தந்தை பெரியாருக்குச் சிலை எடுப்பித்த செம்மல்கள்
திரு.சி.கலியபெருமாள், திரு.சி.மாணிக்கம்
எங்களின் பிறந்த ஊரான உள்கோட்டையில் ஐம்பெரும் விழா என்ற பெயரில் நேற்று (30.12.2009) மிகச்சிறந்த விழா ஒன்று நடைபெற்றது. தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, செம்மொழி விருது பெற்றவர்களுக்குப் பாராட்டு விழா, முனைவர் பட்டம் பெற்றவர்களுக்குப் பாராட்டு விழா, முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பாராட்டு விழா, கொள்கைவழித் திருமணம் செய்துகொண்டவர்களுக்குப் பாராட்டு எனும் ஐந்து நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இந்த விழா அமைந்தது.
சனதா பல்பொருள் அங்காடியின் உரிமையாளரும், தந்தை பெரியாருக்கு உள்கோட்டையில் சிலை எடுத்தவரும், மிகச்சிறந்த குமூகத் தொண்டாற்றுபவருமான "சனதா" சி.மாணிக்கம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவுக்குப் பெரியார் பெருந்தொண்டர் திரு. பரமசிவம் அவர்கள் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை திரு.காமராசு அவர்கள் வரவேற்றார்.
அண்மையில் செம்மொழி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் அடிகளாசிரியர், முனைவர் அரங்க.பாரி, முனைவர் மு.இளங்கோவன் ஆகியோரை முறையே தொளார் ஐயா, பேராசிரியர் உ.பிரபாகரன் (தமிழ்ப் பல்கலைக்கழகம்) அ.சிவபெருமான் (அண்ணாமலைப் பல்கலைக்கழம்) ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இந்தப் பகுதியில் முனைவர் பட்டம் பெற்றுக் கல்வித்துறையில் சிறந்து விளங்குபவர்கள் என்ற வகையில் பேராசிரியர் கு.அரசேந்திரன் உள்ளிட்ட கல்வியாளர்கள் பாராட்டப் பெற்றனர்.
கண்ணியம் இதழின் ஆசிரியர் ஆ.கோ. குலோத்துங்கன் அவர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.
உள்கோட்டைப் பகுதியில் பிறந்த கல்வித்துறைகளில் புகழ்பெற்று விளங்கும் இந்த அறிஞர் பெருமக்களைப் பொதுவுடைமை இயக்கத்தச் சேர்ந்த தோழர் முருகேசன், திரு.பன்னீர்ச் செல்வம், புலவர் செல்வராசனார், கு. கணேசமூர்த்தி ஐயா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
திராவிடர் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
ஏற்புரையாளர்கள் சார்பில் பேராசிரியர் கு.அரசேந்திரன், முனைவர் ஆ.கோ.குலோத்துங்கன் ஆகியோர் உரையாற்றினர்.
மணக்கொடை வாங்காமல் மாலைநேரத்தில் சீர்திருத்த திருமணம் செய்துகொண்ட திரு அம்பாள் ஆறுமுகம், திரு.சேகர், புலவர் திரு.தங்கராசு உள்ளிட்டவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
தந்தை பெரியாரின் கொள்கைகளை எடுத்துரைத்தும், பிறந்த ஊருக்குப் பெருமை சேர்த்தவர்களை அழைத்து ஊக்கப்படுத்தியும், குமூக அக்கறையுடன் பாடுபடுபவர்களுக்கு ஊக்கம் அளித்தும் இந்த விழா நடந்தது. முதல் மதிப்பெண் பெற்ற மாணவ்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பத்மபிரியா என்ற ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுமி திருக்குறளின் அனைத்துக் குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் ஆற்றலை அரங்கத்தினர் அறிந்து மகிழ்ந்தனர். நான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தும் பேற்றினைப் பெற்றேன்.
பேராசிரியர் கு.அரசேந்திரன்
பேராசிரியர் உ.பிரபாகரன்