நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம் நூற்றாண்டுத் தொடக்கம்!...

செம்மல் வ.சுப. மாணிக்கம்

எளிமையின் உருவம்; புலமையின் இயக்கம்; சங்கப் பனுவலில் திளைத்த அறிஞர்; தொல்காப்பியக் கடலில் மூழ்கி முத்தெடுத்த வல்லுநர்; தமிழ்க்காதலால் வள்ளுவத்தை வரைந்து பார்த்தவர்; திருவாசகத் தேனுண்ணும் தும்பி; ஏழிளந்தமிழில் வாழப் பழகியவர்; பல்லாயிரம் மாணவர்களின் நெஞ்சக் கோவிலில் நிலைபெற்ற தெய்வம்; கற்றோர் உள்ளத்தில் கலந்த மேதை; தினைத்துணை உதவி பெற்றாலும் பனைத்துணையாகக் கொள்ளும் பண்பாளர்; தமிழ்வழிக் கல்விக்குத் தெருவிலிறங்கித் தமிழ் முழக்கம் செய்தவர்; கொடை விளக்கு வழங்கிய மாமலர்; தில்லையம்பலத்தில் திருமுறை முழங்க வேட்கையுற்றவர்; கல்லாத இனத்தைக் கற்க வைத்தவருக்குப் பாடாண் திணை பாடிய பாவலர்; வீடும் கொடுத்த விழுச்செல்வரைப் பாட்டு மாளிகையில் படிமமாக்கிக் காட்டியவர். பண்டிதமணியாரின் புலமைப் பிறங்கடை இருவருள் ஒருவர்; தமிழ்ப்பகையை எதிர்த்து நின்ற அரிமா; பார் காத்தவரையும் பயிர் காத்தவரையும் போற்றும் உலகில் பைந்தமிழ் காத்தவரைப் போற்றிய நன்றியாளர்; இவ்வாறு எழுதிக்கொண்டே செல்லலாம் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் தமிழ் வாழ்க்கையை! ஆம். தமிழ் வாழ்க்கை வாழ்ந்தவர்களின் பெருமையை முழுவதும் எழுதும் ஆற்றல் யாருக்கு உண்டு?

வரம்பிலாப் பெருமைகொண்ட தமிழ்த்தாயின் தலைமகன் மூதறிஞர் வசுப. மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு விழா இன்று தொடங்குகின்றது! அரசியல் ஆர்ப்பாட்டத்திலும் மட்டைப்பந்து மாயையிலும் திரைப்படக் கூத்தர்களின் வெட்டுருவக் கூத்துகளிலும் மூழ்கிக் கிடக்கும் இற்றைத் தமிழகத்தாருக்கு அறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் தமிழ்ப்பணிகளையும் தமிழ் வாழ்க்கையையும் எடுத்தியம்புவது எம்மனோர் கடமையாகும்.

. சுப. மாணிக்கம் அவர்கள் மேலைச்சிவபுரி என்னும் சிற்றூரில் வாழ்ந்த வ. சுப்பிரமணியன் செட்டியார்தெய்வானை ஆச்சி ஆகியோருக்கு ஐந்தாவது மகனாக 17. 04.1917 இல் பிறந்தவர். இளம் அகவையில் தம் பெற்றோரை இழந்தவர். பர்மாவில் தம் முன்னையோரின் தொழிலைப் பழகியவர். பொய்சொல்லா மாணிக்கமாகப் பொலிந்தவர். பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களால் அடையாளம் காணப்பெற்று, தமிழறிவு தரப்பெற்றவர். அண்ணாமலை அரசரின் கல்விக்கோயிலில் தம் கல்விப்பணியைத் தொடங்கி, மாணவர்களுக்குத் தமிழ் இலக்கிய அறிவையும், தமிழுணர்வையும் ஊட்டியவர். வள்ளல் அழகப்பர் அவர்களின் கல்வி நிறுவனத்தில் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தவர். நேர்மை, எளிமை இவற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர். தம் விருப்பத்திற்கு மாறாக நடந்துகொள்பவர்கள் குருதியுறவு உடையவர்கள் எனினும் பொறுத்துக்கொள்ளாத மாசில் மனத்தவராக வ. சுப. மாணிக்கம் விளங்கியவர். தம் குறிக்கோள் வாழ்க்கையை விருப்பமுறியாக(உயில்) எழுதிவைத்துப் பின்னாளில் தம் விருப்பம் தொடர வழிவகை செய்தவர். எந்த நிலையிலும் அறத்திற்குப் புறம்பாகச் செயல்படாத மாசில் மனத்தினர்; நெறியினர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தராக இருந்து, மூத்த அறிஞர் பெருமக்களைத் தமிழாராய்ச்சிக்குப் பணியமர்த்தித் தமிழாராய்ச்சியை நிலைநிறுத்தியவர்.

தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள், திருவாசகம், கம்ப இராமாயணம், பாரதியத்தில் தனித்த ஈடுபாடு கொண்டவர். பழைமைப் பிடிப்பும் புதுமை வேட்கையும் நிறைந்தவர். தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்தி இயக்கம் கண்டவர். தமிழ் எழுத்துக்களைத் திருத்தம் என்ற பெயரில் குலைக்க  அறிவியல், தொழில்நுட்பப் போர்வை போர்த்தி ஒரு குழு திரிந்தபொழுது அதனை வன்மையாகக் கண்டித்து எழுதியவர். ஆய்வு நூல்கள், படைப்பு நூல்கள், திறன் நூல்கள், புத்தாக்கச் சொற்கள் தந்து, தமிழ் வாழ்க்கை வாழ்ந்து தம் வாழ்நாளுக்குப் பிறகும் தமிழுக்குப் பெருமைசேர்க்கும் ஆக்கங்களைத் தந்த மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்; ஒவ்வொரு தமிழமைப்புகளின் கடமையாகும்.

அரசியல் செல்வாக்கோ, மற்ற பின்புலங்களோ இல்லாத மூதறிஞரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கற்றறிந்தார் கடமையாகும். அவர் படைப்புகளை மதிப்பிட்டுத் திறனாய்வு நூல்களை எழுதி, வெளியிடுவது எழுத்தாளர் கடமையாகும். மாணிக்கனாரின் வெளிவராத படைப்புகளைத் திரட்டித் தொகுத்து மாணிக்கப் புதையலை வெளிக்கொணர்வது உடன்பழகியோரின் பணியாகும்.  அவர் விரும்பிச் செய்த தமிழ்வழிக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த அரசுக்கு வேண்டுகோள் வைப்பது இயக்கம் நடத்துவோரின் தலையாப் பணியாகும். கோயில்களில் நாள்தோறும் திருமுறைகளைத் தமிழில் ஓதி, வழிபாடு நிகழ்த்துவதற்குக் குரல்கொடுப்பது இறையீடுபாட்டளர் கடமையாகும். மூதறிஞருக்குத் திருவுருவச் சிலையமைத்து அவர் நினைவுகளைப் போற்றுவதும், அவர் நினைவு என்றும் நின்று நிலவப் பணிபுரிவதும் அரசினரின் கடமையாகும். பல்கலைக்கழகங்கள், தமிழாய்வு நிறுவனங்கள் வ.சுப. மா. குறித்த ஆய்வரங்குகளையும், அறக்கட்டளைப் பொழிவுகளையும் நடத்தி அவருக்குப் பெருமை சேர்ப்பதைத் தலையாயப் பணியாக்குதல் வேண்டும்.


செம்மல் வ.சுப. மாணிக்கம் பிறந்த நாளில் அவர் கொள்கைளை நெஞ்சில் ஏந்துவோம்!

செவ்வாய், 1 ஜனவரி, 2013

தமிழ் இணைய மாநாடு நிறைவு விழா




 மக்கள் அரங்கில் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் நிறுவுரையாற்றுதல். அருகில் மு.மணிவண்ணன், அ.இளங்கோவன், வள்ளி ஆனந்தன், ப.அர. நக்கீரன், மு.இளங்கோவன்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 11 வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் 2012, திசம்பர் 28,29,30 ஆகிய மூன்று நாள்களும் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. மக்கள் அரங்கின் பொறுப்பாளராக உத்தமம் அமைப்பினர் எனக்கு வாய்ப்பு நல்கினர். நண்பர்களின் துணையுடன் நானும் சிறப்பாக உழைத்து மக்கள் அரங்கைத் திறம்பட நடத்திக் கொடுத்தேன்.

மாநாட்டுக்கு முதல்நாள் இலங்கையிலிருந்து திரு. சரவணபவன் அவர்கள் புதுச்சேரிக்கு வந்தார்கள். இருவரும் பகலுணவுக்குப் பிறகு நம் இல்லத்திலிருந்து மாலையில் சிதம்பரம் புறப்பட்டோம். இரவு எங்களுக்கு உரிய அறை சிறப்பாக ஒதுக்கப்பட்டிருந்தது. இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் முனைவர் ப.அர. நக்கீரன் அவர்களுடன் தங்கும் வாய்ப்பு அமைந்தது. மனம் திறந்து உரையாடினோம்.

மலேசியாவிலிருந்து நண்பர் திரு. முனியாண்டி அவர்களும் வந்து இணைந்துகொண்டார். திருச்சியிலிருந்து திரு. மணிகண்டன் அவர்களும் வந்தார். இரவு ஒருசுற்றுப் பேச்சுக்குப் பிறகு அனைவரும் ஓய்வெடுத்தோம்.

காலையில் மாநாட்டுக்கு ஆயத்தமானோம். உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்த நண்பர்களைக் கண்டு அளவளாவினோம். மாநாடு காலை 10. 15 மணிக்குப் புதிய அரங்கில் சிறப்பாகத் தொடங்கியது. (இது பற்றி முன்பே பதிந்துள்ளேன்). இரண்டாம் நாள் நிகழ்வில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்  சிதம்பரம் தலைமையில் திரு. செல்வமுரளி இணைய வானொலி, இணையத் தொலைக்காட்சி, மின்பலகை பற்றி சிறப்பான அறிமுகவுரையாற்றினார். பலரும் பயன்பெற்றனர். திரு.குணசீலன், திரு.பழனி, திருவள்ளுவன், சிதம்பரம் ஆகியோர் காலை அமர்வில் உரை வழங்கினர்,

பிற்பகல் அமர்வில் பேராசிரியர் சேம்சு தலைமையில் பேரா. காமாட்சி, துரையரசன், பேராசிரியர் சுப்பிரமணி, திரு. சையத் ஆகியோர் கட்டுரை வழங்கினர். இதில் பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப்பிரமணி அவர்களின் கட்டுரை சமூக வலைத்தளங்கள் குறித்து அமைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது. மாலையில் பேராசிரியர் இளம்பரிதி அவர்கள் விக்கிப்பீடியாவில் படங்கள் இணைப்பது குறித்து அறிமுகவுரையாற்றினார்.

மூன்றாம் நாள் நிகழ்வில் (30.12.2012)  காலை இளம்பரிதி அவர்கள் விக்கிப்பீடியாவில் படம் இணைப்பது குறித்து விரிவான உரையாற்றினார். தஞ்சாவூர், தாராசுரம், கங்கைகொண்டசோழபுரம் கோயில்களின் படங்களை இணைந்ததைப் பரிதி விளக்கிப் பேசினார். விக்கியில் தமக்கு அமைந்த பங்களிப்புப் பணிகளை நினைவுகூர்ந்தார்.

பரிதியை அடுத்து தகவல் உழவன் அவர்கள் விக்கிப்பீடியாவிலும் விக்சனரியிலும் சொற்களை இணைப்பது குறித்து விரிவான காட்சி விளக்கம் கொண்டு அமைந்த உரையை வழங்கினார்.

30.12.2012 பகல் 12 மணிக்கு நிறைவு விழா தொடங்கியது. கண்காட்சிப் பொறுப்பாளர் வள்ளி ஆனந்தன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மணி. மணிவண்ணன் தலைமையில் நிறைவுவிழா நடைபெற்றது. திரு. அ. இளங்கோவன். முனைவர் ப. அர. நக்கீரன் வாழ்த்துரை வழங்கினர். எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ நிறைவுரை வழங்கி ஒவ்வொரு மாநாட்டிலும் மக்கள் அரங்கம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி விரிவான உரை வழங்கினார். நிறைவில் முனைவர் மு.இளங்கோவன் (மக்கள் அரங்கப் பொறுப்பாளர்) நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சிக்குத் தினமலர், தினமணி, இந்தியன் எக்சுபிரசு, தினகரன், தினத்தந்தி, விகடன், தட்சு தமிழ், தமிழன் வழிகாட்டி, புதியதலைமுறைத் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி, செயா தொலைக்காட்சி, தினத்தந்தி தொலைக்காட்சி உள்ளிட்ட பல ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துச் செய்தியை உடனுக்குடன் வெளியிட்டன. அனைத்து ஊடகத்துறை நண்பர்களுக்கும் நன்றி.

மக்கள் அரங்கிற்கு வருகை தந்து தொடங்கிவைத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மருத்துவர் மா. இராமநாதன் அவர்களுக்கும், நிறைவு விழாவில் கலந்துகொண்டு நிறைவுரையற்றிய முனைவர் மு. பொன்னவைக்கோ (துணைவேந்தர், எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம்) அவர்களுக்கும் நன்றி. அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிய அறிஞர் பெருமக்களுக்கும், கட்டுரை வழங்கியவர்களுக்கும்  பார்வையாளர்களாகப் பங்கேற்றவர்களுக்கும் நன்றி. உத்தமம், கணித்தமிழ்ச்சங்கம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்ந்த பொறுப்பாளர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் நன்றி.


மக்கள் அரங்கில் கலந்துகொண்ட அறிஞர் பெருமக்கள்



 விக்கி பங்களிப்பாளர் தகவல் உழவன் உரை



பேராசிரியர் தமிழ்ப்பரிதி உரை




பேராசிரியர் க.துரையரசனுக்குச் சான்றிதழ் வழங்குகின்றார் பேராசிரயர் சேம்சு


மக்கள் அரங்கிற்கு வருகை தந்த அ.க.இராமகிருட்டின்(பெங்களூர்)



மணி.மணிவண்ணன்(தலைவர்,உத்தமம்) மற்றும் குழுவினர்




வெள்ளி, 28 டிசம்பர், 2012

தமிழ் இணைய மாநாடு- முதல்நாள் நிகழ்வுகள்




முனைவர் மா.இராமநாதன் அவர்கள் தமிழ் இணைய மாநாட்டு ஆய்வுக்கட்டுரை மலர் வெளியிடுதலும் முனைவர் செ.வை.சண்முகம் அவர்கள் பெறுதலும்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று(28.12.2012) காலை 10.15 மணிக்கு உலகத் தமிழ் இணைய மாநாடு தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் அரசர் வாழ்த்தும் இசைக்கப்பட்டன. மாண்புமிகு துணைவேந்தர் முனைவர் மா.இராமநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றி  மாநாட்டைத் தொடங்கிவைத்தார். 

மொழியியல் துறைப் பேராசிரியர் முனைவர் மா. கணேசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். உத்தமம் அமைப்பின் தலைவர் மணி. மணிவண்ணன் அவர்கள் தலைமையுரையாற்றினார். துணைவேந்தர் முனைவர் மா.இராமநாதன் அவர்கள் மாநாட்டின் தொடக்கவுரையாற்றி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர்ந்தார். மாநாட்டு மலரினைத் துணைவேந்தர் வெளியிட முனைவர் செ.வை.சண்முகம் பெற்றுக்கொண்டார்.

திரு.சிவாப்பிள்ளை(இலண்டன்), திரு.மணியம்(சிங்கப்பூர்), திரு.அனுராஜ் (இலங்கை),முனைவர் இல.இராமமூர்த்தி(மைசூர்), திரு.இளந்தமிழ் (மலேசியா) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடக்கவிழாவிற்குப் பிறகு உலகத் தமிழ் இணையமாநாட்டின் கண்காட்சியையும், மக்கள் அரங்கத்தையும் துணைவேந்தர் மருத்துவர் மா.இராமநாதன் அவர்கள் திறந்துவைத்தார். திரு.அ.இளங்கோவன், வள்ளி மென்பொருள் நிறுவன உரிமையாளர் ஆனந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பொது அமர்வில் அடோபி நிறுவனத்தின் பொறுப்பாளர் திரு மோகன் கோபால கிருட்டிணன் அவர்கள் மையக்கருத்துரை வழங்கினார்.  மக்கள் அரங்கில் முனைவர் ப.அர.நக்கீரன் அவர்கள் தலைமையில் முனைவர் மு.இளங்கோவன் கட்டுரை படித்தார். அதனைத் தொடர்ந்து துரை. மணிகண்டன், முனைவர் மு.பழனியப்பன், பேராசிரியர் சீதாலெட்சுமி, திரு. யோகராஜ் ஆகியோர் கட்டுரை வழங்கினர். ஆய்வரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கட்டுரைகளை வழங்கினர். 

உலகத் தமிழ் இணைய மாநாட்டுக்குத் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்னாடகா சார்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இலண்டன் உள்ளிட்ட அயல்நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டனர்.

கண்காட்சி, மக்கள் அரங்கு, ஆய்வரங்கு நாளை(29.12.2012) காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை தொடர்ந்து நடைபெறும்.  


துணைவேந்தர் மா.இராமநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றுதல்



உலகத் தமிழ் இணைய மாநாட்டு மேடையில் அறிஞர்கள்



மக்கள் அரங்கிற்கு வருகை தந்த துணைவேந்தர் மா.இராமநாதன் அவர்களுடன் மு.இளங்கோவன்,அ.இளங்கோவன், மா.கணேசன், துரை. மணிகண்டன்,  வள்ளி ஆனந்தன், ப.அர.நக்கீரன்




தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குநர் முனைவர் ப.அர.நக்கீரன் அவர்கள் தலைமையுரை, மு.இளங்கோவன்(கட்டுரையாளர்)


பொறியாளர் வள்ளி ஆனந்தன் அவர்களுடன் மு.இளங்கோவன்

சனி, 29 செப்டம்பர், 2012

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய மாநாடு- 2012




உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பின் சார்பில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் உயராய்வு மையத்தில் பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2012 திசம்பர் மாதம் 28 முதல் 30 வரை மூன்று நாள்டைபெற உள்ளது.

உத்தம நிறுவனம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு பன்னாட்டு அமைப்பு ஆகும்.

கணினி, இணையம் ஆகியன தொடர்பாகத் தமிழின் பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் உலகெங்கிலும் தமிழர்களிடையே பரவும் வகையில் உலகத் தமிழ் இணைய மாநாடுகளைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உத்தம நிறுவனம் நடத்திவருகிறது. உத்தம நிறுவனம் உலகத் தமிழர்களைக் கணினி வாயிலாக இணைப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இது வரை ஏழு மாநாடுகளை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, ஆகிய நாடுகளில் முன்னணிப் பல்கலைக் கழகங்களோடு இணைந்தும், தமிழகத்தில் மூன்று மாநாடுகளைத் தமிழக அரசின் முழு ஆதரவோடும் உத்தம நிறுவனம் நடந்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தொடர்பான கணினி சார் மொழியியல் துறையில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் உயராய்வு மையத்தில் வரும் திசம்பர் 28 முதல் 30 வரை உலகத் தமிழ் இணைய மாநாடு 2012” ஐ நடத்த உத்தமத்தின் செயற்குழு முடிவெடுத்துள்ளது. 

அண்ணாமலைப் பல்கலைக் கழக மொழியியல் துறைப் பேராசிரியர் மா. கணேசன் அவர்கள், மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமை தாங்கவிருக்கிறார்.  உத்தமம் அமைப்பின் துணைத்தலைவர் திரு. இளந்தமிழ்(மலேசியா) அவர்கள் மாநாட்டின் பன்னாட்டுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

முந்தைய இணைய மாநாடுகளைப் போலவே வரும் 2012 மாநாடும் கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் என்று மூன்று முனைகளில் செயல்படும். ஆய்வுக் கருத்தரங்கு நிகழ்வுகள் திசம்பர் 28,29 ஆகிய இரண்டு நாட்களில் நடக்கவிருக்கிறது. 

கண்காட்சியும்  மக்கள் கூடமும் திசம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாள்களில் நடக்கும். மாநாட்டுக்குப் பதிவு செய்த பேராளர்கள் மட்டுமே கருத்தரங்கு மற்றும் பயிலரங்கில் கலந்து கொள்ள இயலும். கண்காட்சியிலும், சமூகக் கூடத்திலும் பொதுமக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம்.

கருத்தரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கணினித்தமிழ் குறித்த தங்களின் ஆய்வுகளை ஏனைய ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. 

மாநாட்டின் கருத்தரங்கக் குழுவுக்கு முனைவர் பத்ரி சேஷாத்ரி அவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ளார்.  கருத்தரங்குக் குழு மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகளைத் தேர்வு செய்வதுடன், கருத்தரங்குகளைச் செவ்வனே நடத்தும் பொறுப்பையும் வகிக்கும்.

 இவ்வாண்டின் கருத்தரங்குக்குச் செல்பேசி மற்றும் பலகைக் கணினிகளில் தமிழ்க் கணிமைஎன்ற  தலைமைக் கருத்தை ஒட்டிய ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.  இது தவிர, கணினி சார் மொழியியல், திறவூற்று மென்பொருள் ஆய்வுகள், மின்வணிக முறைகள், கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் போன்ற கணித்தமிழ் வளர்ச்சிக்குப் பயன் தரும் பல்வேறு ஆய்வுத் துறைகளிலும் கட்டுரைகளை  அனுப்பலாம்.

இணைய மாநாடுகள் ஆய்வாளர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், மக்கள் கூடத்தின் மூலம் கணித்தமிழ் நுட்பங்களைப் பரப்புதல், கணித்தமிழ் மென்பொருட்கள் மற்றும் கருவிகளைக் கண்காட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  சிதம்பரத்தில் இம்மாநாட்டை நடத்துவதால் கண்காட்சி, மற்றும் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் வளர்ச்சி பற்றிய செய்திகளை ஊர்ப்புற மக்களிடையே எடுத்துச்செல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

தமிழ்நாடெங்கும் கண்காட்சிகள் நடத்திக் கணித்தமிழ் மென்பொருள்களைப் பற்றிய செய்திகளைப் பரப்பி வந்திருக்கும் கணித்தமிழ்ச் சங்கம் இம்மாநாட்டின் கண்காட்சி அரங்கைப் பொறுப்பேற்று நடத்தவிருக்கிறது.  கண்காட்சி அரங்குக் குழுவுக்குக் கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. வள்ளி ஆனந்தன் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்று நடத்தவிருக்கிறார். 

இவ்வாண்டு மாநாட்டின் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் நுட்பங்களை இத்துறையின் வல்லுநர்கள் மாணவர்களிடையே பரப்புதல், பயிலரங்குகள் நடத்திக் கணித்தமிழின் நுட்பங்களைப் பயிற்றுவித்தல், கணினி வழியாகக் கற்கும் மற்றும் கற்பிக்கும் பல்வேறு முறைகளை ஆசிரியர்களிடம் பரப்புதல் போன்ற முயற்சிகளைச் செய்ய உள்ளனர்.

கணித்தமிழ்ப் பயிலரங்குகளைத் தமிழ்நாடு மட்டுமல்லாமல், மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நடத்தி வந்திருக்கும் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் மக்கள்கூடக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.

தமிழ் இணைய மாநாட்டுக்கு உரிய ஆய்வுச் சுருக்கங்களை அனுப்பவேண்டிய கடைசி நாள் 20 அக்டோபர் 2012 ஆகும். மாநாட்டுக் குழு ஆய்வுச் சுருக்கங்களைப் பரிசீலித்து மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களுக்கு 10 நவம்பர் 2012-நாளுக்குள் தகவல் தெரிவிக்கப்படும்.


கீழ்க்கண்ட தலைப்புகளில் மாநாட்டின் அரங்குகள் நடைபெற உள்ளது:

செல்பேசிகள் மற்றும் பலகைக் கணினிகளில், முக்கியமாக ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல்.

மின் புத்தகங்கள், மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவர உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.

திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல்.
இயன்மொழிப் பகுப்பாய்வு: பிழைதிருத்தி, தமிழ் எழுத்துரு பகுப்பி, ஒலி உணர்தல், தேடுபொறிகள், இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்றவை.

தமிழ் இணையத்தின் தற்போதைய நிலை: வலைப்பதிவு, சமூக வலைத்தளங்கள், விக்கிப்பீடியா, குரல் வலை போன்றவை.

தமிழ் தரவுத்தளங்கள்.

கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்
தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்

கணினி வழி தமிழ்மொழி பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றிய ஆய்வுகள்.

கட்டுரைகளை மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பவேண்டும். ஆய்வுச் சுருக்கங்களும் இறுதிக் கட்டுரையும் திருத்தக்கூடிய வடிவத்தில் மட்டுமே அனுப்பப்படவேண்டும். இவை உரைக் கோப்புகளாக, எச்.டி.எம்.எல் வடிவில், மைக்ரோசாஃப்டு வேர்டு அல்லது ஓப்பன் ஆஃபீஸ் கோப்புகளாக இருக்கலாம். பி.டி.எஃப் போன்ற திருத்தமுடியாத வடிவங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. கட்டுரைகள் ஆங்கிலத்திலோ தமிழிலோ அல்லது இரு மொழிகளும் கலந்த வகையிலோ இருக்கலாம். தமிழில் அல்லது இருமொழியில் இருந்தால், யூனிகோட் குறியீட்டில் மட்டுமே இருக்கவேண்டும். பிற குறியீடுகளைக் கொண்டு அனுப்பப்படும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மாநாட்டு மலர் அச்சு வடிவிலும் மின் வடிவிலும் வெளியிடப்படும். ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாநாட்டில் நேராகப் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே மாநாட்டு மலரில் சேர்த்துக்கொள்ளப்படும். கட்டுரைகளை அனுப்புவோர் நேராக மாநாட்டுக்கு வந்து தங்களின் கட்டுரைகளைப் படிக்கவேண்டும். மாநாட்டுக்கு வர இயலாதோரின் கட்டுரைகளை மாநாட்டுக்குழு ஏற்றுக்கொள்ளாது.

(4 அளவில்) இரு பக்கங்களுக்கு மிகாது கட்டுரைச் சுருக்கங்களை மாநாட்டு நிகழ்ச்சிகள் குழுவுக்கு ti2012-cpc@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். கட்டுரை வந்து சேர்ந்தது குறித்து உடனடியாகக் கட்டுரையாளர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும்.

மாநாடு குறித்த கூடுதல் விவரங்களுக்குக் கீழ்க்காணும் மின்முகவரிகளில் மாநாட்டுக் குழுவினருடன் தொடர்பு கொள்ளலாம்.

ti2012@infitt.org 

ed@infitt.org 

chair@infitt.org


http://www.infitt.org என்ற உத்தம நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் இம்மாநாடு குறித்தான செய்திகளை அவ்வப்போது வெளியிட உள்ளனர்.

 மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் வருகையை உத்தமம் அமைப்பின் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளும்படி உத்தம நிறுவனத்தின் தலைவர்  மணி மு. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

புதன், 26 அக்டோபர், 2011

முனைவர் ஆறு.அழகப்பனார்…


ஈர நினைவுகள் முனைவர் ஆறு.அழகப்பனார்

  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வரலாறு இருப்பதுபோல் அதில் பணிபுரிந்த தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ஆறு.அழகப்பனாருக்கும் ஒரு வரலாறு உண்டு. பல்கலைக் கழகத்தின் மாணவராகவும் ஆசிரியராகவும் இருந்து அப்பல்கலைக்கழகத்தின் பெருமைக்குப் பணிபுரிந்த நம் பேராசிரியரின் பணிகள் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்கனவாகும்.

  பேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்கள் மாத ஊதியத்துடன் நிறைவடையும் பேராசிரியர் அல்லர். செயற்கரும் செயல்களைத் துணிந்து செய்த செயல்மறவர். அண்ணாமலை அரசரின் குடும்பத்திற்கு நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்த பேராசிரியர் அவர்கள் அரசர் குடும்பத்தினரின் குறிப்பறிந்து நடந்து பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்குப் பல பணிகள் புரிந்துள்ளார்.

  பாடம் நடத்துதல் மட்டும் தம் கடமை என்று கருதாமல் தமிழகத்தின் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், அயல்நாடுகளில் வாழும் தமிழ்ப் பற்றாளர்கள் அனைவராலும் போற்றத் தகுந்தவராக விளங்கியவர். பணி ஓய்வுக்குப் பிறகு தம் இயக்கத்திற்கு ஏற்ற இடம் சென்னை என்று தேர்ந்து, விருகம்பாக்கத்தில் தமிழ்ச்சுரங்கம் கண்டு தமிழ் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்.

  தமிழ்வளர்ச்சி, தமிழாராய்ச்சி சார்ந்த கருத்தரங்குகள், நிகழ்வுகள், மாநாடுகள், போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் முன்னின்று பணிபுரிபவர் நம் பேராசிரியர் அவர்கள்.

 திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான் பயின்றுகொண்டிருந்தபொழுது அவர்களின் திருமலைநாயக்கர் நாடகத்தைப் பாடமாகப் பயின்று மகிழ்ந்தவன். அதன்பிறகு குடந்தையில் நடந்த ஒரு கருத்தரங்கில் கண்டு அவர் பேச்சைக் கேட்டு மகிழ்ந்தேன். அதன் பிறகு தொடர்ச்சியாக இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற மாநாடுகளில் ஐயாவைக் கண்டு உரையாடுவது, புத்தகக் கண்காட்சிகளில், இலக்கிய அரங்குகளில் கண்டு நலம் வினவுவது என் விருப்பமாக இருக்கும்.

  ஆறு.அழகப்பனாரின் தமிழ்ப்பணிகளையும் செயல்திறனையும் அவர்களின் மாணவரான பேராசிரியர் ஒப்பிலா.மதிவாணன் அவர்கள் வழியாக அறிந்து மகிழ்பவன். பேராசிரியரின் மாணவர்கள் பலரும் எனக்கு ஆசிரியர்களாக அமைந்ததால் நானும் பேராசிரியர் அவர்களுக்கு மாணவ வழி மாணவனாவேன். பேராசிரியர் அவர்கள் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் தொடக்க காலத்திலிருந்து பொறுப்புகளில் அமர்ந்தும் அமராமலும் பணிபுரிபவர். அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் நடந்தாலும் தாம் சொல்ல வேண்டிய கருத்துகளை அரசுக்குச் சொல்லத் தயங்காதவர். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் இன்றும் இணைந்து பணிபுரிகின்றார்.

  அண்மையில் ஆறு.அழகப்பனார் அவர்கள் வரைந்த ஈர நினைவுகள் என்னும் நூலைக் கற்கும் வாய்ப்பு அமைந்தது. முப்பது தலைப்புகளில் தம் மனத்துள் தங்கிய முதன்மை நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார். முப்பது தலைப்புகள் என்றாலும் முந்நூறுக்கும் மேற்பட்ட அரிய செய்திகள் அக்கட்டுரைகளில் உள்ளன. இன்னும் ஈர நினைவுகள் தொடராக வெளிவர வேண்டும் என்பதே எம் போல்வாரின் விருப்பமாகும். ஈர நினைவுகளில் ஆறு.அழகப்பனாரின் தன்வரலாற்றுக்கூறுகள் தெரிகின்றனவே தவிர அவை யாவும் தமிழக வரலாறாக மிளிர்கின்றன.

ஈர நினைவுகள் நூலில் உள்ள செய்திகள்…

 பேராசிரியர் அ.சிதம்பரநாதனார் மேலவை உறுப்பினர் ஆனமை, அ.சிதம்பரநாதனாரிடம் தமிழ் கற்கத் தமிழ்நாட்டு மாணவர்கள் விரும்பியமை, தெ.பொ.மீ.யின் பண்புநலம், புலமைவளம், இந்தி எதிர்ப்புப்போரில் இராசேந்திரன் என்ற மாணவருடன் நெடுமாறன் என்ற மாணவருக்கும் குண்டுக்காயம் ஏற்பட்டமை, தந்தை பெரியாரைத் தமது இல்லத்தில் தங்க வைத்தமை,நாடகக் கலைஞர் நவாபு இராசமாணிக்கத்துக்கு அறக்கட்டளை தொடங்கியமை உள்ளிட்ட செய்திகளை அறியும்பொழுது புதிய செய்திகளை அறிந்தவர்களாகின்றோம்.

  அண்ணாமலை அரசரின் படம் பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழக அலுவலர் இல்லங்களிலும் இடம்பெறப் பணிபுரிந்தமை, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டத்தால் அரசர் முத்தையா செட்டியார் அண்ணாமலை நகரில் தங்கமுடியாமல் பூம்புகாரில் தங்கியமை, சமூகப் பணிகளுக்கு மாத ஊதியம் முழுவதையும் வழங்கும் ஆறு.அழகப்பனாரின் இயல்பு, மேனாள் முதல்வர் ம.கோ.இராமச்சந்திரன் அவர்களுடனான நட்பு, பாவலரேறு பெருஞ்சித்திரனாருடன் அமைந்த தொடர்பு, ஆறு.அழகப்பனாரின் தமிழர் உடை தாங்கும் நோக்கு, உயர்துணைவேந்தராக விளங்கியமை, “அழகப்பனைக் கைது செய்” என்று ஊழியர்கள் முழக்கமிடும் அளவுக்குப் பல்கலைக்கழகத்துக்குச் சார்பாக நின்றமை, ம.பொ.சி.அவர்களுக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கியமை அறியும்பொழுது ஒரு தமிழ்ப்பேராசிரியரின் செயல் ஆளுமை நமக்குப் புலனாகின்றது.

  ஆப்பிரிக்காவில் வாழ்ந்த பக்கிரியா பிள்ளை சென்னையில் இருந்த தம் வீட்டை விற்றுத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழக, கல்லூரிகளுக்கு அறக்கொடைக்கு வழங்கிய வரலாறு, நாடகக் கலைக்காகக் காமராசர் ஒரு மாணவர்க்கு வேலை கிடைக்க உதவியமை, திருமலை நாயக்கர் நாடகம் படமாக்கும் முயற்சி தோல்வி, நாடகக் கனவு, பர்மாவுக்குச் சென்றுஉரையாற்றியதால் அங்கு இராணுவ வீரர்களால் வெளியேற்றப்பட்டமை, இலங்கைப் பயணம், சிங்கப்பூர் செலவு, மலேசியாவில் டத்தோ சாமிவேலு அவர்களுக்கு முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதனார் அவர்களைக் கொண்டு சிறப்பு செய்தமை, காசியில் திருக்குறள் மாநாடு நடத்தி வடநாட்டாருக்குத் திருக்குறள் சிறப்பு உணர்த்தியமை, நளினி விடுதலைக்குக் குரல்கொடுத்த பாங்கு, தமிழ்த்தாய்க்குச் சிற்பி கொண்டு சிலையும் ஓவியர் கொண்டு படமும் உருவாக்கிய வரலாறு யாவும் ஆறு.அழகப்பனாரின் தமிழ்ப்பற்றை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன.

 விருகம்பாக்கத்தில் தம் இல்லத்து முகப்பில் திருவள்ளுவர் சிலை நிறுவியமை, குடியரசுதலைவர் மாளிகைக்குத் தானியில் சென்று குடியரசுத்தலைவரைக் கண்டு உரையாடிப் பாராட்டு தெரிவித்தமை யாவும் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் முயற்சியாக இருப்பதை இந்த நூலில் கண்டு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

 ஈர நினைவுகள் என்னும் பெயரில் வெளிவந்துள்ள இந்த நூல்போல் பேராசிரியர் இன்னும் பல நினைவுகளைத் தொடர்நூல்களாக வெளியிட வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பாகும்.

பேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்களின் தமிழ்வாழ்க்கை

 பேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்கள் சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடியில் வாழ்ந்த திருவாளர் ஆறுமுகம் செட்டியார், உண்ணாமுலை ஆச்சியார் அவர்களுக்குத் திருமகனாக 10.08.1937 இல் பிறந்தவர். 1953-54 இல் அண்ணாமலை நகருக்குப் படிப்பதற்கு வந்த பேராசிரியர் அவர்கள் 1955-57 இல் இண்டர்மீடியட் வகுப்பிலும், 1957-60 இல் முதுகலை வகுப்பிலும் பயின்றவர். 1960 முதல் 1998 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், துணைப்பேராசிரியர், இணைப்பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர், புலமுதன்மையர், பதிப்புத்துறைப் பொறுப்பாளர் என்று பல நிலைகளில் பணிபுரிந்தவர். சென்னையில் அமைந்துள்ள தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தில் இயக்குநராகவும் பணிபுரிந்தவர்.

 பேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்கள் தெ.பொ.மீ, அ.சிதம்பரநாதனார், மகாவித்துவான் தண்டபாணி தேசிகர், இ்லால்குடி நடேச முதலியார், க.வெள்ளைவாரணனார், மு.அருணாசலம் பிள்ளை, வித்துவான் முத்துசாமி பிள்ளை, மு.சண்முகம் பிள்ளை, செ.வை.சண்முகம், உலக ஊழியர், கே.என்.சிந்தாமணி, மு.இராமசாமி பிள்ளை, மு.அண்ணாமலை, மெ.சுந்தரம், புலவர் தில்லைக் கோவிந்தன், டாக்டர் ஆறுமுகனார், மு.அருணாசலம், வி.மு.சோமசுந்தரம் பிள்ளை உள்ளிட்ட அறிஞர் பெருமக்களிடம் தமிழ் பயின்ற பெருமைக்குரியவர்.

இவர் இயற்றிய நூல்களுள் குறிப்பிடத்தக்கன:

1. திருமலை நாயக்கர்
2. நாடகச் செல்வம்
3. திருவள்ளுவர் நாடகம்
4. எள்ளல் நாடகம்
5. கரிவேப்பிலை
6. நாட்டுப்புறப்பாடல்கள் திறனாய்வு
7. தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்(முனைவர் பட்ட ஆய்வேடு)
8. தாலாட்டுகள் 500
9. பெரியார் ஈ.வே.இரா (சாகித்ய அகாதெமிக்காக)
10. உ.வே.சா.சொல்லும் சுவையும் (உ.த.நி.)
11.இராசா சர் முத்தையா செட்டியார் (வானதி பதிப்பகம்)

 தமிழக அரசின் கலைமாமணி விருது(1981), திருவள்ளுவர் விருது(2004-05)
பெற்றவர்.

 10.08.2011 முதல் 10.08.2012 வரை பேராசிரியர் ஆறு.அழகப்பனாரின் பவள விழா தமிழகம் முழுவதும் அவர்தம் மாணவர்களால் கொண்டாடப்படுகின்றது.

தொடர்புக்கு:

பேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்கள்,
தமிழ்ச்சுரங்கம்
50. வெங்கடேச நகர் முதன்மைச்சாலை,
விருகம்பாக்கம், சென்னை- 600 092
செல்பேசி: + 91 9444132112

சனி, 30 ஜனவரி, 2010

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே நடந்தது...

தமிழ்வெளி திரட்டியை அறிமுகப்படுத்தும் நான் 

ஓராண்டுக்கும் மேலாகத் திட்டமிட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துவதற்கு ஏற்பாடு செய்தோம். தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் பழ.முத்துவீரப்பனார் அவர்களின் பெரும் முயற்சியிலும் திட்டமிடலிலும் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வ.செயதேவன் அவர்கள் கணிப்பொறி, இணையம் பயன்படுத்தி ஆய்வு செய்யும் பேராசிரியர்களுள் குறிப்பிடத் தகுந்தவர். எனவே அவர்களை வாழ்த்துரைக்க அழைக்க முன்பே முடிவு செய்திருந்தோம். மேலும் கணினி, இணையத்துறையில் தொழில்நுட்பம் தெரிந்துகொண்டு அடக்கமாகப் பணிபுரிபவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்களும் முன்பே பல பயிலரங்குகளில் கலந்துகொண்டு எனக்கு ஒத்துழைப்பு நல்கியவர்களுமான தமிழ்நிலவன், முரளி, ஒரிசா பாலு, விசயகுமார் (சங்கமம் லைவ்) ஆகியோர்கள் பங்குபெற்றால் நிகழ்ச்சியைச் சிறப்பாக அமைக்கலாம் என்று பேராசிரியரிடம் தெரிவித்து இசைவு பெற்றேன். அனைவருக்கும் எழுதியதும் அனைவரும் வருவதாக ஒத்துக்கொண்டனர். இது நிற்க. 

 இப்பயிலரங்கச் செய்தி பல்வேறு வலைப்பதிவர்களாலும், இணையத் தளங்களாலும் உலகிற்கு அறிவிக்கப்பட்டது. தமிழ்வெளி திரட்டி தம் முகப்புப் பக்கத்தில் வைத்து நிகழ்ச்சி சிறக்க உதவியது. மேலும் தட்சு தமிழ்,பதிவுகள்(கனடா) சென்னை ஆன்லைன் உள்ளிட்ட இதழ்கள் தங்கள் பக்கங்களில் செய்திகளை வெளியிட்டன. இணையத்துறையில் சிறு பயன்பாட்டு முயற்சி நடந்தாலும் ஓடிச்சென்று பாராட்டும் இயல்புகொண்ட கணித்தமிழார்வலர்கள் பலரும் தனிமடலிலும் குழு விவாதங்களிலிலும் வாழ்த்தினர். 

  29.01.2010 இரவு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லத்தில் தங்கிக்கொள்ள எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெங்களூரிலிருந்து தமிழ்நிலவனும், கிருட்டினகிரியிலிருந்து செல்வமுரளியும். சென்னையிலிருந்து பேராசிரியர் செயதேவனும், பாலு அவர்களும் இரவு வந்துவிட்டனர். நான் மட்டும் புதுச்சேரியிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு காலை 8 மணிக்குத் தில்லையை அடைந்தேன். பாலு அவர்கள் திருமுதுகுன்றம் சென்று அங்கிருந்து சில வரலாற்று முதன்மையான இடங்களைப் பார்வையிட்டபடி தில்லைப் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து சேர்ந்தார். நானும் புலவர் வி.திருவேங்கடமும் (அகவை 73). இவர் இப்பொழுது தமிழ்த் தட்டச்சு பழகி இணையத்தில் உலாவருகிறார்). 

 ஒரிசா பாலுவுடன் இணைந்துகொண்டு விருந்தினர் இல்லம் சென்றோம். நிலவன் முரளி, பேராசிரியர் செயதேவன் உள்ளிட்ட அனைவரும் சிற்றுண்டிக்குப் பிறகு விழா நடைபெறும் அரங்கிற்குச் சென்றோம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று (30.10.2010) காலை 10.15 மணிக்குத் தொடக்கவிழா எளிமையாக நடந்தது. 

 தமிழ்த்துறையின் சார்பில், பொறியியல் கல்லூரியில் உள்ள கணினித்துறை அரங்கில் நடைபெற்ற பயிலரங்கின் தொடக்க விழாவில் தமிழ்த்துறைத் தலைவரும் மொழிப்புல முதன்மையருமான பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழகப் பல்கலைக்கழங்களில் முன்னோடிப் பல்கலைக்கழகமான இங்குத் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுவதால் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கணினி, இணையத்தில் பெரிய அளவில் பங்களிப்பு செய்யமுடியும் எனவும் ஆய்வுத்துறையில் முன்னோடியாக விளங்கமுடியும் என்றும் முத்துவீரப்பன் கூறினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கணினித்துறைத் தலைவர் பேராசிரியர் இராமலிங்கம் அவர்கள் வாழ்த்துரையில் கணினி, இணையத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். 

  சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புநிலைப் பேராசிரியர் முனைவர் வ. ஜெயதேவன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தமிழ் ஆய்வுலகில் ஈடுபடுபவர்களுக்குக் கணினியும், இணையமும் பெரிய அளவில் பயன்படுகிறது என்று கூறியதுடன் சென்னைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள தமிழ்ப் பேரகராதிக்கு உரிய அரிய நூல்கள் சிலவற்றின் விவரங்களை இணையத்தின் வழியாக அறியமுடிந்தது என்று கூறி அனைத்துத் தமிழ் அறிஞர்களும் இணையத்தைப் பயன்படுத்து வேண்டும் என்று வேண்டுகோளை வைத்தார். குறிப்பாக ஈழத்துப்பூராடனாரின் நீரர நிகண்டு, பே.க.வேலாயுதத்தின் சங்கநூற் சொல்லடியம் என்ற இரு அரிய நூல்களைத் தாம் இணையத்தின் வழியாகப் பெற்றதைச் சிறப்பாகக் குறிப்பிட்டார். 

    நான் தமிழ் இணையப் பயிலரங்கம் பற்றிய அறிமுக உரையாற்றினேன். பின்னர் 11 மணிக்குத் தொடங்கிய பயிலரங்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள் ஐம்பதின்மர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். இன்று உள்ளூர் விடுமுறை என்பதாலும் (வடலூர் தைப்பூசம்) சிலர் புத்தொளிப் பயிற்சிக்குச் சென்றதாலும் எண்ணிக்கை அளவுக்குள் இருந்தது. இவர்களுக்குத் தமிழ் இணையம் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் காட்சி வழியாக விளக்கினேன். இதில் தமிழ் 99 விசைப்பலகையின் அமைப்பு, தட்டச்சிடும் முறை, மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், மின்னஞ்சல் செய்வது, உரையாடுவது, வலைப்பூ உருவாக்குவது பற்றி எடுத்துரைத்தேன். நண்பர்கள் முரளியும், நிலவனும் தொழில்நுட்பப் பகுதியைக் கவனித்துக்கொண்டனர். சிறிதும் குறைபாடு இல்லாமல் பயிலரங்கம் நிகழ்ந்தது. 

  தமிழில் புகழ்பெற்ற இணையதளங்களான மதுரைத்திட்டம், தமிழ்மரபு அறக்கட்டளை, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய நூலகம், புதுச்சேரி பிரஞ்சு நிறுவன நூலகம், விக்கிப்பீடியா தளம் உள்ளிட்ட பல தகவல்களை எடுத்துக்காட்டினோம். காந்தளகம் தளம் உள்ளிட்டவற்றை விளக்கினோம். பன்னிரு திருமுறை மிகச்சிறப்பாக அத்தளத்தில் இடம்பெற்றுள்ளதை அவைக்கு நினைவுப்படுத்தினோம். நூலகம் தளம் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களைப் பாதுகாப்பதை எடுத்துரைத்தோம். சுரதா தளத்தின் பன்முகப் பயன்பாட்டை விளக்கினோம். தமிழ் கணினித் துறைக்கு உழைத்த காசி ஆறுமுகம், முகுந்தராசு, கோபி உள்ளிட்டவர்களின் பங்களிப்பை எடுத்துரைத்தோம். தமிழ் விக்கிப்பீடியாவின் அகரமுதலி முயற்சிக்கும் கட்டுரை உருவாக்கத்துக்கும் உழைக்க ஒரு வேண்டுகோள் வைத்தோம். 

  புகழ்பெற்ற எழுத்தாளர்களான மாலன், செயமோகன், இராமகிருட்டினன், பத்ரி இவர்களின் தளங்களை அறிமுகம் செய்தோம். எழுத்துகளை எவ்வாறு ஒருங்குகுறிக்கு மாற்றுவது என்று எடுத்துரைத்தோம். எங்களின் விளக்கவுரைகளைக் கண்டு மகிழ்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியின் கணினித்துறைத் தலைவர் தம் ஆய்வகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான கணிப்பொறிகளைத் தமிழில் தட்டச்சிடும்படியாக மாற்றும்படி ஆணையிட்டார். ஒரு மணிநேரத்திற்குள் அனைத்துக் கணினியும் தமிழ்மயமானது. இன்று தமிழில் வெளிவரும் இணைய இதழ்களை எடுத்துக்காட்டி புகழ்பெற்ற இணைய இதழ்களைக் காட்சிப்படுத்தினோம்.

     தமிழர்கள் உலகத்தை வீட்டில் இருந்தபடியே வலம்வர முடியும் என்று கூறிய நான் கணிப்பொறி,இணையத்தைப் பயன்படுத்த ஆங்கில அறிவு அவசியம் இல்லை என்று கூறியதுடன் தமிழில் அரிச்சுவடி தெரிந்தவர்கள் கூட இணையத்தைப் பயன்படுத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் கூறினேன். வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சார்ந்த ஆய்வாளர்கள் ஒரு செல்பேசியில் ஆயிரம் நூல்களை அடக்கிவைத்துள்ள செய்திகளைப் பயிலரங்கில் எடுத்துக்காட்டி விளக்கினேன். பெங்களூர் பேராசிரியர்கள் தமிழில் தட்டச்சிட்டால் தானே படிக்கும் மென்பொருளை உருவாக்கியுள்ளதையும் எடுத்துரைத்தேன். மாலை அமர்வில் பெங்களூரைச் சேர்ந்த கணினி வல்லுநர் தமிழ் நிலவன், செல்வமுரளி, ஒரிசா பாலு ஆகியோர் இணையதளப் பாதுகாப்பு, இணையத்தில் பணம் சம்பாதிப்பது பற்றி உரையாற்றினர். வலைப்பூ உருவாக்குவது பற்றி விளக்கியதில் நிலவனின் பங்கு மிகுதி. ஒரிசா பாலு தமிழ் ஆய்வுக்குரிய ஆதாரங்கள் உலக அளவில் பரந்து கிடக்கின்றன என்பதைக் காட்சி வழி விளக்கினார். அவரின் விக்கி மேப்பியா விளக்கம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

  ஒரிசா பாலு விளக்கவுரை 

 பல்கலைக்கழகத்தின் மற்ற துறைப் பேராசிரியர்களும் பயிலரங்கில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மாலை ஐந்து மணியளவில் பேராசிரியர் மாலினி அவர்களின் நன்றியுரைக்குப் பிறகு பயிலரங்கம் நிறைவுற்றது. கலைந்துசென்ற பேராசிரியர்கள் மெதுவாகப் பேசியது இவ்வாறு எங்கள் காதில் விழுந்தது. "அடுத்த மாதம் சம்பளத்தில் கணினி வாங்குவதுதான் முதல் செலவு". பார்வையாளர்களாகப் பேராசிரியர் பழ.முத்துவீரப்பன், பேராசிரியர் இராமலிங்கம்

  பேராசிரியர் பழ.முத்துவீரப்பனும் பேராசிரியர் வ.செயதேவனும்

  முனைவர் பழ.முத்துவீரப்பன் வரவேற்புரை 

  பேராசிரியர் மூவேந்தன், பேராசிரியர் மலர்க்கொடி உள்ளிட்டோர் 

பேராசிரியர்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்,சனவரி 30,2010


அழைப்பிதழ்

சிதம்பரம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்த்த அறிவுத் திருக்கோயிலாகும்.அரசர் அண்ணாமலையார் இதனைத் தொடங்கிவைக்க வாழையடி வாழையென இதனை அரசர் குடும்பத்தினர் வளர்த்து வருகின்றனர்.தமிழ் உணர்வு மிக்க மாணவர்களை உருவாக்கிய இந்த நிறுவனத்தின் தமிழியல் துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்துவதற்குரிய வாய்ப்புகளைத் தமிழியல் துறைத்தலைவரும்,புகழ்பெற்ற பேராசிரியருமாகிய முனைவர் பழ.முத்து வீரப்பன் அவர்கள் உருவாக்கினார்.அவர்களின் திட்டமிடலுக்கு ஏற்ப எதிர்வரும் சனவரி 30,காரி(சனிக்)கிழமையன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிலரங்கம் நடைபெறுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் டாக்டர் ம.இராமநாதன் அவர்கள் பயிலரங்கத்தினைத் தொடங்கி வைத்து வாழ்த்துரைக்க உள்ளார்.

பேராசிரியர் பா.பழனியப்பன்(முதன்மையர்,பொறியியல்புலம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்),பேராசிரியர் வ.செயதேவன்,(சிறப்புநிலைப் பேராசிரியர்,தமிழ் இலக்கியத்துறை,சென்னைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் வாழ்த்துரைக்க உள்ளனர்.

முனைவர் மு.இளங்கோவன்(பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,புதுச்சேரி), தமிழ்நிலவன் (கணிப்பொறி வல்லுநர்,பெங்களூரு)விசயகுமார்(ஆசிரியர்,சங்கமம் லைவ்,நாமக்கல்), செல்வமுரளி(ஆசிரியர்,தமிழ் வணிகம்,சேலம்)கடலாய்வு வல்லுநர் ஒரிசா பாலு ஆகியோர் மாணவர்கள், ஆய்வாளர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி அளிக்க உள்ளனர்.

பல்கலைக் கழகம் ஒன்று தாமே முன்வந்து தமிழ் இணையத்தில் பயிற்சி வழங்குவது தமிழ் இணைய வரலாற்றில் இதுவே முதல் முயற்சியாகும்.

நிகழ்ச்சி நிரல்

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008

இந்தி எதிர்ப்புப் போரில் வீரச்சாவடைந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மாணவர் இராசேந்திரன் சிலை...


மொழிப்போர் மறவர்
இராசேந்திரன்.தோற்றம் 16.07.1947 மறைவு 27.01.1965
உருவச்சிலை, அண்ணாமலைப் பல்கலைக்கழக
முகப்புவாயில் எதிரில்


இராசேந்திரனின் உருவச்சிலை (வேறொரு கோணம்)


அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் உணர்வாளர்கள் பலரைத் தந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனமாகும்.1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இப் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு தம் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.இப் பல்கலைக் கழகத்தில் இளம் அறிவியல் கணக்குப்பாடம் முதலாண்டு பயின்ற சிவகங்கையைச் சேர்ந்த இராசேந்திரன் என்ற மாணவர் காவல்துறையினரின் துமுக்கிக் குண்டுக்கு மார்புகாட்டி வீரச்சாவடைந்தார். இந்நிகழ்வு மிகப்பெரிய வரலாறாகத் தமிழக மொழிவரலாற்றில் பதிவாகியது.

இவர்தம் படம் பற்றி அண்ணன் அறிவுமதி அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன் ஒரு கவிதை எழுதியிருந்தார்.

"நல்லவர்கள் முகங்கள் தொலைந்துபோகின்றன... இப்பொழுது தெரிகிறது. பாளையங்கோட்டைக்கும் செயின்ட்சார்ச் கோட்டைக்கும் எவ்வளவு தூரம் என்று" என அக்கவிதை வளரும்.

அன்று முதல் இராசேந்தினின் முகம் எவ்வாறு இருக்கும் எனப் பல நாள்களாக நினைத்திருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் செல்லும் பொழுதெல்லாம் அந்த ஈகச் சிலையருகே நின்று பார்த்து அக வணக்கம் செலுத்திவருவது என் வழக்கம். இன்று அதனைப் படம்பிடித்துவந்தேன்.

இணையத்தில் இட்டால் அனைவருக்கும் பயன்படும் என நினைத்து பதிவிட்டுள்ளேன்.

இப் படத்தை எடுத்தாள விரும்புவோர் என் பக்கத்திற்கு ஓர் இணைப்பு வழங்கியும் என் பெயர் சுட்டியும் எடுத்து ஆளளாம்.

16.07.1947 இல் பிறந்தவர் இராசேந்திரன். 27.01.1965 இல் குண்டடிபட்டு இறந்தார்.
இவருக்குச் சிலை வைக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இடம் அளிக்கவில்லை. அப்பொழுதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் அரசுக்கு உரிய நெடுஞ்சாலைத்துறை இடத்தை வழங்கியதாக அறிய முடிகிறது. அச் சிலையைக் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது 16.03.1969 இல் திறந்துவைத்தார். தமிழ்ப்பற்றாளர் எசு.டி.சோமசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கியமை கல்வெட்டால் உறுதிப்படுகிறது.

இந்தி எதிர்ப்பு வல்லாண்மைக் குழுவில் திரு.பக்கிரிசாமி, கனிவண்ணன், மா.நடராசன் (புதியபார்வை ஆசிரியர்), புதுவை வி. முத்து (பாவேந்தர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்), திரு.ஆறுமுகம், திரு.துரைராசு உள்ளிட்ட உணர்வாளர்கள் இருந்து செயல்பட்டுள்ளனர். இது பற்றிய விவரம் பின்பும் இணைப்பேன்.