நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

இருபெருந் துணைவேந்தர்களுடன் சந்திப்பு…



துணைவேந்தர்களுடன் தமிழறிஞர்கள்

பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கி.முத்துச்செழியன் அவர்களிடம் நூல் வழங்கல். அருகில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சந்திரகாந்தா ஜெயபாலன் அவர்கள்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இன்று(16.04.2013) கணினித் தமிழ் பாடத்திட்டம் குறித்த சிறப்புக் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழகத்தின் மூத்த பேராசிரியர்களுடன் இணைந்து பாடத்திட்டம் வடிவமைக்கும் வாய்ப்பு அமைந்தது.

அதுபொழுது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மாண்புநிறை துணைவேந்தர் முனைவர் சந்திரகாந்தா ஜெயபாலன் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெறும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அப்பொழுது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் முனைவர் கி. முத்துச்செழியன் அவர்களும் வருகை தந்தார்கள். தமிழ் அறிஞர் பெருமக்களுடன் இணைந்து நினைவுக்குப் படம் எடுத்துக்கொண்டோம்.

யான் எழுதிய இணையம் கற்போம் நூலினைத் துணைவேந்தர் பெருமக்களிடம் கொடுத்து வாழ்த்துப்பெற்றேன். தமிழ் இணையத்தைத் தத்தம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆர்வம் அவர்களிடம் இருந்தமை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். எதிர்காலத்தில் தமிழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் இணையம் மிகச்சிறந்த வளர்ச்சியடைய உள்ளதை இச்சந்திப்பு எனக்கு உணர்த்தியது.

இந்த நிகழ்ச்சியில் முனைவர் கி.முருகன், முனைவர் சு.பாலசுப்பிரமணியன், கணினி வல்லுநர் முத்து.நெடுமாறன், பேராசிரியர் சி.இ.மறைமலை, முனைவர் கரு.அழ. குணசேகரன், முனைவர் அ.அறிவுநம்பி, முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன், முனைவர் ந.தெய்வசுந்தரம்,முனைவர் பிலவேந்திரன், முனைவர் இராச.பவுன்துரை, முனைவர் முத்தையா, முனைவர் பிச்சை, முனைவர் துளசி.இராமசாமி உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டனர்.


துணைவேந்தர் முனைவர் சந்திரகாந்தா ஜெயபாலன் அவர்களிடம் இணையம் கற்போம் நூல் வழங்கும் மு.இளங்கோவன்

இணையம் கற்போம் நூலின் சிறப்பைத் துணைவேந்தருக்கு விளக்குதல்(மு.இ, பேராசிரியர் கரு.அழ.குணசேகரன்)

திங்கள், 15 ஏப்ரல், 2013

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கணினித் தமிழ்





தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கணினித்தமிழ், நாட்டுப்புறவியல் குறித்த பட்டயச்சான்று(Diploma) படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. பாடத்திட்டம் குறித்த கலந்துரையாடலும் துறைசார் வல்லுநர்களின் கருத்துரைகளும் இடம்பெற உள்ளன.

முரசு அஞ்சல், செல்லினம் ஆகிய மென்பொருள்களை வழங்கியவரும் தமிழ் இணைய முன்னோடிகளுள் ஒருவருமான முரசு முத்தெழிலன் (மலேசியா) அவர்கள் கலந்துகொண்டு “கணினி அலைபேசியில் தமிழ்ப் பயன்பாடு - இன்றைய நிலை” என்னும் தலைப்பில் சிறப்புரை வழங்க உள்ளார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் முனைவர் சந்திரகாந்தா ஜெயபாலன் அவர்கள் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

பேராசிரியர் கி.முருகன், முனைவர் சு.விஜயன், முனைவர் சு.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

நாள்: 17.04.2013 நேரம்: பிற்பகல் 2.30 மணி
இடம்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை