு நூல்களையும் வெளியிட்டார். புலவர் வரிசையின் முதல்நூல் 1952 - லும், அரசர் வரிசையில் கடைசி நூல் 1955 - லும் வெளிவந்தன.

 மலர் நிலையம், வள்ளுவர் பண்ணை, அருணா பதிப்பகம் வழியும் புலவரின் நூல்கள் வெளிவந்தன. 1990 ஏப்ரல் 15 இல் புலவரின் ஐம்பதாவது நூலான பி.டி.சீனிவாச ஐயங்காரின் தமிழர் வரலாறு வெளிவந்தது. 1991 இல் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் அவர்களின் Orgin and Spread Tamils என்ற நூலைத் தமிழரின் தோற்றமும் பரவலும் என்ற பெயரில் புலவர் அவர்கள் மொழிபெயர்த்துளார். பி.டி.சீனிவாச ஐயங்காரின் Pre Aryan Tamil Culture என்பதை ஆரியர்க்கு முந்திய தமிழர் பண்பாடு என்ற தலைப்பில் மொழிபெயர்த்தவர். அவரின் மற்றொரு நூலான Stone Age In India என்பதை இந்தியாவில் கற்காலம் என்ற பெயரில் மொழிபெயர்த்தவர்.

புலவர் அவர்களின் பணியை மூன்று வகையில் வகைப்படுத்தலாம்.

 சங்க இலக்கிய ஆய்வுப்பணி, மொழிபெயர்ப்புப்பணி, அரசியல் பணி என்பதே அப்பகுப்பு. இவர் பற்றிய முனைவர் பட்ட நிலையில் ஆய்வுகள் வெளிவரும்பொழுதே இவர்தம் தமிழ்ப்பணி உலகுக்கு நிலை நிறுத்தப்படும். இவர் பற்றி விரிவாக எழுதியுள்ளேன். விரைவில் முழுமையாக வெளியிடுவேன்.


புலவர் கா.கோவிந்தன் அவர்கள்


புலவர் கா.கோவிந்தனார் அவர்களின் நூல்கள்

சங்க காலப்புலவர் வரிசை

01.நக்கீரர்
02.பரணர்
03.கபிலர்
04.ஔவையார்
05.பெண்பாற் புலவர்கள்
06.உவமையாற் பெயர் பெற்றோர்
07.காவல பாவலர்கள்
08.கிழார்ப்பெயர் பெற்றோர்
09.வணிகரிற் புலவர்
10.மாநகர்ப் புலவர்கள்-1
11.மாநகர்ப் புலவர்கள் -2
12.மாநகர்ப் புலவர்கள்-3
13.உறுப்பாலும் சிறப்பாலும் பெயர் பெற்றோர்
14.அதியன் விண்ணாத்தனார் முதலிய 65 புலவர்கள்
15.குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்
16.பேயனார் முதலிய 39 புலவர்கள்
17.இலக்கிய வளர்ச்சி
18.இலக்கியப் புதையல் 1.நற்றிணை விருந்து
19.இலக்கியப் புதையல்-2 குறுந்தொகைக் கோவை
20.குறிஞ்சிக்குமரி
21.முல்லைக்கொடி
22.மருதநில மங்கை
23.நெய்தற் கன்னி
24.பாலைச்செல்வி
25.கூத்தன் தமிழ்
26.சாத்தன் கதைகள்
27.திருக்குறள் சொற்பொழிவுகள்
28.மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்
29.காவிரி-கட்டுரைத்தொகுதி
30.சிலம்பொலி
31.புண் உமிழ் குருதி
32.அடுநெய் ஆவுதி
33.கமழ்குரல் ஆவுதி
34.சுடர்வீ வேங்கை
35.வடு அடும் நுண் அயிர்
36.முல்லை
37.வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி
38.மனையுறை புறாக்கள்
39.பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை
40.புலாஅம் பாசறை
41.கட்டுரைத்தொகுப்பு

இலக்கணம்

42.கால்டுவெல்- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்-தமிழாக்கம்
43.செந்தமிழ் எழுதப் பயில

வரலாறு

44.திருமாவளவன்

சங்க கால அரசர் வரிசை

45.சேரர்
46.சோழர்
47.பாண்டியர்
48.வள்ளல்கள்
49.அகுதை முதலிய நாற்பத்து நால்வர்
50.திரையன் முதலிய இருபத்து ஒன்பதின்மர்
51.அறம் உரைத்த அரசர்
52.கலிங்கம் கண்ட காவலர்
53.இலக்கியம் கண்ட காவலர்
54.தமிழர் தளபதிகள்
55.தமிழகத்தில் கோசர்கள்
56.கழுமலப் போர்
57.தமிழர் வாழ்வு
58.தமிழர் பண்பு
59.தமிழர் வாணிகம்
60.பண்டைத்தமிழர் போர்நெறி
61.தமிழர் வரலாறு-தொகுதி-1
62.தமிழர் வரலாறு-தொகுதி-2
63.தமிழர் தோற்றமும் பரவலும்
64.ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
65.தமிழக வரலாறு-சங்க காலம்-அரசர்கள்
66.தமிழக வரலாறு-கோசர்கள்
67.தமிழக வரலாறு -கரிகால் பெருவளத்தான்
68.இந்தியாவில் கற்காலம்
69.குடிமகனின் அடிப்படை உரிமையா? சட்டமன்ற உரிமையா?
(பட்டியலை விரைவில் முழுமைப்படுத்துவேன்)

(என் படைப்புகளின் குறிப்புகளை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள் ).

வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

அறிஞர் பி.எல்.சாமி அவர்களின் நூல்கள்

அறிஞர் பி.எல்.சாமி அவர்கள் புதுச்சேரியில் இ.ஆ.ப.அதிகாரியாகப் பணிபுரிந்தவர்கள், புதுவை அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்.சங்கநூல்களில் ஆய்வு நிகழ்த்தி அரிய நூல்கள் பலவற்றைத் தமிழுக்கு வழங்கியவர்கள்.புதுவை அரசின் ஆட்சிக்கு உட்பட்ட மாகே பகுதியில்(மேற்குக் கடற்கரைப்பகுதி) இவர் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது பழந்தமிழ் அரசனான நன்னன் பற்றிய செய்திகளைக் களப்பணியாற்றித் தமிழுலகுக்கு வழங்கியவர்.நன்னன் பற்றிய இவர் ஆய்வு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.மேலாய்வுக்கு வழிவகுக்கும் தரத்தன.

விழுப்புரத்தை அடுத்த கீழ்வாளை ஊரில் உள்ள பழங்காலப் பாறை ஓவியங்களை அனந்தபுரம் கிருட்டிணமூர்த்தியுடன் இணைந்து வெளியுலகுக்குக் கொண்டுவந்தவர்.இவர் இயற்றிய நூல்களின் பட்டியலை முதற்கண் வழங்குகிறேன்.அடுத்த பதிவுகளில் இவரின் வாழ்க்கைக் குறிப்பு இணைப்பேன்.இவர் நூல்கள் கழகப் பதிப்பாகவும் வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்களின் சேகர் பதிப்பகம் வழியாகவும் வெளிவந்துள்ளன.பி.எல்.சாமி அவர்களின் மறைவு தமிழுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

பி.எல்.சாமியின் படைப்புகள்(1967-2002)

01,சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்,1967,மே
02.சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்,1970,ஆகத்து
03.தாய்த் தெய்வ வழிபாடு,1975,செப்தம்பர்
04.சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்,1978,மே
05.சங்க நூல்களில் மீன்கள்,1976,மே
06.சங்க நூல்களில் மணிகள்,1990,டிசம்பர்
07.Common Names and Myths of the Flora and Fauna in Dravidian and Indo-Aryan Languages,1980,டிசம்பர்
08.இலக்கியத்தில் அறிவியல்,1981,மே
09.சங்க இலக்கியத்தில் விந்தைப்பூச்சி,1981,டிசம்பர்
10.சங்க இலக்கியத்தில் அறிவியற் கலை,1981,டிசம்பர்
11.இலக்கிய ஆய்வு,1982,டிசம்பர்
12.தமிழ் இலக்கியத்தில் நாட்டார் பண்பாடு,1983,டிசம்பர்
13.தமிழ்நாட்டில் சிந்துவெளி எழுத்தோவியம்,1984,டிசம்பர்
14.சங்க நூல்களில் முருகன்,1991,ஏப்ரல்
15.சங்க நூல்களில் செடி கொடிகள்,1991,டிசம்பர்
16.சங்க நூல்களில் மரங்கள்,1992,டிசம்பர்
17.சங்க நூல்களில் உயிரினங்கள்,1993,டிசம்பர்
18.அறிஞர் பி.எல்.சாமியின் ஆய்வுக்கட்டுரைகள்,2002,டிசம்பர்

புதன், 12 நவம்பர், 2008

பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் திருவுருவப் படம்


பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்கள்

பெருமழைப் புலவர், பொ.வே.சோமசுந்தரனார் அவர்களின் சங்க இலக்கிய உரைச்சிறப்பில் மயங்கிய யான் அவர் பற்றி முன்பே கட்டுரை வரைந்துள்ளேன். அவரின் படம் ஒன்று இன்று பிரஞ்சு நிறுவன நூலகத்தில் பழைய செந்தமிழ்ச் செல்வி ஏடுகளைப் புரட்டிய பொழுது கிடைத்தது.முன்பு பார்த்த படங்களிலிருந்து இது தெளிவாக இருந்ததால் அனைவரின் பார்வைக்கும் வைத்துள்ளேன்.

நன்றி: செந்தமிழ்ச்செல்வி மாத இதழ்,கழக வெளியீடு.
பிரஞ்சு இன்சிடியூட் நூலகம், புதுச்சேரி

புலவர் வரலாறு அறிய...