நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
மு.இளங்கோவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மு.இளங்கோவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 ஜூலை, 2018

இளங்கோவன் என்னும் எம் ஏந்தல்!... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை





சொல்லாய்வறிஞர் ப. அருளி அவர்களால் சிறப்பிக்கப்படும் இனிய பொழுது... 
(படத்தில்: தாமரைக்கோ, தூ. சடகோபன், மு.இளங்கோவன், ப.அருளி ஐயா, ’தழல்’ ஆசிரியர் தேன்மொழி அக்கா, திருவாசகம், தண்ணுமை ஆசான் திருமுடி. சேது. அருண், சாமி கச்சிராயர் 
(கோப்புப் படம்) .

 மிகப் பல்லாயிரந் தமிழாசிரியப் பெருமக்கள் – பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் நல் வாய்ப்பு வாய்ந்திருக்கும் நம் புதுவையுட்பட்ட தமிழ் மாநிலத்தில் – தமிழின் அடிப்படைத் திறங்களுணர்ந்து அதனுள் தோய்ந்து தெளிந்து – அதன் வரலாற்றுச் சிறப்புக்களை ஆழமாக அறிந்து – அது பெற்றிருக்கும் பெருமைகளையும் திருமைகளையும் துலங்கத் தெரிந்து – அதனை நம் தமிழ்ப்பிள்ளைகள் நெஞ்சில் வலிவார்ந்த படிவுகளாக உருவாக்கும் உயரிய போக்கு வாய்ந்தவர்கள் விரல்விட்டு எண்ணிவிடத் தக்க சிற்றளவுக்கும் மிக மிகக் குறைவானவர்களே உளர்!... பல்லாயிரக் கணக்கிலாகப் பணம் திரண்டு பாயும் வாய்ப்பு, ஆசிரியர் தொழிலுக்கு இன்று வாய்த்துள்ளது!

 தமிழ்தான் தம் வாழ்க்கையினையே இப்படி வாழ வைத்திருக்கின்றது – வளங்கொழிக்க வைத்திருக்கின்றது எனும் அடிப்படை நன்றியுணர்வு வாய்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவானதாகவே உள்ளது!

 எவர்க்கு இலாது போயினும் தமிழாசிரியப் பெருமக்களுக்கு இத்தகு நன்றியுணர்வு ஓரளவுக்கேனும் இருந்தாதல் வேண்டும்.

“நைந்தாய் எனில் நைந்துபோகும் என் வாழ்வு!
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே”

என்ற பாவேந்தர் வரிகள், நம் தமிழாசிரியர்கட்கே இருந்தாக வேண்டிய மனப் பண்பின் பாங்கினைப் பதிவுசெய்து வைத்துள்ளமையை ஒவ்வொரு தமிழாசிரியரும் நன்கு உள்ளத்துள் பதியமிட்டு வைத்துக்கொள்ள வேண்டும்!

 ஐம்பது – அறுபதுகளில் (1950-59.. 1960-1969), நாங்கள் பயின்ற பள்ளிகளில், உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர் என்போர்க்கு இருந்த தனீஇ மதிப்பு, மிகுந்த பெருமை சான்றது! அவர்கள்பால் ஓர் இனம்புரியாத அகப் பாசவுணர்வு எங்கள் நெஞ்சங்களில் படர்ந்திருந்தமையை இன்னும், இன்றும்  எண்ணின் உவப்பால் உகளிக்குதிக்கும் எழுச்சிநிலையே நினைவில் நீடி இன்புறுத்துகின்றது! அக்காலத் தமிழாசிரியர்கள் மிகப் பெரும்பாலரும் அப்படிக்கொத்த பெருமிதவுணர்வோடேயே நன்னடையிட்டார்கள்! இன்றோ, தமிழாசிரியர்களே தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொண்டு இயங்குகின்றார்கள்! உயரிய ஊதியம் கிடைப்பதன் வழி கொஞ்சம் விரைத்தவாறு நிற்கின்றார்களே தவிர, தமிழால் தழைப்பெய்திய உள்ளங்கொண்டோராயிலர்!

 தமிழில்  கையெழுத்துப்போடும் அளவுக்குக்கூட மானமும் சூடும் வாய்ந்தோராகத் தமிழாசிரியருள் மிகப் பலர் இலர்! வாங்கும் ஊதியப் பணத்திலும் பணியிலும் இதன்வழி ஏதேனும் சிக்கல் நேரலாமோ என்றவாறு அஞ்சும் அகநடுங்கிகளாகவே பலர் இன்றும் உளர்! நாம் தமிழாசிரியர் என்று தலைநிமிர்த்தி நடக்கும் நடையராகப் பலர், இலர்!

 தம் பிள்ளைகளைத் தாம் பயிற்றுவித்துக்கொண்டிருக்கும் – அதேவகை அரசுத் தமிழ்ப் பள்ளிகளில் பயிலச்சேர்க்கும் மனபாங்கினராகவும் பலர் இலர்! பிள்ளைகளின் எதிர்காலம், - தமிழ்வழிக் கல்வியால் பாழாய்ப் போய்விடும் என அஞ்சும் அச்சங்கொள்ளிகளாய்ப் புதுவையிலும் – தமிழகத்திலும் பரவலாக மிகப் பலர், உளர்!

 தாம் பயிற்றுவிக்கவேண்டிய அரசுத் தமிழ்ப்பள்ளிப் பிள்ளைகளின் பாடங்களில் மனம் பற்றாது, உரியவாறு செயற்பற்றாது – ஆங்கிலக் கொள்ளைவிலைக் கொலைப்பள்ளிகளில் பயிலும் தத்தம் பிள்ளைகளை – உரிய நேரத்தில் அழைத்துச்சென்று உள்நுழைத்துவிடவும் – உண்ணவேண்டிய இடைநேரத்தில் தூக்குச்சட்டியொடு சென்று அவர்கட்கு ஊட்டி வரவும் – பள்ளி நிறைவுறும் நேரத்திற்கும் முன்னீடாக வண்டியொடு சென்று வாயிலருகில் காத்திருந்து பற்றி அழைத்துவரவும் வினைகள் பல மேற்கொண்டு – ஏமாறியராய் வேறு வழியின்று வந்து மாட்டிக்கொண்டு மனங்குமுறும் தலைகாய்ந்த ஏழைபாழைகளின் – கால்வழியினராய பிள்ளைகளுக்கு இரண்டகம் இழைக்கும் இரும்பாணி நெஞ்சத் தமிழாசிரியர் பலர் ஆங்காங்கும் உள்ளமையை வெளிப்படையாகவே நம் வாழ்க்கைப் போக்கிடையே நன்கு அறியலாகும்!

 தமிழகத்திலும் – புதுவையிலும் பொதுவாழ்வினராகிய நம் மக்களின் தமிழ் மானவுணர்வின்மைக்குக் காரணர்களாகவே தாங்கள் உள்ளோம் என்னும் உண்மையை, அன்னோர் ஆழ்ந்து கருதிப் பார்க்க வேண்டும்!  தமிழாசிரியர் என்போர்க்கு மட்டும் – தமிழ் மானம் எனும் ஒன்று வாய்த்துவிடுமாயின் – தமிழர் வாழ்விலும் அறிவிலும் – மலர்ச்சியும் வளர்ச்சியும் எழுச்சியும் ஏற்றமும் மாற்றமும் உறுதியாய்ச் சிறந்தொளிரும்!

 இத்தகு தமிழ் மானம் வாய்ந்தவராய் – தகைசான்ற தூய நன்மனத்தராய் - இத் தமிழகத்திலும் புதுவையிலுமாக ஆங்கொருவரும் ஈங்கொருவருமாக நெறிவிலக்கர்களாக நின்றுயரும் சிறப்புக்குரியோர் சிலருள் – முனைவர் பேராசிரியர் திருமிகு மு.இளங்கோவன் அவர்களும் ஒருவராகுவர்! முப்பான் ஆண்டுகளுக்கும் முன்னீடிருந்தே – இத் தமிழ்த்தோன்றலின் இளந்தைக் காலத்தினின்று இன்றுகாறுமான படிப்படியான நிலை வளர்ச்சிகளைக் காணும்- கண்டு களிப்பெய்தும் வாய்ப்பு எனக்குத் தொடர்ந்திருந்தது! பள்ளி – உயர்நிலைப் பள்ளி – செந்தமிழ்க் கல்லூரி – பல்கலைக்கழகங்கள் எனும் உயர்ச்சிப் படிக்கட்டுகளில் உயர்ந்துயர்ந்து கற்றுச் செழித்துச் சென்ற காலத்தினிடையே – அவ்வக்காலும் தொடர்ந்து தொடர்புவைத்திருந்தவர், இவர்!

 தன்மானஞ்சான்ற தனித்தமிழ் அறிஞர்களான பாவல்லோரான பாவேந்தர் – பாவலரேறு - சுப.மாணிக்கனார் என்றவாறியங்கிய பெருந்திறச் சான்றோர்களின் எழுச்சியாக்கங்களிற் படியப் படியத் தொண்டுமனம் என்பது இயல்பாகவே இவர்க்குத் தொற்றிக் கொண்டது! அறிவார்வமும் – ஆய்வுணர்வும் - தமிழின நன்னோக்கும் – மண்ணல நோக்கும் இவர் நெஞ்சில் படர்ந்தன! இவரின் தமிழ் உள்ளத்து வயலில் – தமிழியல்சார் விளைச்சல்களும் ஆண்டாண்டுக்கும் செழிப்பெய்தின.

 தமிழ் ஆய்விலே அகம் பற்றிக்கொண்டு – அகப்பட்டுக்கொண்டு தத்தம் வாழ்வையே தொலைத்து நலிவித்துவிட்ட தமிழ் அறிஞர் பலரின் குடும்ப நிலைகள் பற்றியும் இவர் கவலைப்பட்டுக் கசிந்துருகினார்! அக்குடும்பத்தார்க்குத் துணைநிற்க வேண்டியது தன் கடமைகளுள் ஒன்றெனவும் உறுதியெடுத்தவராய் அவற்றிற்குரிய செயல்பாடுகளில் தன் நேரத்தையும்- உழைப்பையும்  - தன் சொந்தப் பொருளையும் போட்டுப் – பல்வேறு பயன்கள் அன்னின்னோர்க்கு உருவாக்கித் தந்த வள்ளல், இவர்! பெருமழைப் புலவர் குடும்பத்தார்க்கு இவ்வகையிலாக இவர் செய்த  செயல்கள் வியப்புக்கும் – மதிப்புக்கும் உரியன!

 பெரியமனம் பொதிந்த அறிவுழைப்பாளியர் – பெரும் பெருஞ்செயல்களையே செய்து நிற்பவராகுவர்! (“செயற்கரிய செய்வர் பெரியர்” – என நம் வள்ளுவப் பேராசான் வாயுரைத்த செய்தியும், இதுவே!). பெருமழைப்புலவரையும் – பண்ணாராய்ச்சிப் பேரறிஞர் குடந்தை சுந்தரேசனாரையும் – இசையிலக்கண மேதை விபுலாநந்தரையும் – உச்சியில் தூக்கிவைத்து உலாச்செலுத்தும் இவரின் செயல்கள் யாவும் இத் தகு பெருமனத்து இயக்கங்களே!

 தமிழியல் சிறப்பு ஒழுங்கினை நுண்ணிதாகச் சிதைத்து உருக்குலைக்க ஒன்றுந் தெரியாத அற்பாவியரைப் போல நாடகமாடிய சூழ்ச்சியார்ந்த மேற்கட்டு அறிவாளியரிற் சிலர் முயன்றபோதெல்லாம் – உரிய தூய துணை நெஞ்சங்களுடன் கைகோர்த்துக்கொண்டு அவற்றைத் தகர்த்துத் தவிடுபொடியாக்கிய வரலாறுகளையெல்லாம் எம் போல்வார் நன்கு அறிவர்!

 இடைக்கட்டில் – எளிய பொதுக்குடும்பத்தில் முளைத்தெழுந்து துன்பத்தையும் ஏழ்மைத் துயரத்தையும் சுவைத்துப் பதம்பார்த்தவாறே வளர்ந்து படிப்படியாகத் தன்னைத் தானே தூக்கி நிறுத்திக்கொண்டு - வளர்த்தெடுத்துக்கொண்டு வானுலாக் கொள்ளும் செந்தமிழ் வானம்பாடியாய் நம் இளங்கோவன் என்னும் செம்மல் திகழ்கின்றார்!

 தமிழுலகத்தொடு நெஞ்சங்கலந்து தோய்ந்துறையும் சிறப்பு மாந்தராக இன்று தழைத்துத் தமிழ்தொண்டாற்றிவரும் பெருமதிப்புக்குரிய நம் இளங்கோவன் என்றும் எம்போல்வார் நெஞ்சகங்களில் உயரிடம் பற்றி மேலோங்கி நிற்பார்! வினைபலவாற்றி – விளைவுகள் நிறைத்து இம் மண்ணையும் - மக்களையும் – மொழியையும் சிறப்பிப்பார்!

 தூய நன்னெஞ்சமும் – துணிந்த வீறும் – தெள்ளிய அறிவும் – தோற்றப் பார்வையும் ஊற்றுக்கோளும் ஏற்று நிலைநிற்கும் நம் இளங்கோவன் ஏந்தல் – அன்பிலும் மலைநிலையர்! இவர் வாழ்க! இவர் குடும்பம் வாழ்க! இவரின் தமிழ்ச்சுற்றம் சிறக்க! இவரின் நற்பணிகள் மேலும் தொடர்க! தமிழ்மண் செழிக்க!

(11.02.2017 இல் வெளியிடப்பெற்ற என் வாழ்க்கைக் குறிப்புரைக்கும் நூலுக்குச் சொல்லாய்வறிஞர் ப. அருளி அவர்கள் வழங்கிய வாழ்த்துரை. செழுந்தமிழ் நடை கருதியும், நாட்டு நிலை கருதியும் இவண் வெளியிடப்படுகின்றது).

வியாழன், 21 ஜூலை, 2016

அரியலூர்ப் புத்தகத் திருவிழா – 2016


திரைப்பா ஆசிரியர் அறிவுமதி அவர்கள் நூல்களை வெளியிட, மு.இளங்கோவன் பெற்றுக்கொள்ளும் காட்சி

 பேராசிரியர் க. இராமசாமி அவர்கள் திரைப்பா ஆசிரியர் அறிவுமதி அவர்களைச் சிறப்பிக்கும் காட்சி. அருகில் மு. இ.

தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கமும் இணைந்து அரியலூரில் புத்தகத் திருவிழாவை, சூலை 15 முதல் சூலை 24 வரை நடத்துகின்றனஅரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டுத் திடலில் நடைபெறும் இந்த விழாவில் தமிழகத்தின் முன்னணிப் பதிப்பகங்கள் தங்கள் நூல்களை விற்பனைக்கு வைத்துள்ளன. ஒவ்வொரு நாள் மாலையிலும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், அறிஞர்களின் சொற்பொழிவும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இந்த ஆண்டுப் புத்தகத் திருவிழாவில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்,  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் செ. மணியன், முதுமுனைவர் இரா. இளங்குமரனார், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அரங்க. பாரி, திரைப்படப் பாடலாசிரியர் பா. விஜய், முனைவர் சோ. சத்தியசீலன், கவிஞர் தங்கம். மூர்த்தி, மருத்துவர் சு. நரேந்திரன், பேராசிரியர் இரெ. குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

23.07.2016 மாலை பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது. நிறைவு விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். அந்த நாளில் திரைப்பட இயக்குநர்கள் வ. கௌதமன், மு. அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

19.07.2016 (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றியும் நூல்வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டும் சிறப்பித்தார். கானகன் புதினம் எழுதிச் சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருதுபெற்ற லெட்சுமி சரவணக்குமார் இந்த நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டார்.

திரைப்பா ஆசிரியர் கே. அறிவுமதி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கண்ணியம் இதழாசிரியர் முனைவர் ஆ. கோ. குலோத்துங்கன் எழுதிய நூல்களை வெளியிட்டும், மண்மணம் தவழும் சிறப்புரையாற்றியும் அவையினரின் பாராட்டினைப் பெற்றார்.


புரவலர் கதிர். கணேசன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பேராசிரியர் க. இராமசாமி, கு. இராஜபாண்டியன், பெ. மாரிமுத்து, வெ. இராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன. திருக்கோணம் கவிஞர் மூர்த்தி அவர்களின் கிராமியத் தென்றல் நிகழ்ச்சி அனைவரையும் இசை மழையில் நனைய வைத்தது.

மு.இளங்கோவன் சிறப்பிக்கப்படும் காட்சி

மு.இளங்கோவன் உரையாற்றும் காட்சி

செவ்வாய், 2 ஜூலை, 2013

முனைவர் மு.இளங்கோவனின் நூல்கள் வெளியீடு- வரவேற்புப் பதாகை



முனைவர் மு.இளங்கோவனின் செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், கட்டுரைக் களஞ்சியம் நூல்களின் வெளியீடு, புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் 03.07.2013 மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெற உள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு வ. சபாபதி (எ) கோதண்டராமன் அவர்களும், புதுச்சேரி அரசின் மின்துறை, கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தி.தியாகராசன் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகம், புதுவையைச் சேர்ந்த தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வுமாணவர்கள், மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் திரளாகக் கலந்துகொள்ள உள்ளனர். புதுவை மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்து ஆண்டிராய்டில் வழங்கும் நிகழ்வும், நடவுப்பாடல்கள் ஒளிவட்டு வெளியீடும், பாவேந்தரின் முதல்பதிப்புகள் மின்பதிப்புகளாக வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளன. தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம். நிகழ்சிக்கான ஏற்பாடுகளைப் புதுச்சேரி இலக்கிய வட்டத்தினர் செய்துள்ளனர்.

புதன், 29 மே, 2013

புதிய வரவுகள்…






முனைவர் மு.இளங்கோவன் அவ்வப்பொழுது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், கட்டுரைக் களஞ்சியம் என்னும் பெயரில் நூலாக வெளிவர உள்ளது. இரு நூல்களையும் வயல்வெளிப் பதிப்பகம் வெளியிடுகின்றது.

2013, சூன் திங்கள் 7 ஆம் நாள் ( வெள்ளிக்கிழமை மாலை ) நூல்களின் வெளியீட்டு விழா மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் சார்பில் நடைபெற உள்ளது. மலேசியாவின் இலக்கிய ஆர்வலர்கள், தமிழ்ப்பற்றாளர்கள், எழுத்தாளர்கள் இந்த வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.

மலேயா பல்கலைக்கழகத்தின் மொழித்துறையில் பணியாற்றும் திரு. மன்னர்மன்னன் அவர்களும், திரு. செல்வசோதி அவர்களும் ஆசிரியர் திரு. ம.முனியாண்டி அவர்களும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். மலேசியா, சிங்கப்பூரில் இருக்கும் நண்பர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.


நிகழ்ச்சி நிரல் விரைவில் வெளியிடப்படும்.

செவ்வாய், 16 மார்ச், 2010

எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? என் கட்டுரையும், அறிஞர் வா.செ.குழந்தைசாமியாரின் மறுப்புக் கட்டுரையும்

அறிஞர் வாங்கலாம்பாளையம் செ.குழந்தைசாமியார் இந்திரகாந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் துணைவேந்தராகப் பணிபுரிந்தவர் என்பதும்,இணையப் பல்கலைக்கழகத்தின் இந்நாள் தலைவராகவும் இன்னும் அரசு சார்ந்த பல நிறுவனங்கள்,அமைப்புகளில் பலநிலைகளில் பொறுப்பேற்றுள்ளவர் என்பதும் நாம் அறிந்ததே.செம்மொழி மாநாட்டின் தலைமைக் குழுவின் துணைத்தலைவராகவும் இவர் உள்ளார்.சற்றொப்ப அரை நூற்றாண்டுக்காலம் அரசின் உயர் பொறுப்புகளில் இருந்ததால் இவரைக் கல்வியாளர் என்று தமிழ் உலகு மதிக்கிறது.இவர்தம் நூலுக்குப் பேராசிரியர்கள் பலர் திறனாய்வு,ஆய்வுரை, மதிப்புரை,அணிந்துரை எழுதியதுடன் அமையாமல் கருத்தரங்குகள் நடத்தியும்,கூடிப்பேசியும் இவர்போல் ஒரு கவிஞர் இல்லை என்று இன்றுவரை வாயாரப் புகழ்ந்து போற்றிப்பாடியும் வருகின்றனர்.

அவ்வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் பயின்றபொழுது எழுத்துச்சீர்திருத்தம் தொடர்பில் ஒரு கருத்தரங்கும் அறிஞர் வா.செ.கு.அவர்களை மகிழ்ச்சிப்படுத்த நடத்தப்பெற்றது.கருத்தரங்கு நடந்ததன் நோக்கம் அறிஞர் வா.செ.கு.அவர்களின் எழுத்தை நடைமுறைப்படுத்த வழி செய்வதே ஆகும். ஆனால் அங்கு வந்த அறிஞர் இரா.திருமுருகனார்,இறைவிழியனார், தமிழண்ணல், பாலசுந்தரனார் உள்ளிட்டவர்கள் (பெயரில் என் நினைவுக்குறையால் மாற்றம் இருக்க வாய்ப்பு உண்டு)எழுத்துத் திருத்தம் வேண்டாம் என்று வாதிட்டனர்.திருத்தம் வேண்டும் என்றவர்கள் அவரவர்களின் மனம்போன போக்கில் எழுத்தைத் திருத்தலாம் என்றும் தங்கள் திருத்தமே சிறந்தது என்றும் வாதிட்டனர். ஒருவர் தமிழ் எழுத்துகளே வேண்டாம் அனைத்தையும் ஆங்கிலக்குறியீடுகளில் வரையலாம் என்றதுதான் உச்சக்கட்ட வேடிக்கை.இன்னொருவர் புதிய ஐந்து குறியீடுகளில் தமிழை எழுதிவிடலாம் என்றார்.

இன்றும் கூட சில அன்பர்கள் ஆங்கில எழுத்தைகளைப் பயன்படுத்தித் தமிழை எழுதலாம் என்றும் தமிழ்க்குறியீடுகளே வேண்டாம் என்றும் மீயுயர் புரட்சிக்கு வித்திடுகின்றனர்.புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தமிழ் எழுத்துகளைத் திருத்த வேண்டும் என்று நாளும் என் கையில் ஒரு தாளைத் திணிப்பது வழக்கம்.இப்படி ஆள் ஆளுக்குத் திருத்தம் செய்யும் அளவில் தமிழ் இல்லை என்பதை முதலில் மனத்தில் பதிக்க வேண்டும்.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் ஒலி,எழுத்துப் பிறப்பு பற்றி இலக்கணப் புலவர்கள் சிந்தித்து எழுதி வைத்துள்ளதைக் கண்டு மேல்நாட்டு மொழியியல் அறிஞர்கள் வியக்கின்றனர்.அப்படியிருக்க வறியவன் கையில் கிடைத்த அணிகலன் போலத் தமிழ்மொழியின் அருமை அறியாத சிலரிடம் தமிழ்த்தலைமை அகப்பட்டுக்கொண்டதால் தமிழர்கள் யாவரும் கலங்கி நிற்கின்றோம்.

அதனால்தான் தமிழண்ணல்,இரா.இளங்குமரனார்,பொற்கோ,இரா.இளவரசு போன்ற ஊற்றம் செறிந்த தமிழ்ப் பேரறிஞர்களை ஒதுக்கிவிட்டு நாட்டில் பல களியாட்டங்கள் நடந்துவருவதை எம்மனோர் கண்டு வருத்தம்கொள்ள வேண்டியுள்ளது.இன்று தமிழகத்தில் முற்றகாத் தமிழ் வழிக்கல்விக்குரிய வாய்ப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டன.அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தமிழ் வழிப்பள்ளிகள் நடைமுறையில் உள்ளன.ஏழை,எளிய குடும்பம் சார்ந்த பிள்ளைகள் தமிழ் வழியில் படித்து வருகின்றனர். அக்குழந்தைகளின் படிப்புக்கும் வேட்டு வைக்கும் வகையில் இன்று எழுத்துத் திருத்த முயற்சிகளும் அயல்நாட்டில் வாழும் சிலரின் மத்தள வேலைகளும் உள்ளன.

பாரதிதாசன் பரம்பரை என்ற என் முனைவர் பட்ட ஆய்வேட்டிலும் வேறு சில நூல்களிலும் அறிஞர் வா.செ.கு.அவர்களை யான் அவரின் பாப்புனையும் ஆற்றல் போற்றி எழுதியுள்ளதும் இங்கு நினைவிற் கொள்ளத் தக்கதே.அறிஞர் வா.செ.கு.அவர்கள் நீரியல்துறையில் வல்லுநர் என அன்பர்கள் குறிப்பிடுவது உண்டு.ஆனால் அது தொடர்பான அவர் கட்டுரைகள்,நூல்களைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. ஆனால் அவரின் எழுத்துச்சீர்திருத்தம்,அறிவியல் தமிழ்,வள்ளுவம் சார்ந்த நூல்கள் இவற்றைப் படித்துள்ளேன்.அவர் பொழிவுகளைப் பல இடங்களில் கேட்டுள்ளேன்.அவரின் நாற்பதாண்டுக் கால முயற்சியான எழுத்துத்திருத்தம் என்பது விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது என்று நினைத்து, அண்மைக்காலமாக அதனைத் தீவிரப்படுத்தி,தம் செல்வாக்கு கொண்டு நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறார்.தமிழறிஞர்கள் பலரும் காலந்தோறும் இவரின் எழுத்தையும் பேச்சையும் கண்டித்தே வந்துள்ளனர். விரைவில் நடைபெற உள்ள சொம்மொழி மாநாட்டில் எழுத்துத் திருத்தம் தொடர்பில் ஓர் ஆணை பெற்று விட வேண்டும் என்று அரசியலின் உயர்மட்டத் தலைவர்களின் துணையுடன் பல முயற்சிகளைச் செய்து வருகிறார்.

அதன் ஓர் அடையாளமாகப் பொதிகைத் தொலைக்காட்சியில் தோன்றி எழுத்துத்திருத்தம் தேவை என்று உரையாடி வருகிறார்.எழுத்தாளர் முனைவர் திருப்பூர் கிருட்டினன் அவர்களுடன்(ஆசிரியர்-அமுதசுரபி) உரையாடும் நிகழ்ச்சி அடிக்கடி இந்திய அரசின் பொதிகைத் தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பாகிறது. நாட்டு வளங்கள்,வேலை வாய்ப்புகள்,அவலங்கள்,நிகழ்வுகள், கலைக்காட்சிகள் பல இருக்கப் பொதிகை இந்த நிகழ்ச்சியை அடிக்கடி மறு ஒளிபரப்பு செய்வதன் தேவை என்ன?உள்நோக்கம் என்ன? எனப் பொது மக்கள் வினா எழுப்புகின்றனர்.இந்தப் பின்னணி பற்றியெல்லாம் நம் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர்கள் கவலைகொள்ளாமல் ஆறாம் ஊதியக்குழுப் பணப்பயன் எப்பொழுது கிடைக்கும் அல்லது எந்த வகையில் ஆய்வுத்திட்டம் வரைந்தால் செம்மொழி நிறுவனத்தில் அல்லது பல்கலைக்கழக நல்கைக்குழுவில் பணம்பெற்று தமிழ்வளர்க்கலாம்(!) என்று ஆலாய்ப் பறக்கின்றனர்.

இணையத்திலும் எழுத்துத் திருத்திகள் சிலர் பக்குவமாக பொய் புனைந்து எழுதி வருகின்றனர். அவ்வடிமைச் சிந்தனையாளர்கள் சொல்லும் பொய்யுரை என்ன எனில் அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும், மலேசியாவிலும், இங்கிலாந்திலும் படிக்கும் பிள்ளைகள் தமிழ் எழுத முடியாமல் தவிக்கின்றனராம்.(இந்த அடி வருடிகளின் துணையுடன் அந்த அந்த நாடுகளில் சிலரைப் பிடித்து குழந்தைகளுக்குத் தமிழ் எழுதக் குறியீடுகள் இடையூறாக உள்ளன என்று நயப்புரை கூறியும்,தக்க ஆள் பிடித்தும் பொய்யாகக் கையொப்பம் சிலர் பெற்று வந்துள்ள நிகழ்வுகளும் உண்டு.சிங்கப்பூரில் அப்படி எழுத்துக்குறியீடு மாற்றம் வேண்டும் என்று ஒரு கையெழுத்து இயக்கம்(!) நடத்தப்பட்டுக் கையொப்பம் திரட்டப்பட்டுள்ளது என்ற செய்தி சிங்கப்பூரில் உள்ள தமிழர்களுக்கும்,தமிழகத்துத் தமிழர்களுக்கும் தெரியாத செய்தியாகும். ஆனால் இந்தக் கையொப்பத் தாள்களைச் சான்றாகக் காட்டவும் சில எழுத்துத்திருத்திகள் முன்வந்துள்ளனர்.

அயல்நாடுகளுக்குப் பிழைப்புத் தேடிப்போன,மேட்டுக்குடியினரான பிற நாட்டு வாழுநர்களுக்கு வாதிடும் இவர்கள் சொந்த நாட்டுக்குழந்தைகள் தாய்மொழி வழியில் படிக்க வாய்ப்பில்லாமல் இருக்கின்றரே என்று என்றைக்காவது வருந்தியதுண்டா?எழுதியதுண்டா?அரசியல் தலைவர்களைத் தூதுவிடுத்ததண்டா?சீனாவில், சப்பானில் எழுத்துத் திருத்தப்படுகிறது என்று காதில் பூச்சுற்றி அரசியல் தலைவர்களையும் அப்பாவி மக்களையும் மருட்டும் இந்தக் கல்வியாளர்கள் அந்த நாடுகளில் தாய்மொழி வழிக்கல்வி கற்பிக்கப்படுவதை என்றைக்காவது முனுமுனுத்தது உண்டா?.தனக்குத் தேவை என்றால் பெண்ணும் மாப்பிளையும் என்று போற்றும் இவர்கள் வேண்டாம் என்றால் இழிமொழியில் பழிக்கும் சிற்றூர் கல்லா மக்கள் ஒத்தவரே என்க.இவை யாவும் நிற்க.

அண்மையில் தமிழோசை ஏட்டில் நான் எழுதிய எழுத்துச் சீர் திருத்தம் தேவையா என்ற என் கட்டுரை வெளியானது(31.01.2010). இணையத்திலும் அதனைப் பதிந்தேன்.இணையத்தில் என் கட்டுரை வெளிவந்த பிறகு அயல்நாட்டுத் தமிழர்களுக்குத் தமிழகத்தில் நடக்கும் எழுத்துத்திருத்த முயற்சிகள் தெரியவந்தன.மலேசியா,அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் எழுத்துதிருத்த முயற்சியைக் கண்டித்து எழுதினர்.மலேசியாவில் இதனைக் கண்டித்து ஒரு இணையத்தளமே தொடங்கப்பட்டது. தமிழகத்தில் பேராசிரியர் மறைமலை அவர்களின் முயற்சியால் பொறிஞர் இரா.ம.கி.உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட எழுத்தச்சீர்திருத்த எதிர்ப்புக் கருத்தரங்கம் ஒன்று நடந்தது.பேராசிரியர் தங்கப்பா அவர்கள் புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தெளிதமிழ் ஏட்டில் எழுத்துச்சீர்திருத்த முயற்சியைக் கண்டித்தும் தமிழக அரசு இதற்குச் செவி சாய்க்கக் கூடாது என்றும் ஓர் அரிய கட்டுரை எழுதினார்.

மேலும் என் கட்டுரை வெளிவந்தவுடன் அரசுத்துறையில் துணைச்செயலாளர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற க.சி.இராமமூர்த்தி அவர்கள் என் பெயருக்கு மடல் வழி எழுத்து,எண்ணுப்பெயரில் மாற்றம் வேண்டும் என்று சான்று காட்டி ஒரு நல்ல கட்டுரை அனுப்பினார்,பின்னர் அக்கட்டுரை ஓரிரு நாளில் தமிழோசையில் அவர் முயற்சியால் வெளிவந்தது.அதன் பின்னர் ஒரு கிழமை கழித்து நம் வா.செ.கு. அவர்கள் ஐந்து நாள் தொடராக எழுத்துச்சீரமைப்பு தொடர்பில் ஒரு கட்டுரை தமிழ் ஓசையில் வெளியிட்டார்.

எழுத்துச்சீரமைப்பு: இனப்பாதுகாப்புக்கு அவசியம்,தமிழ் ஒரு பண்பாட்டுத் தேவை,அளவில் விதை-விளைவில் விழுது,மாறாத பொருளெதுவும் வளர்வதில்லை,தலைமுறையினர் சுமையைக் குறைப்போம்
(23.02.2010-28.02.2010)என்னும் தலைப்புகளில் மற்றொன்று விரித்தல் என்னும் குற்றத்துடனும், மாறுகொளக்கூறல் என்னும் விதிக்குட்பட்டும்,மிகைபடக்கூறல் எனவும் கூறியது கூறல் என்ற கொடுங்குற்றத்திற்கு ஆட்பட்டும் நம் ஐயாவின் கட்டுரை இருந்தது.அதில் நான் விடுத்த வினாக்களுக்கு உரிய விடை ஒன்றும் இல்லை என்பது அறிந்து திகைத்தேன்.இதே கட்டுரையைத் தமிழ் ஓசையின் சார்பு ஏடனா பசுமைத் தாயகம் சுற்றுச்சூழலிலும் ஐயா அவர்கள் முன்பே சிற்சில மாற்றங்களுடன் வெளியிட்டார்கள்.

அறிஞர் வா.செ.கு.கட்டுரையில் செய்திகள் மிகவும் குறைவாகவும் பொருத்தமற்ற படங்கள் அடைக்கப்பட்டும் இருந்ததை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.நம் கருத்துகளை நிலைநாட்டவும் பிறர் கருத்தை மறுக்கவும் துறைசார் வல்லுநர்களின் கருத்துகளை மேற்கோளாகக் காட்டுவது அறிஞர் உலகும் ஆராய்ச்சி உலகும் பின்பற்றும் நடைமுறை.ஆனால் அவர் கவிதை வரிகளை அவரே பல இடங்களில் தேவையற்று மேற்கோளாக எடுத்துக்காட்டி மகிழ்ந்துள்ளார்.அவர் விருப்பமும் இயல்பும் இவை எனத் தள்ளுக.

கட்டுரையை வா.செ.கு.ஐயா அவர்கள் இவ்வாறு நிறைவு செய்கிறார்.

"மலேசியா,இலங்கை,சிங்கப்பூர்,அமெரிக்கா,போன்ற நாடுகளில் நான் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய இந்தக் கருத்தை மேடைகளில் விளக்கியபொழுது,எதிர்ப்புத்தெரிவித்தவர்களைக் கண்டதில்லை.மகத்தான சமுதாய நன்மையைத் தன்னுள் கொண்ட,இவ்வளவு எளிய சீர்திருத்தத்தை நாம் ஏன் இன்னும் செய்யவில்லை என்ற வினாவைத்தான் எழுப்பினார்கள்.

அவர்கள் வினாவுக்கு நான் சொன்ன விடை: இது எளிய மாற்றம் என்பதோடு இன்றியமையாத மாற்றம்;மேலும் தவிர்க்க இயலாத மாற்றமும் கூட.ஆனால் நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு நல்ல தலைவனுக்காகக் காத்திருக்கிறது எனபதுதான்.தலைவர்கள் தாமாக உருவாவதில்லை.நாம்தான் உருவாக்க வேண்டும்".

இந்த முடிவுரைப்பகுதியால் தம் கருத்துக்குத் தலையாட்டிக் கையொப்பமிடும் தலைவரை அவர் விரும்புவது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.அத்தகு தலைவர்கள் தமிழகத்தில் தோன்றாதிருப்பாராக!ஏனெனில் புகழெனில் உயிரும் கொடுப்பர்.பழியெனில் உலகு கிடைப்பினும் பெறாத மான மறவர்கள் நடமாடிய மண் இத்தமிழ் மண்.

(இன்று (16.03.2010) இலக்கணக்கடல் அறிஞர் இரா.திருமுருகனார் அவர்களின் பிறந்த நாள்.அவர் நினைவாக இக்கட்டுரை வெளிவருகிறது.)

வெள்ளி, 6 மார்ச், 2009

கோட்டோவியத்தில் யான்...


டேனியல் வரைந்தது.

பத்தாண்டுகளுக்கு முன்னர்க் கேராளாவின் கோழிக்கோட்டில் உள்ள குருவாயூரப்பன் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நாட்டுப்புறவியில் சார்ந்த கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்கள்,ஆய்வாளர்கள் வந்து நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் படித்தனர்.

தமிழகத்திலிருந்து சென்றவர்களுள் யானும் ஒருவன்.ஈழத்து நாட்டுப்புறப்பாடல்கள் என்ற தலைப்பில் கட்டுரை படித்தேன்.தமிழில் படிக்கப்பெற்ற என் கட்டுரை உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அவைக்கு வழங்கப்பட்டது.சப்பானிலிருந்து வந்த மிக்கி டனாக்கா உள்ளிட்ட ஆய்வாளர்கள் என் கட்டுரையைப் பாராட்டி மகிழ்ந்தனர்.(இவர் பின்னாளில் எனக்கு ஒரு மின்னஞ்சல் விடுத்து நன்றி தெரிவித்த மடலும்,படமும் என்னிடம் உண்டு).

நாட்டுப்புறப் பாடல்கள் சிலவற்றை யான் பாடிக்காட்டியதால் என் கட்டுரைக்கு நல்ல வரவேற்பு.
கேரளாவில் இருந்து வந்திருந்த பல கல்லூரி மாணவர்கள் என்னைத் தனியே பாடச் சொல்லி நாடாப்பதிவில் பதிந்துகொண்டனர்.யானும் கேரள நாட்டுப்புறப் பாடல்களைப் பதிந்து கொண்டேன்.

அவ்வகையில் அரிதாசு என்னும் மாணவர் மிகச்சிறப்பாகப் பாடினார். வட்டக்களி, சவுட்டுக்களி,மீன்பாட்டு,எனப் பல பாடல்களைப் பாடிக்காட்டினார்.யாவும் யான் பதிந்து
வைத்துள்ளேன்.களரிப் பயிற்றுப் பாடல்களைப் பதிவு செய்ய ஆர்வம் காட்டி நாடாப்பதிவுக் கருவியை அந்த விளையாட்டு நடந்த நடு இடத்தில் வைத்திருந்தேன்.மிகச்சிறந்த இசையொழுங்குடைய பாடல்கள் பாடப்பட்டன.முக்கால் மணி நேரம் ஓடக்கூடியது நாடா.
முக்கால் மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் எந்தப்பாடலும் பதிவாகவில்லை.காரணம் மின்கலத்தில் மின்சாரம் இல்லை என்பது அப்பொழுதான் தெரிந்தது.

மின்சாரம் ஏற்றும் பேட்டரியை இனி ஆய்வுக்களத்துக்கு எடுத்துச்செல்லக்கூடாது என அன்று முதல் முடிவு செய்தேன்.

இந்தக் கருத்தரங்கம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத கருத்தரங்கம். கருதரங்கிற்குத் திருச்சி வழியாகத் தொடர் வண்டியில் சென்றதாக நினைவு.தெப்பக்குளத்தில் இறங்கி அங்காடியில் ஒரு சோனி நிறுவன நாடாப்பெட்டி ஆயிரத்து இருநூறுக்கு அப்பொழுது வாங்கியது இன்றும் நினைவில் உள்ளது.அப்பெட்டி பல வகையில் இன்றுவரை உதவுகிறது.

கருத்தரங்கிற்கு வந்த டேனியல் என்ற மாணவர் என்னை ஒரு கோட்டோவியத்தில் என் கண்முன்னே ஐந்து நிமிடத்திற்குள் வரைந்து தந்தார்.பாதுகாத்து வந்த அந்தப்படம் நினைவுக்காக என் பக்கத்தில் பதிந்து வைக்கிறேன்.

கருத்தரங்கு முடிந்து தொடர்வண்டி நிலையம் வரை அந்த மாணவரும் அவர் நண்பரும் வந்து வழியனுப்பினர்.தொடர்வண்டியில் முன்பதிவு செய்திருந்ததால் மகிழ்ச்சியுடன் வந்தேன். தொடர் வண்டி நிலையத்தில் பார்க்கும்பொழுது என் பெயர் பயணிகள் பட்டியலில் இல்லை. காரணம் வினவியபொழுது மங்களூர் விரைவு வண்டிக்குப் பதிவு செய்திருந்தேன். அந்த வண்டிப் புறப்படும் இடத்தில் இரவு பத்து மணியளவில் புறப்படுகிறது.அந்த வண்டி நான் ஏறும் கோழிக்கோடு வரும்பொழுது நடு இரவு 12.30 மணியளவில் வருகிறது.எனவே மறுநாள் கணக்கில் நான் பதிந்திருக்கவேண்டும்.(இரவு பன்னிரண்டு மணிக்குமேல் மறுநாள்தானே)எனக்கு இந்த நுட்பம் தெரியாததால் நான் செல்லவேண்டிய வண்டி நேற்றே அதாவது முதல்நாள் நடு இரவு 12.30 மணியளவில் கடந்துவிட்டது.

எனவே எனக்குப் புதிய பயணச்சீட்டு வாங்கவேண்டியதாயிற்று. நல்ல வேலை என்னிடம் பணம் இருந்தது.முன்பு பதிந்த சீட்டைக் கொடுத்தால் மறுநாள் சிறுதொகை தருவார்கள் என்றனர்.அந்த மாணவர்களிடம் அந்தச் சீட்டைக் கொடுத்து மறுநாள் கிடைக்கும்தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறிப் பல தொல்லைகளுக்கு இடையே மீண்டேன். கோவை, சேலம்,வழியே காட்டுப்பாடி வந்தேன்.அங்கிருந்து நான் பணிபுரிந்த இடம் வந்து சேர்ந்தேன்.

கருத்தரங்கிற்குச் சென்று, நான் பணிபுரிந்த கல்லூரிக்கு மிகப்பெரிய புகழ் ஈட்டி வந்ததாக நினைத்தேன்.சான்றிதழ்களைக் காட்டி அனைவரிடமும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன். அங்குப் பணிபுரிந்தவர்கள் உள்ளுக்குள் வஞ்சம் வைத்து வெளியே சிரித்துக்கொண்டார்கள். அந்த மாத இறுதியில்தான் தெரிந்தது.

கருத்தரங்கிற்குச் செல்வது அங்கு மிகப்பெரிய பாவச்செயல் என்று.இருநாள் கருத்தரங்கப் பயணத்திற்கு என்னுடைய பதினைந்து நாள் ஊதியத்தைப் பிடித்துவிட்டனர்.காரணம் பிறகுதான் புரிந்தது.

சனிக்கிழமை விளக்ககணி விழா. விளக்கணி விழாவிற்கு முதல்நாள் (வெள்ளிக்கிழமை)விடுப்பெடுத்துக்கொண்டு வியாழன் மாலை ஊருக்குப் புறப்பபட்டேன்.முடிந்ததும் மறுநாள் ஞாயிறு புறப்பட்டுத் திங்கள் கிழமை கல்லூரி வந்து விடலாம் என்பது என் திட்டம். நான் புறப்பட்ட மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை முதல் கல்லூரிக்குத் திடுமென நீண்ட விடுமுறை விடப்பட்டது.கல்லூரித் திறப்பன்று கோழிக்கோட்டில் கருத்தரங்கு.சரி.கருத்தரங்கு என்பதால் பணிமேற் சென்ற சான்று காட்டிக்கொள்ளலாம் என நினைத்தேன்.புறப்பட்டேன்.
அவர்கள் அரசாங்கத்தில் இந்த அரசாங்க விதிகள் பொருந்தாது.பாதி ஊதியத்தை இழந்து பணிபுரிய வேண்டியதாயிற்று.உழைக்கவில்லை.ஊதியம் இல்லை என மனத்தை
ஆறுதல் படுத்திக்கொண்டேன்.

கருத்தரங்கால் பல பட்டறிவுகளும் இந்தப் படமும்தான் எஞ்சி நின்றன.

அடுத்த படம் திருநெல்வேலியில் நடந்த தமிழ் இணையம் சார்ந்த கருத்தரங்கில்நா.கணேசன், காசி ஆறுமுகம்,சேகர் பொன்னையா,சங்கரபாண்டி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். யானும் சென்றிருந்தேன்.அங்கு வந்த ஓவியர் வள்ளிநாயகம் அவர்கள் வரைந்த கோட்டோவியம் இது.


வள்ளிநாயகம் வரைந்தது.

இரண்டு கலைஞர்களுக்கும் நன்றி.

திங்கள், 25 ஆகஸ்ட், 2008

மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் தமிழில் இணையத்தள வளர்ச்சி கருத்தரங்கம்...


அரங்க மேடை


 22.08.2008 மாலை சிங்கம்புணரியில் நீண்ட நேரம் நின்றும் பேருந்து இல்லை.மழை பெய்தபடி இருந்தது. மதுரை செல்லும் பேருந்து வரவில்லையாதலால் கொட்டாம்பட்டி சென்றால் விரைவுப் பேருந்துகள் கிடைக்கும் என்றனர். கொட்டாம்பட்டிக்கு அங்கிருந்து நகர் வண்டியில் சென்றேன். அங்கிருந்தும் பேருந்துகள் வாய்ப்பாக இல்லை.கூட்டம் மிகுதியாக இருந்தது. அவ்வழியில் மகிழ்வுந்து ஒன்று வந்தது. அதில் ஏறிக்கொண்டேன்.

 கையில் கைப்பையும், மடிக்கணினிப் பையும் தோள்பட்டைகளைப் பதம் பார்த்தன. இப்பொழுது செலவு இனித்தது.போக்கில் இருக்கும்பொழுது அறிஞர் தமிழண்ணல் அவர்கள் செல்பேசியில் அழைத்தார்கள். பிறகு பேசுவதாக ஐயாவிடம் தெரிவித்துவிட்டு, வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ் இணையக் கருத்தரங்கை ஏற்பாடு செய்த நண்பர் முத்துராமன் அவர்களுக்குப் பேசினேன்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள உணவகத்திற்கு முன்பாகக் காத்துள்ளதைத் தெரிவிக்க மகிழ்ந்தேன். கால் மணி நேரத்ததில் அன்பர் முத்துராமன் இருந்த இடம் சென்று சேர்ந்தேன்.இரு மாணவர்களும் காத்திருந்தனர்.

அங்குள்ள உணவகத்தில் உணவை முடித்தோம். காலையில் சிற்றுண்டி உண்டதும், தொடர்ந்து செலவுக் களைப்பு, பேச்சு, பரபரப்பு என மிகவும் சோர்வாக இருந்தேன். உணவை முடித்துக் கொண்டு காமராசர் பல்கலைக்கழகம் அருகில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியை இரவு பத்து மணியளவில் அடைந்தேன்.

அறிஞர் தமிழண்ணல் ஐயாவிற்குச் செல்பேசியில் பேசி, நாளைய நிகழ்ச்சி பற்றி சொன்னேன். அண்ணல் அவர்களிடம் பல்லாண்டுகளாக ஒரு விருப்பத்தை முன்வைத்து அடிக்கடி நினைவூட்டி, எழுதியும், பேசியும் வைத்திருந்த ஒரு விருப்பம் நிறைவேற உள்ளதை அண்ணல் அவர்கள் சொன்னதும் அளவிலா மகிழ்ச்சியடைந்தேன். நான் கேட்டிருந்த ஒரு பொருளை நாளை வந்தால் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் நாளை வந்து பெற்றுக்கொள்வதாக உறுதிகூறி, இரவு 11.30 மணியளவில் ஓய்வெடுத்துக் கொண்டேன்.

காலை 7.30 மணிக்கு அன்பர் முத்துராமன் அவர்கள் அறைக்கு வந்துசேர்ந்தார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக கல்லூரியை ஒருமுறை சுற்றிப்பார்க்க நினைத்து என் ஒளிப்படக் கருவியுடன் சென்று பல படங்களை எடுத்துக்கொண்டு அறைக்கு வந்து காலைக் கடமைகள் முடித்து நிகழ்ச்சிக்கு ஆயத்தமானேன்.

நாடார் இன மக்களால் அவர்களின் பொருள் உதவியால் இயங்கக்கூடிய அரசு உதவிபெறும் தன்னாட்சிக்கல்லூரி வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி ஆகும்.இக்கல்லூரி ஏறத்தாழ நாற்பது (1965) ஆண்டுகளுக்கு முன்னர்த் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு உயர் படிப்புகளை வழங்கும் நல்ல நிறுவனம்.நல்ல கட்டட வசதிகள். ஆடுகளங்கள் உள்ளன. போக்குவரவு வசதிஉடையது. நல்ல இயற்கைச்சூழல்.கல்லூரி வனப்பை எண்ணும்பொழுது மகிழ்வு தருகிறது.

காலை 9 மணி அளவில் தனசேகரபாண்டியன் அரங்கில் (விழா நடைபெறும் இடம்) உள்ள இணைய வசதிகள், கணிப்பொறி வசதிகள், இருக்கை அமைவுகள் யாவற்றையும் ஒரு முறை சரிபார்த்துக்கொண்டேன். ஏற்பாடுகள் அனைத்தும் மிகச்சிறப்பாக இருந்தன. கல்லூரி நூலகத் துறையில் நடைபெறும் முதல் கருத்தரங்கம் என்பதால் விடுமுறை நாள் எனினும் மாணவர் கள் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டனர்.

பின்னர்க் கல்லூரி முதல்வர் அறைக்கு என்னை அழைத்துச்சென்று அறிமுகம் செய்தனர். கல்லூரியின் நிர்வாகத்தைச் சிறப்பாகச் செய்துவரும் பொறுப்பாளர்களைக் கண்டு மகிழ்ந்தேன். கல்லூரியின் சிறப்பை உரையாடித் தெரிந்துகொண்டேன். என் தமிழ் இணைய ஈடுபாட்டைக் கண்டு அனைவரும் பாராட்டினர். அனைவரும் விழா அரங்கை அடைந்த பொழுது மாணவத் திரள் மிகுதியாக இருந்தது.500 மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்.

காலை சரியாக 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.

கல்லூரிப்பொருளாளர் திரு மணிமாறன் அவர்கள் தலைமை தாங்கினார்.  திரு குணசேகரன் அவர்கள் வரவேற்புரை. கல்லூரி முதல்வர் மகாத்மன்ராவ் அவர்கள் மிகச் சிறப்பாக என்னை அறிமுகம் செய்துவைத்து உரையாற்றினார்.

முற்பகல் 11 மணிக்குத் தமிழில் இணையத்தள வளர்ச்சி என்னும் என் உரை தொடங்கியது. பகல் ஒரு மணிவரை நீண்ட காட்சி விளக்க உரை மாணவர்களுக்குச் சலிப்பின்றி இருந்ததை உணர்ந்தேன். என் பேச்சின் விவரம் வருமாறு:

(நேற்றே திருச்சியில், மேலைச்சிவபுரியில் உரையாற்றிய செய்திகள் சில இடம்பெற்றாலும் அடிப்படைச் செய்திகள் ஒன்று என்பதால் மீண்டும் சிலவற்றை நினைவுகூர்தல் தேவையாகிறது.)

உலகில் கணிப்பொறி தோன்றிய விதம், தமிழ் எழுத்துகள் உள்ளிடப்பெற்று அச்சான கணிப்பொறிவழி உருவான முதல் நூல் பற்றிய செய்தி, தமிழ் எழுத்துகள் தொடக்கத்தில் ஏற்படுத்திய சிக்கல், தரப்படுத்தப்பட்ட எழுத்துகள், பல்வேறு தமிழ் மென்பொருள்கள், தமிழ் மென்பொருள் உருவாக்கத்திற்கு உழைத்தவர்கள், சீனர்களின் மொழிப்பற்று, தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை, தமிழ் இணைய மாநாடுகள், இதற்காக உழைத்த அறிஞர் சிங்கப்பூர் கோவிந்த சாமி அவர்களின் பங்களிப்பு, முரசு முத்தெழிலன், வா.செ.குழந்தைசாமி, முனைவர் ஆனந்த கிருட்டிணன், முனைவர் பொன்னவைக்கோ அவர்களின் ஈடுபாடு,பணிகள் பற்றிப் பலபட எடுத்துரைத்தேன்.

தமிழக அரசு கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சிக்காலத்தில் மிகபெரிய தமிழ் இணைய மாநாடு நடத்தியதையும், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவான விதத்தையும் எடுத்துரைத்தேன். சேந்தமங்கலம் முகுந்தராசுவின் எ.கலப்பை, காசியின் தமிழ்மணம் பற்றி காட்சி விளக்கத்துடன் என் பேச்சு தொடர்ந்தது.

தமிழில் வெளிவரும் மின்னிதழ்களை அறிமுகம் செய்தேன். நாளிதழ், வார இதழ், மாத இதழ் எனப் பல பிரிவுகளாகப் பிரித்துகொண்டு விளக்கினேன். தினமலர் நாளிதழ் உலக அளவில் தமிழர்களால் படிக்கப்படும் இதழாகவும், பல்வேறு வசதிகளை இவ்விதழ் தருவதையும் விரிவாக எடுத்துரைத்தேன்.(இதனைத் தினமலர் மதுரைப் பதிப்பில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டது.24.08.08).

அதுபோல் தினகரன், மாலைமலர், தமிழ்முரசு, தினமணி, திண்ணை, தமிழ்க்காவல், தெளிதமிழ், தமிழம். நெட்,தட்சுதமிழ், வணக்கம் மலேசியா, லங்காசிறீ, புதினம், பதிவுகள், தினக்குரல், கீற்று உள்ளிட்ட பல இதழ்களைப் பற்றி விளக்கிப் பேசினேன்.காட்சி வழியாகவும் விளக்கினேன். அவையினர் இவ்வளவு இதழ்களையும் கண்டு வியப்பும் மலைப்பும் அடைந்தனர்.

பிறகு தமிழ்மரபு அறக்கட்டளையின் தளத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள மரபுச் செல்வங்களை விளக்கினேன். மேலும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், படிப்புகள், ஓலைச்சுவடிகள், பண்பாட்டுக்கலைகள், திருக்கோயில் படங்கள் உள்ள அதன் சிறப்புகளை எடுத்துரைத்தேன்.

அதுபோல் மதுரைத்திட்டம், சென்னை நூலகம், காந்தளகம், விருபா, விக்கிபீடியா பற்றியெல்லாம் காட்சி வழியாகவும் உரை வழியாகவும் பல தகவல்களை அவைக்கு வழங்கினேன். ஒரு மணிக்கு உணவு இடைவேளைக்காக அனைவரும் பிரிந்தோம். இதற்குள் இச்செய்தி ஊடகங்கள் வழியாக மதுரை மக்களுக்கும் உலகிற்கும் தெரியவந்தது. தட்சு தமிழ் இணைய இதழ் இச்செய்தியை உடன் வெளியிட்டு உலகிற்கு முதலில் தந்தது.

பிற்பகல் உணவுக்குப்பிறகு 2,30 மணிக்கு மீண்டும் பேசத் தொடங்கினேன். தமிழ் விசைப் பலகை 99 பற்றியும் அதில் உள்ள சிறப்புகள், அமைப்புகள் பற்றியும் காட்சி விளக்கத்துடன் செய்து காட்டியபொழுது அனைவரும் மகிழ்ந்தனர்.

அதன் பிறகு வலைப்பூக்கள் உருவாக்கும் முறை பற்றி விளக்கிக் காட்டப்பட்டது. தமிழில் மின்னஞ்சல் செய்வது, உரையாடுவது, குழுவாக இயங்குவது பற்றியெல்லாம் விரிவாகப் பேசினேன். மாலை 4.30 மணிக்கு என் காட்சி விளக்க உரை நிறைவுக்கு வந்தது. அனைவரும் உள்ளம் நிறைந்த அன்போடு விடைதந்தனர்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நூலகத் துறையினர்க்கு அளவுகடந்த மகிழ்ச்சி. கருத்தரங்கம் வெற்றியுடன் நடந்ததால் கல்லூரி முதல்வர் நூலகர் அவர்களையும் ஒருங்கிணைப்பாளர்கள் முத்துராமன், கவிதா தேவி ஆகியோரையும் என் கண்முன் பாராட்டினார்.

அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அறிஞர் தமிழண்ணல் இல்லத்திற்கு வந்து உரையாடினேன். அவர் தமிழுக்குப் பாதுகாத்து வைத்திருந்த மிகப்பெரிய செல்வத் தொகுதியை என் பல ஆண்டுகால விருப்பத்தை நிறைவேற்றும்படியாக வழங்கினார். அண்ணல் அவர்களைச் சில படங்கள் எடுத்துக்கொண்டேன்.

28.08.2008 இல் வெளியிட உள்ள பத்து நூல்களை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார். அவற்றைப் பெற்றுக்கொண்ட மகிழ்விலும் அண்ணலைக் கண்ட மகிழ்விலும் மூடுந்தில் ஏறிச் சிறிது தூரம் வந்த பிறகு உடன் அண்ணல் செல்பேசியில் அழைத்தார். முதன்மையான அந்தத் தமிழ்ச் செல்வத்தைப் பேச்சுவாக்கில் அங்கே மிசைமேல் வைத்து வந்தது அப்பொழுதுதான் அண்ணல் அழைப்பிற்குப் பிறகு நினைவுக்கு வந்தது. மீண்டும் அண்ணல் இல்லமான ஏரகத்திற்குத் திரும்பினேன்...


முனைவர் மகாத்மன்ராவ்(முதல்வர்)


திரு.மணிமாறன்,பொருளாளர்


கவிதாதேவி(ஒருங்கிணைப்பாளர்)


திரு.முத்துராமன்(ஒருங்கிணைப்பாளர்)


பார்வையாளர்கள்

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2008

அறிஞர் சோ.ந.கந்தசாமி அவர்கள்(15.12.1936)


முனைவர் சோ.ந.கந்தசாமி அவர்கள்

  இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமிழறிஞர்கள் பதின்மரின் பெயர்ப்பட்டியல் ஒன்றை ஆயத்தம் செய்தால் அதில் அறிஞர் சோ.ந.கந்தசாமியார் அவர்களின் பெயரும் இடம்பெறும். தமிழ், ஆங்கிலம், வடமொழி, இந்தி உள்ளிட்ட பன்மொழிகளை அறிந்தும், அதில் பழுத்த புலமைபெற்றும், புலமைச் செருக்கு மிகுந்தும், தமிழ் வீறு கொண்டும் விளங்குபவர் நம் ஐயா கந்தசாமியார் அவர்கள்.

  அவர்களை இருபான் ஆண்டுகளாக யான் நன்கு அறிவேன். என் தமிழாசிரியர் வாரியங்காவல் புலவர் ந.சுந்தரேசனார் அவர்கள் அடிக்கடி ஐயா கந்தசாமியார் அவர்களின் பழுத்த தமிழறிவு பற்றி குறிப்பிட்டு அவர்போல் நீ தமிழ் படிக்கவேண்டும் என்று அடிக்கடி என்னைக் குறிப்பிடுவார். அது நாள் முதல் அறிஞர் கந்தசாமியார் அவர்களின் மேல் ஒருதலைக் காதல் எனக்கு ஏற்பட்டது.

  பத்தாண்டுகளுக்கு (28,29,30-03.1998) முன்னர் யான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "சங்கப் பாடல்களில் நாட்டுப்புறவியல் கூறுகள்" என்னும் பொருளில் ஒரு கட்டுரை படித்தேன். அறிஞர் சுப்பு ரெட்டியார் தலைமை. நம் ஐயா கந்தசாமியார், தி.வே.கோபாலையர், கா.சிவத்தம்பி, பெ.மாதையன் உள்ளிட்ட சங்க இலக்கிய அறிஞர்கள் அவ்வுரை கேட்டு மகிழ்ந்து பாராட்டினர். அவ்வாய்வுரையால் ஈர்க்கப்பெற்று அன்று முதல் என்பால் அன்பு பாராட்டி வருபவர் நம் கந்தசாமியார் அவர்கள்.

  ஐயா கந்தசாமியார் அவர்கள் ஒருவகையில் என் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள ஊரில் பிறந்தவர்கள் என்பதால் அவர்கள் மேல் எனக்கு என்றும் மதிப்பும் பாசமும் மிகுதி. அவர்களின் தமிழ்ப்புலமை நினைந்து அவர்களை என் ஆசிரியர்களுள் ஒருவராகவே மதித்துப் போற்றுகிறேன். அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிவு செய்வதில் மகிழ்கிறேன்.

  அறிஞர் சோ.ந.கந்தசாமி எனத் தமிழறிஞர்களாலும் S.N.K என ஆங்கிலம் வல்லாராலும் அழைக்கப்பெறும் கந்தசாமியார் அவர்கள் 15.12.1936 இல் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் செயங்கொண்டசோழபுரம் அருகில் உள்ள இலையூர் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் வை.சோ.நடராச முதலியார், மீனாம்பாள் அம்மாள். கந்தசாமியார் அவர்கள் தொடக்கக் கல்வியை இலையூரிலும், உயர்நிலைக் கல்வியை உடையார்பாளையம் பள்ளியிலும் பயின்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை- பொருளாதாரம் பயின்றவர்.

  சோ.ந.கந்தசாமியார் அவர்கள் முதுகலைத் தமிழ் இலக்கியம் தண்ணார் தமிழளித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் (1958). எம்.லிட்(1963), முனைவர் (1971) பட்ட ஆய்வையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டவர். மொழியியல் பட்டயம், வடமொழிப் பட்டயம் உள்ளிட்ட கல்வியையும் அண்ணாமலையில் பயின்றவர்கள்.

  தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணியைத் தொடர்ந்து நடத்தினார். பின்னர் மலேசியாப் பல்கலைக் கழகத்திலும் (1979-85) தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும்(1985-1997), சில காலம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் தம் தமிழ்ப்பணியை அழுத்தமாகச் செய்தவர். இவர் அறிஞர் அ.சிதம்பரநாதன் செட்டியார், தெ.பொ.மீ ஆகியோரின் மேற்பார்வையில் கற்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பாலிமொழிப் பாடல்கள் பலவற்றை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றலுடையவர். கல்வெட்டுகளிலும் நல்ல புலமையுடையவர்.

  சோ.ந. கந்தசாமியார் அவர்கள் நாற்பதாண்டுகள் கல்விப் பணியாற்றியுள்ளார். இவரிடம் கற்றவர்களும், இவருடன் கற்றவர்களும் இவர் கல்வி கண்டு மருள்வது உண்டு. நினைவாற்றலில் வல்லவர். எடுத்துரைப்பதில் ஆற்றலாளர். மேடையை, வகுப்பறையத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்படியான பேச்சாற்றல் வல்லவர். எதுகைகளும், மோனைகளும் இவர் பேச்சில் சிந்திச் சிதறும்.

  'அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் அன்னைப் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகம்' என்றும், 'எங்கள் மனசைக் கவர்ந்த பனசைக் கல்லூரி' என்றும் இவர் விளிக்கும் பாங்கு கற்றவர்களால் என்றும் நினைவுகூரத்தக்கன. இத்திறம் கண்ட கற்றார் களிப்புறுவர். இவர் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத் தகுந்த மேலோர்.நூலோர்.

  கந்தசாமியார் அவர்கள் மருதூரில் புகழ்பெற்ற விடுதலைப் போராட்டவீரர் முத்துக்குமாரசாமி அவர்களின் புதல்வியார் சமுனாதேவி அவர்களை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டவர். கந்தசாமியார் அவர்களுக்கு ஆண்மகன் ஒருவரும், பெண்மக்கள் நால்வரும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். இவர்கள் அனைவரும் உயர்கல்வி கற்று நல்ல நிலையில் உள்ளனர்.

  அறிஞர் சோ.ந.கந்தசாமி அவர்கள் வகுப்பறையில் மட்டும் புலமை புலப்படும்படி விளங்கினார் என்று இல்லை. இவர் இயற்றிய நூல்களும் என்றும் பயன்படுத்தத் தக்கன. தரத்தன. இவர் இந்து நாளிதழில் முப்பத்தைந்து ஆண்டுகளாக எழுதும் நூல் மதிப்புரைகள் அறிஞர் உலகால் என்றும் போற்றி மதிக்கப்படுவனவாகும்.

  இவர் இயற்றிய நூல்களை இலக்கியம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு, இலக்கணம், மொழியியல், தத்துவம் என்னும் வகைகளில் அடக்கிப் பார்க்கலாம்.

இலக்கிய நூல்கள்

1.சங்க இலக்கியத்தில் மதுரை
2.திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்
3.இலக்கியமும் இலக்கிய வகையும்
4.தமிழிலக்கியச் செல்வம்(ஐந்து தொகுதிகள்)
5.திருமுறை இலக்கியம்
6.திருமுறையில் இலக்கிய வகை
7.உலகத் தமிழிலக்கிய வரலாறு(கி.பி.501-கி.பி.900)
8.மணிமேகலையின் காலம்
9.பரிபாடலின் காலம்
10.இலக்கியச்சோலையிலே

திறனாய்வு

11.Bharathidasan As a Romantic Poet
12.Anthology of Book Reviews
13.தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்

மொழிபெயர்ப்பு

14.English Translation of Sundarar Devaram Volume I (patikam 1-50)
15.Volume II(patikam 51-100) (Tota 1026 verses)
16.16.திருமந்திரம் எட்டாம் தந்திரம் English Translation of Tirumantiram(Total 527 verses)

இலக்கணம்

17.தமிழிலக்கணச் செல்வம்(இரு தொகுதிகள்)
18.தொல்காப்பியம் - எழுத்ததிகாரத் தெளிவு
19.புறத்திணை வாழ்வியல்
20.தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்(மூன்று தொகுதிகள்)
21.கலித்தொகை யாப்பியல்

மொழியியல்

22. A Linguistics Study of Paripatal(M.Lit.Thesis)
23.A Linguistis of Manimekalai

தத்துவம்

24.தமிழும் தத்துவமும்
25.தமிழிலக்கியத்தில் பௌத்தம்
26.தமிழிலக்கியத்தில் அறிவாராய்ச்சியியல்
27.இந்தியத் தத்துவக் களஞ்சியம்(மூன்று தொகுதிகள்)
28.Budhism As Expounded in Manimekalai(Ph.D. Dissertation)
29.Indian Epistemology as Expounded in the Tamil Classics
30.Tamil Literature and Indian Philosophy
31.The Yoga of Siddha Avvai(Published in Canada)
32.Advaitic Works and Thought in Tamil
33.The Encounter Between saiva sidhanta and Advaita vedanta

  அறிஞர் சோ.ந.கந்தசாமி அவர்கள் பல்வேறு நூல்களை எழுதியதுடன் அமையாமல் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பல பொறுப்புகளை வகித்துக் கல்விப் பணியாற்றியுள்ளார். சாகித்திய அகாதெமியின் உறுப்பினராகவும், பல்கலைக்கழ ஆட்சிக்குழு உறுப்பினர், ஆய்வுக்குழு உறுப்பினர், தேர்வுக்குழுத் தலைவர், பாடத்திட்டக் குழுத்தலைவர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப் பணிபுரிந்துள்ளார். இந்திய நடுவண் தேர்வாணையத்தின் (U.P.S.C.) முதன்மைத் தேர்வாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

  இவர்தம் தமிழ்ப்பணியறிந்த பல்வேறு நிறுவனங்கள் இவருக்குப் பல சிறப்புகளைச் செய்துள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆராய்ச்சிப் பரிசுகள் இவருக்குக் கிடைத்துள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழாக் கவிதைக்கு முதற்பரிசாகத் தங்கப் பதக்கம் பெற்றவர். திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்கள் என்னும் இவர்தம் நூலுக்கும், இந்தியத் தத்துவக்களஞ்சியம் என்ற நூலுக்கும் தமிழக அரசு சிறந்த நூலுக்கான பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளது. இவர் அண்ணாமலை செட்டியார் தமிழிலக்கிய விருது பெற்ற பெருமைக்கு உரியவர். தருமபுர ஆதீனத்தின் சித்தாந்தக் கலாநிதி, குன்றக்குடி ஆதீனத்தின் தமிழாகரர், திருவாவடுதுறை ஆதீனத்தின் சித்தாந்தச் செம்மணி, மெய்யப்பன் அறக்கட்டளையின் சிறந்த தமிழறிஞர் விருது உள்ளிட்ட பல பட்டங்களையும் விருதுகளையும் தன் தகுதியால் பெற்றுள்ளார்.

  அலுவல் முறையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஆராய்ச்சிப் பணிகளிலும், எழுத்துப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள பேராசிரியர் அவர்கள் மைசூரில் உள்ள செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராகப் பணிபுரிகின்றார்.

சோ.ந.கந்தசாமியார் அவர்களின் தொடர்பு முகவரி :
முனைவர் சோ.ந.கந்தசாமி அவர்கள்
61,ஐந்தாம் தெரு,
நடராசபுரம்(தெற்கு).
தஞ்சாவூர் - 613007

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

உலகை வலம் வந்த தமிழரிமா முனைவர் ச.அகத்தியலிங்கம்...


முனைவர் ச.அகத்தியலிங்கனார்

சற்றொப்ப இருபதாண்டுகளுக்கு முன் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான் இளங்கலைத் தமிழிலக்கியம் பயின்றபொழுது தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றிற்கு என் பேராசிரியர் முனைவர் துரை. உலகநாதன் அவர்கள் என்னை அழைத்துச் சென்றிருந்தார். அன்றைய நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்த முனைவர்.ச. அகத்தியலிங்கம் அவர்களைக் கண்டும் அவர்கள் உரைகேட்டும் அறிஞர் அவையில் முந்தியிருக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். அது முதல் ச.அகத்தியலிங்கனாரைப் பல கருத்தரங்குகளில் கண்டு உரையாடியுள்ளேன்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்த பொழுதும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த பொழுதும் பேராசிரியருடன் கலந்து பழகும் வாய்ப்பு எனக்கு மிகுதியாக இருந்தது.

சிங்கப்பூரில் 2001 ஆம் ஆண்டு நடந்த உலகத்தமிழாசிரியர் மாநாட்டில் பழையன புகுதலும் என்னும் தலைப்பில் கட்டுரை படிக்க அவையில் நின்றேன். அவையை வணங்கி, என் கட்டுரை கடைசியாக அமையும் கட்டுரை என்றேன். உடன் குறுக்கிட்டு ச.அகத்தியலிங்கனார் நிறைவாக அமையும் கட்டுரை எனத் திருத்தம் சொன்னார்கள். அவர்களும் முனைவர் திண்ணப்பன் அவர்களும் நானும் சிங்கப்பூர் அரசு அளித்த ஒரு விருந்தில் கலந்துகொண்டு நெடுநாழிகை உரையாடியமை வாழ்வில் மறக்க இயலா ஒன்றாகும். அதுபொழுது எடுக்கப்பெற்ற படம் வேறு ஒரு பதிவில் உள்ளது.காண்க.

பல கருத்தரங்குகள், மேடைகளில் ச.அகத்தியலிங்கனாரை நான் கண்டு அவர்களின் தமிழ்ப்பற்று, உணர்வு, வீறு கண்டு மகிழ்ந்துள்ளேன்.மேடை என்று சொன்னால் அரிமா போலப் பெருங்குரலில் பேசுவார்கள். நண்பர்களிடம் அன்பொழுகப் பேசுவார்கள். தன் கருத்தைத் தானாட்டித் தனாது நிறுத்துவார்கள். உலக மொழிகள் பற்றி மிகச் சிறந்த விளக்கம் தருவார்கள்.

அமெரிக்க மண்ணில் ஆங்கிலேயர்களுக்குத் தமிழின் சிறப்பை எடுத்துரைத்து அவர்கள் உள்ளதில் படிந்திருந்த சமற்கிருத மாயையை அடித்து நொறுக்கித் தமிழின்பால் அவர்களின் கவனத்தை இழுத்தவர் நம் ஐயா அவர்கள். தொல்காப்பியம் சங்க இலக்கிய மாண்புகள், தமிழின் சிறப்புகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறப்பாக எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர். சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள சிறந்த பகுதிகளை உள்ளம் ஒன்றி விளக்கும் காட்சிகள் நம் மனக்கண்ணில் என்றும் நின்று நிலவும்.

இப்பெருமைக்கு உரிய தமிழரிமா ச.அகத்தியலிங்கனார் 04.08.2008 புதுச்சேரிக்கு அருகில் உள்ள கிளியனூர் காமராசர் குடியிருப்பு அருகில் மகிழ்வுந்தில் வந்துகொண்டிருந்தபொழுது மகிழ்வுந்தின் மேல் சரக்குந்து மோதி நேர்ச்சிக்குள்ளாகி மறைவுற்ற செய்தி நண்பர் தி.நெடுஞ்செழியனார் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல் வழி அறிந்து வருந்தினேன். என் பேராசிரியர் முனைவர் அ.அறிவுநம்பி (புதுவைப் பல்கலைக்கழகம்) அவர்களிடம் நடந்தவற்றை விளக்கமாக அறிந்துகொண்டேன்.

இணையம் வழியாக இச்செய்தியை உலகம் முழுவதும் உடன் தெரிவித்தேன். என் செய்தி தாட்சுதமிழ், A.O.L ,தமிழ்மணம் வழியாக உலகத் தமிழர்களைச் சென்றடைந்தது. தினமணி இதழின் விழுப்புரம் செய்தியாளர் திரு.செயப்பிரகாசு உள்ளிட்ட செய்தியாளர்களுக்கு என் வழியாகச் ச.அகத்தியலிங்கனார் பற்றிய செய்திகள் வழங்கப்பட்டன. புதுச்சேரி சார்ந்த தமிழ் உணர்வாளர்களுக்கும், அறிஞர்களுக்கும் இச் செய்தியைத் தெரிவித்தேன்.

என் இணையப் பக்கம் வழியாகச் செய்தி அறிந்த மறைமலை ஐயா, ஆ.இரா.சிவக்குமாரன் (சிங்கப்பூர்), சிவகுருநாதப் பிள்ளை (இலண்டன்), நா.கணேசன் (நாசா விண்வெளி ஆய்வு மையம்,அமெரிக்கா) உள்ளிட்ட அன்பர்கள் பலரும் என்னுடன் துன்பத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

இரவு சிப்மர் மருத்துவமனை சென்று துணைவேந்தரின் உடலைக் கண்டு வருத்தமுற்று நின்றேன். முனைவர் செ.வை. சண்முகம்.முனைவர் அரங்க பாரி உள்ளிட்ட பேராசிரியர்களையும் ச.அகத்தியலிங்கனாரின் குடும்பத்தினரையும் கண்டு ஆறுதல் கூறி மீண்டேன். இன்று காலை என் அலுவல்களை முடித்துக்கொண்டு சிப்மர் மருத்துவமனைக்குச் சென்றேன்.5 நிமைய இடைவெளியில் துணைவேந்தரின் உடலை எடுத்துக்கொண்டு உறவினர்கள், அறிஞர்கள் சிதம்பரம் சென்றதாக அறிந்தேன். மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் அகத்தியலிங்கனாரின் பெயர்த்தி அவர்களின் உடல்நிலை முன்னேற்றம் பற்றி வினவியும் அவர்களைக் கண்டும் மீண்டேன்.

துணைவேந்தரின் உடல் 1.50 மணிக்குச் சிதம்பரம் மாரியப்பா நகர் சென்றடைந்தது. அவரின் உடலைக் கண்டு வணக்கம் செலுத்த அவரின் மாணவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்து குவிந்திருந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மருத்துவர் மா.இராமநாதன். பதிவாளர் முனைவர் இரத்தினசபாபதி, தமிழ்த்துறைப் பேராசிரியர் அரங்க. பாரி உள்ளிட்ட பேராசிரியப் பெருமக்கள், மொழியியல் துறை சார்ந்த பேராசிரியர்கள் மிகுதியான அளவில் திரண்டிருந்தனர்.

தமிழ்ப் பல்கலைக்கழகம் இன்று விடுமுறை அறிவிக்கப்பெற்றுத், துணைவேந்தரின் இறப்பிற்கு சிறப்புச் செய்தது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம.இராசேந்திரன், பல்துறைப் பேராசிரியர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் வந்திருந்தனர்.

முனைவர் பொற்கோ,முனைவர் கி.அரங்கன், முனைவர் செ.வை.சண்முகம், முனைவர் இராதா செல்லப்பன்.முனைவர் ஒப்பிலா மதிவாணன், முனைவர் கி.கருணாகரன், முனைவர் இரா.சாரங்கபாணி, முனைவர் காமாட்சிநாதன் உள்ளிட்ட அறிஞர்கள் துணைவேந்தர் உடலுக்கு வணக்கம் செலுத்தினர்.

05.08.2008 இரவு ஏழரை மணிக்கு மாரியப்பா நகருக்கு அருகில் உள்ள சுடுகாட்டில் துணைவேந்தரின் உடல் எரியூட்டப்பட்டது. உலகம் முழுவதும் சென்று தமிழுக்குக் குரல் கொடுத்த தமிழ் அரிமா முனைவர் ச.அகத்தியலிங்கனார் இனி அவர்களின் செயலால் என்றும் நினைவுகூரப்படுவார்.

தமிழையும் தொல்காப்பியத்தையும் உலக அளவில் பரப்பிய தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ச.அகத்தியலிங்கம் மறைவு...



தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் உலக அளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்றவருமான முனைவர் ச.அகத்தியலிங்கம் அவர்கள் (அகவை 79) புதுச்சேரி அருகே கிளியனூர் காமராசர் குடியிருப்பு அருகில் நடைபெற்ற மகிழ்வுந்து விபத்தில் 04.08.2008 திங்கள் கிழமை காலை 11 மணியளவில் நேர்ச்சி இடத்திலேயே இறந்தார். அவர் துணைவியார் பொன்னம்மாள் அவர்களும் (அகவை 78) ஓட்டுநர் சீவபாலன் (அகவை 28) அவர்களும் சிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகு இறந்தனர். அகத்தியலிங்கனாரின் பெயர்த்தி இலதா பிரியா (அகவை 22) மருத்துவமனையில் சேர்க்கப்பெற்றுள்ளார்.

மறைந்த துணைவேந்தர் அவர்களுக்கு இரண்டு பெண்மக்கள். 1.சண்முகசுந்தரி. இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்விப் பிரிவில் திருச்சி அலுவலகத்தில் பணிபுரிகிறார். 2.அருணாசலவடிவு. இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராப் பணிபுரிகின்றார். துணைவேந்தரின் மறைவைக் கேள்வியுற்ற அவரின் குடும்பத்தினரும், நண்பர்களும் மாணவர்களும் உடல் வைக்கப்பெற்றுள்ள சிப்மர் மருத்துவமனைக்குத் திரண்டுவந்துள்ளனர்.

இன்று (05.08.2008) நண்பகல் மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்குப்பிறகு பிற்பகல் 3 மணியளவில் துணைவேந்தர் வாழ்ந்து வந்த சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள அவர்தம் இல்லத்தில் மக்களின் பார்வைக்குத் துணைவேந்தரின் உடல் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ பேராசிரியர் செ.வை.சண்முகம் உள்ளிட்ட அறிஞர்கள் ச.அகத்தியலிங்கனாரின் உடலுக்கு வணக்கம் செலுத்த உள்ளனர்.

முனைவர் ச. அகத்தியலிங்கனாரின் வாழ்க்கைக் குறிப்பு

ச.அகத்தியலிங்கனார் நாகர்கோயில் அருகில் உள்ள கேசவன்புதூரில் 1929 ஆகத்து மாதம் 19 ஆம் நாள் பிறந்தவர். பெற்றோர் சண்முகம் பிள்ளை அருணாசல வடிவு.நாகர் கோயில் இந்து கல்லூரியில் இளம் அறிவியல் கணக்குப்பாடம் பயின்ற இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர்.இங்குப் பயிலும்பொழுது குமரி அனந்தன் அவர்கள் இவருக்கு நெருங்கிய நண்பரானார்.

கேரளா பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியன் அவர்களின் மேற்பார்வையில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். பிறகு அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் மற்றுமொரு முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாறு அமெரிக்காவில் இவர் முனைவர் பட்டம் பெற்றபொழுது உலகின் மிகச்சிறந்த மொழியியல் அறிஞர்களிடம் பாடம் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார்.

மொழியியல் துறையில் தமிழ் மொழியின் சிறப்பு அறியப்படாமல் இருந்தது. இம் மேல்நாட்டுச் சிந்தனை மரபை உடைத்துத் தமிழுக்கு உலக அளவில் புகழ் கிடைக்கவும் உலக மொழியியல் அறிஞர்கள் தமிழின் பக்கம் கவனத்தைத் திருப்பவும் அகத்தியலிங்கனாரின் பணி குறிப்பிடும்படியாக இருந்தது. அயல்நாட்டு மாணவர்கள் தமிழ் கற்கவும் தமிழ்மொழியின் அமைப்பை ஆராயவுமான சூழலை உருவாக்கியவர்.

அமெரிக்காவில் பணிபுரிந்த பேராசிரியர் ஏ.கே.இராமானுசம் தமிழின் சிறப்புப் பற்றிய நூல்கள் எழுதக் காரணமாக இருந்தவர்.அறிஞர் கார்ட்டு, பாண்டே, தாமசு டிரவுட்மண்டு உள்ளிட்டவர்களுக்கு நெருக்கமாக இருந்து தமிழ் பயிற்றுவித்தவர்.அவர்களால் மதிக்கப் பெற்றவர். தமிழ்த்துறை, ஆங்கிலத் துறை, மொழியியல் துறை சார்ந்த பேராசிரியர்கள் பலருக்கு நெறியாளராக இருந்து நெறிப்படுத்தி முனைவர் பட்டம் பெறக் காரணமாக இருந்தவர். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற மொழியியல் அறிஞர்கள் பலரும் ச.அகத்தியலிங்கனாரின் மாணவர்களாக விளங்கியவர்களே.

பொற்கோ, கி.அரங்கன், கருணாகரன் செ.வை.சண்முகம் க.இராமசாமி உள்ளிட்ட அறிஞர்கள் மொழியியல் துறையில் சிறந்த ஆய்வுகளை நிகழ்த்த நம் அகத்தியலிங்கனார் காரணமாக அமைந்தார்கள். இவரிடம் மொழியியல் கற்றவர்கள் உலக அளவில் உள்ளனர். இவர் தமிழ் ஆங்கிலம் மலையாளம் மொழிகளில் நல்ல புலமைபெற்றவர்.

அகத்தியலிங்னார் தாம் பயின்ற இந்து கல்லூரியில் தமிழ்விரிவுரையாளர் பணியைத் தொடங்கித் தில்லிப் பல்கலைக்கழகத்தில் சில காலம் இணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். 1968 முதல்1989 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் இயக்குநராகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். தமிழ்த்துறையில் புல முதன்மையராகவும் பணிபுரிந்தவர். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் வருகைதரு பேராசிரிராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூன்றாண்டுகள் பணிபுரிந்தவர்.உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியாகவும் மைசூர் செம்மொழி நிறுவனத்தில் முதுநிலை ஆய்வறிஞராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.


சிங்கப்பூரில் ச.அகத்தியலிங்கம், சுப.திண்ணப்பன், மு.இளங்கோவன்(2001)

உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் தமிழ் அமைப்புகள் மொழியியல் அமைப்புகளில் பொறுப்பு வகித்த பெருமைக்கு உரியவர்.அனைத்து இந்திய மொழியியல் கழகத்தை உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர். இதன் வழியாக தரமான தமிழ் மொழியியல் ஆய்வுகள் வெளிப்பட்டன.பல ஆய்வாளர்கள் உருவானார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றிலும் மொழியியல் வரலாற்றிலும் அகத்தியலிங்கனாரின் பணிகள் என்றும் நினைவுகூரும் வண்ணம் பல உள்ளன.

அகத்தியலிங்கனார் தமிழில் 24 நூல்களையும் ஆங்கிலத்தில் 9 நூல்களையும் எழுதியுள்ளார். 200 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வரைந்த மெருமைக்கு உரியவர். இவை யாவும் மொழியியல், சங்க இலக்கியம், தொல்காப்பியம் பற்றியன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். உலக மொழிகள் பற்றி இவர் எழுதிய நூல்கள் உலக மொழிகள் பலவற்றின் வரலாற்றையும் சிறப்பையும் அதன் அமைப்புகளையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

அதுபோல் சங்க இலக்கியம் குறித்துச் சங்கத்தமிழ் என்னும் பெயரில் 5 தொகுதிகளை எழுதியுள்ளார். உலகமொழிகள் என்ற வரிசையில் 7 தொகுதிகள் வெளிவந்துள்ளன. தொல்காப்பியம் பற்றி 3 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவர்தம் தமிழ், ஆங்கிலக் கட்டுரைகள் பலவும் உலகத்தரம் வாய்ந்த இதழ்களில் வெளிவந்துள்ளன.

அகத்தியலிங்கனார் இதுவரை 55 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு நெறியாளராக இருந்து நெறிப்படுத்திய பெருமைக்கு உரியவர். இவரின் மொழியியல் பணிகள் ஆய்வுகள் நூல்கள் இவருக்கு உயரிய விருதுகள் பட்டங்கள் பதவிகள் கிடைக்க காரணமாயின. அவ்வகையில் இவர் தமிழக அரசின் திரு.வி.க.விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். உலக நாடுகள் பலவற்றிற்கு இவர் பயணம் செய்து தமிழின் பெருமை பற்றி பேசிய பெருமைக்கு உரியவர். பல பல்கலைக்கழகங்களில் கல்விக்குழு அறிவுரைஞர் குழு எனப் பலவற்றறில் இணைந்து பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

பணி ஓய்வு பெற்ற பிறகும் தம் இல்லத்தில் அமர்ந்தபடியே பல்வேறு ஆய்வுகளைச் செய்துவந்தார். உலக நாடுகள் இவரை அழைத்துப் பெருமை கொண்டன. அவ்வகையில் அண்மையில் சிங்கப்பூர் சென்று ஆய்வரங்கில் கலந்துகொண்டு உரையாற்றி மீண்டுள்ளார். எதிர்பாராமல் நடந்த சாலை விபத்தில் இயற்கை எய்திய ச.அகத்தியலிங்கனாரின் பிரிவு அறிந்து தமிழ் அறிஞர் உலகமும் மொழியியல் துறையினரும் கலங்கி நிற்கின்றனர்.

சனி, 2 ஆகஸ்ட், 2008

பாரதிதாசன் பல்கலைக்கழக நூலகத்துறையின் தேசியப் பயிலரங்கில்...


முனைவர் இராதா செல்லப்பன் அவர்கள் வாழ்த்துரை


மு.இளங்கோவன் தமிழ் இணையம் பற்றி விளக்குதல்

பாரதிதாசன் பல்கலைக்கழக நூலகத்துறையும் அகமதாபாத் INFLIBNET அமைப்பும் இணைந்து நடத்திய தென்னிந்தியப் பல்கலைக்கழக,கல்லூரி நூலகத்துறையினர் கலந்துகொண்ட தேசியப் பயிலரங்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாள் நடைபெற்றது.

இன்று 02.08.2008 நடைபெற்ற இரண்டாம் நாள் அமர்வில் நான் கலந்து கொண்டு "தமிழ்மொழி இலக்கியம் சார்ந்த மின்னிதழ்கள்,மின்புத்தகங்கள்" என்ற தலைப்பில் ஒன்றரை மணிநேரம் உரையாற்றினேன்.காட்சி விளக்கம்(பவர் பாயிண்ட்டு), இணையம் துணையுடன் என் உரை உயிர்ப்புடன் இருந்தது.

கணிப்பொறியில், இணையத்தில் தமிழ் வளர்ந்த வரலாறு, மின்னிதழ்கள், மின்நூலகங்கள், விருபா, தமிழ்மரபு அறக்கட்டளை, மதுரைத் திட்டம், புதுவை பிரஞ்சு இன்சுடியூட் நூலகம், சிங்கப்பூர் தேசிய நூலகம்,பற்றி மிக விரிவாகப் பேசினேன்.தமிழ் வலைப்பதிவின் தேவை, தமிழ்மணம் அமைப்பினர் அமெரிக்காவிலிருந்து ஆற்றும் பணிகள் பற்றி விரிவாகப் பேசினேன்

இந்திய அளவிலும் குறிப்பாகத் தமிழக அளவில் புகழ்பெற்ற கல்லூரிகளின் நூலகர்கள் பலரும் வந்து கலந்துகொண்டு என் முயற்சியைப் பாராட்டினர். ஆய்வு மாணவர்கள் பலருக்கும் என் உரை பெரிய ஊக்கத்தைத் தந்தது. தமிழ் இணையத்தில் இவ்வளவு தகவல்கள் உள்ளமையை அரங்கினர் இதுநாள்வரை அறியவில்லை எனப் பெருந்தன்மையுடன் ஒத்துக்கொண்டனர்.

மு.இளங்கோவன் உரை

பெங்களூர் பல்கலைக்கழகத்தின் நூலகர்கள் பேராசிரியர் முனைவர் பி.வி.கொன்னூர், முனைவர் கே.துரைசாமி, தேசியத் தரமதிப்பீட்டுக்குழு(naac) சார்ந்த பேராசிரியர் பொன்முடி ராசு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு என் உரையைக் கேட்டுப் பாராட்டினர்.

பேராசிரியர் முனைவர் கொன்னூர் அவர்கள் தனியே தொலைபேசி வழியாகவும் என்னை அழைத்துப் பாராட்டியமை மகிழ்ச்சி தருகிறது. தமிழ் இலக்கியத் துறைக்கு இணையத்தில் ஆற்றிவரும் என் பங்களிப்பு போல் அவரும் கன்னடமொழி இலக்கியத்திற்கு ஆற்றிவருவதை நினைவுகூர்ந்தார்.

என் பேராசிரியர் முனைவர் இராதா செல்லப்பன் அம்மா அவர்கள் வந்திருந்து என் உரை கேட்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

பல்கலைக்கழக நூலகர் பேராசிரியர் சு.சீனிவாச ராகவன் அவர்கள் உள்ளிட்ட பல்கலைக் கழகத்தின் நூலகத் துறையினர் சிறப்பாகக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தனர். 240 பேர் இப்பயிலரங்கில் பதிவு செய்து கலந்துகொண்டனர். நான் உட்பட 4 சிறப்பு உரையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தோம்.12 தொழில்முறை விளக்க உரைகள் இடம்பெற்றன. 40 பேராசிரியர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழக அளவில் கல்வித்துறையில் தமிழ் இணையம் பற்றிய விழிப்புணர்வுக்கு என் உரை கல்வியாளர்கள் நடுவே நல்ல விதையாக ஊன்றப்பட்டுள்ளது.

நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படித்தவன் என்ற முறையிலும், அங்குப் பணி செய்தவன் என்ற முறையிலும் நண்பர்கள் பலரைக் கண்டு உரையாட இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.