நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
kuwait லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kuwait லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

குவைத் நகர் உலா... தொடர் 2



குவைத்தின் கோபுரம் (Kuwait Towers)


குவைத் நகரத்தின் சிறந்த உணவகத்தில் மொகல் மகால்(Mughal Mahal) முதலிரு இடங்களுக்குள் வரும். அந்த அளவு நகரின் முதன்மைப்பகுதியில் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. அந்த உணவகத்திற்குப் பொறியாளர் கருணாகரன் அவர்கள் வருவதற்கும் நாங்கள் செல்வதற்கும் நேரம் சரியாக இருந்தது.

மொகல் மகாலில் இந்தியவகை உணவு சிறப்பாக வழங்கப்படுகின்றது. இப்பொழுது ஓட்டுநர் திரு.ரெட்டி அவர்களையும் வற்புறுத்தி எங்களுடன் உணவு உண்ண அழைத்துச்சென்றோம். தம்பி பிலவேந்திரன் அவர்களும் எங்களுடன் இருந்தார். நால்வருக்கும் தேவையான உணவு என்ன? என்று பேசி ஒரு முடிவுக்குள் வருவதற்குள் ஐந்து நிமிடம் ஆனது. நான் வெளிநாட்டுப் பயணங்களில் கோழி இறைச்சியைத் தேர்ந்தெடுப்பேன். தூய்மையாக இருக்கும் என்ற அடிப்படையில் இத்தேர்வு அமையும். இந்த முறையும் அப்படியே கோழிப் புலவுக்கு விருப்பம் தெரிவித்தோம்.

பொறியாளர் கருணாகரன் அவர்கள் இந்தக் கடையில் ஆட்டிறைச்சி சிறப்பு என்றார். அப்படி என்றால் ஆட்டிறைச்சிக்குச் சொல்லுங்கள் என்றேன். இரு தட்டு ஆட்டுக்கறியும் இரு தட்டு கோழிக்கறியுமாக வந்தன. அதற்கு முன் “சூப்” கொண்டுவரும்படி சொன்னார். மெதுவாக அனைத்தையும் சுவைத்து உண்டோம். கோழிக்கறியும், ஆட்டுக்கறியும் சுவையில் ஒன்றையொன்று விஞ்சி நின்றன. எந்த உணவும் வீணாகவில்லை. சிறிது மிகுதியாக இருந்த குழம்பையும், பரோட்டோவையும் கட்டித்தரும்படி சொன்னோம். அவர்களும் சிறப்பாக மீதியைக் கட்டித் தந்தனர். இதனிடையே திரு. தமிழ்நாடனும், திரு. இராமன் அவர்களும் எங்கள் செய்ல்பாடுகளை ஆர்வமுடன் செல்பேசியில் கேட்டபடி இருந்தனர்.

பகலுணவுக்குப் பிறகு குவைத்தின் நினைவுச்சின்னங்கள், வரலாற்று முதன்மை வாய்ந்த இடங்களைப் பார்க்க நினைத்தேன். அந்த வகையில் கடற்கரையை ஒட்டியிருந்த வானுயர் கூண்டு ஒன்றிற்குச் சென்றோம். அடுத்தடுத்து இருந்த இரண்டு கூண்டுகளும் மேலேறிப் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்பொழுது பழுதுபார்ப்புப் பணிகள் நடப்பதால் உயரே செல்ல இசைவு இல்லை என்றனர்.  

எனவே நாங்கள் குவைத்தின் காட்சியகம் சென்றோம். திறப்பதிற்கு நான்கு மணியாகும் என்றனர். அதன் இடையே அருகிலிருந்த சாது இல்லத்தைப் பார்க்கச்(Sadu House) சென்றோம். சாது இல்லம் என்றதும் ஏதோ துறவிகள் இருக்கும் இடம் என்று போனால் அங்குக் கைத்தறித்துணிகள், நூல்கள், போர்வைகள், பாய்கள் நெய்து காட்சிக்கு இருந்தன. குவைத்தியர்கள் துணி உருவாக்கும் கலையில் வல்லுநர்கள் என்பதை நினைவூட்டும் வகையில் இந்தச் சாது இல்லம் உள்ளது. அழகாகப் பராமரிக்கின்றனர். அங்குக் கூட்டங்கள் நடத்துவதற்கும் வசதிகள் உண்டு. நாங்கள் செல்லும்பொழுது ஒரு சிறப்புக் கூட்டம் நடப்பதற்குரிய ஏற்பாடுகள் நடந்தன. கடற்கரையை ஒட்டி இத்தகு கூடம் இருப்பது சிறப்பாக இருந்தது.

அடுத்து நாங்கள் குவைத்தின் தொல்லியல் அருங்காட்சியகம் (Kuwait Archaeology) சென்றோம். அங்குக் குவைத்தியர்களின் பழம்பெருமை பேசும் கோட்டைக்கதவுகள், புதைபொருள் சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன. படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் புகைப்படக் கருவியை எடுக்கவில்லை. அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் அப்படி எங்களை அச்சமூட்டின. மாறுகால், மாறுகை வாங்கும் அவர்களின் தண்டனை பற்றி முன்பே நண்பர்கள் அச்சமூட்டிதான் அனுப்பியிருந்தனர். அனைத்தையும் நுட்பமாகக் கவனித்தோம். குவைத்தின் பணத்தாள்கள், காசுகள் பல இருந்தன. இந்திய ரூபாய்களும் இருந்தன.

பாலைநிலைத்தில் கிடைத்த பழம்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குவைத் நகரிலிருந்து இருபது கல் தொலைவில் உள்ள பைலகா தீவிலிருந்து(Failaka Island) எடுக்கப்பெற்ற பல தொல்லியல் பொருட்களும் அகழாய்வுப் படங்களும் காட்சிக்கு இருந்தன. குவைத்தை ஒட்டிய ஒரு சிறு தீவுதான் பைலகா தீவு. இங்குக் குவைத்தியர்களின் முன்னோர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள் இன்றும் உள்ளதை அகழாய்வுச்சான்றுகள் காட்டுகின்றன. அடுத்து மரபுவழிக் காட்சியகத்தையும்(Heritage Museum) சென்று பார்த்தோம். அங்கும் அரிய செய்திகள் காட்சிக்கு இருந்தன.

பொறியாளர் இராமன் அவர்களும் பொறியாளர் தமிழ்நாடன் அவர்களும்  மாலை 6.30 மணிக்கு அபு அலிபா பகுதியில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறினர். அதற்குள் நாங்கள் சில பொருள்களை நினைவுக்கு வாங்கிக்கொண்டு புறப்பட வேண்டும். ஒருமணி நேரத்திற்குள் குவைத்தில் கடைக்குச் சென்று கொள்முதல் செய்ய வேண்டும்.

ஒரு பெரிய கடைக்குச் சென்றோம். குவைத்து நகரத்து மக்கள் அத்தனைப்பேருக்கும் தேவையான பொருட்களை அள்ளித் தரும் பேரங்காடி அது. அதில் நாங்கள் நுழைந்து தேவையான பொருள்களை வாங்க ஆயத்தமானோம். தாகமாக இருந்ததால் ஒரு குளிர்க்குடிப்புப் புட்டியை உடைத்துக் குடித்தேன். தம்பி பிலவேந்திரன் நம் பிள்ளைகளுக்குத் தேவையான எழுதுபொருள்கள், விளையாட்டுப் பொருள்களை அவர் விருப்பம்போல் வாங்கினார். இரண்டு மூன்று போர்வைகளை வாங்கலாம் என்றார். எடுத்துச்செல்வதில் சிக்கல் இருக்கும் என்று தவிர்த்தேன். பிறகு புதிய பேரீச்சம்பழங்களை நண்பர்களுக்காக வாங்கினோம். தனித்தச்சுவையுடன் தித்தித்தது. நம்மூர் தள்ளுவண்டிப் பழங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். புதுக்கோட்டைத் திருக்குறள் நண்பர் சபூதின் ஐயா பலவாண்டுகளுக்கு முன் ஒரு நோன்புநாளில் காணச் சென்றபொழுது வழங்கிய பேரிச்சையில் தெரிந்த சுவை தெரிந்தது.

பொறியாளர் கருணாகரன் ஐயா தனித்து ஏதோ கமுக்கம் சொல்வதுபோல் என்னை அழைத்துச்சென்று ஒரு நினைவுப்பரிசை எனக்கு வாங்கித் தந்தார். அவர் அன்பை நினைத்து மகிழ்ந்தேன். எங்கள் கொள்முதல் வேலைகளை முடித்துக்கொண்டு, பொறியாளர் கருணாகரன் வண்டியில் அபு அலிபா புறப்பட்டுச் சென்றோம். வழியில் பொறியாளர் கருணாகரன் அவர்களின் வீட்டுக்கு வந்து சில பொருட்களை எடுத்துகொண்டு புறப்பட்டோம். குளிர்க்குடிப்பு எனக்கு இரண்டு கொடுத்தார். அன்புடன் எடுத்துகொண்டு வண்டியில் குடிக்கலாம் என்று வந்தேன்.

முன்பே ஓட்டுநர் திரு. ரெட்டி எங்களிடமிருந்து விடைபெற்றுத் தனித்துச்சென்றார். மாலை 6.30 மணிக்கு நாங்கள் நண்பர்கள் அபு அலிபாவில் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு வந்துசேர்ந்தோம். உணவகத்திலிருந்து கொண்டு வந்த உணவுடன் பொறியாளர் இராமன் அவர்களும் பொறியாளர் சேதுமாதவனும் தயாரித்திருந்த தயிர்ச்சோறும் விருந்தில் கலந்துகொண்டன. அனைவரும் உரையாடியபடி உண்டோம்.

நாளை(18.12.2012) தமிழகத்திற்குப் புறப்படுவதால் இன்றே வழியனுப்பு விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். திரு. செந்தமிழ் அரசு அவர்களும் வந்துவிட்டார். சம்போடை கிருட்டினமூர்த்தி அவர்களும் விருந்தில் கலந்துகொண்டார். ஒரு நாட்டுப்புறப் பாடலைப் பாடும்படி நண்பர்கள் என்னைக் கேட்டுக்கொண்டனர். பாடினேன். அனைவரும் பாராட்டுரை வழங்கி என் தமிழ்ப்பணிகளை ஊக்கப்படுத்தி உரையாற்றினர். ஒவ்வொரு நண்பர்களும் அன்பால் நெஞ்சில் நிறைந்தனர்.

தமிழகத்தின் பல ஊர்களில் பிறந்து பல ஊர்களில் படித்து, பல ஊர்களில் பணிபுரிந்து இன்று குவைத்தில் இணைந்துள்ள இவர்களின் தமிழ்ப்பற்றும், தமிழ் உணர்வும் எந்தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லையே என்ற கவலையில் கண்ணீர் துளிர்த்தது. தமிழ் மீதும், தமிழ் இலக்கியத்தின் மீதும், தமிழர்கள் மீதும் இவர்களுக்கு உள்ள ஈடுபாடு நினைந்து, தமிழ் கடல்கடந்தும் வாழும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் உரையாடலைத் தொடர்ந்தனர். சில புகைப்படங்களை நினைவுக்கு எடுத்துகொண்டோம்.

பொறியாளர் கருணாகரன் அவர்கள் புதுவை வந்தால் சந்திப்பதாகக் கூறி அன்புடன் விடைபெற்றுக்கொண்டார். அவரைப் போல் மற்ற நண்பர்களும் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டனர். நண்பர் தமிழ்நாடன் அவர்கள் நாளை வானூர்தி நிலையத்தில் சந்திப்பதாகக் கூறிப் புறப்பட்டுச் சென்றார்.

பொறியாளர் இராமன் அவர்களும், பொறியாளர் சேதுமாதவன் அவர்களும் தாம் தயாரித்த தயிர்ச்சோற்றின் செய்முறை விளக்கத்தைச் சொன்னார்கள். அதனைக் கேட்ட பிறகு ஊருக்குச் சென்றுசேரும் வரை உணவில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தேன்.



திரு.பழமலை கிருட்டினமூர்த்தி, பொறியாளர் சேது, பொறியாளர் தமிழ்நாடன்


குவைத் நகரில்மு.இளங்கோவன், பொறியாளர் கருணாகரன்



குவைத் தேசியக் காட்சியகத்தின் வாயிலில் மு.இளங்கோவன்



குவைத் தேசியக் காட்சியகம்



பொறியாளர் கருணாகரன், மு.இளங்கோவன்



குவைத்தின் அழகிய சாலைகளும் கட்டடங்களும்




குவைத் கடற்கரையில் மு.இளங்கோவன் 



குவைத் கடற்கரையில் மு.இளங்கோவன்(வேறொரு காட்சி)



குவைத் கடற்காட்சி(சரவணபவன் உணவகத்தின் அடுக்கிலிருந்து எடுத்தது)




செவ்வாய், 18 டிசம்பர், 2012

விடுதலை நாளிதழில் குவைத் கண்காட்சி பற்றிய செய்தி…



 விடுதலை(17.12.2012)


குவைத்தில் நடைபெற்ற தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி உலக அளவில் பலருக்கும் முன்மாதிரியான கண்காட்சியாக அமைந்தது. அமெரிக்கா, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து கண்காட்சிப்பொருட்கள் தேவை என்று தமிழார்வலர்கள் பலர் உடனடியாக கண்காட்சி அமைப்பாளர்களுக்கு மின்னஞ்சல் செய்திருந்தனர். 

மேலும் பல நாடுகளிலிருந்து இந்தக் கண்காட்சி குறித்த செய்திகள் பல மாதங்களாக இணைய இதழ்களிலும் அச்சு இதழ்களிலும் வெளிவந்த வண்ணம் இருந்தன. குவைத்தில் நடைபெற்ற இந்தக் கண்காட்சி பற்றி விடுதலை நாளிதழில் முதல் பக்கத்தில்(17.12.2012) படத்துடன் செய்தி வெளியானது. செய்தியை வெளியிட்டு உதவிய விடுதலை ஆசிரியர் திரு. கி. வீரமணி ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.




திங்கள், 17 டிசம்பர், 2012

தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி நினைவுகள்...





பொங்குதமிழ் மன்றத்தார் வழங்கும் நினைவுப்பரிசில்( இராமன், தமிழ்நாடன், இலட்சுமிநாராயணன், மு.இளங்கோவன், முத்து, சேதுராமன்)

குவைத் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சிக்கு ஒரு நாள் முன்னதாகவே வந்துவிட்டேன். அன்றைய நாள் முழுவதும் எழுதுவதும், படிப்பதும், ஓய்வுமாகப் பொழுது கழிந்தது(13.12.2012). மாலையில் நண்பர் சம்போடை கிருட்டினமூர்த்தி அவர்கள் உணவுடன் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தார். உண்டபடியே இருவரும் தமிழ் இலக்கியப் போக்கு பற்றி உரையாடினோம். மறுநாள் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு நண்பர் கிருட்டிணமூர்த்தி விடைபெற்றுக்கொண்டார். காலையில் கண்காட்சி தொடக்கம் என்பதால் இரவில் நன்கு ஓய்வெடுத்தேன்.

14.12.2012 காலையில் ஒரு மகிழ்வுந்தில் கண்காட்சிக் கூடத்திற்குச் சென்றோம். குவைத் வாழும் பொறியாளர்களும், தமிழ் நண்பர்களும் அன்புடன் வரவேற்றனர். ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம். கண்காட்சி தொடக்கவிழா காலை 10 மணியளவில் அமைந்தது, பொறியாளர் திரு. இராமராஜ் அவர்கள் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார்கள்.

கண்காட்சியின் தொடக்கவிழாவில் பொறியாளர்  திரு.செந்தமிழ் அரசு அவர்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள். தமிழகத்தில் பொதிகைத் தொலைக்காட்சியில் எங்கள் உள்ளம் இனிக்கும்படி செய்திபடித்த அதே செந்தமிழ் அரசு அவர்களை இருபதாண்டு இடைவெளிக்குப் பிறகு பார்த்தேன். தோற்றம் மாற்றம்கொண்டு விளங்கினார். அதே இனிமை ததும்பும் தமிழ் ஒலிப்பைக் கேட்டு வியந்தேன். செந்தமிழ் அரசு பொறியாளர் என்று அறிந்ததும் இன்னும் வியப்பு இருமடங்கானது.

பொறியாளர் செந்தமிழ் அரசு அவர்களின் தந்தையார் இராமநாதன் செட்டியார் அவர்கள் சென்னைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர் எனவும் பரிபாடல் உள்ளிட்ட நூல்களுக்கு உரை எழுதியவர் எனவும் அறிந்தபொழுது ஐயா செந்தமிழ் அரசு அவர்களைச் சந்தித்ததைப் பெருமையாகக் கருதினேன். உடன் பேராசிரியர் இராமநாதன் செட்டியார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பைத் தந்து உதவும்படி கேட்டேன். இசைவு தந்தார்.

கண்காட்சியைத் திறந்துவைத்த பிறகு மேலோட்டமாக ஒரு பார்வையிட்டேன். தமிழ்நாட்டையே இறக்குமதி செய்தமைபோல் பல்வேறு அரங்குகள் விளங்கின. தஞ்சைக் கோயில், கங்கைகொண்டசோழபுரம், மாமல்லபுரம், இராமேசுவரம், என்று தமிழகத்தின் புகழ்பெற்ற கோயில்கள் யாவும் படத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

தேர், வண்டி, முக்காலி, உலக்கை, உரல், அம்மிக்குழவி, ஆட்டுக்கல் என்று நம் மரபை நினைவூட்டும் பொருட்களைப் பார்த்து மகிழ்ந்தேன். பனைப்பொருட்கள், கோரைப்பொருட்கள் காட்சிக்கு இருந்தன. உணவுப்பொருள்கள், கறிகாய், மலர், மூலிகைப்பொருட்கள், புத்தக அரங்கு என்று அனைவருக்கும் வியப்பூட்டும் வகையில் பலவகைப் பொருட்கள் காட்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. பார்வையிடவும், நிகழ்ச்சியில் பங்கேற்கவும் வந்திருந்த பொறியாளர்கள், பல்வேறு நிலைகளில் பணிபுரியும் தோழர்களைக் கண்டு உரையாடி மகிழ்ந்தேன்.

காலை 11 மணிக்கு மேல் மேடை நிகழ்வுங்கள் தொடங்கின. பொங்குதமிழ் மன்றத்தின் தோழர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்றுக் கண்காட்சியின் நோக்கம் பற்றி உரையாற்றினர். உள்ளூர்ப் பேச்சாளர்கள் பலரும் பலவகைப் பொருளில் பேசினர். நான் தமிழக நாட்டுப்புறப்பாடல்கள் குறித்து இரண்டு பிரிவாக இரண்டுமணிநேரம் உரை நிகழ்த்தினேன். தமிழக நாட்டுப்புறப்பாடல்களின் தொன்மையை எடுத்துரைத்து நடவுப்பாடல்கள். கும்மிப்பாடல்கள், கோலாட்டப் பாடல்களை நினைவூட்டினேன். அரங்கில் இருந்தவர்கள் அமைதியாக என் உரையைச் செவி மடுத்தனர். பகலுணவு முடிந்தது.

மீண்டும் மாலையில்  குவைத் வாழும் தமிழ் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பேசினர். சிறுவர்களும் பெரியவர்களும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். கண்காட்சிக்கு மக்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இரவு நண்பர்களிடம் விடைபெற்று, நண்பர் சம்போடை கிருட்டினமூர்த்தி அவர்களின் மகிழ்வுந்தில் அறைக்குத் திரும்பினேன்.

15.12.2012 காலையில் பொறியாளர் செந்தமிழ் அரசு அவர்கள் காலைச்சிற்றுண்டிக்கு அழைப்பு விடுத்தார். நானும் பொறியாளர் இராமன்(திருத்துறைப்பூண்டி) அவர்களும் புறப்பட்டோம். திரு.செந்தமிழ் அரசு அவர்களும் எங்கள் வண்டியைத் தொடர்ந்து வந்தார். எங்கள் வண்டிகள் குவைத்தில் புகழுடன் விளங்கும் சரவணபவன் உணவகத்தில் நின்றன. சரவணபவன் உணவகத்தின் அமைப்பைக் கண்டு வியந்தேன். தூய்மைக்கும் சுவைக்குப் பெயர்பெற்ற அந்த நிறுவனம் மேலும் தன் தரத்தைப் பறைசாற்றிகொண்டு அழகிய கடற்கரை ஓரம் நிற்கின்றது. காலைச்சிற்றுண்டியைச் சுவைத்து உண்டோம். தமிழக உணவான இட்டிலி, துவையல், குளம்பியுடன் காலை உணவு முடிந்தது. பொறியாளர் செந்தமிழ் அரசு அவர்கள் அந்தக் கடையின் தொடர் வாடிக்கையாளர் என்பதால் கடை ஊழியர்கள் எங்களை மதிப்புடன் நடத்தினர். கடையின் சிறப்பினை அரசு அவர்கள் எடுத்துரைத்தார்.

உணவுக்குப் பிறகு நாங்கள் கண்காட்சி அரங்கிற்குச் சென்றோம். பகல் முழுவதும் நண்பர்களுடன் உரையாடுவதில் பொழுது கழிந்தது. அங்கு வந்திருந்த ஒளிப்படக் கலைஞர்கள் என்னைப் பல கோணங்களில் படம் எடுத்து வழங்கினர். கேரளாவிலிருந்து இவர்கள் குவைத்துக்குத் தொழில் நிமித்தம் வந்தவர்கள். இவர்களின் கடமையுணர்ச்சியும், பொறுப்புணர்ச்சியும் கண்டு அனைவரும் பாராட்டினோம். மாலையில் அவர்களுக்கு ஒரு நினைவுப்பரிசில் கொடுத்துப் பாராட்டியதில் அவர்கள் மிக மகிழ்ந்தார்கள்.

மாலையில் நிறைவு விழா தொடங்கியது. செந்தமிழ் அரசு அவர்கள் தமிழர் பண்பாடு குறித்து உரையாற்றினார். நான் நிறைவுரையாகச் சிலர் கருத்துகளைச் சொல்லி என் உரையை நிறைவு செய்தேன்.

நிறைவாகத் தோழர் தமிழ்நாடன் அவர்கள் நன்றியுரை என்ற அமைப்பில் கண்காட்சி தொடக்கம் முதல் நிறைவு வரை சந்தித்த இடர்களை எடுத்துரைத்து, உதவியர்கள் அனைவருக்கும் முறையாக நன்றி தெரிவித்தார். எனக்கு ஒரு நினைவுப்பரிசு வழங்கினார்கள். இரண்டு மரப்பாச்சி சிலைகளையும் வழங்கினார்கள்.

மரப்பாச்சி மரம் என்று நினைக்காமல் அதனை உயிர் உள்ள குழந்தையாக நினைத்துப்போற்றும் நம் மரபைத் தமிழ்நாடன் நினைவுகூர்ந்து பரிசிலாகக் கொடுத்தமை எனக்கு மகிழ்ச்சி தந்தது. இரண்டு மரப்பாச்சிகளையும் பாதுகாப்பாகத் தமிழகத்திற்குக் கொண்டுசெல்வேன். அதுபோல் தமிழகத்திலிருந்து ஒளிப்படங்கள் எடுத்து வழங்கிய புதுவை முருகன், ஓவியர் அன்பழகன், திருமுதுகுன்றம் முனைவர் இரத்தின.புகழேந்தி, ஆசிரியர் சான்போசுகோ உள்ளிட்டவர்களுக்குச் சான்றிதழ் வழங்கினர். அனைவரிடமும் விடைபெற்றுகொண்டு நண்பர் சம்போடை கிருட்டினமூர்த்தி அவர்களுடனும் பட்டுக்கோட்டை சத்தியா அவர்களுடனும் இரண்டாம் நாள் இரவு அறைக்குத் திரும்பினேன்.





கண்காட்சியைத் திறந்து வைத்தல்



செந்தமிழ் அரசு அவர்களுடன் மு.இ



நினைவுப்பொருள் வழங்குதல்



குழந்தைகளின் ஆடல்



வருங்கால மாதவிகள்



இந்தப் பூக்கள் விற்பனைக்கு அல்ல




சிற்பம் குறித்த செய்திகளை விளக்கும் அரங்கம்


இசைக்கருவிகள் குறித்த அரங்கு



தேர்வுக்குப் படித்தவர்கள்



தமிழக உணவு வகைகளைப் பதம் பார்க்கும் பார்வையாளர்கள்



கைவினைப் பொருட்களை நோட்டமிடும் பெண்கள்



ஞாயிறு, 16 டிசம்பர், 2012

குவைத் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சியில் என் பட்டறிவு…



       குவைத் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் பொறிஞர் சேதுமாதவன் அவர்களுடன் மு.இளங்கோவன்

  குவைத் பொங்கு தமிழ் மன்றமும் தமிழ்நாடு பொறியாளர் குழுமமும் ஏற்பாடு செய்திருந்த இரண்டுநாள்(14,15-12.2012) கண்காட்சிக்குச் சிறப்பு விருந்தினனாகக் குவைத் நாட்டிற்கு அழைக்கப்பெற்றிருந்தேன். திரு. தமிழ்நாடன் அவர்கள் இணையம் வழியாக என் முயற்சிகளை அறிந்து எனக்கு இந்த வாய்ப்பை வழங்கினார்.


  11.12.2012 இரவு புதுவையிலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1 மணியளவில் சென்னை மீனம்பாக்கம் வானூர்தி நிலையம் வந்தேன். நண்பர் சீனு அவர்கள் என் பயண ஏற்பாட்டுக்கு உதவினார். சென்னை வானூர்தி நிலையம் வந்தவுடன் தம்பி சிலம்பரசன் அவர்கள் குவைத் கண்காட்சிக்குக் கொண்டுபோவதற்குத் திருவள்ளுவர் சிலை, துணிமணிகள் சிலவற்றுடன் வந்து காத்திருந்தார். அவற்றை வாங்கிக்கொண்டேன். வானூர்தி நிலைய ஆய்வுகளுக்கு என்னை உட்படுத்திக்கொண்டேன். 

  காலை 5.45 மணிக்குக் குவைத் வானூர்தி புறப்பட்டது. குவைத் நேரப்படி காலை 8.30(இந்திய நேரம்11 மணி) மணிக்குக் குவைத் வந்து சேர்ந்தேன்.

  வானூர்தி நிலைய ஆய்வுகளை முடித்துக்கொண்டு வெளியே வந்தபொழுது பொறியாளர் சேது மாதவன்(கடலூர்) எனக்காகக் காத்திருந்தார். இருவரும் இணைந்து அவரின் இல்லத்துக்கு மகிழ்வுந்தில் சென்றோம். குவைத் நாட்டின் திட்டமிட்ட நகரமைப்புகளும் சாலை வசதிகளும் எனக்குப் பெரும் மகிழ்வைத் தந்தன. போக்குவரவு நெறிமுறைகளை ஓட்டுநர்கள் சிறப்பாகப் பின்பற்றுகின்றனர். எல்லாம் நம்மூர் ஓட்டுநர்கள்தான் கோலோச்சுகின்றனர்.


குவைத் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் மு.இளங்கோவன்

  குவைத் நகரத்தின் தெருக்கள் தூய்மையாக இருந்தன. சாலையை ஒட்டி மணல்வெளிகள் காட்சியளிக்கின்றன. நண்பர் சேதுமாதவன் அவர்கள் குவைத் நாட்டின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே வந்தார். பொருட்களைக் கொண்டுபோய் வீட்டில் வைத்தோம். ஒரு குளியல் நடந்தது. இருவரும் பகலுணவுக்கு அருகில் இருந்த பாகில்(Fahaheel) நகரத்திற்குச் சென்றோம். தமிழர்கள் நடத்தக்கூடிய கடை என்பதால் தமிழர்கள் கடைக்குள் வருவதும் உரையாடியபடி உண்பதும் வெளியேறுவதுமாக இருந்தனர். உணவுக்குப் பின் இருவரும் அறைக்குத் திரும்பினோம். ஓய்வெடுக்கும்படி என்னைப் பணித்தனர். சிறிது நேரம் பயணக்களைப்பில் கண்ணயர்ந்தேன்.

  மாலையில் நண்பர் பழமலை கிருட்டினமூர்த்தி அவர்கள்(கங்கை கொண்டசோழபுரம் அடுத்த சம்போடை ஊரினர்) என்னைக் காண வந்தார். இருவரும் முன்பே அறிமுகம் ஆனவர்கள். இருவரும் அருகில் இருந்த நகரத்திற்கு இரவு உணவுக்குப் புறப்பட்டோம். குவைத் – சவுதி சாலையில் வண்டியை ஒரு பெரும் ஓட்டம் விட்டார்.

  30 ஆம் எண் சாலையை ஒட்டி இருந்த கன்னெய்(பெட்ரோல் தூய்மைசெய்யும் நிலையங்கள்) நிலையங்களை(Refineries) எனக்கு விளக்கியபடி வந்தார். இரவில் ஒளிவெள்ளத்தில் கன்னெய்த் தூய்மை நிலையங்கள் மின்னின. பாதுகாப்பு மிகுதி என்பதால் பல அடுக்கு முள்வேளி இட்டுக் காத்து வருகின்றனர். வெளி ஆட்கள் உள்ளே செல்ல இயலாது என்று கூறி ஒருவாறு எனக்குக் கன்னெய்த் தூய்மைப்பணிகளை விளக்கினார். 

  கடற்கரையின் ஓரமாகத் தூய்மைப்பணி நிலையங்கள் இருப்பதால் வெளிநாடுகளுக்கு எண்ணெய்க் கப்பலில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்ற விவரத்தையும் சொன்னார். குவைத் நாடு வெப்பம் மிகுதி என்று அறிந்து அதற்கான வெப்ப உடைகளுடன் வந்திருந்தேன். இங்கு வந்த பிறகுதான்  கடுங்குளிரும் இருக்கும் என்று அறிந்தேன். உடல் நடுங்கின. நண்பர்களின் குளிர் ஆடைக்குள் மறைந்தேன்.

  இரவு உணவுக்கு ஒரு தமிழரின் கடைக்கு அழைத்துச் சென்றார் நண்பர் சம்போடை கிருட்டினமூர்த்தி. ஒரு கோழியை உறித்து எண்ணெயில் பொறித்துக் கொண்டு வைத்தனர். முன்பாக ஒரு பரோட்டைவை உடைத்து உள்ளே போட்டிருந்ததால் கோழியின் சில பகுதிகளை மட்டும்தான் உண்ணமுடிந்தது. இருவரும் திணறினோம். அளவாக உண்டு முடித்து மீதியை வீட்டுக்குக் கட்டிக்கொடுக்கும்படி வேண்டினோம். அமெரிக்காவில் இதே முறை இருப்பதை உணர்ந்தவன் அல்லவா? பெருமையோடு மீதியைக் கட்டிக்கொண்டோம். இந்தக் காட்சியை நம் ஊரில் உள்ள மக்கள் பார்த்திருந்தால் திட்டித் தீர்த்திருப்பார்கள்.

  குளிர்க்குடிப்பு ஒன்றை வாங்கிக்கொண்டு நண்பர் கிருட்டினமூர்த்தியின் அறைக்குச் சென்றோம். அங்குச் செயங்கொண்டம், மதுரை சார்ந்த ஊரிலிருந்து வந்த தோழர்கள் தங்கியிருந்தனர். அவர்களைக் கண்டு உரையாடி அவர்களுக்கு என் வாழ்த்தைச் சொல்லி விடைபெற்றேன்.

  நண்பர் கிருட்டினமூர்த்தி அவர்கள் பள்ளி இறுதி வகுப்புவரை படித்தவர். ஆனால் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தமிழ்க்கவிதைகளில் நல்ல பயிற்சியுடையவர். குவைத் வாழ் தமிழர்களால் நல்ல பேச்சாளர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் தமிழ் இலக்கியப் போக்குகள் குறித்து உரையாடியபடி நான் தங்குமிடம் வந்து சேர்ந்தேன். இரவு சிறிது நேரம் இணையத்தில் உலவினேன். குடும்பத்தாருக்குச் செய்தி தெரிவித்தேன். நாளைய நிகழ்வுகளை மனத்தில் தேக்கியபடி ஓய்வுகொண்டேன்…