நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
உங்கள் குரல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உங்கள் குரல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

தொல்காப்பிய அறிஞர் செ.சீனி நைனா முகமது ஐயா அவர்கள் மறைவு!

 தொல்காப்பிய அறிஞர் சீனி.நைனா முகமது அவர்கள்

  மலேசியாவில் தொல்காப்பியத்தைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு இயங்கியவரும் உங்கள் குரல் என்னும் இதழின் ஆசிரியரும் பன்மொழிப் புலமையாளரும் தமிழ்ப்பற்றாளருமான ஐயா செ.சீனி நைனா முகமது அவர்கள் இன்று 07.08.2014 பகல் 2 மணியளவில் மலேசியத் திருமண்ணில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்(20.05.2010) மலேசிய நண்பர்களுடன் பினாங்கு நகரில் நடு இரவில் ஐயா அவர்களைச் சந்தித்தபொழுது அன்பொழுக எங்களுடன் உரையாடிய பெருமைக்குரியவர். அது நாள் முதல் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம்.
                    
  கடந்த ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அண்ணன் எம். எ. முஸ்தபா அவர்களுடன் ஒரு இரவு விருந்தில் அருகமர்ந்து உண்டு மகிழ்ந்தமையும் மறுநாள் காலை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவர் உரை கேட்டமையும் நெஞ்சில் நிழலாடுகின்றன. இசுலாமியப் பெருமக்களுள் தமிழுக்கு உழைத்தோர்களைப் பலராகப் பட்டியலிட்டுப் போற்றமுடியும். அந்த அறிஞர் பெருமக்களுள் தொல்காப்பியத்தை நுட்பமாகக் கற்ற பெருமையும் மலேசிய மண்ணில் எடுத்துரைத்துப் பரப்பிய பெருமையும் ஐயா சீனி நைனா முகமது அவர்களுக்கு உண்டு. தமிழ் பற்றியோ, தமிழர் பற்றியோ எவரேனும் குறைத்துப் பேசிவிட்டு ஐயாவிடமிருந்து தப்பிச் செல்லமுடியாது. அந்த அளவு தமிழ்ப்பற்றுடையவராக விளங்கியவர்.

மலேசிய மண்ணில் தமிழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து கடமையாற்றிய ஐயா சீனி நைனாமுகமது அவர்களின் இழப்பு தமிழுலகிற்கு ஈடு செய்ய இயலாத இழப்பு. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், மலேசியத் தமிழ் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

தொல்காப்பிய அறிஞர் சீனி. நைனா முகமது அவர்களின் புகழ் இந்த உலகம் உள்ளவரை நின்று நிலவட்டும்!!

 அறிஞர் சீனி நைனா முகமது அவர்கள் குறித்த என் பழைய இடுகை.


சனி, 29 மே, 2010

செம்மொழித்தொண்டர் சீனி நைனா முகம்மது


செ.சீனி நைனா முகம்மது

  20.05.2010 இரவு பதினொன்று முப்பது மணியளவில் எங்கள் மகிழ்வுந்து பினாங்கு நகரின் ஒளிவெள்ளத்தில் நீந்தியபடி சென்று சைனா சித்திரீட்டு பகுதியில் உள்ள 'உங்கள் குரல்' இதழ் அலுவலகத்தில் நின்றது.எங்கள் வருகைக்குக் காத்திருந்தவராக ஐயா சீனி நைனா முகம்மது அவர்கள் எங்களை அன்பொழுக வரவேற்றார். முதல்மாடியில் இருந்த இதழ்க் குவியல்களுக்கு இடையே சீனி ஐயாவின் அலுவலகம் இருந்தது.அவரே தட்டச்சு முதல் இதழ் வடிவமைப்பு வரை அனைத்து வேலைகளையும் பார்ப்பதாகச் சொன்னார்கள்.


உங்கள் குரல் இதழ் முகப்பு

 மலேசியாவில் வெளிவரும் தூய தமிழ் இதழ்களில் உங்கள் குரல் குறிப்பிடத்தக்கது. சீனி நைனா முகம்மது அவர்கள் ஆசிரியர். குறைந்த படிகள் அச்சானாலும் மலேசியாவில் மொழி வளர்ச்சிக்குப் பாடுபடும் இதழாக உங்கள் குரல் உள்ளது.தமிழ் ஆர்வம் கொண்ட அன்பர்கள் ஐயாவுக்கு உதவியாக இருந்து இதழ் வளர்ச்சிக்குத் துணைநிற்கின்றார்கள். ஐயா அவர்களின் இளமைப்பருவம் அறிந்து வியப்புற்றேன்.பள்ளிப்படிப்பை மட்டும் பெற்ற ஐயா அவர்கள் தமிழின் மேல் இருந்த ஈடுபாட்டால் தாமே தொல்காப்பியத்தைப் பயின்று இன்று மலேசியாவில் தொல்காப்பியத் தொடர்ப்பொழிவுகள் செய்கின்றார்கள். உரைகள், பொழிவுகள் வழியாக மலேசியாவில் தொல்காப்பியத்தை நிலைபெறச்செய்துள்ளார்.

 என் முயற்சிகளை நண்பர்கள் சுப.நற்குணன்,மதிவரன்,தமிழ்ச்செல்வம் ஆகியோர் எடுத்துரைக்க என்மேல் ஐயாவுக்கு அன்பு மேலிட்டது. இருவரும் தொல்காப்பிய ஆய்வில் புகுந்தோம். தொல்காப்பியத்தில் இடம்பெறும் பெயரியல் வினையியல் பகுதிகளை விளக்கப் புகுந்த ஐயா அந்தப் பொருளில் இன்னும் செய்ய வேண்டிய ஆய்வுகளை எனக்கு எடுத்துரைத்தார்கள். மாணவனாக அமர்ந்து தொல்காப்பியம் குறித்து பல உண்மைகளை அறிந்தேன்.


நானும் சீனி ஐயாவும்

  அந்த நேரத்தில் மலேசியாவில் இருக்கும் அன்பர்களின் மொழி குறித்த எண்ணம் பற்றி நண்பர் சுப.நற்குணன் அவர்கள் எடுத்துரைக்க ஐயா நக்கீரனார் போலும் கனன்று தமிழ் உணர்வு மீதூரப்பெற்று மிகச்சிறந்த மொழியியல் விளக்கங்களை எடுத்துரைத்தார்.பன்மொழியறிவு பெற்ற நம் சீனி ஐயா அவர்கள் தமிழ், ஆங்கிலம், மலாய், உருது மொழிகளிலிருந்து மேற்கோள் காட்டித் தமிழ் மேன்மையை எடுத்துரைத்தார்கள். எனக்கு வாய்த்த இசுலாமிய சமய ஈடுபாடு கொண்ட அன்பர்களுள் சீனி அவர்கள் மொழிப்பற்றில் முதலில் தெரிந்தார். அவர்களைப் போலவே புதுக்கோட்டை கிரவுன் இனிப்புச்சாலை உரிமையாளரும் திருக்குறள், திருக்குரான் ஈடுபாடு உடையவர்கள். சென்னை மருத்துவர் உசேன் ஐயா அவர்கள் இராமலிங்க அடிகளார்பால் பேரன்பு உடையவர்கள். இத்தகு நல்லுள்ளங்களால்தான் தமிழ் சமயங்கடந்தும் போற்றப்படுகின்றது.

 சீனி ஐயா அவர்களின் தமிழ்ப்பணிகளைக் கேட்ட வண்ணம் எங்கள் உரையாடல் முன்னேறியது. அந்த நேரத்தில் பேராசிரியர் மறைமலை ஐயாவிடமிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்ததை நம் சீனி ஐயா குறிப்பிட்டார்கள். என் வருகை பற்றி கூறியிருந்ததாகவும், எழுத்துத் திருத்தம் பற்றித் தமிழக அரசுக்கு எந்த உடன்பாடும் இல்லை என்று பேராசிரியர் மறைமலை கூறியதாகவும், அதுபற்றி தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் அறிக்கை இன்று வெளியானதாகவும், எழுத்துத் திருத்த எதிர்ப்பில் தொடக்கம் முதல் எதிர்க்குரல் கொடுத்து வந்த எனக்கு இச்செய்தி உடன் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் ஐயாவிடம் மறைமலை அவர்கள் உரையாடியதாக அறிந்தேன். பேராசிரியர் மறைமலை அவர்களை அங்கிருந்தபடியே நன்றியுடன் போற்றினேன். இது நிற்க.

  சீனி ஐயாவின் பாப்புனையும் ஆற்றல் எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. நினைத்தவுடன் பாடல்புனையும் பேராற்றல் ஐயாவுக்கு உண்டு என்பது அறிந்து உள்ளம் பூரித்தேன். அவர்களின் தமிழ்த்தொண்டைப் போற்றியது என் உள்ளம். ஐயாவின் உங்கள் குரல் ஏடுகளும் தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலரும் ஐயா அவர்கள் வழங்கி மகிழ்ந்தார்கள்.

  செம்மொழிச் சிறப்பு மலர் தரமான கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துள்ளது. 39 கட்டுரைகளைத் தாங்கி மலர் வந்துள்ளது. செம்மொழி: பொது விளக்கம்; செம்மொழி நேற்று-இன்று-நாளை; செம்மொழி: சிறப்பியல்புகள்; செம்மொழி அக்கரை நாடுகளில்; தமிழ்க்கல்வி,கலை நிறுவனங்கள் என்ற தலைப்புகளிலும் தமிழ்ச்செம்மொழிப் போராட்ட வரலாற்றுக் குறிப்புகள்,அரசு ஆணைகள் என்று பின்னிணைப்பாகச் செய்திகள் உள்ளன.


உங்கள் குரல் இதழின் தமிழ்ச் செம்மொழிச் சிறப்பு மலர்

  சென்னையில் வாழும் உழைப்புச்செம்மல் ஐயா இரா.மதிவாணன் அவர்களை இணைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த மலர் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய கருத்துப் புதையல்கள் கொண்டதாகும்.

  சீனி ஐயா அவர்களைப் பிரிய மனம் இன்றி விடைபெற நினைத்தோம். எங்கள் மணிப்பொறி நள்ளிரவு 1.00மணி காட்டியது. அந்த நேரத்தில் எங்களை விடாப்பிடியாக அழைத்துச் சென்று தேநீர் பருக வைத்தது அந்தத் தமிழுள்ளம். ஐயாவிடம் விடைபெற்றபொழுது நடு இரவு 1.30 மணி இருக்கும். கடல் நடுவே கட்டப்பட்ட 13 கி.மீ.நெடும்பாலத்தின் அழகைப் பருகியபடியே எங்கள் மகிழ்வுந்து போரிட்பந்தர் என்ற நகர் நோக்கி விரைந்தது...

செ.சீனி நைனா முகம்மது அவர்களின் முகவரி:
உங்கள் குரல் எண்டர்பிரைசு,
UNGALKURAL ENTERPRISE,
Room 2,I Floor,22 China Street,
10200 Pulau Pinang,Malaysia.
Tel/ Fax 04 - 2615290