நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 19 செப்டம்பர், 2008

பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா


ம.இலெ.தங்கப்பா

    தென்காசி மாவட்டம், குறும்பலாப்பேரியில் 08.03.1934 இல் பிறந்தவர் ம.இலெனின் தங்கப்பா. இவர்தம் பெற்றோர் புலவர் ஆ. மதன பாண்டியன், இரத்தினமணி அம்மையார். தந்தையாரின் இளமைக்காலக் கல்விப் பயிற்றலில் இயற்கையாகவே தமிழ்ப்புலமை கைவரப் பெற்றவர் தங்கப்பா. பல்வேறு தமிழ் நூல்கள் இளமையிலேயே அறிமுகமாயின. அப்பாடல்களின் ஓசை உள்ளத்தில் பதிந்ததால் தங்கப்பா இயற்றும் பாடல்கள் மிகச்சிறந்த ஓசையின்பம் கொண்டனவாக விளங்குகின்றன. இளங்கலைப் பொருளியல் பயின்ற தங்கப்பா, பின்னர் முதுகலைத் தமிழிலக்கியம் பயின்றவர்.

 மாணவப் பருவத்திலேயே மொழிபெயர்ப்புப் பணிகளில் விளையாட்டாக ஈடுப்பட்டு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளராக அறியப்படுபவர். கல்வி கற்றவுடன் தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் வரலாறு, ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்தார் (1954 -1959). பின்னர்ப் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் (1959-68) பணிபுரிந்தார். 1968 முதல் 1994 வரை புதுச்சேரி அரசுக்கு உரிமையான கல்லூரிகளில் புதுச்சேரி, காரைக்காலில் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

 ஆரவாரம் இல்லாமல் அடக்கமே வடிவாக விளங்குபவர். அன்பின் மேன்மையை உலகிற்குப் பல நூல்களின் வழியாகவும் நடைமுறை வாழ்வியல் வழியாகவும் விளக்கி வருபவர். இயற்கையீடுபாடு கொண்டவர். தம் பிள்ளைகளுக்குச் செங்கதிர், விண்மீன், இளம்பிறை, மின்னல் எனப் பெயரிட்டுள்ள பாங்கு ஒன்றே இவர்தம் இயற்கை ஈடுபாடு காட்டும் சான்றுகளாகும்.

  மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்டு பல பணிகள் செய்தவர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுடன் இணைந்து தொடக்க காலத் தென்மொழி வளர்ச்சிக்கு உழைத்தவர். தமிழ் இன முன்னேற்றத்திற்கானஅமைப்புகளுடன் இணைந்து பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

 பாவேந்தர், பெருஞ்சித்திரனார், கண்ணதாசன், கோவேந்தன் உள்ளிட்ட தமிழ்ப்பற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தவர். பாவேந்தரின் குயில் இதழில் ம.இலெனின் என்னும் பெயரில் எழுதத் தொடங்கியவர்.

  தங்கப்பாவின் படைப்புகள் தொடக்கத்தில் பல இதழ்களின் வழியாக வெளிவந்தன.அவற்றுள் தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தென்றல், வானம்பாடி, பூஞ்சோலை, இனமுழக்கம், தமிழகம், உரிமை வேட்கை, கைகாட்டி, கவிஞன், மீட்போலை, அரும்பு, விருந்து, கவியுகம், பொதுமை, தெளிதமிழ், வெல்லும் தூயதமிழ், கண்ணியம் முதலான இதழ்கள் குறிப்பிடத்தகுந்தன.

  தங்கப்பா இதழ்களுக்குத் தகக் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் இயல்புடையவர் இல்லை. தமிழ்மொழி, இனம் சார்ந்த கொள்கைகளையும் இயற்கை,அன்பு இவற்றை வலியுறுத்தியும் மிகுதியாக எழுதியுள்ளவர். தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிக்கு அறிமுகம் செய்த வகையிலும், பிறமொழி இலக்கியங்களைத் தமிழிற்கு மொழிபெயர்த்து வழங்கிய வகையிலும் என்றும் நினைவுகூரத் தக்கவர். தமிழ் இதழ்களில் எழுதுவதுடன் ஆங்கில இதழ்களிலும் எழுதி வருபவர். இவற்றுள் Caravan,Poet, Cycloflame (u.s.a), Modern Rationalist,Youth Age, New Times, Observer முதலியன குறிப்பிடத்தகுந்தன.

  தங்கப்பா தம் பதினேழாம் அகவையில் பாடல் புனையத் தொடங்கி இன்றுவரை கற்பனை வளம் குறையாமல் படைப்புகளை வழங்கி வருபவர். தமிழின் செவ்வியல் படைப்புகளை அதன் தரம் குறையாமல் ஆங்கிலத்தில் பெயர்த்தவர்.Hues and Hormonies என்னும் பெயரில் சங்கப் பாடல்களையும் Songs of Grace in St.Ramalingam என்னும் பெயரில் இராமலிங்க அடிகளாரின் பாடல்களையும் மொழிபெயர்த்த பெருமைக்கு உரியவர். பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களை மொழி பெயர்த்து Selected Poems of Bharathidasan எனவும் வெளியிட்டவர்.

  பாரதியார் பாடல்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் பெயர்த்தமைக்குக் கல்கத்தா தமிழ்ச்சங்கப் பரிசில் பெற்றவர். அரவிந்தர் பாடல்களைத் தமிழிற்குப் பெயர்த்தமைக்கு 1972 ஆம் ஆண்டு அரவிந்தர் ஆசிரமத்தின் பரிசினையும் பெற்றவர்.

  தங்கப்பாவின் படைப்புகள் இவருக்குப் பல பரிசில்களைப் பெற்றுத் தந்துள்ளன. இவற்றுள் தமிழ் நாட்டரசின் பாவேந்தர் விருது(1991), பகுத்தறிவாளர் கழகத்தின் பெரியார் விருது(1998), தமிழர் தேசிய இயக்கத்தின் தமிழ்த்தேசியச் செம்மல்(2002) விருது உள்ளிட்டன குறிப்பிடத்தகுந்தன. இரண்டுமுறை சாகித்ய அகாதெமி விருதுபெற்றவர். பல்வேறு தமிழமைப்புகளின் பரிசுகளையும், விருதுகளையும் பெற்றவர். தெளிதமிழ் இதழின் ஆசிரியராகத் தமிழ்த்தொண்டு செய்தவர்.

  புதுச்சேரி அரசு வழங்கிய விருதை அவ்வரசு தமிழுக்கு ஆக்கமான பணிகளில் ஈடுபடாததைச் சுட்டிக்காட்டித் திருப்பி வழங்கியவர். புதுச்சேரி தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக்குழுவின் தலைவராகவும், புதுச்சேரி இயற்கைக் கழகத்தின் தலைவராகவும், புதுவை அரசின் மொழிபெயர்ப்புக் குழுவின் உறுப்பினராகவும், தில்லி சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பாளருள் ஒருவராகவும் விளங்குபவர். தென்மொழி இதழின் உறுப்பாசிரியராகவும் விளங்கியவர்.

ம.இலென் தங்கப்பா இன்று 31.05.2018 அதிகாலை 1.30 மணியளவில் இயற்கை எய்தினார்.

ம.இலெ.தங்கப்பாவின் நூல்கள்

கட்டுரை நூல்கள்

01. பாரதிதாசன்-ஓர் உலகப்பாவலர்,1987
02. நுண்மையை நோக்கி,1989
03. எது வாழ்க்கை,1994
04. திருக்குறளும் வாழ்வியலும்,1995
05. வாழ்க்கை அறிவியல்,1998
06. பாட்டு வாழ்க்கை,1994,1999.
07. மொழிமானம்,2000
08. கொடுத்தலே வாழ்க்கை,2001

தமிழாக்கம்

09. புகழ்பெற்ற ஆங்கிலப் பாடல்கள் சிலவற்றின் தமிழாக்கம்,1959
10. மலைநாட்டு மலர்கள்,1975(இரசுல் கம்சுதாவ் பாடல்கள்)
11. மண்ணின் கனிகள்,1996
12. கனவுகள்,2002(ஆங்கிலப்பாடல்களின் தமிழாக்கம்)

ஆங்கில ஆக்கம்

13. Hues and Harmonies From Ancient Land,1970
14. Songs of Grace in St.Ramalingam,1985
15. Selected Poems of Bharathidasan,1992
16. House of Darkness,1996(இருண்ட வீடு)
17. Hues and Harmonies From Ancient Land,Part II
18. The Prince Who Became a Monk and Other Stories from Tamil Literature, 2016
19. Red Lilies and Frightened Birds: Muttollayiram, 2011
20. Love Stands Alone: Selections from Tamil Sangam Poetry, 2010

ஆங்கில மொழியில் எழுதியவை

21. This Question of Medium(Essay)-1996

22. Meadow Flowers(Poems)-1984

பிற நூல்கள்

23. பாடுகிறேன்,1973
24. தேடுகிறேன்,1980
25. ஆந்தைப்பாட்டு,1983
26. அடிச்சுவடுகள்,1983
27. வேப்பங்கனிகள்,1985
28. கள்ளும் மொந்தையும்,1987
29. இயற்கையாற்றுப்படை,1989
30. மயக்குறுமக்கள்,1990
31. அகமும் புறமும்,1991
32. பின்னிருந்து ஒரு குரல்,1992
33. பனிப்பாறை நுனிகள்,1998
34. புயற்பாட்டு,2000
35. பாட்டெனும் வாள் எடுப்பாய்,2004

குழந்தைகளுக்கான நூல்கள்

36. எங்கள் வீட்டுச்சேய்கள்,1973,2003
37. மழலைப்பூக்கள்,1983
38. இயற்கை விருந்து,1991
39. வாழ்க்கை மேற் காதல்
40. மரபுப்பாடல் செத்துவிட்டதா?
41. இடித்துரைப் பாடல்கள்(வசையமுது)
42. நையாண்டிமாலை(பாட்டும் உரையும்)
43. சோளக்கொல்லைப் பொம்மை
44. வாழ்வியல் அறிவீர்.


















பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்களின் இல்ல முகவரி:

பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா
7-11,அவ்வை நகர்,
இலாசுப்பேட்டை, புதுச்சேரி- 605 008

இல்லம் பேசி : 0413-2252843

கருத்துகள் இல்லை: