நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 21 ஜூலை, 2013

புதுவைப் புலவர் சி.இராமலிங்கம் அவர்கள்



 புலவர் சி.இராமலிங்கம் அவர்கள்

புதுச்சேரியில் வாழும் தமிழ் அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் புலவர் சி.இராமலிங்கம் அவர்கள் ஆவார். எளிமையும் அன்பும் கொண்ட இவர் புதுச்சேரி மாநிலத்தின் கல்வித்துறையில் முதல்நிலைத் தமிழாசிரியராக 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். இப்பொழுது புதுவையை அண்மியுள்ள தவளக்குப்பம் ஊரில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். இவர்தம் பிறந்த ஆண்டு 17-09-1942 ஆகும். பெற்றோர் அலர்மேலம்மாள், சின்னசாமி ஆவர். சி.பெருந்தேவன் என்ற புனைபெயரில் எழுதி வருகின்றார். பல்வேறு கவியரங்குகள், பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய பெருமைக்குரியவர். 

புலவர் சி.இராமலிங்கம் அவர்கள் அ) பிரவே(தமிழ்)(-புதுச்சேரி அரசு), ) வித்வான்   - (சென்னைப் பல்கலைக்கழகம்),               )       பி.லிட்- (சென்னைப் பல்கலைக் கழகம்), ஈ) எம்.                 - (மதுரைக்  காமராசர் பல்கலைக்கழகம்) ஆகிய பட்டங்களைப் பெற்றவர். புதுவைப் பாவலர் பண்ணையில் மரபிலக்கணம் பயின்று பைந்தமிழ்ப் பாவலர் பட்டம் பெற்றவர்.

புலவர் சி.இராமலிங்கம் அவரகள் எழுதியுள்ள திருவள்ளுவர்க்குப் பின் அரசியல் அறம் என்ற நூல் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 113 அதிகாரங்களில் 1130 குறட்பாக்களை உரையுடன் இந்த நூலில் புலவர் சி.இராமலிங்கம் தந்துள்ளார். உரைவிளக்கம் முதலிலும் அடுத்துக் குறட்பாக்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுள் சமூகம், அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், கல்வி, அறிவியல், குடும்பம், காதல் முதலிய அனைத்துப் பொருண்மைகளும் இடம்பெற்றுள்ளன. இந்திய மக்கள் மேம்பாடுற அரசியல், தொழில்நுட்பத்துறைகளில் முன்னேற வேண்டும் என்பதையும் தூய மக்கள் தொண்டர்கள் நாட்டை ஆளவேண்டும் என்பதையும் இந்த நூலில் ஆசிரியர் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார்.

“காலத்தை ஓட்டுவதும் கையூட்டை நோக்குவதும்
சாலப் பெரும்பழிப்பாம் சாற்று” (பக்கம்.6)

எனவும்,

“கெண்டையைப் போட்டு வரால்பிடிக்கும் கேடர்களால்
உண்டாமோ நாட்டில் உயர்வு?” (பக்கம்,20)

 எனவும்

“விண்வெளி ஆய்வில் வெற்றித் தடம்பதித்தல்
மண்ணில் அறிஞர்க்கு மாண்பு” ( பக்கம் 218)

எனவும் இடம்பெறும் குறட்பாக்கள் இன்றைய சமூகச்சூழலை மனதில்கொண்டு வரையப்பட்டுள்ளமை பாராட்டிற்கு உரியதாகும்.

மரபுக்கவிதைகள் சமூக நடப்பியலைச் சித்திரிக்கவில்லை என்பாரின் கூற்றைப் பொய்யாக்கும் வண்ணம் சிறந்த குறட்பாக்களைத் தந்துள்ள புலவர் சி.இராமலிங்கனார் நம் பாராட்டிற்குரியவர்.


புலவர் சி.இராமலிங்கம் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள இலக்கிய நூல்கள்:
                               
1.   கருவடிக்குப்பம் ஸ்ரீமத் சித்தானந்த சுவாமிகள் பதிகம்,1966
2. கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா,1981
3.  அறிவுலகக் காவலர்கள்,1985
4. கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் அந்தாதி.
5. கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் இரட்டைமணிமாலை,1993
6. கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் திருப்பள்ளி எழுச்சி,2002
7. கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் திருவருட்பனுவல் திரட்டு , 2003
8. ஆசிரியர் அறம்,2003
9.  கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் ஆனந்தமாலை,2005
10  கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் போற்றித் திருவகவல்,   2006
11. அறத்தின் ஆட்சி,2007
12.கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் திருப்பள்ளி எழுச்சி - தெளிவுரை,2008
13. திருவள்ளுவருக்குப்பின் அரசியல் அறம்,2012

புலவர் சி.இராமலிங்கம் அவர்களின் முகவரி:

69, சின்னசாமி தெரு, தவளக்குப்பம், புதுச்சேரி – 605007
தொடர்புக்கு: + 8940899885


பாவலர் சாமி.பழனியப்பன் அவர்கள் மறைவு


சாமி.பழனியப்பன்

பாரதிதாசன் பரம்பரைக் கவிஞரும், திரைப்பா ஆசிரியர் திரு. பழநிபாரதி அவர்களின் தந்தையாருமான ஐயா சாமி.பழனியப்பன் அவர்கள் நேற்று (20.07.2013) சனிக்கிழமை இரவு தம் 82 ஆம் அகவையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றேன். 16, 17 – 08 - 1993 இல் இருமுறை ஐயா சாமி பழனியப்பன் அவர்களை உவமைக்கவிஞர் சுரதா அவர்களுடன் சென்னையில் அவர் இல்லம் சென்று சந்தித்துள்ளேன். பழகுதற்கு இனிய பண்பாளர். ஊற்றமான கொள்கைப்பிடிப்பாளர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், கலைஞர், தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட தமிழகத்துப் பெரியோர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தவர்.

பொன்னி இதழில் அமைதிகொள்வாய் என்ற தலைப்பில் இவர் எழுதிய பாடல் (1947, நவம்பர்) இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது. இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி இதழில் இவர் துணையாசிரியராகப் பணியாற்றியவர்.

சாமி.பழனியப்பன் அவர்களின் தந்தையார் உ.வே.சாமிநாதன் அவர்கள் தீவிரமான சுயமரியாதைக்காரர். எனவே சாமி. பழனியப்பனுக்கு இளமையிலிருந்து சுயமரியாதை உணர்வு சிறப்பாக அமைய வாய்ப்பு ஏற்பட்டது.

சாமி. பழனியப்பன் அவர்கள் மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றவர். இவர்தம் இளம் வகுப்புத் தோழர்களாக முடியரசன், தமிழண்ணல், மெ. சுந்தரம் முதலானவர்கள் விளங்கினார்கள். பள்ளி, கல்லூரிகளில் பயின்றபொழுதே இலக்கிய மன்றங்களில் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டவர். இளமையில் கரந்தைக் கவியரசு இரா. வேங்கடாசலம் பிள்ளையின்  தலைமையில் “நான் விரும்பும் கவிஞர்” என்னும் தலைப்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனைப் பற்றிச் சொற்பொழிவாற்றிய பெருமைக்குரியவர். இவர் குமரன், பொன்னி, வீரகேசரி, திராவிடநாடு, வாரச்செய்தி(காரைக்குடி), தென்றல் முதலான இதழ்களில் எழுதியவர்.

“சிரிக்கும் வையம்” என்ற தலைப்பில் இவர் இயற்றிய இந்தி எதிர்ப்புப்பாடல் அடங்கிய நூல் வெளிவந்துள்ளது. பாரதிதாசனுடன் இரண்டாண்டுகள் தங்கி அவர் உதவியாளராகவும், திருக்குறள் புரட்சி உரை அச்சுப்பணி பொறுப்பாளராகவும் செயல்பட்டவர். இவர் பாவேந்தர்மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதற்கு அடையாளமாகப் பாரதியாரையும் பாரதிதாசனையும் ஒப்பிட்டு 1953 இல் “பாரதியும் பாரதிதாசனும்” என்ற தலைப்பில் சிறிய நூலை வெளியிட்டவர். சாமி.பழனியப்பன் கவிதைகள் என்ற இவர்தம் நூல் இவர் மிகச்சிறந்த கவிஞர் என்பதை மெய்ப்பிக்கும் சான்றாக உள்ளது.

பொன்னியில் வெளிவந்த சாமி. பழனியப்பன் கவிதை

அமைதிகொள்வாய்!

அலைகடலே! இவ்வுலகின் பெரும்பகுதி தன்னை
ஆளுகிறோ மென்கின்ற ஆணவத்தி னாலா
நிலைகெட்டுச் சினக்கின்றாய்? உன்னா லிந்த
நீணிலத்திற் கெள்ளளவும் நன்மை யுண்டா?
அலைகளைநீ அடுக்கடுக்கா யனுப்பு கின்றாய்,
அன்னவையோ மடிந்துபடும் ஒவ்வொன் றாக,
நிலைமறந்தே, உயர்வானைப் பிடிக்க ஏனோ
நினைக்கின்றாய்! மறந்துவிடு! அமைதி கொள்வாய்!

வறுமைமிகு தொழிலாள ருணர்வு பெற்று,
வஞ்சகரின் நெஞ்சுகளில் வாள்பு குத்தப்
புறப்பட்டா ரெனக்கூறும் வகையில் நீயும்
பொங்குகின்றா யென்றாலும் மறுக ணத்தில்
இறந்துவிடு கின்றனையே! புறப்பட்டோரின்
இறுதிநிலை யுணர்த்துவதா யெண்ணம் போலும்!
மறந்துவிடு! தொழிலாளர் புரட்சி தன்னை
மாய்க்கவொணா திவ்வையம்! அமைதி கொள்வாய்!

மணித்துளிகள் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சென்று
மடிதலுக்கோர் எடுத்துக்காட் டாய்வி ளங்கும்
அணிவகுத்துச் சென்றழியும் அலைகள் யாவும்!
ஆர்ந்துள்ள இவ்வுலகில் பெண்ணொ ருத்தி,
கணிகையென ஆகின்றாள் சிலரைச் சேர்ந்தால்!
காரிகைகள் பல்லோரை ஒருவன் சேர்ந்தால்
கணிகனென அன்னவனைக் கழற மாட்டார்!
கடலே! அத்துணிவாலா நீயு மிந்நாள்,

திங்களினைக் கண்டதுமே மேலெழும்பித்
தீராத காதலினைத் தீர்க்க எண்ணிப்,
பொங்குகின்றாய்? அதனாலே பயனென் கண்டாய்?
புன்மைக்கும் அன்னவளோ ஒப்ப வில்லை.
மங்காத காதல்கொண்ட அல்லி என்னும்
மலர்வனிதை தனைக்கலந்த பின்னர் வேறு
நங்கையினைக் காதலித்தல் தவறாமென்று
நகைத்தலினைக் கண்டிடுவாய், அமைதி கொள்வாய்!


பொன்னி 1: 10, நவம்பர்,1947, பக்கம் 84,85