நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
லெனின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லெனின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 ஜூன், 2012

இளம் அகவையில் ஒரு மூதறிவாளர் மருத்துவர் ப.உ.இலெனின்…


மருத்துவர் ப.உ.இலெனின்

திரைப்பட இயக்குநர் ஒளிஓவியர் தங்கர்பச்சான் அவர்களின் பதிப்பகம் வெளியிட்ட ஓமியோ மருத்துவர் ப.உ.இலெனின் அவர்களின் நூல்கள் வழியாகத்தான் மருத்துவர் ப.உ.இலெனின் அவர்கள் எனக்கு அறிமுகம் ஆனார். பிறகுதான் தெரிந்தது எங்கள் பேராசிரியர் த. பழமலை அவர்களின் மகன் இவர் என்று.

புதுச்சேரிக்கு நான் பணிக்கு வந்த பிறகு மருத்துவர் ப.உ.இலெனின் அவர்களுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. நானும், என் குடும்பத்தாரும் தொடர்ந்து அவரிடம் மருத்துவம் பார்த்துக்கொள்வதுடன் பேராசிரியர் தமிழண்ணல், சிங்கப்பூர் கோவலங்கண்ணன் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களுக்கும் மருத்துவம் பார்க்க அழைத்துச் சென்றுள்ளேன். சமநிலத்தில் நடப்பதற்கே பெரும் துன்பம் அடைந்த பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் மருத்துவரின் மருத்துவமுறையால் மாடிப்படிகளில் ஏறி இறங்கும் அளவிற்கு முன்னேற்றம் கண்டார். தொடர்ந்து அவர் குடும்பத்தாருக்கு மருந்து மாதந்தோறும் நான் வாங்கி அனுப்புவேன். தமிழண்ணல் அவர்கள் வரைவோலையாகப் பணம் அனுப்பிவைப்பார்கள்.

மருத்துவர் ப.உ.இலெனின் அவர்கள் நல்ல மருத்துவர் என்பதுடன் மனிதநேயப் பற்றாளராகவும் விளங்குபவர். ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும் மருத்துவம் பார்ப்பார் என்பதைச் சிலர் மட்டும் அறிவோம். மருத்துவர் இலெனின் அவர்கள் வானொலி, தொலைக்காட்சி, செய்தி ஏடுகளில் தம் மருத்துவ அறிவைப் பொதுமக்களுக்கு உரையாடல் வழியும் எழுத்துக்கள் வழியும் வழங்கி மகிழ்பவர்.

மருத்துவர் ப.உ. இலெனின் அவர்கள் 26.06.1970 இல் பிறந்தவர். பெற்றோர் பேராசிரியர் த.பழமலை, ஆசிரியர் உமா.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி, மற்றும் மருத்துவமனையில் BH.M.S., மற்றும் M.D மருத்துவப் படிப்புகளை நிறைவுசெய்து, 1994 முதல் கடந்த பதினெட்டு ஆண்டுகளாகப் புதுச்சேரியில் மருத்துவப்பணியாற்றி வருகின்றார். இதுவரை மருத்துவம் சார்ந்து 36 நூல்களை எழுதியுள்ளார். மருத்துவத்தில் இவர் எழுதாதத் துறைகளே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் நூல்களை எழுதியுள்ளமை இவரின் பலதுறை அறிவுக்குச் சான்றாகும்.

மருத்துவர் ப.உ.இலெனின் அவர்களின் மருத்துவத்துறைப் பேரறிவு கண்டு இந்திய அரசு சுகாதாரத்துறையின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் ஆலோசகராகவும், உயர்நிலைக்குழுவின் ஆட்சிமன்ற உறுப்பினராகவும் அமர்த்தியுள்ளது.

மருத்துவர் ப.உ. இலெனின் அவர்கள் இனிய பேச்சுக்கும் கனிந்த பார்வைக்கும் உரியவர். திருவள்ளுவர் திருக்குறளில் மருந்து அதிகாரத்தில் மருத்துவருக்குக் குறிப்பிடும் அனைத்து இலக்கணங்களையும் இலெனின் பெற்று விளங்குகின்றார். தம்மை நாடிவரும் நோயுற்றோருக்கு அன்புகுழைத்து மருத்துவம் பார்க்கும் இவர் மக்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் அறிமுகப்படுத்தி அதனைத் தீர்க்கும் வழிமுறைகளைத் தமிழில் நூல்களாகத் தொடர்ந்து எழுதி மக்கள் மருத்துவராக விளங்க, வாழ்த்தி மகிழ்கின்றேன். மருத்துவர் இலெனின் அவர்களால் மருத்துவம் தமிழில் செழிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

மருத்துவரின் தொடர்புமுகவரி:

மருத்துவர் ப.உ.இலெனின் அவர்கள்,
மனைஎண் 8, குண்டுசாலை ரோடு,
நடேசன்நகர், (இந்திராகாந்தி சிலை அருகில்)
புதுச்சேரி- 605 005

தொலைபேசி(அலுவலகம்: 0091 413 2204876
செல்பேசி: 0091- 9345456056