ஞாயிறு, 17 ஏப்ரல், 2016
மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம் நூற்றாண்டுத் தொடக்கம்!...
செவ்வாய், 1 ஜனவரி, 2013
தமிழ் இணைய மாநாடு நிறைவு விழா
வெள்ளி, 28 டிசம்பர், 2012
தமிழ் இணைய மாநாடு- முதல்நாள் நிகழ்வுகள்
சனி, 29 செப்டம்பர், 2012
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய மாநாடு- 2012
புதன், 26 அக்டோபர், 2011
முனைவர் ஆறு.அழகப்பனார்…

தொடர்புக்கு:
பேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்கள்,
தமிழ்ச்சுரங்கம்
50. வெங்கடேச நகர் முதன்மைச்சாலை,
விருகம்பாக்கம், சென்னை- 600 092
செல்பேசி: + 91 9444132112
சனி, 30 ஜனவரி, 2010
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே நடந்தது...
தமிழ்வெளி திரட்டியை அறிமுகப்படுத்தும் நான்
ஓராண்டுக்கும் மேலாகத் திட்டமிட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துவதற்கு ஏற்பாடு செய்தோம். தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் பழ.முத்துவீரப்பனார் அவர்களின் பெரும் முயற்சியிலும் திட்டமிடலிலும் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வ.செயதேவன் அவர்கள் கணிப்பொறி, இணையம் பயன்படுத்தி ஆய்வு செய்யும் பேராசிரியர்களுள் குறிப்பிடத் தகுந்தவர். எனவே அவர்களை வாழ்த்துரைக்க அழைக்க முன்பே முடிவு செய்திருந்தோம். மேலும் கணினி, இணையத்துறையில் தொழில்நுட்பம் தெரிந்துகொண்டு அடக்கமாகப் பணிபுரிபவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்களும் முன்பே பல பயிலரங்குகளில் கலந்துகொண்டு எனக்கு ஒத்துழைப்பு நல்கியவர்களுமான தமிழ்நிலவன், முரளி, ஒரிசா பாலு, விசயகுமார் (சங்கமம் லைவ்) ஆகியோர்கள் பங்குபெற்றால் நிகழ்ச்சியைச் சிறப்பாக அமைக்கலாம் என்று பேராசிரியரிடம் தெரிவித்து இசைவு பெற்றேன். அனைவருக்கும் எழுதியதும் அனைவரும் வருவதாக ஒத்துக்கொண்டனர். இது நிற்க.
இப்பயிலரங்கச் செய்தி பல்வேறு வலைப்பதிவர்களாலும், இணையத் தளங்களாலும் உலகிற்கு அறிவிக்கப்பட்டது. தமிழ்வெளி திரட்டி தம் முகப்புப் பக்கத்தில் வைத்து நிகழ்ச்சி சிறக்க உதவியது. மேலும் தட்சு தமிழ்,பதிவுகள்(கனடா) சென்னை ஆன்லைன் உள்ளிட்ட இதழ்கள் தங்கள் பக்கங்களில் செய்திகளை வெளியிட்டன. இணையத்துறையில் சிறு பயன்பாட்டு முயற்சி நடந்தாலும் ஓடிச்சென்று பாராட்டும் இயல்புகொண்ட கணித்தமிழார்வலர்கள் பலரும் தனிமடலிலும் குழு விவாதங்களிலிலும் வாழ்த்தினர்.
29.01.2010 இரவு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லத்தில் தங்கிக்கொள்ள எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெங்களூரிலிருந்து தமிழ்நிலவனும், கிருட்டினகிரியிலிருந்து செல்வமுரளியும். சென்னையிலிருந்து பேராசிரியர் செயதேவனும், பாலு அவர்களும் இரவு வந்துவிட்டனர். நான் மட்டும் புதுச்சேரியிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு காலை 8 மணிக்குத் தில்லையை அடைந்தேன். பாலு அவர்கள் திருமுதுகுன்றம் சென்று அங்கிருந்து சில வரலாற்று முதன்மையான இடங்களைப் பார்வையிட்டபடி தில்லைப் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து சேர்ந்தார். நானும் புலவர் வி.திருவேங்கடமும் (அகவை 73). இவர் இப்பொழுது தமிழ்த் தட்டச்சு பழகி இணையத்தில் உலாவருகிறார்).
ஒரிசா பாலுவுடன் இணைந்துகொண்டு விருந்தினர் இல்லம் சென்றோம். நிலவன் முரளி, பேராசிரியர் செயதேவன் உள்ளிட்ட அனைவரும் சிற்றுண்டிக்குப் பிறகு விழா நடைபெறும் அரங்கிற்குச் சென்றோம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று (30.10.2010) காலை 10.15 மணிக்குத் தொடக்கவிழா எளிமையாக நடந்தது.
தமிழ்த்துறையின் சார்பில், பொறியியல் கல்லூரியில் உள்ள கணினித்துறை அரங்கில் நடைபெற்ற பயிலரங்கின் தொடக்க விழாவில் தமிழ்த்துறைத் தலைவரும் மொழிப்புல முதன்மையருமான பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழகப் பல்கலைக்கழங்களில் முன்னோடிப் பல்கலைக்கழகமான இங்குத் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுவதால் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கணினி, இணையத்தில் பெரிய அளவில் பங்களிப்பு செய்யமுடியும் எனவும் ஆய்வுத்துறையில் முன்னோடியாக விளங்கமுடியும் என்றும் முத்துவீரப்பன் கூறினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கணினித்துறைத் தலைவர் பேராசிரியர் இராமலிங்கம் அவர்கள் வாழ்த்துரையில் கணினி, இணையத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புநிலைப் பேராசிரியர் முனைவர் வ. ஜெயதேவன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தமிழ் ஆய்வுலகில் ஈடுபடுபவர்களுக்குக் கணினியும், இணையமும் பெரிய அளவில் பயன்படுகிறது என்று கூறியதுடன் சென்னைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள தமிழ்ப் பேரகராதிக்கு உரிய அரிய நூல்கள் சிலவற்றின் விவரங்களை இணையத்தின் வழியாக அறியமுடிந்தது என்று கூறி அனைத்துத் தமிழ் அறிஞர்களும் இணையத்தைப் பயன்படுத்து வேண்டும் என்று வேண்டுகோளை வைத்தார். குறிப்பாக ஈழத்துப்பூராடனாரின் நீரர நிகண்டு, பே.க.வேலாயுதத்தின் சங்கநூற் சொல்லடியம் என்ற இரு அரிய நூல்களைத் தாம் இணையத்தின் வழியாகப் பெற்றதைச் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
நான் தமிழ் இணையப் பயிலரங்கம் பற்றிய அறிமுக உரையாற்றினேன். பின்னர் 11 மணிக்குத் தொடங்கிய பயிலரங்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள் ஐம்பதின்மர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். இன்று உள்ளூர் விடுமுறை என்பதாலும் (வடலூர் தைப்பூசம்) சிலர் புத்தொளிப் பயிற்சிக்குச் சென்றதாலும் எண்ணிக்கை அளவுக்குள் இருந்தது. இவர்களுக்குத் தமிழ் இணையம் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் காட்சி வழியாக விளக்கினேன். இதில் தமிழ் 99 விசைப்பலகையின் அமைப்பு, தட்டச்சிடும் முறை, மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், மின்னஞ்சல் செய்வது, உரையாடுவது, வலைப்பூ உருவாக்குவது பற்றி எடுத்துரைத்தேன். நண்பர்கள் முரளியும், நிலவனும் தொழில்நுட்பப் பகுதியைக் கவனித்துக்கொண்டனர். சிறிதும் குறைபாடு இல்லாமல் பயிலரங்கம் நிகழ்ந்தது.
தமிழில் புகழ்பெற்ற இணையதளங்களான மதுரைத்திட்டம், தமிழ்மரபு அறக்கட்டளை, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய நூலகம், புதுச்சேரி பிரஞ்சு நிறுவன நூலகம், விக்கிப்பீடியா தளம் உள்ளிட்ட பல தகவல்களை எடுத்துக்காட்டினோம். காந்தளகம் தளம் உள்ளிட்டவற்றை விளக்கினோம். பன்னிரு திருமுறை மிகச்சிறப்பாக அத்தளத்தில் இடம்பெற்றுள்ளதை அவைக்கு நினைவுப்படுத்தினோம். நூலகம் தளம் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களைப் பாதுகாப்பதை எடுத்துரைத்தோம். சுரதா தளத்தின் பன்முகப் பயன்பாட்டை விளக்கினோம். தமிழ் கணினித் துறைக்கு உழைத்த காசி ஆறுமுகம், முகுந்தராசு, கோபி உள்ளிட்டவர்களின் பங்களிப்பை எடுத்துரைத்தோம். தமிழ் விக்கிப்பீடியாவின் அகரமுதலி முயற்சிக்கும் கட்டுரை உருவாக்கத்துக்கும் உழைக்க ஒரு வேண்டுகோள் வைத்தோம்.
புகழ்பெற்ற எழுத்தாளர்களான மாலன், செயமோகன், இராமகிருட்டினன், பத்ரி இவர்களின் தளங்களை அறிமுகம் செய்தோம். எழுத்துகளை எவ்வாறு ஒருங்குகுறிக்கு மாற்றுவது என்று எடுத்துரைத்தோம். எங்களின் விளக்கவுரைகளைக் கண்டு மகிழ்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியின் கணினித்துறைத் தலைவர் தம் ஆய்வகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான கணிப்பொறிகளைத் தமிழில் தட்டச்சிடும்படியாக மாற்றும்படி ஆணையிட்டார். ஒரு மணிநேரத்திற்குள் அனைத்துக் கணினியும் தமிழ்மயமானது. இன்று தமிழில் வெளிவரும் இணைய இதழ்களை எடுத்துக்காட்டி புகழ்பெற்ற இணைய இதழ்களைக் காட்சிப்படுத்தினோம்.
தமிழர்கள் உலகத்தை வீட்டில் இருந்தபடியே வலம்வர முடியும் என்று கூறிய நான் கணிப்பொறி,இணையத்தைப் பயன்படுத்த ஆங்கில அறிவு அவசியம் இல்லை என்று கூறியதுடன் தமிழில் அரிச்சுவடி தெரிந்தவர்கள் கூட இணையத்தைப் பயன்படுத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் கூறினேன். வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சார்ந்த ஆய்வாளர்கள் ஒரு செல்பேசியில் ஆயிரம் நூல்களை அடக்கிவைத்துள்ள செய்திகளைப் பயிலரங்கில் எடுத்துக்காட்டி விளக்கினேன். பெங்களூர் பேராசிரியர்கள் தமிழில் தட்டச்சிட்டால் தானே படிக்கும் மென்பொருளை உருவாக்கியுள்ளதையும் எடுத்துரைத்தேன். மாலை அமர்வில் பெங்களூரைச் சேர்ந்த கணினி வல்லுநர் தமிழ் நிலவன், செல்வமுரளி, ஒரிசா பாலு ஆகியோர் இணையதளப் பாதுகாப்பு, இணையத்தில் பணம் சம்பாதிப்பது பற்றி உரையாற்றினர். வலைப்பூ உருவாக்குவது பற்றி விளக்கியதில் நிலவனின் பங்கு மிகுதி. ஒரிசா பாலு தமிழ் ஆய்வுக்குரிய ஆதாரங்கள் உலக அளவில் பரந்து கிடக்கின்றன என்பதைக் காட்சி வழி விளக்கினார். அவரின் விக்கி மேப்பியா விளக்கம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பல்கலைக்கழகத்தின் மற்ற துறைப் பேராசிரியர்களும் பயிலரங்கில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மாலை ஐந்து மணியளவில் பேராசிரியர் மாலினி அவர்களின் நன்றியுரைக்குப் பிறகு பயிலரங்கம் நிறைவுற்றது.
கலைந்துசென்ற பேராசிரியர்கள் மெதுவாகப் பேசியது இவ்வாறு எங்கள் காதில் விழுந்தது. "அடுத்த மாதம் சம்பளத்தில் கணினி வாங்குவதுதான் முதல் செலவு".
பார்வையாளர்களாகப் பேராசிரியர் பழ.முத்துவீரப்பன், பேராசிரியர் இராமலிங்கம்
பேராசிரியர் பழ.முத்துவீரப்பனும் பேராசிரியர் வ.செயதேவனும்
முனைவர் பழ.முத்துவீரப்பன் வரவேற்புரை
செவ்வாய், 12 ஜனவரி, 2010
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்,சனவரி 30,2010

அழைப்பிதழ்
சிதம்பரம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்த்த அறிவுத் திருக்கோயிலாகும்.அரசர் அண்ணாமலையார் இதனைத் தொடங்கிவைக்க வாழையடி வாழையென இதனை அரசர் குடும்பத்தினர் வளர்த்து வருகின்றனர்.தமிழ் உணர்வு மிக்க மாணவர்களை உருவாக்கிய இந்த நிறுவனத்தின் தமிழியல் துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்துவதற்குரிய வாய்ப்புகளைத் தமிழியல் துறைத்தலைவரும்,புகழ்பெற்ற பேராசிரியருமாகிய முனைவர் பழ.முத்து வீரப்பன் அவர்கள் உருவாக்கினார்.அவர்களின் திட்டமிடலுக்கு ஏற்ப எதிர்வரும் சனவரி 30,காரி(சனிக்)கிழமையன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிலரங்கம் நடைபெறுகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் டாக்டர் ம.இராமநாதன் அவர்கள் பயிலரங்கத்தினைத் தொடங்கி வைத்து வாழ்த்துரைக்க உள்ளார்.
பேராசிரியர் பா.பழனியப்பன்(முதன்மையர்,பொறியியல்புலம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்),பேராசிரியர் வ.செயதேவன்,(சிறப்புநிலைப் பேராசிரியர்,தமிழ் இலக்கியத்துறை,சென்னைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் வாழ்த்துரைக்க உள்ளனர்.
முனைவர் மு.இளங்கோவன்(பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,புதுச்சேரி), தமிழ்நிலவன் (கணிப்பொறி வல்லுநர்,பெங்களூரு)விசயகுமார்(ஆசிரியர்,சங்கமம் லைவ்,நாமக்கல்), செல்வமுரளி(ஆசிரியர்,தமிழ் வணிகம்,சேலம்)கடலாய்வு வல்லுநர் ஒரிசா பாலு ஆகியோர் மாணவர்கள், ஆய்வாளர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி அளிக்க உள்ளனர்.
பல்கலைக் கழகம் ஒன்று தாமே முன்வந்து தமிழ் இணையத்தில் பயிற்சி வழங்குவது தமிழ் இணைய வரலாற்றில் இதுவே முதல் முயற்சியாகும்.

நிகழ்ச்சி நிரல்