நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தருமபுரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தருமபுரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

தருமபுரி மருத்துவர் கூத்தரசன் அவர்கள் மறைவு



தருமபுரியில் புகழ்பெற்று விளங்கிய மருத்துவரும் தமிழ்ப்பற்றாளரும் தமிழறிஞர் தகடூரான் அவர்களின் மகனுமான மருத்துவர் கூத்தரசன் ஐயா அவர்கள் 04.08.2013 விடியற்காலை4.30 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றேன். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள், தருமபுரித் தமிழ்ச்சங்கத்துத் தோழர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மருத்துவர் கூத்தரசன் அவர்கள் சித்தமருத்துவத்தில் பட்டம்பெற்று தம் மருத்துவப்பணியைத் தருமபுரியில் ஆற்றிவந்தார். தந்தையார் தகடூரான் அவர்களின் நூல்களைப் பதிப்பித்துத் தமிழுலகிற்குக் கிடைக்கச்செய்தார். தருமபுரித் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராக இருந்து தமிழறிஞர்களை அழைத்துத் தமிழ்ப்பொழிவுகள் நடைபெறக் காரணமாக அமைந்தவர். இணையத்துறையில் ஈடுபாட்டுடன் உழைத்துவரும் தகடூர் கோபி, முகுந்து, மு.இளங்கோவன் ஆகியோரை அழைத்துத் தருமபுரியில் 14.09.2008 இல் ஒரு பாராட்டு நிகழ்வை நடத்தியவர். தமிழ் இணையப் பயிலரங்கு நடத்தி அப்பகுதியில் பலருக்குத் தமிழ் இணைய ஈடுபாடு வரக் காரணமாக இருந்தவர். தமிழில் சித்தர் அறிவியல் என்ற இதழையும் தொடர்ச்சியாக நடத்தி வந்தவர். இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பெற்று, மருத்துவம் பயன் அளிக்காமல் இயற்கை எய்தினார்.

மருத்துவர் கூத்தரசன் அவர்கள் 22.10.1957 இல் பிறந்தவர். இவருக்குசெந்தில்வடிவு என்ற மனைவியும்(ஆசிரியர்,ஔவையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தருமபுரி), மலர்விழி, திருவரசன் என்ற மகனும் உள்ளனர்.


மருத்துவர் கூத்தரசன் அவர்களின் இறப்பு தருமபுரிக்கு மிகப்பெரிய இழப்பாகும். 

வெள்ளி, 19 அக்டோபர், 2012

தருமபுரியில் முப்பெரும் தமிழ்விழா

தருமபுரியில் மருத்துவர் கி. கூத்தரசன் அவர்களின் முயற்சியில் தகடூரான் தமிழ் அறக்கட்டளை செயல்படுகின்றது. இவ்வறக்கட்டளை ஆண்டுதோறும் தமிழ் நிகழ்ச்சிகளைத் தருமபுரியில் தொடர்ந்து நடத்தி வருகின்றது. அவ்வகையில் இந்த ஆண்டு தமிழறிஞர் தகடூரான் கா.சி.கிருட்டிணன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாள் விழா, தகடூரான் தமிழ் அறக்கட்டளையின் சார்பில் தமிழாய் வாழும் தவமுனைவர் இரா.இளங்குமரனார் நூல் வெளியீட்டு விழாமாந்த நேயர்களுக்குப் பாராட்டு விழாவினை நடத்துகின்றது. தமிழார்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.


நாள் : 20.10.2012 சனிக்கிழமை             
இடம் : வன்னியர் திருமண மண்டபம், தருமபுரி
காலம்: காலை 10.30 மணி

வரவேற்புரை:   திரு.க.நஞ்சப்பன்,
தலைவர், தகடூரான் தமிழ் அறக்கட்டளை.

தலைமை - சிறப்புரை :

இலக்கணச் செம்மல், தவமுனைவர்
புலவர் இரா.இளங்குமரனார்
(நிறுவனர், திருவள்ளுவர் தவச்சாலை, அல்லூர், திருச்சிராப்பள்ளி)

தலைப்பு: முப்பாலில் முத்திரைத் திருக்குறள்

தமிழாய் வாழும் தவமுனைவர் இரா.இளங்குமரனார்
நூல் வெளியீடு - திரு.ம.பொன்னிறைவன்
(தலைவர், திருமழபாடி தமிழ்ச் சங்கம்)

பாராட்டுரை :  
குறள்நெறிச் செல்வர், ஆய்வுவேந்தர்,  முனைவர் அ.ஆறுமுகம்,
(தலைவர், திருமழபாடி தமிழ்ச் சங்கம்)

முதல் நூலினைப் பெறுபவர் :
திரு. பொறிஞர் அறவாழி, (உலகத் தமிழ்க் கழகம், சேலம்)
                        .


திரு. முனைவர் அ.ஆறுமுகனாரின்
தமிழாய் வாழும் தவமுனைவர் இரா.இளங்குமரனார்
நூல் வெளியீட்டு விழா வாழ்த்துப்பாடல்:

திரு.அருட்கவி புலவர் செம்மங்குடி துரையரசன்
(செயலர், திருவள்ளூர் தமிழ்ச் சங்கம்)

தகடூரான் தமிழ் அறக்கட்டளை வழங்கும் பாராட்டு விழா

 விருது பெறுவோர்:


 மனிதநேயச் சிந்தனையாளர்
திரு.ம.பொன்னிறைவன்
(துணைத்தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு, திருச்சிராப்பள்ளி)

திரு. த.செந்தில் குமார்
(செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தருமபுரி)

திரு. எ.இராமர்
(தலைவர், வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க அறக்கட்ளை)

திரு. மா.இராமமூர்த்தி
(பால் கூட்டுறவு சங்கம், அதிகாரப்பட்டி)

 மனிதநேய மருத்துவர்


மருத்துவர் திரு.அ.செந்தில்
(உலகமதி மருத்துவமனை, நெய்வேலி)

மருத்துவர் திரு.இரா.சரவணன்
(தோலியல் மருத்துவர், கோவை)


விருது பெறுவோர் ஏற்புரை:
                       
நன்றியுரை: மருத்துவர் கி.கூத்தரசன்
(செயலர், தகடூரான் தமிழ் அறக்கட்டளை)

திங்கள், 15 செப்டம்பர், 2008

தருமபுரித் தமிழ்ச்சங்கம்: இணையத் தமிழறிஞர் விருதுபெறல்,சிறப்புரை படங்கள்...


இணையத் தமிழறிஞர் விருது


மு.இளங்கோவன் விருதுபெறல்


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்


கோபி விருது பெறல்


முகுந்து மென்பொருளறிஞர் விருது பெறல்


மேடையில் கோபி,முகுந்து,மு.இ,கூத்தரசன்


 தருமபுரித் தமிழ்ச்சங்கம் என் தமிழ் இணையப் பணியைப் பாராட்டி 14.09.2008 மாலை ஏழு மணியளவில் நடைபெற்ற விழாவில் அறிஞர்கள் குழுமியிருந்த அவையில் இணையத்தமிழறிஞர் என்னும் விருதை எனக்கு வழங்கிப் பாராட்டியது. நண்பர்கள் முகுந்து (தமிழா.காம்), கோபி (அதியன், தகடூர்) ஆகியோருக்கும் விருது வழங்கி எங்கள் பணிகளைப் பாராட்டியது.

 விழாவில் யான் தமிழு இணையமும் என்னும் தலைப்பில் ஒருமணி நேரம் உரையாற்றினேன். மருத்துவர் கூத்தரசன் அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார். பொறியாளர் நரசிம்மன் அவர்களும் பெரும்பணிகள் செய்தார். தருமபுரி சார்ந்த தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் மிகுதியாக வந்திருந்தனர். விரிவான செய்தியைப் பின்பு உள்ளிடுவேன். படங்கள் சில பார்வைக்கு வைத்துள்ளேன்.

வியாழன், 14 ஆகஸ்ட், 2008

மண்மொழி எழுதிய மக்கள் பாவலர் த.பழமலை


பேராசிரியர் த.பழமலை நூல்களுக்கு இடையே...


பேராசிரியர் த.பழமலை

 பேராசிரியர் தங்கப்பாவுக்கு அடுத்து நான் கண்ட இயற்கை ஈடுபாட்டுப் பாவலர்களுள் பேராசிரியர் த.பழமலை குறிப்பிடத் தகுந்தவர். அவர் நூல்கள் எனக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பாக அவர் பெயர் எனக்கு அறிமுகமாகியிருந்தது (1991). தமிழ்வழிக் கல்வி குறித்த ஒரு மாநாடு தஞ்சையில் நடந்தபொழுது அவர் பாடல் இசைப்பதாக இருந்தது. ஒருமுகப் பறையை அடித்துக்கொண்டு பாடுவார் என நண்பர்கள் சொன்னார்கள். அப்பொழுது நான் வேறு ஒரு அன்பரைப் பார்க்கச் சென்றுவிட்டதால் அவர் பாடலைக் கேட்க முடியாமல் போனது. ஆனால் நிகழ்ச்சியில் அவர் பாடிய பாடல்கள் நன்கு இருந்தன என அன்பர்கள் சொல்லக் கேட்டேன்.

 அதன் பிறகு தங்கப்பா இல்லத்தில் பழமலையின் சனங்களின் கதை நூல் இருந்தது. இரவல் பெற்று அதனைப் படித்தேன்.பெருஞ்சித்திரனார், பாவேந்தர் பாடல்களில் ஈடுபட்டுக் கிடந்த எனக்குப் பழமலையின் பாடல்கள் புதியனவாகத் தெரிந்தன. பின்னாளில்தான் தெரிந்தது மக்கள் வாழ்க்கையை மண்மொழியில் பதிவு செய்யும் ஒரு முயற்சி வேகமாகப் பரவி வளர்ந்த வரலாறு. அண்ணன் அறிவுமதி உள்ளிட்ட சிலரின் படைப்புகளில் இத்தகு மண்மணம் கமழும் சில படைப்புகளைக் காணமுடியும். இரத்தின.கரிகாலன், இரத்தின. புகழேந்தி, கண்மணி குணசேகரன், பட்டி .சு. செங்குட்டுவன், தமிழியலன், செஞ்சி தமிழினியன், பச்சியப்பன் உள்ளிட்ட பாவலர்கள் இம்மரபை வளர்த்தவர்கள் எனில் மிகையன்று.

 பழமலை தனக்கு முன்னோடி மரவாடியில் போதிமரம் எழுதிய எழிலவன்தான் எனப் பல அரங்குகளில் பெருந்தன்மையாகக் குறிப்பிடுவது அவரின் உயர்பண்பு காட்டுவதாகும். பேராசிரியர் பழமலையின் சனங்களின் கதை படித்த பிறகு இதுதான் நமக்கான கவிதை என அறிந்தேன். அதில் இடம்பெறும் கீழைக்காட்டு வேம்பு கவிதையில் இடம்பெறும் பழமலையின் அம்மாவின் வாழ்க்கையும், எங்கள் அம்மாவின் வாழ்க்கையும் ஒன்றாக இருந்ததால் அக்கவிதை என் உள்ளத்தில் ஓர் இயக்கத்தை உண்டு பண்ணியது. அது முதல் பழமலையின் நூல்கள், இதழ்களில் வரும் கவிதைகளை உற்றுப் படிக்கத் தொடங்கினேன். 1997 ஆம் ஆண்டிற்குப் பிறகு பழமலையுடன் நேரடியாகப் பழக எனக்கு வாய்ப்பு அமைந்தது. 

 விளிம்புநிலை மக்கள் கலை இலக்கியப் படைப்பாளிகள் சந்திப்பில் நன்கு அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. என் ஆர்வத்தை ஒரு தந்தையாக இருந்து ஊக்கப்படுத்துவார். ஒரு ஆசிரியராக இருந்து வழிகாட்டுவார். நெறிப்படுத்துவார். நண்பராக இருந்து அறிவுரை கூறுவார். தமக்கு அறிமுகமானவர்களிடம் என் இலக்கிய ஆர்வம், இலக்கிய முயற்சிகளை மனந்திறந்து எடுத்துரைத்து உளங்கனியப் பாராட்டுவார்.

 பழமலை கவிதைகளை மட்டும் எழுதுபவர், எடுத்துரைப்பவர் எனக் கருத வேண்டாம். அவருக்கு மிகச் சிறந்த வரலாற்று அறிவு உண்டு. பழைமைகளைத் தேடிப் பதிவு செய்ய வேண்டும் என்ற அக்கறை உடையவர். பழைமையைப் பதிவு செய்வதில் அளவுக்கு அதிகமான ஆர்வம் உண்டு. அரசியல் சமூகச் சிக்கல்களில் முன்னின்று பேசும் பொதுவுடைமை எண்ணம் கொண்டவர். கல்லூரிப் பேராசிரியர்கள் தங்கள் ஊதியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். நம் பழமலையோ மாணவர்கள் முன்னேற்றம், வறுமையில் கிடக்கும் மக்கள் எழுச்சி பெற்று ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதற்காக எழுதுபவர். பேசுபவர். போராட்டக் களங்களில் முன்னிற்பவர். தொடர்ந்து பல்வேறு இலக்கிய அமைப்புகளில் இயங்குபவர்.


அழகின் சிரிப்பில் த.பழமலை

 இயற்கையில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய குரோட்டன்கள் குறித்த நூல் இயற்கை ஆர்வலர்களால் விதந்து பேசப்படும் நூலாகும். அதுபோல் இவர் வாழும் விழுப்புரத்தில் கட்டப்பெற்றுள்ள வீட்டை ஒட்டிச் சிறு தோட்டம் அமைத்துள்ளார். அதில் பல்வேறு வகையான மரங்கள், மலர்ச்செடிகள், மூலிகைகள் வைத்துப் பாதுகாத்து வருகிறார். நகர நெருக்கடியில் மாந்தன் மூச்சுவிட நேரம் இல்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும் பொழுது எளிய உழவர்போல் தண்ணீர் பாய்ச்சுவதும், வழியடைப்பதுமாக இருப்பார். அத்தோட்டத்தில் பார்க்கும்பொழுது அவர் நமக்கு ஒரு வேளாண்மைத் தொழில் செய்யும் உழவர் பெருமகனாகவே காட்சியளிப்பார்.

 தமிழிலக்கிய உலகில் நிலைபெற்ற பெயராக விளங்கும் இவரின் படைப்புகள் இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை என்பதும், அறிமுகம் செய்யப்பெறவில்லை என்பதும் ஒரு குறையேயாகும். இவர் படைப்புகள் இவருக்கு ஒரு சாகித்திய அகாதெமி பரிசையோ, அல்லது தமிழக அரசின் பரிசையோ பெற்றுத்தரவில்லை. அவ்வாறு பெறாமல் இருப்பது ஒன்றே இவர் உண்மையான படைப்பாளி என்பதற்குப் போதுமான சான்றாகும். சாகித்தியம் பேசும் குழுக்களில் பரிசுபெறுவது என்றால் அது ஒரு தனிக்கலையாகும். அரசியல்வாணர்களின் எடுபிடிகளாக, ஊதுகுழலாக, கைப்பாவைகளாக இருப்பவர்களுக்கே அத்தகுப் பரிசில்களும், பதவிகளும், விருதுகளும் போய்ச் சேர்ந்துள்ளன என்பதை அப்பட்டியலை ஒருமுறை நோட்டமிடும் எளிய அறிவுடையவருக்கே புரிந்துவிடும்.

 இவ்வகையில் அடங்காமல் மக்கள் பணிபுரியும் பழமலையின் படைப்புகள் குறிப்பிடும்படியான பரிசில்களைப் பெறவில்லை என்பதும் தமிழகக் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் முழுமையாக ஆய்வு செய்யப்பெறவில்லை என்பதும் அவருக்குப் பெருமையே தவிர நமக்குதான் சிறுமையாகும்.

 பெரும் படைப்பு உணர்ச்சி கைவரப்பெற்ற பழமலையின் தொடர்பு நான் புதுச்சேரிக்கு வந்தபிறகு வலுப்பெறும் காலம் வாய்த்தது. ஆம். அவர் மகன் மருத்துவர் ப.உ.இலெனின் அவர்கள் புதுச்சேரியில் புகழ்பெற்ற ஓமியோ மருத்துவராகப் பணிபுரிகின்றார். அவரைப் பார்த்துப் பழகும்படி பேராசிரியர் பழமலை அடிக்கடி மடலிலும். தொலைபேசியிலும் குறிப்பிடுவார். அவ்வண்ணம் வளர்ந்த உறவு வலுப்பெற்றது. இத்தகு பாச உணர்வும் படைப்புணர்வும் கொண்ட பழமலையின் வாழ்க்கைக் குறிப்பை என் பக்கம்வழி இணைய உலகம் வாழும் தமிழர்களுக்குப் பதிவு செய்கிறேன்.

பழமலை வாழ்க்கைக் குறிப்பு:

 அரியலூர் மாவட்டம் குழுமூரில் (பெண்ணாடம் - மாத்தூர் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே உள்ள ஊர்) வாழ்ந்த தங்கவேல் படையாட்சி, குஞ்சம்மாள் (வாலாம்பாள்) ஆகியோருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் பழமலை. பெற்றோருக்கு முதல் இருமக்கள் பிறந்து இறந்தனர். மூன்றாவது குழந்தை அமராவதி பெண்குழந்தையாகும். ஆண்குழந்தை வேண்டிப் பெற்றோர் திருமுதுகுன்றம் பழமலைநாதர் கோயில் இறைவனிடம் பாடு கிடந்தனர். அவ்விறைவனின் அருளால் பிறந்ததாக நினைத்துத் தம் குழந்தைக்கு அவ்விறைவனின் பெயரான பழமலை என்பதை இட்டனர். இவருக்குப் பிறகு மூன்று குழந்தைகள் பிறந்தனர் என்பது கூடுதல் செய்தியாகும்.

 03.02.1943 இல் பிறந்த பழமலை குழுமூர் ஊராட்சி மன்றத் தொடக்கப் பள்ளியில் படித்தார். பிறகு திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) அத்தை வீட்டில் தங்கிப் படித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆறாண்டுகள் படித்தார் (1960-1966). 20.07.1966 இல் கிருட்டிணகிரி அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் பணியை ஏற்றார்.

 கடலூரில் (திருப்பாதிரிப்புலியூரில்) சு.உமா அவர்களைத் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் ஆசிரியராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

 பேராசிரியருக்கு மூன்று மக்கள் செல்வங்கள். 1.மருத்துவர் ப.உ.இலெனின், புதுச்சேரியில் உள்ளார். 2. நீதியரசர் ப.உ.செம்மல், 3. பொறிஞர் ப.உ.தென்றல். அனைவரும் தக்க பணிகளில் சிறப்புற்று விளங்குகின்றனர்.

 பழமலை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்டம் (எம்.ஃபில்) பெற்றவர். கிருட்டிணகிரி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட ஊர்களில் திறம்படப் பேராசிரியர் பணிபுரிந்தவர். விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து (19.04.1991- 31.05.2001) ஓய்வு பெற்றவர். பேராசிரியர் பழமலை அவர்கள் மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதால் இன்றும் அவரைப் பழைய மாணவர்கள் மிக உயர்வாகப் போற்றி மதிக்கின்றனர்.

த. பழமலையின் தமிழ்ப்படைப்புகள் :

கவிதை

1.சனங்களின் கதை, 1988,1996
2.குரோட்டன்களோடு கொஞ்ச நேரம், 1991
3.இவர்கள் வாழ்ந்தது, 1994
4.இன்றும் என்றும், 1998
5.முன் நிலவுக்காலம், 1999
6.புறநகர் வீடு, 2000
7.இரவுகள் அழகு, 2001
8.வேறு ஒரு சூரியன், 2002

உரைநடை

நரபலி நூல்

9.அண்ணன் குப்புசாமி இன்னும் ஆழமானவர்-வாழ்க்கைக் குறிப்புகள், 1978
10.நரபலி:தெய்வங்கள்,திருவிழாக்கள், 2002
11.திருக்குறளார் வீ.முனிசாமி வாழ்வும் பணியும், 2003
12.பாம்புகள் சிறுகதைகள், 2003
13.தெரியாத உலகம், 2004
14.தருமபுரி(தகடூர் நாட்டுத் தகடூர்) மண்ணும் மக்களும், 2005


தருமபுரி நூல்


திருக்குறளார் வீ,முனிசாமி நூல்

பாடல்கள்
15.துப்பாக்கிகாரனின் புல்லாங்குழல் பாடல்கள்-12
16.நாங்கள் பாடினோம், 2006

நாங்கள் பாடினோம்

பேராசிரியர் த.பழமலை  முகவரி:
த.பழமலை
37, இளங்கோ வீதி, சீனிவாசநகர், வழுதிபிராட்டி(அ.நி),
கண்டர்மானடி (வழி), விழுப்புரம் மாவட்டம் -605 401

(விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் நடைதூரத்தில் வீடு உள்ளது)