நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
மெய்யப்பன் பதிப்பகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மெய்யப்பன் பதிப்பகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஜூன், 2018

மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள்





  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் . மெய்யப்பன் மணிவாசகர் நூலகம், மெய்யப்பன் பதிப்பகம் என்ற பெயர்களில்  பதிப்பகங்களைத் தொடங்கித் தமிழுலகில் அனைவரின் பாராட்டையும் பெற்றவர். தமிழாய்வு நூல்களை அதிகமாக வெளியிட்ட பெருமை பேராசிரியர் ச. மெய்யப்பன் அவர்களைச் சாரும். மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் நூல்களைச் செம்பதிப்பாக வெளியிட்ட ச. மெய்யப்பனார் பின்னாளில் துறைவாரியான நூல்களைத் தக்க அறிஞர்களைக் கொண்டு எழுதச் செய்து வெளியிட்டு, பதிப்புலகில் தமக்கெனத் தனித்த இடத்தினைப் பெற்றவர். மு.வை.அரவிந்தன் எழுதிய உரையாசிரியர்கள், பேராசிரியர் சு. சக்திவேல் எழுதிய நாட்டுப்புறவியல் ஆய்வு, பேராசிரியர் ஆறு. இராமநாதன் எழுதிய நாட்டுப்புறவியல் துறை சார்ந்த களஞ்சியங்கள், அறிஞர் ச.வே.சுப்பிரமணியனாரைக் கொண்டு வெளியிட்ட தமிழ் இலக்கிய நூல்கள் யாவும் மெய்யப்பன் பதிப்பகம், மணிவாசகர் நூலகத்தின் புகழ்பேசுவன. மணிவாசகர் நூலகம் இதுவரை சற்றொப்ப 3500 நூல்களையும், மெய்யப்பன் பதிப்பகம் இதுவரை சற்றொப்ப 750 நூல்களையும் வெளியிட்டுத் தமிழ்ப்பணியாற்றியுள்ளன. இந்தப் பதிப்பகங்களை இன்று திறம்பட நடத்திவரும் உரிமையாளர் ச. மீனாட்சி சோமசுந்தரம், மேலாளர் திரு. இராம. குருமூர்த்தி ஆகியோர் நம் நன்றிக்குரியவர்கள்.

  முனைவர் ச. மெய்யப்பனை நான் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் போற்றுவதற்குக் கடமைப்பட்டவன். 1992 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று ச.மெய்யப்பனாரை முதன்முதல் சந்தித்தேன். தம் குருநாதர் வ.சுப. மாணிக்கனார்மேல் இவருக்கு இருந்த பற்றுமை அறிந்து வியந்தேன். வ.சுப.மாணிக்கனார் எழுதிய நூல்களை அன்பளிப்பாகக் கொடுத்து,  நூல்களின் வழியாக வ.சுப. மாணிக்கனாரை எனக்கு அறிமுகப்படுத்திய பெருமகனார் ச.மெய்யப்பன் ஆவார். நான் சென்னைக்குப் பணியின் காரணமாகச் சென்றபொழுது (1997), தம் இல்லத்துக்கு, அலுவலகத்துக்கு அழைத்து அரிய நூல்கள் எழுதுவதற்குரிய களங்களை அறிமுகம் செய்வார். அன்றைய நாளில் அவற்றை என்னால் நிறைவேற்றி வழங்கமுடியவில்லை. வருங்காலங்களில் மெய்யப்பன் பதிப்பகத்திற்காகச் சில நூல்களை எழுதி வழங்கி, பேராசிரியர் ச. மெய்யப்பனாரின் விருப்பத்தினை நிறைவேற்றுவேன். இது  நிற்க.

  தொல்காப்பியத்தை எளிமையான உரைகளுடன் பல்வேறு அறிஞர்கள் பதிப்பித்துள்ளனர். ஆய்வுப் பதிப்புகளும் மிகுதியாக வெளிவந்துள்ளன. மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ள முனைவர் ச.வே. சுப்பிரமணியனாரின் தொல்காப்பிய விளக்கவுரை என்னும் நூலும், Tholkaappiyam in English Content and Cultural Translation (With short commentary) என்னும் ஆங்கில நூலும் தொல்காப்பியத்தைத் தொடக்க நிலையில் பயில்வார்க்குப் பயன்படும் சிறந்த நூல்களாகும். பயன்படுத்துவதற்கும் எடுத்துச்செல்வதற்கும் இவை ஏற்ற நூல்களாகும்.

 முனைவர் ச.வே.சுப்பிரமணியன் பதிப்பித்துள்ள தொல்காப்பியம் விளக்கவுரை, Tholkaappiyam in English Content and Cultural Translation (With short commentary) என்னும் நூல்களைப் பெற விரும்புவோர் மணிவாசகர் பதிப்பகத்தின் சென்னை, சிதம்பரம், மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி கிளைகளிலும் பெற்றுக்கொள்ளலாம். அஞ்சலிலும் அனுப்புவார்கள்.

ச.வே.சுப்பிரமணியனாரின் தொல்காப்பியம் விளக்கவுரை - உருவா 200 - 00

Tholkaappiyam in English Content and Cultural Translation  -  உருவா 250 -00
(With short commentary) 

தொடர்புக்கு:

மணிவாசகர் நூலகம்,
31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108
பேசி:  044- 2536 1039


வியாழன், 28 ஆகஸ்ட், 2008

மதுரையில் பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் பன்னிரு நூல்கள் வெளியீட்டு விழா...


பேராசிரியர் தமிழண்ணல்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழண்ணல் அவர்களின் பன்னிரு நூல்கள் வெளியீட்டு விழா இன்று 28.08.2008 வியாழக்கிழமை மாலை ஆறு மணிக்கு மதுரையில் உள்ள திருவள்ளுவர் அரங்கம் நான்காம் மாடியில்(நியூ காலேஜ் கவுசு)- நடைபெறுகிறது.மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்கள் இவைகளாகும்.

மெய்யப்பன் பதிப்பகத்தைச் சேர்ந்த ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் இரா.கற்பககுமாரவேல் அவர்கள் தலைமை தாங்கி நூலினை வெளியிடுகிறார்கள்.திருக்குறள் செம்மல் ந.மணிமொழியன் அவர்கள் சிறப்புரையாற்றவும், தவத்திரு நாச்சியப்ப ஞானதேசிக அடிகளார் வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர்.

முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களும் முனைவர் இரா.மோகன் அவர்களும் நூல்கள் குறித்த திறனாய்வு வழங்க உள்ளனர். பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் ஏற்புரையாற்ற உள்ளார்.பேராசிரியர் நிர்மலா மோகன் அவர்கள் நன்றியுரையாற்றுவார்.மதுரையில் நடைபெறும் இவ்விழாவில் தமிழகத்தின் அறிஞர் பெருமக்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
வெளியிடப்பட உள்ள நூல்கள்

1.தமிழ் அறிவோம்! தமிழராய் வாழ்வோம்!
2.ஊடகங்களால் ஊரைப் பற்றும் நெருப்பு
3.தமிழ்வழிக் கல்விச் சிந்தனைகள்
4.எழுச்சி தரும் எண்ணச்சிறகுகள்
5.தொல்காப்பிய இலக்கிய இயல்
6.தேடவைக்கும் திருவள்ளுவர்
7.தமிழ் ஒரு "கட்டமைப்புள்ள" மொழி
8.செம்மொழிப் படைப்பியல்
9.செவ்விலக்கியச் சிந்தனைகள்
10.ஒப்பிலக்கியப் பார்வையில் சங்க இலக்கிய ஒளிச்சுடர்கள்
11.வள்ளுவர் நெறியில் வாழ்வது எப்போது?
12.இனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள்