நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 31 ஆகஸ்ட், 2026

திருக்குறள் உரைவளத் தொகுப்பாசிரியர் தருமையாதீனப் புலவர் ச. தண்டபாணி தேசிகர் நினைவு விருது!

 


 தமிழ் வளர்ச்சிக்குத் தனிமாந்தர்களும், பெரும் வள்ளல்களும், நிறுவனத்தாரும் துணைநின்றுள்ளமையை வரலாறு பதிவுசெய்துள்ளது. அவ்வகையில் மயிலாடுதுறையை அடுத்துள்ள தருமபுர ஆதீனம் கடந்த முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றியுள்ள தமிழ்ப் பணிகளும் சமயப் பணிகளும் வரலாற்றில் என்றும் நிலைபெற்று நிற்பனவாகும். 

  தருமபுர ஆதீனம் தமிழ் இலக்கண, இலக்கியங்களையும், சமய, தத்துவ நூல்களையும் போற்றிப் பாதுகாத்துப் பரப்பியுள்ள வகையாலும், திருமுறைகளைப் பண்மணம் குறையாமல் ஓதுதல் - ஓதுவித்தல் செய்த வகையாலும் தமிழ்க் கல்லூரியை உருவாக்கிப் பல்லாயிரம் தமிழ்ப் புலவர்களைப் பயிற்றுவித்துப் பைந்தமிழுக்குத் தொண்டாற்றுவதற்குப் புறந்தந்த வகையாலும், சமயப் பணிகளுக்கும் மக்கள் பணிகளுக்கும் ஆதரவு நல்கிவரும் வகையாலும் என்றும் நம் நன்றிக்குரிய சமய நிறுவனமாகத் திகழ்ந்துவருகின்றது. 

 தருமபுர ஆதீனத்தின் தகைமிகும் தலைவராகத் தற்பொழுது சமயத்தொண்டும் தமிழ்த்தொண்டும் ஆற்றி வரும் இருபத்தேழாம் பட்டம் தவத்திரு கயிலை மாசிலாமணி தேசிக  ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்  அவர்கள் அண்மைக்காலமாக அறம்பல செய்து வருகின்றமையை அனைத்துலகும் அறியும். தம் முன்னோர்களின் நெறியில் நின்று தமிழறிஞர்களைப் போற்றும் வகையிலும் தருமபுர ஆதீனத்தில் பணியாற்றிய அறிஞர்களின் பெருமையை நிலைநிறுத்தும் வகையிலும் பேரறிஞர்களின் பெயரில் விருதுகளை அண்மையில் நிறுவி, அறிஞர்கள் பலரை அழைத்துப் போற்றி வருகின்றமை தமிழ் நிலைபெறுதற்குரிய பெரும்பணியாகும். 

 அவ்வகையில்  புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிவரும் முனைவர் மு.இளங்கோவனுக்குத் திருக்குறள் உரைவளத் தொகுப்பாசிரியர் தருமையாதீனப் புலவர் ச. தண்டபாணி தேசிகர் பெயரில் அமைந்த விருதினைத் தருமபுர ஆதீனத்தில் 29.  08. 2026 நடைபெற்ற  சிறப்பு நிகழ்ச்சியில் ஆதீனம்  வழங்கியது. 

 மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்தில்  நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் முனைவர் மு. இளங்கோவனுக்குச்  ச. தண்டபாணி தேசிகர் நினைவு விருதினையும் பத்தாயிரம் பணமுடிப்பு, பத்து கிராம் மதிப்பிலான வெள்ளிப் பதக்கம், நூல் பரிசுகள் முதலியனவற்றையும் வழங்கி, சாதரா அணிவித்து, குருமகா சந்நிதானங்கள் ஆசி கூறினார்கள். 

 தருமபுர ஆதீனத்தில்  நடைபெற்ற நிகழ்வில் முனைவர் மு. இளங்கோவனுக்குச்  ச. தண்டபாணி தேசிகர் நினைவு விருதினைத் தவத்திரு குருமகா சந்நிதானங்கள் வழங்கும் அரிய காட்சியைப் படமாக்கித் தமிழன்பர்களின் பார்வைக்கு வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். 

 விருது நல்கிப் புரந்தருளியமைக்கும், படக்காட்சிகளை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைக்கவும் இசைவு நல்கிய முனைவர் தவத்திரு கயிலை மாசிலாமணி தேசிக  ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்  அவர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவிக்கும் கடப்பாடு உடையோம்.

காணொலி இணைப்பு: இங்கே

சனி, 29 ஆகஸ்ட், 2026

முனைவர் மு. இளங்கோவனுக்குத் தருமபுர ஆதீனச் சான்றோர் விருது!

 

தவத்திரு  கயிலை மாசிலாமணி தேசிக  ஞானசம்பந்த பரமாச்சாரியார் 
சுவாமிகள் மு.இளங்கோவனுக்கு விருது நல்கி, ஆசி வழங்குதல்

தமிழ்ப்பணியும் சமயப் பணியும் செய்துவரும் தருமபுர ஆதீனம் தொடர்ந்து  தமிழ்த்தொண்டாற்றிவரும் அறிஞர்களுக்குத் தருமபுர ஆதீனச் சான்றோர்களின் பெயர்களில் நினைவு விருதினை  வழங்கிவருகின்றது

புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிவரும் முனைவர் மு.இளங்கோவனுக்குத் திருக்குறள் உரைவளத் தொகுப்பாசிரியர் தருமையாதீனப் புலவர் . தண்டபாணி தேசிகர் பெயரில் அமைந்த விருதினை தருமபுர ஆதீனத்தில் இன்று (29/08/2026) நடைபெற்ற  சிறப்பு நிகழ்ச்சியில் ஆதீனம்  வழங்கியது

தருமபுர ஆதீனத்தின் இருபத்தேழாம் பட்டம், தவத்திரு முனைவர், கயிலை மாசிலாமணி தேசிக  ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்  அவர்கள் மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்தில்  நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் முனைவர் மு. இளங்கோவனுக்குத்  . தண்டபாணி தேசிகர் நினைவு விருதினையும் பத்தாயிரம் பணமுடிப்பு, பத்து கிராம் மதிப்பிலான வெள்ளிப் பதக்கம், பன்னிரு திருமுறை நூல் தொகுப்பு, திருக்குறள் உரைவளத் தொகுப்பு முதலியவற்றையும் வழங்கி, சாதரா அணிவித்து ஆசி கூறினார்கள்

முனைவர் மு. இளங்கோவன் தமிழ் இணையத்துறையில் ஆற்றியுள்ள பணிகளையும் தமிழ் ஆராய்ச்சித்துறையில் ஆற்றியுள்ள பணிகளையும் பாராட்டும் வகையில் தண்டபாணி தேசிகர் விருது தருமபுர ஆதீனத்தால்  வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

முரசு நெடுமாறனாரைக் கண்டு வணங்கினேன்!

  

முரசு நெடுமாறனாரிடம் தகைசால் தமிழ்த் தொண்டர்கள் நூல் அளிக்கும் முனைவர் மு. இளங்கோவன்

 அண்மையில் மலையகச் செலவு மேற்கொண்டிருந்தேன். உலகத் தொல்காப்பிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுவதையும் தொல்காப்பிய அறிஞர்களைக் கண்டு மகிழ்வதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இச்செலவு அமைந்தது.  தொல்காப்பிய அறிஞர் சீனி நைனா முகமது அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட உள்ள தொல்காப்பியக் கோட்டத்தின் இடத்தினைக் காண்பதையும் என் செலவில் இணைத்துக்கொண்டேன். யாவும் சிறப்பாக அமைந்தன. 

 24.08.2026 மாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முனைவர் முரசு நெடுமாறனார் அவர்களைக் கண்டு வணங்கும் பேறு பெற்றேன். முரசு ஐயாவுக்கும் எனக்குமான தொடர்பு முப்பது ஆண்டுக் காலமாக, வளர்பிறைபோல் வளர்ந்து வருகின்றது. மலேசியத் தமிழர்களையும் மலேசியத் தமிழ் இலக்கியங்களையும் எனக்கு அறிமுகம் செய்த பெருந்தகை முரசு நெடுமாறனார் என்று பனிமலை உயர்வில் நின்று உரக்கச் சொல்ல இயலும். 

 முரசு நெடுமாறனார் உருவாக்கிய மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என்னும் அரும்பெரும் தமிழ்ப் புதையல் உருவாக்கும் அற்றைப் பொழுதிலிருந்தே முரசு அவர்களின் உழைப்பையும் தமிழ் ஆர்வத்தையும் கண்டு கண்டி வியந்துள்ளேன். மலேசியாவுக்கு முதன்முதல் சென்றபொழுது(2001) என்னையும் என் பேராசிரியர் முனைவர் அ. அறிவுநம்பி அவர்களையும் வரவேற்று, இல்லிருத்தி, விருந்தோம்பிய நினைவுகள் கால் நூற்றாண்டைக் கடந்த பின்பும் நெஞ்சில் நிலைபெற்றுள்ளன. முரசு அவர்களின் குடும்பத்தார் காட்டிய அன்பையும் பெரும் பாசத்தையும் எண்ணி எண்ணி உருகுகின்றேன். முரசு அவர்களுக்கும் எனக்கும் நடந்த கடிதத் தொடர்புகளும், உரையாடல்களும் தனியொரு நூல் வரையும் அளவுக்கு செய்திச்செறிவு கொண்டவை. காலம் கனியும்பொழுது தனிநூல் உருப்பெறும். இது நிற்க. 

 முரசு அவர்கள் சற்றொப்ப தொண்ணூறு அகவையைத் தொட உள்ளார். தமிழ்நாட்டரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது உள்ளிட்ட உயரிய சிறப்பு ஆரங்களைப் பெற்று ஆரங்களுக்குப் பெருமைசேர்த்தவர். மாநாடுகள், கருத்தரங்குகளை ஒருங்கிணைத்து, தமிழாய்வுக்குத் துணைநின்றவர். இத்தகு பெரும்புலச் சான்றோரைக் கண்டு தகைசால் தமிழ்த்தொண்டர்கள் என்ற என் நூலினை அவர்தம் மாணடி சேர்த்து, மனங்குளிர்ந்த வாழ்த்தினைப் பெற்றமை என் வாழ்வின் இனிய பொழுதுகளில் ஏற்றம் தரும் பொழுதாகும். 

 முரசு நெடுமாறனார் நூற்றாண்டினைக் கண்டு, எங்களை வழிநடத்த  வணங்கி வாழ்த்துகின்றேன்.