நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
கவிஞர் சிற்பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிஞர் சிற்பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

எங்கள் உள்ளங் கவர்ந்த கவிஞர் சிற்பி...


கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்

கொங்குநாடு எத்தனையோ தமிழ் அறிஞர்களை வழங்கியுள்ளது. அடியார்க்குநல்லார் தொடங்கி தெய்வசிகாமணி கவுண்டர் வரை கொங்குநாட்டுப் புலவர்களின் பணிகளை நாம் கவனத்தில் கொண்டு பார்த்தால் இவர்களின் பாரிய பங்களிப்பு தமிழுக்கு அமைந்துள்ளமை விளங்கும். சிலப்பதிகார உரைவரைந்த அடியார்க்கு நல்லார் பொப்பண்ண காங்கேயன் வழங்கிய சோற்றுச்செருக்குதான் இவ்வாறு உரை வரைய வைத்தது என்று குறிப்பிடுவார்.புலவர்களும் புரவலர்களும் மலிந்த கொங்நாட்டில் இன்று வாழும் அறிஞர்களில் கவிஞர் சிற்பி குறிப்பிடத்தக்கவர்.

கவிஞர் சிற்பி பற்றி கல்லூரிக் காலங்களில் பெயர் மட்டும் அறிந்திருந்தேன். ஆய்வு மாணவனாக வளர்ந்தபொழுது இவர் படைப்புகளில் வகைதொகையில்லாமல் வடசொற்கள் திணிக்கப்பட்டடிருந்தது கண்டு இவர் மேல் ஒரு பற்றற்ற தன்மையே எனக்கு இருந்தது. பின்னாளில் இவர் எழுதிய ஓணான் சாபம் குறித்த கவிதை என்னை இவரை உற்று நோக்க வைத்தது.

பின்னாளில் பல உரைகள், கட்டுரைகள்,கவிதைகள் கேட்டும் கண்டும் இவர்மேல் மிகச்சிறந்த ஈடுபாடு ஏற்பட்டது.அண்ணன் அறிவுமதி அவர்கள் சிற்பியின் பழைமைப் பற்றை எனக்கு அடிக்கடி எடுத்துக்கூறுவார் பழைமையின் வேரிலிருந்து புதுமை படைக்கும் இவர் சென்னையில் பேசிய பேச்சை அண்ணன் அறிவுமதி அவர்கள் தம் கவிதை இதழொன்றில் பதிவு செய்ததை நினைத்து மகிழ்கிறேன்.ஈழத்தமிழர்களின் மேல் இவருக்கு இருந்த ஈடுபாடும், கனிவும் மேலும் இவர் மீதான மதிப்பைக் கூட்டியது.அண்மைக் காலமாக இவர் மாணவர்கள் பலரும் எனக்குத் தொடர்ந்து நண்பர்களாக வாய்த்ததும் சிற்பி அவர்களின் உண்மைத்திறனை அறிய எனக்கு வாய்ப்பை உண்டாக்கியது.

கவிஞர் சிற்பி அவர்கள் இப்பொழுது சாகித்திய அகாதெமியின் தமிழ் அறிவுரைஞர் குழு ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிகின்றார்.அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ்படைப்புகளை வழங்கிய சிற்பி அவர்களின் வாழ்க்கை தமிழ் வாழ்க்கை.அவர்தம் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைப்பதில் மகிழ்கிறேன்.

கவிஞர் சிற்பி அவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் ஆத்துப் பொள்ளாச்சி என்ற சிற்றூரில் 29.07.1936 இல் பிறந்தவர்.பெற்றோர் திருவாளர்கள் கி.பொன்னுசாமி, கண்டி அம்மாள் ஆவர். இயற்பெயர் பாலசுப்பிரமணியம் என்பதாகும்.கேரளத்தில் பள்ளிக்கல்வி பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழக்கழகத்தில் இளங்கலைத் தமிழ்(ஆனர்சு) பயின்றவர்.1987 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார் (1989 வரை). 1989 இல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தமிழ், ஆங்கிலம், மலையாளம்,உருசியன் உள்ளிட்ட மொழிகளை அறிந்தவர் சிற்பி.

மொழிபெயர்ப்புக்காகவும்(2001), படைப்பிலக்கியத்துக்காகவும்(2003) இருமுறை சாகித்திய அகாதெமி பரிசில் பெற்றவர்.தமிழக அரசின் பாவேந்தர் விருது, அரசர் முத்தையாவேள் பரிசில் பெற்றவர். கலைமாமணி விருந்து,கபிலர் விருது எனப் பல விருதுகளைப் பெற்றவர்.

சிறந்த கவிஞராகவும்,நல்ல மொழிபெயர்ப்பாளராகவும், புகழ்பெற்ற கல்வியாளராகவும், இலக்கிய இதழாசிரியராகவும், பன்னூலாசிரியராகவும் விளங்கும் சிற்பி அவர்கள் படிப்பும், எழுத்தும், பேச்சும் தம் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர்.

இதுவரை 15 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் 6 இளம் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் நெறியாளராக இருந்து நெறிப்படுத்தியுள்ளார்.

வானம்பாடி, அன்னம்விடுதூது, வள்ளுவம், கவிக்கோ உள்ளிட்ட ஏடுகளில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர்.வானம்பாடி கவிதை இயக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய பங்களிப்பு செய்தபொழுது சிற்பியின் பங்களிப்பும் இருந்தது.

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் தலைவராகவும்(2000-2005) ஞாலத் தமிழ்ப்பண்பாட்டு மன்றத்தின் தலைவராகவும், கவிஞர் சிற்பி அறக்கட்டளையின் தலைவராகவும் பொறுப்பு வகிப்பவர். இவை தவிர இந்திய அரசு, தமிழக அரசு அமைத்த பல்வேறு குழுக்களில் உறுப்பினராக இருந்து திறம்படப் பணியாற்றியுள்ளார்.

தமிழ் இலக்கியத்தில் விடுதலை இயக்கத் தாக்கம்(1989-1991), இடைக்காலக் கொங்குநாட்டின் சமூக-பொருளாதார அமைப்புகள் (1993-1997), கொங்கு களஞ்சியம் (ப.ஆ) ஆகிய திட்டப்பணிகளில் ஈடுபட்டு உழைத்துப் பல செய்திகளை ஆவணப்படுத்தியவர். பல்வேறு கருத்தரங்குள், பயிலரங்குகள் ஏற்பாடு செய்து பலருக்கும் பயன்படும் பணிகளைச் செய்தவர். பல்கேரியா(1983), சோவியத் ஒன்றியம்(1983), அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட அயல்நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

சிற்பியின் கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

1996 இல் சிற்பி அறக்கட்டளையைத் தொடங்கித் தமிழ்க்கவிஞர்கள் பலருக்குப் பரிசில் வழங்கிப் பாராட்டும் கொடையாளராகவும் விளங்கி வருகின்றார்.



சிற்பி அவர்கள்

சிற்பியின் படைப்புகள்

01.நிலவுப்பூ(1963) கவிதைகள்
02.சிரித்த முத்துக்கள்(1968)கவிதைகள்
03.ஒளிப்பறவை(1971)கவிதைகள்
04.சர்ப்பயாகம்(1976)கவிதைகள்
05.புன்னகை பூக்கும் பூனைகள்(1982)கவிதைகள்
06.மௌன மயக்கங்கள்(1982)கவிதைகள்
07.தேனீக்களும் மக்களும்(1982)மொழிபெயர்ப்பு
08.மகாகவி பாரதி-சில மதிப்பீடுகள்(1982)ப.ஆ
09.இலக்கியச் சிந்தனை(1989)
10.சூரியநிழல்(1990)கவிதைகள்
11.மலையாளக் கவிதை(1990)கட்டுரைகள்
12.A Comparative Study of Bharati and Vallathol(1991) ஆய்வுநூல்
13.ஆதிரை(1992)
14.இல்லறமே நல்லறம்(1992)
15.பாரதி-பாரதிதாசன் படைப்புக்கலை(1992) ப.ஆ
16.தமிழ் உலா1+2 (1993)
17.சிற்பி தரும் ஆத்திசூடி(1993)
18.வண்ணப்பூக்கள்(1994)சிறுவர் நூல்
19.அலையும் சுவடும்(1994) கட்டுரைகள்
20.இறகு(1996)கவிதைகள்
21.சிற்பியின் கவிதை வானம்(1996)கவிதைகள்
22.மின்னல் கீற்று(1996) கட்டுரைகள்
23.சிற்பியின் கட்டுரைகள்(1996)
24.அக்கினிசாட்சி(1996) மொழிபெயர்ப்பு நாவல்
25.A Noon in Summer(1996) சிற்பி கவிதைகளின் மொழிபெயர்ப்பு
26.பாரதி என்றொரு மானுடன்(1997)
27.ஒரு கிராமத்து நதி(1998) கவிதைகள்
28.சச்சிதானந்தன் கவிதைகள்(1998)மொழிபெயர்ப்பு
29.மருத வரை உலா(1998)ப.ஆ.
30.நாவரசு(1998)
31.இராமாநுசர் வரலாறு(1999)வா.வ.
32.பூஜ்யங்களின் சங்கிலி(1999)கவிதைகள்
33.பெரியசாமித் தூரன்(199) வா.வ.
34.பாரத ரத்தினம் சி.சுப்பிரமணியம்(1999)வ.வ
35.திருப்பாவை உரை(1999)
36.ஒரு சங்கீதம் போல(1999)
37.ஆர்.சண்முகசுந்தரம்(2000) வா.வ
38.பெருமூச்சுக்களின் பள்ளத்தாக்கு(2001)
39.உஜ்ஜயினி(2001)மொ.பெ.
40.அருட்பா அமுதம்(2001)
41.திருக்குறள் சிற்பி உரை(2001)
42.படைப்பும் பார்வையும்(2001)
43.கவிதை மீண்டும் வரும்(2001)
44.பாரதியார் கட்டுரைகள்(2002)
45.பாரதி கைதி எண் 253(2002)
46.கம்பனில் மானுடம்(2002)
47.சே.ப.நரசிம்மலு நாயுடு(2003)
48.கவிதை நேரங்கள்(2003)
49.மகாகவி(2003)
50.நேற்றுப் பெய்த மழை(2003)
51.மூடுபனி(2003)
52.காற்று வரைந்த ஓவியம்(2005)
53.வாரணாசி(2005)மொழிபெயர்ப்பு
54.சிற்பி கவிதைப் பயணங்கள்(2005)
55.தேவயானி(2005)கவிதைகள்
56.மகாகவி பாரதியார்(2006)
57.மண்ணில் தெரியுது வானம்(2006)ப.ஆ.
58.இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை(2006)
59.கொங்கு களஞ்சியம்(2006)
60.மகாத்மா(2006)கவிதைகள்
61.சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான்(2006)மொ.பெ.
62.தொண்டில் கனிந்த தூரன்(2006)

சனி, 25 ஜூலை, 2009

சிற்பி இலக்கிய விருது 2009



தமிழ்ப்பேராசிரியரும்,நாடறிந்த நல்ல கவிஞரும்,சாகித்திய அகாதெமியின் தமிழ்மொழி ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் சிற்பி அவர்கள் ஆழமான தமிழ்ப்பற்றும் அழுத்தமான மொழிப்புலமையும் கொண்டவர்.செயல்திறமும் வினைத்திட்பமும் ஒருங்குபெற்ற இவர்கள் 1996 ஆம் ஆண்டு முதல் (தம் மணிவிழா ஆண்டிலிருந்து) தமிழ்ப்பாவலர்களைச் சிறப்பிக்கும் வகையில் விருது வழங்கிப் பாராட்டி வருகின்றார்.வாழும் காலத்தில் அறிஞர்களை மதிக்க வேண்டும் என்ற சிற்பி ஐயாவின் உள்ளத்தைத் தமிழர்கள் நன்றியுடன் போற்றவேண்டும்.

அவ்வகையில் இதுவரை கவிக்கோ அப்துல் இரகுமான்(1996),த.பழமலய்(1997),சி.மணி
(1998),தேவதேவன்(1999),புவியரசு(2000),கவிஞர் பாலா(2001),கல்யாண்ஜி(2002), தமிழ்நாடன்(2003),தமிழன்பன்(2004),க.மீனாட்சி(2005),ஈழத்துக்கவிஞர் செயபாலன்(2006), ம.இலெ.தங்கப்பா(2007),சுகுமாரன்(2008) ஆகியோர் கவிதை இலக்கிய விருது பெற்றுள்ளனர்.இவர்கள் தவிர பல கவிஞர்கள் இலக்கியப் பரிசு பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு தமிழகத்தின் புரட்சிப் பாவலரான கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு 2009 ஆம் ஆண்டுக்கான கவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கப்பட உள்ளது.பொள்ளாச்சியில் 26.07.2009 இல் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்பட உள்ளது.ஆண்டுதோறும் மிகச்சிறந்த திருவிழாபோல் நடைபெறும் கவிதைத் திருவிழா இந்த ஆண்டு ஈழத்தமிழ் மக்களின் சொல்ல இயலாத துன்பச்சூழல் காரணமாக மிக எளிமையாக நடைபெற உள்ளது.

சிற்பி இலக்கிய விருது(2009) விழா நிகழ்ச்சி நிரல்

இடம் என்.ஜி.எம்.கல்லூரி,பொள்ளாச்சி
நாள்: 26.07.2009
நேரம்: மாலை 4.30 மணி
தலைமை: பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்
வரவேற்புரை : சிற்பி பாலசுப்பிரமணியம்
சிறப்புரை: ஈரோடு தமிழன்பன்

பாராட்டுப் பெறுவோர் கவிஞர் இன்குலாப்
தொழிலதிபர் இயகோகா சுப்பிரமணியம்

அனைவரையும் சிற்பி அறக்கட்டளையினர் அழைத்து மகிழ்கின்றனர்.
ஈழம் என்னும் தலைப்பில் கவிஞர் சிற்பி வரைந்துள்ள கவிதையைக் கீழே கண்டு கொண்டாடுங்கள்.


என் மொழி பேசும் எவனும் உலகினில்
எனது சகோதரனே
எவன் அவன் பகைவன் எனக்கும் நிச்சயம்
அவன் பகையானவனே

வன்னிக்காடே முல்லைத்தீவே
வணங்காதத் தமிழ்மண்ணே
மன்னிப்பாய் நீ உனக்குதவா என்
வாழ்க்கை வெறும் மண்ணே

இனவெறி எருமை மிதித்துச் சிதைத்த
ஈழத்தின் ஆழத்தில்
வினைகள் விதைத்தவர் அறியட்டும் பழி
அறுவடையாகும் இனி

வேலி முகாம்களில் சித்திரவதைப்படும்
தமிழ்மகளே இது கேள்
காலம் சமைக்கும் உன் கண்ணீர் கொண்டு
விடுதலையின் போர்வாள்

யாழ்நூல் தந்த விபுலானந்தர்
நாவலர் உலவியமண்
பாழ்படுமோ அதன் வேரில் சொரிந்த
இரத்தம் உலர்ந்திடுமோ?

வேடிக்கை பார்த்துக் கைகளைக் கட்டிய
உலகின் மனச்சான்றே
நீடும் புயல் வரும் சிங்களம் நொறுங்கும்
நீச்சயம் காண்பாய் நீ

புதிய விண்மீனொன்று தெற்கில் முளைக்கும்
தடுக்கும் இருள் வீழும்
அதுவரை அதுவரை நண்பர்களே என்
இன்னொரு பெயர் ஈழம்.

- கவிஞர் சிற்பி

சனி, 23 மே, 2009

ஈழத்தமிழர்களுக்கு வீர வணக்கம்! பன்னாட்டுக் கருத்தரங்கில் கவிஞர் சிற்பி பேச்சு!

மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றமும் இணைந்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 40 ஆம் ஆண்டுக் கருத்தரங்கைச் சிறப்புடன் நடத்துகிறது.

23.05.2009 காலையில் நடந்த தொடக்கவிழாவில் கலந்துகொண்டு தொடக்க உரையாற்றிய சாகித்திய அகாதெமியின் தமிழ்மொழிப்பிரிவு ஒருங்கிணைப்பாளரும் இரண்டுமுறை சாகித்திய அகாதெமியின் விருதை வென்றவருமான பேராசிரியர் கவிஞர் சிற்பி தொடக்க உரையாற்ற எழுந்தபொது ஈழத்தில் களப்பலியானவர்களுக்கு வீர வணக்கம் எனவும் இறந்தவர்களுக்கு எங்கள் அஞ்சலி எனவும் அரங்கில் பேசத் தொடங்கியதும் உலகம் முழுவதும் வந்திருந்த அறிஞர் பெருமக்கள் அவர் பேச்சை வரவேற்று ஏற்றுக்கொண்டனர்.

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் ஆராய்ச்சிக் கருத்தரங்கினை நடத்துகிறது. இதுவரை 39 ஆண்டுகள் இந்தியாவின் பல பகுதிகளில் நடத்தி வருகிறது. 40 ஆம் கருத்தரங்கம் மதுரை காமராசர் பல்கலைக்கழத்தில் மே 23,24 நாள்களில் நடக்கிறது.

23.05.2009 காலை 11 மணிக்குத் தொடங்கிய விழாவில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மலேசியா,சிங்கப்பூரிலிருந்தும் 500 மேற்பட்ட ஆய்வு அறிஞர்கள் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் மணிவேல் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.முனைவர் இரா.மோகன் அவர்கள் அறிமுக உரையாற்றினார்.மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கற்பக குமாரவேல் அவர்கள் தலைமையுரையாற்றினார். தமிழகத்தில் உயர்கல்வி தமிழ்வழியில் அமையாமைக்கு உரிய காரணம் பற்றி எடுத்துரைத்த துணைவேந்தர் அனைத்து ஆசிரியர்களுக்கும் தமிழில் அடிப்படை அறிவு இருக்கவேண்டும் என்றார். கன்னட மொழியின் வளர்ச்சிக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்குக் கருநாடக அரசு ஒரு கோடி உரூவா கொடுத்துள்ளதையும் எடுத்துரைத்தார். அறிவுப்பெருக்கமும், அறிவுப்பரவலாக்கமும் என்ற இரண்டு கொள்கைக்களைக் குறிக்கோளாக் கொண்டு பல்கலைக்கழகங்கள் செயல்படவேண்டும் என்றார்.

கருத்தரங்க ஆய்வுக்கோவையை (நான்கு தொகுதிகள்) பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் திருவாசகம் வெளியிட நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சபாபதி மோகன் பெற்றுக்கொண்டார்.

பேராசிரியர் தமிழண்ணல் வாழ்த்துரை வழங்கினார்.ஆறு அழகப்பன் தமிழர்கள் தமிழ் எண்களைப் பயன்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொடக்கவுரையாற்றிய சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் ஈழத்தமிழர்களை இழந்து கையறு நிலையில் இருக்கும் என்னை தொடக்கநிலையில் உரையாற்ற அழைத்துள்ளனர். தென்திசை நினைவிலிருந்து விடுபடாதவராய்ச் சிற்பி பேசினார். அண்மையில் தாம் படித்த நான்கு நூல்கள் மிகச்சிறந்தன என்றுரைத்தார்.அவை திராவிடச்சான்று, காதல்கோட்டை (நாவல்), தமிழகத்தில் வைதீகம்,ஒரு நகரமும் ஒரு கிராமமும் என்று நூல்கள் அவை.இதன் சிறப்புகளைப் பலபட எடுத்துரைத்தார்.

துணைவேந்தர் சபாபதிமோகன் அவர்கள் அடுத்த ஆண்டு நெல்லையில் இந்தக் கருத்தரங்கம் நடக்க உள்ளதைக் கூறியதும் அரங்கம் மகிழ்ச்சியில் ஆரவாரித்தது. தமிழ் இன உணர்வுடன் பேசி அரங்கிற்குத் தமிழ் உணர்வேற்றி சபாபதிமோகன் தன் உரையை நிறைவு செய்தார்.

பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் தம் இளமைக்காலம் தொடங்கித் தன்முன்னேற்றம் வரை எடுத்துரைத்து அனைவருக்கும் தன்னம்பிக்கை ஊட்டினார். எதிர்காலத்தில் மூன்று பல்கலைக்கழகங்களும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் இட்டுத் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட உள்ளதைச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

பிற்பகல் ஆய்வரங்கு நடந்தது.

மாலையில் நடைபெற்ற ஆய்வரங்கில் வலைப்பதிவுலகில் திரட்டிகளின் பங்களிப்பு என்ற என் கட்டுரையைக் காட்சி விளக்கத்துடன் வழங்கினேன். பேராசிரியர்கள் சிற்பி,தமிழண்ணல், இரா.மோகன், ஆறு.அழகப்பன், காவ்யா சண்முகசுந்தரம்,பேராசிரியர் சுபாசு சந்திரபோசு, மணிவேல், சேதுபாண்டியன், பேராசிரியர் சபாபதி(மலேசியா) உள்ளிட்ட அறிஞர்களுக்கு நடுவே என் கட்டுரை வழங்கப்பெற்றது.பேராசிரியர் சிறீகுமார் தலைமை தாங்கினார்.

மாலையில் இசையறிஞர் மம்முது அவர்களின் தொல்காப்பியர் இசையியல் என்ற தலைப்பிலான உரை அமைந்தது.