நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
நெதர்லாந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெதர்லாந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 அக்டோபர், 2015

தமிழர்களின் கலைச்செல்வம் தேடி…






ஆம்சர்டாம் அருங்காட்சியகத்தில் உள்ள நடராசர் சிலை

காலை பத்து மணிக்கெல்லாம் இலெய்டனில் உள்ள அருங்காட்சியகத்தை அடைந்துவிடுவது என்று திட்டமிட்டுத், தொடர்வண்டி ஏறினோம். வானம் வெளுத்துக் காணப்பட்டது. இன்றும் மழை இருக்காது என்று நேற்றே கோபி குறிப்பிட்டார். நெதர்லாந்தில் மழை இல்லாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்குத் தொடர்ந்து மழைபெய்துகொண்டிருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் ஐந்தாறு குடைகள் வைத்துள்ளனர். அவரவர் கைபேசியிலும் வானிலை அறிவிப்புகளை அறிவதற்குரிய செயலிகளை நிறுவியுள்ளதால் வானிலை விவரங்களை அனைவரும் உடனுக்குடன் தெரிந்துகொள்கின்றனர்.

நெதர்லாந்து நாட்டின் இனப்பண்பாட்டு அருங்காட்சியகம்(National Museum of Ethnology (Dutch: Rijksmuseum Volkenkunde or RMV) நுழைவுவாயிலை காலை 10  மணியளவில் அடைந்தோம். வரவேற்பறையில் நாங்கள் இந்தியாவிலிருந்து வருகிறோம் எனவும், பரங்கிப்பேட்டை, தரங்கம்பாடி உள்ளிட்ட எங்களின் நாட்டுப்பகுதிகளில் தங்கள் நாட்டினர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வணிகம் செய்த விரங்களை அறிய விரும்புகின்றோம் எனவும் குறிப்பிட்டோம். எங்களை அன்புடன் வரவேற்றனர். ஆராய்ச்சியாளர்கள் என்பதால் சிறப்புச் சலுகைகள் வழங்கினர். இந்தியப் பகுதிக்கு நாங்கள் செல்ல வேண்டும் என்று கூறினோம்.


ஆசியப் பகுதி என்ற பிரிவில் ஆசிய நாடுகளின் பண்பாடு, பழக்க வழக்கம், வாழ்க்கைமுறை குறித்த பல பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. டச்சுக்காரர்கள் இந்தோனேசியா, சுமத்ரா, திபேத், சீனா, மலேசியா, பர்மா உள்ளிட்ட பகுதிகளைச் சிறப்பாக ஆண்டதால் அப்பகுதியின் பண்பாட்டுச் சின்னங்கள் இக்காட்சியகத்தில் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் தென்னாப்பிரிக்கா, பாகித்தான், அரேபியா நாடுகளைச் சேர்ந்த கத்திகள், விளக்குகள், யானைத் தந்தத்தில் அமைந்த பொருள்கள், தோல்பொம்மைகள், பல்வேறு இன மக்களின் ஆடைகள், வாழ்க்கை முறைகள் விளக்கும் சிலைகளும், பொம்மைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அழகினைக் கண்டு வியந்தோம். ஜாவாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த துர்க்கா தேவி சிலை, கிழக்கு ஜாவாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள பிள்ளையார் சிலைகள், நந்தி சிலை, மகா காலா(Mahākāla) சிலை, தமிழகத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள பைரவர் சிலை, அர்த்தநாரி சிலை, நடராசர் சிலை யாவும் கண்ணைக் கவரும் வகையில் உள்ளன. இந்தியாவில் - தமிழகத்தில் வழங்கும் பல்வேறு புராணச்செய்திகள் ஆசியா முழுவதும் பரவியுள்ளமையை அங்குள்ள கலைப்பொருள்களால் அறிந்தோம்.


மேலும் பொன்னில் அமைந்த மணிகள், சிலம்புகள், வளையல்கள், காப்புகள், தோடுகள், மூக்கணிகள், கத்தி, வாள், கேடயம் உள்ளிட்ட ஆயுதங்கள், விளக்குகள் உள்ளிட்ட பூசைப் பொருள்கள், இசுலாமியப் பெருமக்கள் அமர்ந்து படிக்கும் அழகுப் பொம்மைகள், நாகசுரம், தாளம், பறை, யாழ், வீணை, முழவு உள்ளிட்ட இசைக்கருவிகள், பலவகை வடிவில் உள்ளன. டச்சுப் படை மறவர்கள் பிறநாடுகளுக்குச் சென்றபொழுது அங்குக் குதிரைகளில் உலா வரும் காட்சிகள், பல்வேறு வகையான படகுகள், கப்பல்களின் மாதிரிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த அந்த அருங்காட்சியகப் பொருள்கள் இணையத்தில் பார்வைக்கு உட்படும் வகையில் பாதுகாக்கப்படுகின்றமை போற்றத்தகுந்த ஒன்றாகும். இந்த அருங்காட்சியகம் ஒலி, ஒளிக்காட்சிகளுடன் உள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு செய்தியாகும். பல்வேறு பேச்சுகளையும், காட்சிகளையும், பண்பாட்டுக் கலைநிகழ்வுகளையும் அமர்ந்தபடி கண்டுசுவைக்க நல்ல வசதிகளைச் செய்துள்ளனர்.
அணிகலண்கள்

                                                              அணிகலண்கள்

யானைத் தந்தத்தில் அமைந்த கலைப்பொருள்கள்


இசைக் கருவிகள்


நம் நாட்டில் இதுபோன்ற நிலை இல்லை. அறிவுக் கருவூலமாகவும், கலைக்கருவூலமாகவும் விளங்கும் தமிழகத்தில் அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திச் சுற்றுலாவுக்கு வழிவகுக்கும் செயல்களில் நம்மவர்கள் ஈடுபடவேண்டும். அரசுக்குச் சரியான ஆலோசனைகள் வழங்குவோர் அருகிப் போனமையும், அறிவார்வம் நிறைந்த அதிகாரிகள் இல்லாமல் போனமையும் நம் நாட்டின் சாவக்கேடு என்று குறிப்பிடலாம். தமிழ்ப்பற்றும் செயல்திறனும் வினையாண்மையும் இல்லாதார் கையில் தமிழ் சிக்கிச் சீரழிந்துகொண்டிருப்பதைக் கவலையுடன் எண்ணிப் பார்ப்பதைத் தவிர வழியில்லை. நம் நாட்டில் உள்ள கோயில்கள், அருங்காட்சியகங்கள், அகழாய்வு வைப்பகங்கள், சுற்றுலாத் தலங்கள், நூலகங்கள், ஆய்வு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்  யாவும் இறங்குமுகத்தில் உள்ள நிலையை மாற்றி, ஏறுமுகம் காணவைக்கும் செயல் மறவர்களுக்கு இத்தமிழுலகம் காத்துள்ளது என்று நினைப்பதைத் தவிரவேறு வழியில்லை. இது நிற்க.

பகல் இரண்டு மணிக்கு இலெய்டனிலிருந்து ஆம்சர்டாம் அருங்காட்சியகம் நோக்கிப் பயணமானோம். விரைவுத் தொடர்வண்டியில் புறப்பட்டதால் மிக விரைவாக ஆம்சர்டாம் வந்துசேர்ந்தோம். இடையில் துளிப் மலர்களின் தோட்டத்தைப்(Tulip Field) பார்க்க முடிந்தது. நெதர்லாந்து நாட்டுக்குச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதும், பெரும் வருவாயைத் தருவதும் துளிப் மலர்கள் ஆகும். நாங்கள் சென்ற நேரம் அறுவடை முடிந்தநேரம். எனினும் சிற்சில தோட்டங்களைப் பார்க்கமுடிந்தது. வயல்வெளிகளில் உள்ள வாய்க்கால்கள் யாவும் படகு செல்வதற்குரிய வகையில் முறைப்படுத்தப்பட்டுள்ளன. நெதர்லாந்து நாட்டுக்காரர்களின் நீர்மேலாண்மை அறிவை எண்ணி எண்ணி வியப்படைந்தேன்.


துளிப் மலர்த்தோட்டம்

எங்களின் பொன்னேரி எனப்படும் சோழகங்கம் ஏரியிலிருந்து நீரை வெளியேற்றும்  வாய்க்கால்களும், அதில் தண்ணீர்ப் பாய்ச்ச நாங்கள் மேற்கொள்ளும் தந்திர உத்திகளும், ஒருவருக்கொருவர் செய்யும் அழிம்பு வேலைகளும் என் உள்ளத்தில் தோன்றி மறைந்தன. நெதர்லாந்திலுள்ள ஒரு வாய்க்கால் போல்  கவின் மிகுந்த வாய்க்காலைத் தமிழகத்தில் யான் காணவில்லை.

வாய்க்காலை ஒட்டிச் சிலர் அழகிய வீடு கட்டி வைத்துள்ளனர். அதனை ஒட்டிச் சில படகுகளையும் கட்டி வைத்துள்ளனர். மாடுகள் மேய்ந்து கொழுத்து நிற்கின்றன. குதிரைகள் கூட்டம் கூட்டமாக மேய்ந்துகொண்டும், படுத்துச் சூரியக் குளியல் போட்டும் நின்றன. அங்குள்ள உழவர்கள் உழைக்கலாம். ஓய்வு எடுக்கலாம். உண்ணலாம். ஊர் சுற்ற நினைத்தால் படகில் புறப்பட்டு வேறுபுலம் செல்லலாம். இயற்கையுடன் இயைந்த அவர்களின் வாழ்க்கைக்கு ஏங்கியவனாக, ஆம்சடர்டாம் வீதிகளில் நடந்து அருங்காட்சியகம் சென்றோம். நண்பர் கோபி நெதர்லாந்து நாட்டினரின் நீர்மேலாண்மை குறித்து விரிவாக விளக்கியவண்ணம் வந்தார்.

ட்ரொபென் (Tropen Museum) அருங்காட்சியகம் ஆம்சடர்டாமுக்குப் பெருமை சேர்த்து நிற்கின்றது.

ஆசிய நாடுகளின் பகுதிகளில் இந்தியாவின் இரவீந்திரநாத தாகூர் குறித்த செய்திகளும் அவரின் படைப்புகளும் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் ஐயனார் சிலைகள், மண்குதிரைகள், நடராசர் சிலை, விஷ்ணு கற்சிலை, தோல்பொம்மைகள், இசைக்கருவிகள், அணிகலன்கள் பார்வைக்கு உள்ளன. பத்துத் தலை இராவணன் பொம்மை வடிவில் உள்ளார். இந்திய இசையை அடையாளப்படுத்தும் வகையில் இந்திய இசைக்கருவிகள் முழங்கி நம்மை வரவேற்கின்றன.

இராவணன் தோற்றம்

நடராசர் சிலை(இலெய்டன்)

 இரவிவர்மா ஓவியம்(?)


தோல்பாவை

தென்னாப்பிரிக்கா உள்ளிட்டநாடுகளில் வாழ்ந்த பழங்குடி மக்களின் வாழ்க்கை, அவர்களின் வாழ்க்கைமுறை விளக்கும் பல படங்கள் இந்த அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்படுகின்றன.

நெதர்லாந்து நாட்டினர் உலகின் பல பகுதிகளுக்கு வணிகத்தின் பொருட்டுச் சென்று அங்குள்ள கலைப்பொருட்களை நினைவாகக் கொண்டுவந்து பாதுகாக்கின்றமையை அருங்காட்சியகப் பொருள்கள் தெரிவிக்கின்றன.

ஜாவா குறித்த விரிவான செய்திகள் உள்ளன. ஜாவாவிலும் மற்ற நாடுகளிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த பாடநூல்கள், வகுப்பறைகள் காட்டும் படங்கள், மாணவர்களின் படங்கள் அங்கு அழகாகப் பாதுகாக்கப்படுகின்றன. ஜாவாவின் 1927 ஆம் ஆண்டு கல்வி முறையை விளக்கும் மூன்று நிமிட ஆவணப் படம் ஒன்றைப் பார்வையிட்டேன். மாணவர்கள் வகுப்புக்குச் சீருடையுடன் செல்வது, வகுப்பறையில் அமர்வது, ஆசிரியர் பாடம் நடத்துவது, மாணவர்கள் கரும்பலகையில் எழுதுவது, பயிற்சிகள் என்று மிகச்சிறப்பாகப் பதிவுசெய்யப்பட்ட காட்சிகள் வியப்பாக இருந்தன. அங்கிருந்த பாட நூல்கள், சான்றிதழ்கள் சிலவற்றைப் படமாக எடுத்துக்கொண்டேன்.




ஜாவா நாட்டுப் பாடக்குறிப்புகள்

அங்குள்ள ஒளிப்பதிவுக்கூடம் ஒன்றை நண்பர் கோபி காட்டினார். அதுபோல் இருந்த மற்றொரு பதிவுக்கூடத்தில் சில பெண்கள் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். எனவே நாங்களும் ஒளிப்பதிவுக் கூடத்தில் நுழைந்து, அங்கிருந்த குறிப்புகளைப் படித்துப் பார்த்தோம். நம் நாட்டு இசைப்பாடல்களைப் பாடினால் பதிவு செய்து பாதுகாக்கப்படும் என்ற குறிப்பு காணப்பட்டது. நண்பர் கோபி என்னை ஒரு நாட்டுப்புறப் பாடல் பாடும்படி கேட்டுக்கொண்டார். நானும் பாடினேன்.
ஒளிப்பதிவுக் கூடம்

கருவி தாமாகவே காணொளி வடிவில் பதிந்துகொண்டது. பாடியவர் விவரம், மின்னஞ்சல்  முகவரி, நண்பர்களின் மின்னஞ்சல் முகவரி கேட்டது. அனைத்தும் தந்தோம். மார்க்கோபோலோ சிறப்புத் திட்டத்தின் கீழ் உலகப் பாடல்கள் பதிவு செய்யப்படுவதாகவும் இந்த அருங்காட்சியகத்தில் என்றும் இந்தப் பாடல்கள் நினைவாகப் பாதுகாக்கப்படும் என்றும் அறிவிப்பு வந்தது. அப்படி என்றால் இன்னொரு பாடல் பாடுங்கள் என்று பொறியாளர் கோபி சொன்னார். இன்னொரு நடவுப் பாடலைப் பாடி, இது நாட்டுப்புறப் பாடல், மு.இளங்கோவன், தமிழ்நாடு, இந்தியா என்று பதிவுசெய்துவிட்டு வெளியே வந்தோம்.



சனி, 10 அக்டோபர், 2015

நெதர்லாந்து நினைவுகள்….(1)


ஈரோமாசுடு ஒற்றைக் கோபுரம்

இரவு பதினொரு மணிக்குப் புறப்படுவதுபோல் பாரிசில் உள்ள பன்னாட்டுப் பேருந்து நிலையத்தில் முன்பதிவு செய்திருந்தேன். அரை மணி நேரத்திற்கு முன்பாகவே பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். ஈரோலைன்சு (eurolines) நிறுவனப் பேருந்தில் நெதர்லாந்துக்குச் செல்லும் பயணிகள் ஆர்வமுடன் ஏறி அமர்ந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து புறப்பட்டது, விமானம் செல்வதுபோல் ஆடாமலும் அசையாமலும் பேருந்து மெதுவாக தார்ச்சாலையில் ஊர்ந்து முன்னேறியது. முன் பின் அறிமுகம் இல்லாத ஊருக்குச் செல்கின்றோமே என்ற நினைவுகளுடன் மெதுவாக வரலாற்றை நினைவுகூர்ந்தேன்.

நெதர்லாந்துக்காரர்கள் நம் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள பரங்கிப்பேட்டை, தரங்கம்பாடி உள்ளிட்ட ஊர்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கைப்பற்றி ஆட்சிபுரிந்தவர்கள். பொருள்களை விற்கவும் வாங்கவுமாக நம் நாட்டைப் பயன்படுத்தியவர்கள். அவர்கள் தமிழகத்தின் பல கலைப்பொருள்கள், ஆவணங்கள், சிலைகள், நூல்களைக் கொண்டு சென்றவர்கள் என்பதை நினைத்துப் பார்த்தேன். புகழ்பெற்ற இலெய்டன் செப்பேடுகள் பற்றி வரலாற்றில் படித்தமை நினைவுக்கு வந்தன. நம் நாட்டுச் சிலைகள், வலம்புரிச் சங்குகள் உள்ளிட்ட அரிய பொருள்கள் நெதர்லாந்து நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ள செய்திகள் நினைவுக்கு வந்தன. ஓரிரு மணி நேரத்தில் கண்ணயர்ந்தேன்.

இடையில் விழித்துப் பார்த்தபொழுது நெதர்லாந்து நாட்டில் பேருந்து முன்னேறிச் சென்றுகொண்டுள்ளமை தெரிந்தது. இடையில் சிறு நகரங்களில் ஓரிருவர் இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தனர். பேருந்து ஓட்டுநர் முதியவராக இருந்தார். அனைவரிடமும் உற்ற நண்பனைப் போல் மகிழ்ச்சியுடன் உரையாடியபடி இருந்தார். இடையில் வேறொரு இளைஞர் மாற்று ஓட்டுநராக வந்து அமர்ந்தார். அவரிடம் நான் இறங்கவேண்டிய இடத்தை நினைவூட்டி வந்து மீண்டும் அமர்ந்தேன். தூக்கம் இல்லை.

வைகறை 5.15 மணிக்கு  நெதர்லாந்து நாட்டின் தென் காக் (Den Haag) பேருந்து நிலையத்தில் வண்டி நின்றது. ஓரிருவர் என்னுடன் இறங்கினர். ஆள் அரவம் இல்லை. எங்கும் அமைதி நிலவியதுகாலை 6.20 மணிக்குதான் என்னை அழைத்துச் செல்ல பொறியாளர் கோபி வருவார். அதுவரை அங்கு நிற்பதைவிட ஆள் அரவம் உள்ள இடத்திற்குச் செல்லலாம் என நினைத்து, கீழ்த்தளத்தில் இருந்த தொடர்வண்டி நிலையம் சென்றேன். எங்கும் தானியங்கிப் படிக்கட்டுகள் அழைத்துச் செல்கின்றன. ந்த இடத்தில் குளிர் இல்லை. காவல் துறையினர் இங்கும் அங்கும் நடந்தபடி இருந்தனர். வெளியூருக்குச் செல்லும் பயணிகள் முதல் தொடர்வண்டியைப் பிடிக்க விரைந்து வந்துகொண்டிருந்தனர். தொடர்வண்டிகள் சில வருவதும் போவதுமாக இருந்தன. அருகில் இருந்த வீசுபலகையில் அமர்ந்தேன். குளிர் சில்லிட்டது. கையுறை உள்ளிட்டவற்றை அணிந்து உடலைக் காத்தேன். நேரம் மெதுவாக நகர்ந்தது.


பொறியாளர் கோபி அவர்கள் 6.20 மணிக்கு வந்து சேர்ந்தார். அவரின் இல்லத்திலிருந்து அப்பொழுதுதான் முதல் வண்டி வரும் நேரம் என்று குறிப்பிட்டார். இருவரும் உரையாடியபடி பத்து நிமையப் பயணத்தில் கோபி இல்லம் சென்றோம். தெருவில் எங்கும் அமைதி குடிகொண்டிருந்தது. முறைப்படுத்தப்பட்ட சாலைகள் கண்டு வியந்தேன். கோபியின் துணைவியார் வதனா அவர்கள் வரவேற்றார். ஒருமணிநேரம் ஓய்வெடுக்கும்படி சொன்னார்கள். சற்றுக் கண்ணயர்ந்தேன்.

8.30 மணியளவில் எழுந்து குளித்து முடித்தேன். வெண்பொங்கல் விருப்பமாக உண்டேன். நானும் கோபியும் கறிகாய் வாங்குவதற்குச் சந்தைக்குச் சென்றோம். முதலில் வீட்டுக்கு வேண்டிய மளிகைப் பொருள்களை வாங்கினோம். ஒரு பஞ்சாபியர் கடை. பலவாண்டுகளாக இங்குக் கடை நடத்துவதாக கடையின் உரிமையாளரான ஒரு பெண்மணி தெரிவித்தார். இந்தியாவில் உள்ள அனைத்துப் பொருள்களும் அங்குக் கிடைக்கின்றன. கோவைக்காய் முதல்  கொத்துமல்லி வரை அனைத்தையும் வாங்கிக்கொண்டு அடுத்து, அருகில் இருந்த சந்தைக்குப் புறப்பட்டோம்.





நம் ஊர்போல் பழங்களையும், மீன்களையும் கூவிக் கூவி விற்கின்றனர். மீன்கள் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. பல்வகை மீன்கள், நண்டுகள், கருவாடுகள் எங்கும் காட்சிக்கு இருந்தன. எந்த டத்திலும் ஈ, கொசு  நடமாட்டம் இல்லை. மிகத் தூய்மையாகப் பதப்படுத்தப்பட்டுப் பொருள்கள் விற்கப்படுகின்றன. மீன் வாங்கிக்கொண்டோம். பழங்களும், வேறு சில பொருள்களும் வாங்கிக்கொண்டோம். சீனாவிலிருந்து வந்த இஞ்சியும், இசுபெயினிலிருந்து வந்த இஞ்சியும் பெரிய வடிவில் தூய்மையாகப் பளிச்சிட்டுக் காணப்பட்டன. உருளை, தக்காளி யாவும் வாட்டம் இல்லாமல் அப்படியே எடுத்து உண்ணத் தூண்டும் நிலையில் இருந்தன. சந்தையை முழுமையாக ஒரு வட்டம் அடித்துப் பார்த்தோம். இடையில் தென் காக்கு நகரத்தையும் பார்வையிட்டோம். மேலும் நெதர்லாந்து நாட்டின் பாராளுமன்றத்தையும் பார்வையிட்டோம். ஒரு பூங்காவில் நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. 


அண்மையில் அவர் பிறந்தநாள் என்பதால் அன்பர்கள் மலர்தூவி மாலையிட்டிருந்தனர். அனைத்தையும் பார்வையிட்டபடி இல்லம் திரும்பும்பொழுது பகல் இரண்டுமணி இருக்கும்.


 பகல் உணவு முடித்தோம். உலகக் குற்றவியல் நீதி மன்றத்தைப் பார்க்கும் வாய்ப்பும் அமைந்தது. உலகின் புகழ்பெற்ற பல வழக்குகள் இங்கு நடைபெற்றுள்ளன என்று நண்பர் கோபி விவரித்தபடி வந்தார். அங்கிருந்து புறப்பட்டு, இலெய்டன் நோக்கிச் சென்றோம்.


நெதர்லாந்தின் முதன்மை நகரங்களுள் இலெய்டன் முதன்மையான ஒன்றாகும். இங்கு அருங்காட்சியகங்கள் உள்ளன. மக்களுக்கு உரிய பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன. தொடர்வண்டி, பேருந்து என அனைத்து வசதிகளும் உண்டு. பல்கலைக்கழகமும் உண்டு. நாங்கள் சென்ற அந்த நாள் உள்ளூர் விடுமுறை நாளாம். அன்று இலெய்டன் மக்கள் அனைவரும் தங்களின் தேசியத் திருநாளை ஒன்றுகூடி, கொண்டாடிக் கொண்டிருந்தனர். குடை இராட்டினம், கடைத்தெருக்கள் என ஊரே அமர்க்களப்பட்டது. மக்கள் உண்பதும், குடிப்பதுமாக இரு மருங்கும் இருந்த கடைகளில் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அனைவரும் குடும்பம் குடும்பமாக நகரை வலம் வந்தனர். அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்ததால் நாங்களும் திருவிழாவைக் காண வந்தவர்கள் போல் ஒரு நெடுந்தூர நடைபோட்டு மீண்டும் தொடர்வண்டி நிலையம் வந்தோம்.





அங்கிருந்து ரோட்டர்டாம் என்ற துறைமுக நகரம் சென்றோம். கண்கொள்ளாக் காட்சியாக அந்த ஊர் இருந்தது.

அங்கு இருந்த ஈரோமாசுடு (Euromast) என்ற  புகழ்பெற்ற ஒற்றைக் கோபுரத்தைப் பார்வையிடச் சொன்றோம். 185 மீட்டர் உயரம் உடைய அந்த ஒற்றைக் கோபுர நெடுமுடியிலிருந்து பார்வையிட்டால் ரோட்டர்டாம் நகரத்தின் எங்கும் நிறைந்த அழகுக்காட்சியின் ஆட்சியைக் கண்டு மகிழமுடியும். இதற்குத் தனியான நுழைவுச்சீட்டினைப் பெற்று மாடிப் படியேறியும், தூக்கியில் சென்றும் பார்வையிடவேண்டும். இதனைப் பார்வையிட மக்கள் தொகை தொகையாக வந்தவண்ணம் உள்ளனர். கோபுர முடி வரை ஏறி நின்று அரைமணி நேரத்திற்கும் மேலாக இயற்கைக் காட்சிகளைப் பார்த்தோம். அருகில் உள்ள நீர்நிலைகளில் கப்பல்களும், படகுகளும் போவதும் வருவதுமாக இருந்தன. பிறகு ரோட்டர்டாம் பாலம் பார்த்தபடி பலநிலைகளில் படம் எடுத்துக்கொண்டோம். ரோட்டார்டாமிலும் கப்பல், படகு போக்குவரவு சிறப்பாக உள்ளது. விண்ணைத்தொடும் கோபுரங்கள் நெதர்லாந்து நாட்டின் வளமை காட்டி நிற்கின்றன.

ஈரோமாசுடு கோபுரத்தில் பொறியாளர் கோபி அவர்களுடன்

ரோட்டர்டாம் பாலத்தில் மு.இளங்கோவன்

நடைபாதை, மிதிவண்டிப் பாதை, படகுப்பாதை, தொடர்வண்டிப் பாதை, பேருந்துப்பாதை என ஊரில் அனைத்து வகையிலும் பயணம் செய்ய வசதி உள்ளது. பயண அட்டை ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டு எந்த வண்டியிலும் நாம் பயணம் செய்துகொள்ளலாம். போகும் தூரத்திற்கு உரிய காசைக் கணினி கழித்துக்கொள்ளும். விடுமுறை நாளிலும், போக்குவரவு நெரிசல் இல்லாத நேரங்களிலும் பயணம் செய்தால் 40 விழுக்காடு சலுகை விலையில் பயணம் செய்யவும் இயலும். எங்கும் கணினிமயப்படுத்தப்பட்ட நாடாக நெதர்லாந்து விளங்குகின்றது. நாட்டையும் மக்களையும் சிந்திக்கும் ஆட்சியாளர்களால் இந்த நாடு ஆளப்படுவதால் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளது. நம் ஊரில் ஒரு தானியங்கி வங்கிச் சேவையைக் கூட ஒழுங்காகப் பயன்படுத்தமுடியாத நிலையை நினைத்து வருந்தினேன்.


 அவையல்கிளவி முழக்கும் நம் நாட்டுப் பேருந்து ஓட்டுநர்களைப் போன்ற மாந்தர்களையோ, சீறிப் பாய்ந்து செல்லும் சென்னை நகர உந்துவண்டியோட்டிகளையோ, சாலையில் தவறி நடந்தவர்களைச் சுடுசொல்லால் சுட்டெரிக்கும் இழிமகன்களையோ நெதர்லாந்தில் யாண்டும் கண்டிலேன். அனைவர் முகத்திலும் அன்பொழுகும் பார்வை.  அனைவருக்கும் மதிப்பை வழங்கி மகிழும் மேன்மைக் குணம். உதவுவதற்கு வாய்ப்புக் கிடைத்தால் பரந்த மனத்துடன் உதவும் இயல்பு ஒவ்வொருவரிடமும் குடிகொண்டுள்ளன.

நெதர்லாந்து குறித்த அனைத்து விவரங்களையும் பொறியாளர் கோபி அவர்கள் தெரிந்து வைத்திருந்ததால் அவருடன் உரையாடியபடிச் செல்வது இனிய அனுபவமாக இருந்தது. ரோட்டர்டாம் நகரின் பகல் காட்சியைக் கண்ட கண்கள் இரவுக்காட்சியையும் கண்டு மகிழ்ந்தன. அங்கிருந்து தொடர்வண்டியில் இரவு 9 மணியளவில் கோபி அவர்களின் இல்லம் திரும்பினோம்.
நெடுந்தொலைவு நடந்த காரணத்தால் கால்கள் அயர்வுற்று இருந்தன. உறக்கம் கண்களைத் தழுவின. இன்று பார்க்க நினைத்த இலெய்டன் அருங்காட்சியகம் நாளையாவது பார்க்க  வாய்ப்பு அமையுமா? என்று எண்ணியபடி கண்ணயர்ந்தேன்.