நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
வாணிதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாணிதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஜூலை, 2015

மரபுக்கொரு தமிழியக்கன்


                                                             
                                                       

                          புதுச்சேரியில் புகழ்பெற்ற தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன் ஆவார். கவிஞரேறு வாணிதாசனாரின் அன்புக்குரிய மாணவர். இவர்தம் பாடல்கள் தமிழ்மரபு போற்றுவன. இவர் பற்றி முன்பும் எழுதியுள்ளேன். தம் ஆசான் திறம் நினைந்து பன்மணிமாலை எனும் பாத்தொகுப்பை வழங்கியுள்ளார். நாளை வெளியீடு காண உள்ள இந் நூலுக்கு யான் வரைந்த அணிந்துரை இஃது.                                                                                              

அறத்திற்கொரு புலவன் திருவள்ளுவன்; சொல்லுக்கு ஒரு புலவன் கம்பன்; தனித்தமிழுக்கு ஓர்அரிமா பாவாணர் எனத் தனித்திறம் பெற்றோர் வரிசை நீளும்;  அவ்வரிசையில்  மரபுக்கொரு  புலவர் தமிழியக்கன் என்னுமாறு இலக்கணமரபு, இலக்கிய மரபெனத் தலைசிறந்து நிற்பவர் - எந்தை, என் ஆசானெனப்  போற்றத் தக்கவர், தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன். அகத்திலும்  புறத்திலும் மரபுவழாது ஒண்டமிழுக்கு உரம்சேர்க்கின்றவர் இவர்; இதனை, இலக்கியமாகவும், இலக்கணமாகவும் தந்துள்ள நூல்களே வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்வுயர்வுக்குக் காரணமாய் அவரே இயம்புவனவாகவும், நாம் உணர்வனவாகவும், கீழ்வருவன புலப்படுத்தும்:

# தக்க பருவத்தில் கவிஞரேறு வாணிதாசனாரை ஆசானாகப் பெற்றமை;

# தனித்தமிழ் இதழ்களான தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் போன்றவற்றின் தொடர்புகள், இவற்றின் சிறப்பாசிரியரான, பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நேரடித் தொடர்புகள்;

# தனித்தமிழ் அரிமா தேவநேயப்பாவாணருடன் இலக்கண இலக்கியம் சார்ந்த நேரடித் தொடர்புகள்     இவற்றால், ‘தனித்தமிழ்ப் பாவலர்' தமிழியக்கன் எனப் போற்றப்பட்டவர்.                               

தம் ஆசானாம்- கவிஞரேறு வாணிதாசனாரின், நூற்றாண்டு விழா நினைவாக இன்றவர் ஆக்கி வெளியிட்டுள்ள மரபிலக்கியமான கவிஞரேறு வாணிதாசனார் பன்மணிமாலை' என்னுமிந்நூல் பன்மணிகளாகவே  மின்னுகின்றன. இதனைப் புலவரேறு வ.கலியபெருமாள் அவர்கள் திறம்பட ஆய்வு செய்துள்ளார்; ஆதலின் யான் நூலாய்வில் புகாமல் சிலவற்றைக் கூறிக் கற்க வழிவிடுகிறேன்.

மரபிலக்கியத்தில் இரட்டை மணிமாலை, நான்மணி மாலை என்பனவே காணப்படினும், அவற்றின் வழி, பன்மணிமாலை எனும் புதிய மரபாக்கம் தான் கவிஞரோறு வாணிதாசனார் பன்மணிமாலை'. தம் ஆக்கங்களில் ஏதாவதொரு புதுமையைக் காட்டித் தம் ஆசானைப் பின்பற்றி நிற்கிறார். இயற்கையப்          போற்றுதல், புரட்சிக் கருத்துகளைப் போற்றுதல், பகுத்தறிவுக் கருத்துகளைப் போற்றுதல் போன்ற பிறவற்றிலும் புதிய, மரபுநெறி வழா முறைகளைப் பின்பற்றுவதில் தமிழியக்கன் தனித்தே விளங்குகிறார்.

இந்நூலாசிரியர் வாணிதாசனாரின் மாணவராதலின் நூல்நெடுக ஆசானின், சிறப்புகளாக அன்பு, அமைந்த பண்பு, விருந்தோம்பல், விழுதுகளை உருவாக்கும் வேட்கை, செயல், கல்விச்சிறப்பு, பாப்புனை  திறம், ஆக்கிய நூல்கள், அடைந்த சிறப்புகள், தமக்கும் ஆசானுக்கும்  உள்ள தொடர்புகள்  எனத் தம் ஆசான் சிறப்புகளையே விரிவாகக் கூறிச் செல்கிறார்.

கவிஞரேறு வாணிதாசனாரைத், தனித்தமிழ்ப்பாவலர் தமிழியக்கனார், தம் படைப்புகளின் வழி, மொழி, இனம், நாடு, பகுத்தறிவுக்கொள்கை, பொதுவுடைமைக் கொள்கை ஆகியவற்றுடன் இலக்கிய இலக்கணப் போக்கில், புதுமை, தொல்புகழ் மரபு மாறாத புலமை, இவற்றோடு தொடர்ந்து பீடுநடை போடுகிறார் என்பதை இந்தப் படைப்பாலும் அறியலாம்.

வாணிதாசனாரின் வளமான மரபுக்குத் தரமான தமிழியக்கன் எடுத்துக்காட்டாகத் திகழ்வது கண்டு, கற்போர் நெஞ்சம் களிப்புறும்; பாராட்டும்! 

வாழ்க வளர்க அவர்தம் தனிதமிழ்த்தொண்டு! 

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

புதுவைப் படைப்பாளர்கள் - தேசியக் கருத்தரங்கம்


புதுச்சேரி, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத் தமிழ்த்துறை சார்பில் புதுவைப் படைப்பாளர்கள் - தேசியக் கருத்தரங்கம் கீழ்வரும் நிகழ்ச்சி நிரலின்வண்ணம் நடைபெற உள்ளது. தமிழார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

தொடக்க விழா
நாள்: 16. 04. 2014, புதன் கிழமை நேரம்: காலை 10 மணி
இடம்: மையக் கருத்தரங்க அறை, பட்ட மேற்படிப்பு மையம், 
இலாசுப்பேட்டை., புதுச்சேரி

தலைமை: முனைவர் இரா. சுவாமிநாதன்

வரவேற்புரை: முனைவர் சிந்தா நிலா தேவி

சிறப்புரை: தமிழ்மாமணி மன்னர்மன்னன்

ஆய்வுரைகள்

பாவேந்தர் பாரதிதாசன் : முனைவர் மறைமலை இலக்குவனார்
கவிஞரேறு வாணிதாசன் : கவிஞர் கல்லாடன்
கவிஞர் தமிழ் ஒளி : திரு. . இராசரத்தினம்

நிறைவு விழா (16.04. 2014) பிற்பகல் 3 மணி

சான்றிதழ் வழங்கிச் சிறப்புரை : முனைவர் வி. முத்து

நன்றியுரை: முனைவர் மு.இளங்கோவன்

அனைவரும் வருக!


திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கலைமாமணி கல்லாடன் அவர்கள்



புதுவைக்குப் புகழ்சேர்க்கும் பெருமக்களுள் கலைமாமணி கல்லாடன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் கவிஞர் வாணிதாசன் அவர்களின் உடன்பிறந்தார் ஆவார்.

கலைமாமணி கல்லாடன் அவர்கள் 30.07.1943 இல் திருபுவனையில் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் அரங்க. திருக்காமு-சுப்பம்மாள் ஆவர். கலைமாமணி கல்லாடன் அவர்களின் இயற்பெயர் ஜானகிராமன் என்பதாகும்.

கல்லாடன் அவர்கள் தொடக்கக் கல்வியைச் சேலியமேடு, பாகூரில் படித்தவர். புதுவை பிரெஞ்சுக் கல்லூரியிலும், தாகூர் கல்லூரியிலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் படித்தவர். தமிழ்,ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு மொழிகளில் வல்லவர்.

கடந்த நாற்பதாண்டுகளாக அரசு பணியில் இருந்து, நிறைவாக அரசு சார்புச்செயலாளர் நிலையில் பணி ஓய்வுபெற்றவர். தமிழ்ப்பற்றுடன் அரசு பணிகளில் ஈடுபட்டவர்.

கதை,கவிதை.கட்டுரை என்று பல வடிவங்களில் இவரின் படைப்புகள் அமைந்துள்ளன. மொழிபெயர்ப்புத் துறையிலும் ஆற்றல் பெற்றவர்.

இவர்தம் முதல்நூல் தேன்மொழி என்பது சிறுகாப்பியங்களின் தொகுதியாகும். இவருடைய புரட்சிநிலா காப்பியம் தமிழக அரசின் பரிசைப் பெற்றது. திருக்குறளுக்கு இனிய எளிய தெளிந்த உரையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வரைந்துள்ளார். உலகத் திருக்குள் மையம், தமிழய்யா கல்விக்கழகம், சிறுவர் இலக்கியச் சிறகம் போன்ற அமைப்புகள் இவரின் முயற்சியைப் பாராட்டியுள்ளன. புதுவை வரலாற்றுச்சங்கத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்றுத் திறம்படச் சங்கத்தை நடத்தி வருகின்றார்.

கலைமாமணி கல்லாடன் அவர்களின் படைப்புகளைப் பல்வேறு இதழ்கள் வெளியிட்டுள்ளன. வானொலி, தொலைக்காட்சிகளிலும் பங்கேற்றுத் தமிழ்ப்பணியாற்றியுள்ளார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், மாநாடுகளை ஏற்பாடு செய்து தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளார்.

கவிதைச் செல்வர், கவிமாமணி, பாரதிதாசன் விருது, கவித்தென்றல், பாவேந்தர் மரபுவழிப் பாவலர், முடியரசன் விருது, சுந்தரனார் விருது, கவிச்சிகரம், சான்றோர் மாமணி, குறள்நெறிச்செம்மல், குறள் உரைக்கோ, திருக்குறள் உரைச்செம்மல், புதுவை அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

கலைமாமணி கல்லாடன் படைப்புகளுள் சில:

தேன்மொழி(1979)
தை மகள் வந்தள்(1984)
புரட்சிநிலா(1985)
பேசும் விழிகள்(1986)
சிந்தனை ஒன்றுடையாள்(1991)
பூவைப் பறித்த பூக்கள்(1993)
மேடைக்கனிகள்(1998)
திருக்குறள் உரைக்கனிகள்(2000)
செந்தமிழ்க் கனிகள்(2001)
புதுச்சேரி மரபும் மாண்பும்(2002)
மேடை மலர்கள்(2003)
திருக்குறள் மணிகள்(2003)
வரலாற்று வாயில்கள்(தொகுப்பு)(2003)
இலக்கிய வண்ணங்கள்(204)
கவிச்சித்தரின் படைப்புகள் ஒரு கணிப்பு(2005)
வாணிதாசனின் பாட்டுவளம்(2006)
திருக்குறள் உரைஒளி THIRUKKURAL-READINGS & REFLECTIONS (2007)
எண்ணங்களின் வண்ணங்கள்(2008)
கல்லாடன் கவிதைகள்(2009)
காலந்தோறும் கல்லாடம்(2012)

முகவரி:

கலைமாமணி கல்லாடன் அவர்கள்
திருக்குடில்
14, முதல் குறுக்குத் தெரு
நடேசன் நகர் கிழக்கு,
புதுச்சேரி-605 005

9443076278

வியாழன், 18 செப்டம்பர், 2008

தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன்


பாவலர் தமிழியக்கன்

பாவலர் தமிழியக்கன் அவர்கள் புதுச்சேரி மாநிலம் பாகூர் வட்டம் சேலிய மேட்டில் 24.02.1946 இல் பிறந்தவர்.பெற்றோர் கி.இராமு,இராசம்மாள் ஆவர். இவர்தம் இயற்பெயர் இரா.வேங்கடபதி ஆகும்.உயர்நிலைப் படிப்பைப் பிரஞ்சுமொழி வழியாகக் கற்றவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரஞ்சுமொழி அறிந்தவர்..கருநாடக இசையிலும்,யாப்பறிவும் நிரம்பப் பெற்றவர். இலக்கிய, இலக்கண அறிவை கவிஞர் வாணிதாசன் வழியாகப் பெற்றவர்.

மொழிஞாயிறு பாவாணர்,பாவேந்தர்,பெருஞ்சித்திரனார் கொள்கைகளில் ஆழ்ந்த பற்று கொண்டவர்.புதுச்சேரி மாநிலத்தின் பல பள்ளிகளில் ஆசிரியராகவும் பின்னர் அரசு தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரி யராகவும் விளங்கியவர்.பள்ளியில் நல்லாசிரியராக விளங்கிய இவருக்குப் புதுச்சேரி அரசின் இராதாகிருட்டிணன் விருது,இந்திய நாட்டரசின் நல்லாசிரியர் விருது உள்ளிட்ட உயரிய விருதுகள் பல கிடைத்துள்ளன.

கம்பன் புகழ்ப்பரிசில்,அன்னை தெரேசா இலக்கிய விருது உள்ளிட்டவையும் இவர் பெற்ற சிறப்புகளுள் அடங்கும்.
தமிழிக்கனார் பல்வேறு பாட்டரங்குகளிலும் கலந்துகொண்டு பாடல் வழங்கியுள்ளார்.கவிஞர் வாணிதாசன்,பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட பெரும் பாவலர்களின் தலைமையில் பாட்டரங்கேறிய பெருமைக்குரியவர்.

தமிழியக்கனின்  பாடல்கள் சில பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. அறிவியல் செய்திகளைப் பாட்டாக்கியும் பாவாணர்,வாணிதாசன் மேல் பிள்ளைத்தமிழ் பாடியும் புகழ்பெற்றவர்.

இவர்தம் படைப்புகளை விடுதலை,உண்மை,இனமுரசு,கண்ணியம், கவிஞன்,தென்மொழி, தமிழ்ச்சிட்டு, கவியுகம்,கவிக்கொண்டல்,வெல்லும் தூயதமிழ், தெளிதமிழ்,தேனருவி உள்ளிட்ட இதழ்கள் வெளியிட்டு வருகின்றன.பாட்டும் உரையும் வரையும் ஆற்றல்கொண்ட இவர் தம் நூல்களின் பட்டியல் கீழ்வருவனவாகும்.

01.அறிவியல் இலக்கியம்
02.உயிரியல் பாட்டு
03.நிலைத்திணைப் பாட்டு
04.உயிரியல் மாமாவின் அறிவியல் கதைகள்
05.வாணிதாசன் பிள்ளைத்தமிழ்
06.எழுச்சி விதைகள்
07.பாவாணர் பிள்ளைத்தமிழ்
08.எழிலின் சிரிப்பு
09.தமிழ்மகள் பாவை
10.முல்லைப்பண்ணில் ஒரு முகாரி
11.வேலிகள்
12.சிறுபறை(சிறார் பாடல்கள்)

நிலைத்திணைப்பாட்டு(1989)
உயிரியல் பாட்டு(1986)
அறிவியல் இலக்கியம்(இ.ப.1987)
பாவாணர் பிள்ளைத்தமிழ்(1996)
முல்லைப்பண்ணில் ஒரு முகாரி(2001)
வாணிதாசன் பிள்ளைத்தமிழ்(1994)


பாவலர் தமிழியக்கன் அவர்களின் முகவரி:
பாவலர் தமிழியக்கன்
54,முதல் தெரு,தெ.இராமச்சந்திரன் நகர்,
புதுச்சேரி-605 013
பேசி : 0413- 2240115