நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
விபுலாநந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விபுலாநந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 செப்டம்பர், 2016

கோமேதகவல்லி செல்லத்துரை அவர்களுடன் நேர்காணல்…


கண்ணம்மை அக்கா எனப்படும் கோமேதகவல்லி

தவத்திரு விபுலாநந்த சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அறிவதற்கு இலங்கையின் மட்டக்களப்பை அடுத்துள்ள காரைதீவில் வாழ்ந்துவரும் கண்ணம்மை அக்கா அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தேன். இவரின் இயற்பெயர் கோமேதகவல்லி என்பதாகும். 87 அகவையாகும் இவர் விபுலாநந்தரின் தங்கை மகள் ஆவார். சுவாமிகளின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளச் சொன்னவுடன் இனிய நினைவுகளை நினைத்து நினைத்துப் பகிர்ந்துகொண்டார். சுவாமிகளின் தாயார் பெயர் கண்ணம்மை என்பதால் கோமேதகவல்லி என்ற தம் இயற்பெயரைச் சொல்லாமல் கண்ணம்மை என்றே சுவாமிகள் அழைப்பாராம். தமக்குச் சுவாமிகள் பல கடிதங்கள் எழுதிப் படிக்கவும், முன்னேறவும் செய்துள்ளதை மகிழ்ச்சிபொங்க எடுத்துரைத்தார். சுவாமிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கொழும்புவில் தங்கியிருந்தபொழுது நேரில் பார்த்த சான்றாக இவர் உள்ளார். அதுபோல் சுவாமிகளின் உயிர் பிரிந்து, உடலை மட்டக்களப்புக்குக் கொண்டுவந்து அடக்கம்செய்தபொழுது இறுதிக்கடன்களிலும் இவர் பங்குகொண்டுள்ளார். கண்ணம்மை அக்காவுடன் உரையாடிய விவரங்களை நேரம் அமையும்பொழுது விரிவாக எழுதுவேன்.


நன்றி: சிவம் வேலுப்பிள்ளை, காசுபதி நடராசா

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

அருள்திரு விபுலாநந்தர் அவர்களின் மறைவறிந்து வரலாற்றுப் பேரறிஞர் தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் இயற்றிய இரங்கல் பாடல்!




அருள்திரு விபுலாநந்த அடிகள்


சோழர் வரலாறு என்றவுடன் நம் நினைவுக்கு வரும்பெயர் தி. வை. சதாசிவ பண்டாரத்தார் என்பதாகும். இவர்தம் வரலாற்றுப் பெருநூல் வெளிவந்த பிறகு பல்வேறு புதினங்கள், திரைப்படங்கள் சோழர் வரலாறு தாங்கி வெளிவந்தன. அந்த அளவு இவர்தம் நூல் தமிழகத்தில் அறிவுப்புரட்சியை உண்டாக்கியது. இவர் பாண்டியர் வரலாறு உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் ஆராய்ச்சியாளராக இருந்து தமிழ்ப்பணியாற்றிய பெருமகனார். குடந்தையை அடுத்த திருப்புறம்பியம் என்னும் ஊரைச் சார்ந்தவர். திரும்புறம்பியப் போர் வரலாற்று முதன்மை வாய்ந்த போராகும்

கல்வெட்டுப் புலமையும் வரலாற்றுப் புலமையும் இலக்கியப் புலமையும் கொண்ட இவ்வறிஞர் பாட்டுத்துறையில் வல்லார் என்பதை இதுநாள்வரையில் அறியாமல் இருந்தேன். அருள்திரு விபுலாநந்தர் வாழ்க்கை வரலாற்றைத் தேடிக் கற்கத் தொடங்கியபொழுது, விபுலாநந்தர் மறைவையொட்டி இவர் எழுதிய பாடல்கள் என்னை வியப்படைய வைத்தன. என்னே கற்பனை! என்னே அரிய சொல்லாட்சி! என்னே பாட்டுநடை! என்று வியப்புற்றேன். பாட்டு ஆர்வலர்களின் பார்வைக்கு அப்பாட்டுத் தேனமுதைப் படைக்கின்றேன்.


அந்தோ! விபுலாநந்த அறிஞநீ யவனிதுறந் தகன்றா யென்னுஞ்
சிந்தாகுலச்செய்தி செவிமடுக்க யாஞ்செய்பவஞ் செப்பற் பாற்றோ
எந்தாய்நின் னருண்முகத்தை யென்றுகொலோ காண்பேமென் றேங்கி யேங்கி
நந்தாத பெருந்துயருள் நனிமூழ்கி யிஞ்ஞான்று நடுக்குற் றேமால்.

உற்றாரை யான்வேண்டேன் ஊருடன்பேர் வேண்டேனென் றுரைத்தா யந்நாள்
கற்றாரை யான்வேண்டே னெனமொழியு மொருநிலையைக் காணே னென்று
சொற்றாய்நீ கலைஞரெலாந் துயர்க்கடல்வீழ்ந் தரற்றநிலந் துறத்தல் நன்றே
கற்றார்க்கோர் உறுதுணையாம் விபுலாநந் தப்பேர்கொள் கலைவல் லோனே

இந்நாளில் துறவியென இயம்பிடுவோர் எழில்மாடத் தினிதே தங்கி
உன்னாத பொருளில்லை உஞற்றாத செயலில்லை யுன்னைப் போலப்
பன்னாளு மக்கட்குப் பணிபுரிந்து மகிழ்வுற்றோர் பாரில் யாவர்
பன்னாடும் போற்றுமெங்கள் விபுலாநந் தப்பேர்கொள் பாவல் லோனே.

முத்தமிழும் பயின்றிந்நாள் முறையாக வாய்ந்தோர்யார் மொழிமி னென்றோர்க்(கு)
உத்தமநீ யுள்ளாயென் றுணர்த்திமிக விறுமாந்தேம் ஓரா தெம்மை
இத்தலத்தே விட்டகன்றாய் இதுவோநின் றண்ணளிதான் இயம்பாய் ஐயா
வித்தகனே விழுத்தவத்து விபுலாநந் தப்பேர்கொள் மேன்மை யோனே.

எங்கள்தமிழ்த் தாய்க்கந்நாள் எழிற்சிலம்பொன் றளித்தபிரான் இளங்கோ வேந்தன்
துங்கவிபு லாநந்தத் தூயோனா யிவ்வுலகில் தோன்றி முன்னாள்
சங்கமிருந் தாய்ந்தவிசைத் தமிழதனை யாழ்நூலாகத் தந்த பின்னே
புங்கமிகுந் திருக்கயிலை புகுந்ததனால்  மற்றிதனைப் புலங்கொள் வீரே!



நன்றி: தமிழ்ப்பொழில் இதழ்

சனி, 27 ஆகஸ்ட், 2016

விபுலாநந்தர் மறைவுக்கு உரைவேந்தர் ஔவை. சு.துரைசாமி பிள்ளை எழுதிய இரங்கற் பாக்கள்!




யாழ்நூல் தந்த விபுலாநந்தர் மறைவுச் செய்தி கேட்டுத் தமிழகத்தின் மிகச் சிறந்த அறிஞர்கள் கையற்றுக் கலங்கியுள்ளனர். அவர்களுள் உரைவேந்தர் ஔவை. சு. துரைசாமி பிள்ளை அவர்கள் எழுதிய பாக்கள் நெஞ்சை உருக்கும் பாடல்களாக உள்ளன. உரைவேந்தரின் உரைவளம் மாந்திய தமிழுலகம் அவரின் பாட்டமிழ்தம் பருகுவதற்குப் படியெடுத்து வழங்குகின்றேன்.

விபுலாநந்தரின் பன்முக ஆற்றலையும், பண்புநலன்களையும், பைந்தமிழ்ப் பணிகளையும் எடுத்துரைக்கும் உரைவேந்தர் அவர்கள் அகத்தியருக்கும் மேலான ஆற்றலுடையவராக விபுலாநந்தரைப் பரவிப் பாடுகின்றார். நம்மிடமிருந்து பிரித்து, விபுலாநந்தரைக் கொண்டு சென்ற கூற்றுவனை இகழ்ந்துபேச நம்மை அழைப்பதன் வாயிலாக அடிகளார் மேல் கொண்டிருந்த பற்றினை உரைவேந்தர் புலப்படுத்தியுள்ளார்.

வன்சொல்லால் கூற்றுவனை வையலாம் வம்மினோ
இன்சொல்லால் நம்மை இனிதளித்த- தென்முனிக்கு
மேலாம் அருள்விபு லானந்த மாமுனிவிண்
பாலாகச் செய்த பழிக்கு!

என்பது அப்பாடல்.

எண்ணாள ரென்கோமற்(று) எழுத்தாள ரென்கோ
இயலாய தமிழாளர் இசையாள ரென்கோ
கண்ணாளும் விஞ்ஞானக் கலையாள ரென்கோ
கருத்தாளும் செஞ்சொல்லின் கவியாள ரென்கோ
எண்ணாளும் இவ்வண்ணம் எண்ணிமகிழ்ந் தோமை
எண்ணியெண்ணிப் புண்ணாக இனிச்செய்த தந்தோ
தண்ணாளர் அருள்விபுலானந்தர் எங்கள் இறையைத்
தனிக்கொண்டு பிரிவித்த தறமில்லாக் கூற்றே

என்று பாடியுள்ளதில் ஒரு நுட்பம் உள்ளதைக் கவனிக்க இயலும். சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் அழகினைப் புகழும் கோவலன்,

மலையிடைப் பிறவா மணியே என்கோ
லையிடைப் பிறவா வமிழ்தே யென்கோ
யாழிடைப் பிறவா விசையே யென்கோ

என்று பாடுவான். அவ்வகையில் சிலப்பதிகாரத்தில் பேரீடுபாடுகொண்ட விபுலாநந்தரை உரிய சொல்லெடுத்து, “என்கோ” என்று உயர்த்திப் பாடியுள்ளமை உரைவேந்தரின் கலையுள்ளத்திற்குச் சான்றாக உள்ளது.


சனி, 8 பிப்ரவரி, 2014

யாழ்நூல் விபுலாநந்தரின் சிறப்புகள்



விபுலாநந்த அடிகளார்(1942 இல் தோற்றம்)

சிலப்பதிகாரத்தை வரி வரியாகக் கற்கும்பொழுது புதுப்புது உண்மைகள் எனக்குப் புலனாவது உண்டு. மூல நூல் தரும் அறிவு விருந்து ஒரு புறம் எனில் உரையாசிரியர்கள் கண்டுகாட்டும் உண்மைகள் பெருவிருந்தாகக் கண்முன் விரிந்து தெரியும். இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களுடன் உடனுறைந்து சிலம்பிலும் தமிழிசையிலும் தோய்ந்தமையே இவற்றிற்கெல்லாம் காரணம் என்று பணிவுடன் தெரிவிப்பதில் மனநிறைவு அடைகின்றேன்.

சிலப்பதிகாரத்தை அண்மையில் ஊன்றிக் கற்றவண்ணம் இருந்தேன். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுகாதையில் வரும் யாழாசிரியனின் அமைதியைப் பற்றிக் குறிப்பிடும் வரிகள் மீண்டும் மீண்டும் நினைவில் தோன்றின. இந்த வரிகள் உணர்த்தும் உண்மையை முழுமையாக உள்வாங்கமுடியவில்லையே என்ற ஏக்கம் எழுந்தது. யாழ் பற்றி எழுந்த யாழ்நூலைப் படித்துப்பார்ப்போமே என்று நுழையும்பொழுது சிலம்பில் கூறப்படும் யாழ் குறித்த 25 அடிகளை விளக்கத்தான் விபுலாநந்தர் யாழ்நூல் உருவாக்கியுள்ளார் என்று அறிந்தபொழுது வியப்பு பன்மடங்கானது.

பன்மொழிப் புலவரான விபுலாநந்தர் இராமகிருட்டிண மடத்துப்பணி, இலங்கைப் பேராதனை பல்கலைக்கழகப் பணி, அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணி என்று பல நிறுவனங்களில் பணிபுரிந்தவர். கிழக்கிலங்கையில் சிவானந்த வித்தியாலயம் என்ற பாடசாலையை நிறுவி வழிநடத்தினார். வழக்கொழிந்த இசைக்கருவியையும் தமிழர்களின் இசையையும் மீட்க அவர்கொண்டிருந்த இடைவிடா முயற்சி எண்ணி எண்ணி வியக்கின்றேன்.


அடிகளார் அவர்களின் யாழ்நூல் கரந்தைத் தமிழ்ச்சங்கம் வாயிலாக 1947 இல் வெளிவந்தது. 05.06.1947 இல் திருக்கொள்ளம்பூதூரில் ஆளுடைய பிள்ளையார்  திருநாளில் அக்கோயிலின் திருமுன்றிலில் அறிஞர்கள் முன்னிலையில் நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் வெளிவருவதற்கு கோனூர் ஜமீன்தார் பெ. ராம. ராம. சிதம்பரஞ் செட்டியார் பேருதவி புரிந்துள்ளதை நூல்வழி அறியமுடிகின்றது. சித்திரபானு ஆண்டு, ஆவணித் திங்களில் முன்னுரை எழுதப்பட்டு, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நூலின் முடிவுரை எழுதப்பட்டுள்ளது. முன்னுரையும் முடிவுரையும் நூலுக்கு இணையான பெருமைக்கு உரியன. பாயிரவியல்யாழுறுப்பியல்இசை நரம்பியல்பாலைத் திரிபியல்பண்ணியல்தேவாரவியல்ஒழிபியல் என,  7 இயல்களால் ஆனது இந்த நூல்.





பத்தொன்பதாம் நூற்றாண்டின் 1892 ஆம் ஆண்டு தமிழர்களின் இலக்கிய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க ஆண்டாகும். அந்த ஆண்டில்தான் பெரும் பேராசிரியர் உ.வே.சா. அவர்களால் சிலப்பதிகாரம் முழுமையான பதிப்பாகத் தமிழர்களுக்குக் கிடைத்தது. அந்த ஆண்டில்தான் மார்ச்சுத் திங்கள் 29 ஆம் நாள் தவத்திரு விபுலாநந்தர் அவர்கள் மயில்வாகனன் என்னும் இயற்பெயரில் பிறந்தார்.

கொழும்பில் வாழ்ந்த கைலாசப்பிள்ளை முதலியார் அவர்களிடம் சிலப்பதிகாரத்தைக் கற்ற விபுலாநந்தர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியபொழுது தஞ்சை க. பொன்னையா பிள்ளை அவர்களிடம் இசைநுட்பங்களைக் கற்றுள்ளார்.

1936 மாசித் திங்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பழந்தமிழரின் இசை சிற்பம் கலையறிவு என்ற தலைப்பில் ஆறு விரிவுரைகள் நிகழ்த்தியுள்ளார். செனட் அவுசில் நடைபெற்ற இந்த விரிவுரை ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பெற்றதால் பிறமொழியினரும் கேட்டுப் பாராட்டியுள்ளனர். இந்து நாளிதழில் (The Hindu) இவ்வுரை விவரம் வெளிவந்துள்ளது. யாழ்க்கருவியை ஓவியமாக வரைந்து அடிகளார் விளக்கியுள்ளார். இந்த உரையை நேரில் கேட்ட பெரும் பேராசிரியர் உ.வே.சா. அவர்கள் தனிநூலாக இதனை வெளியிடும்படிக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிகழ்வுகளையெல்லாம் அடிகளாரின் முன்னுரை வாயிலாக அறியலாம்.

அடிகளாரின் உரை திருச்சிராப்பள்ளி வானொலியிலும் (இருமுறை), சென்னை வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ளது.

விபுலாநந்தரின் ஆக்கங்கள் 4 தொகுதிகளாக வெளியிடப்பெற்றுள்ளன (மதங்க சூளாமணி மொழிபெயர்ப்பு, யாழ்நூல்தவிர).இசைபற்றிய கட்டுரைகளை அதிகம் எழுதியுள்ளார். தமிழர் நாகரிகம் இலக்கியவரலாறு நாடகம் மொழியியல் தொடர்பாகவும் அவரது ஆய்வுகள் அமைந்துள்ளன.

தமிழிசை மீட்சிக்கு தவத்திரு விபுலாநந்தர் அவர்கள் ஆற்றியுள்ள பணியும் யாழ்நூலும் விரிவான ஆராய்ச்சிக்கு உரியன.