நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 29 பிப்ரவரி, 2008

பத்துப்பாட்டு பாடியவர்கள் பட்டியல்

பத்துப்பாட்டு

தமிழர்களின் பண்டைய வரலாற்றையும்,வாழ்க்கை முறைகளையும், கலைகள், விருந்தோம்பல், ஆட்சிச் சிறப்பினையும் அறிவிக்கும் ஆவணமாக இருப்பன பத்துப்பாட்டு நூல்களாகும். பண்டைத் தமிழகத்தின் பல பகுதிகளைப் பற்றி அறிவதற்கு இந்நூல்கள் பேருதவி புரிகின்றன.இசை,கூத்து பற்றிய அரிய வரலாறு இந்நூல்களில் இடம்பெற்றுள்ளன.தமிழர்களின் அறிவுக்கருவூலமான இந்நூல்களை வழங்கிய புலவர் பெருமக்களைப் பற்றிய பட்டியலை வழங்குகிறேன்.இவர்களின் விரிந்த வரலாறு பின்னர் வெளியிட உள்ளேன்.

பாடியவர்கள் பட்டியல்

1.திருமுருகாற்றுப்படை - நக்கீரனார்
2.பொருநராற்றுப்படை - முடத்தாமக்கண்ணியார்
3.சிறுபாணாற்றுப்படை - இடைக்கழிநாட்டு
நல்லூர் நத்ததனார்
4.பெரும்பாணாற்றுப்படை- கடியலூர் உருத்திரங்கண்ணனார்
5.முல்லைப்பாட்டு - காவிரிப்பூம்பட்டினத்துப்
பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
6.மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்
7.நெடுநல்வாடை - மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்
8.குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
9.பட்டினப்பாலை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
10.மலைபடுகடாம் - இரணியமுட்டத்துப்
பெருங்குன்றூர்பெருங்கௌசிகனார்

வியாழன், 28 பிப்ரவரி, 2008

கணினியும் இணையப் பயன்பாடும் ஒருநாள் கருத்தரங்கு

புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர்கல்லூரியும், சென்னைத் தமிழ் இணையப் பல்கலைக்கழகமும் இணைந்து 28.02.2008 காலை 10.30 மணியளவில் கணினியும் இணையப்பயன்பாடும் என்னும் பொருளில் ஒருநாள் பயிலரங்கை மாணவிகள் பயன்பெறும் வண்ணம் நடத்தின.

பயிலரங்கிற்கு வந்திருந்தவர்களைத் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் இராமேசுவரி அவர்கள் வரவேற்றார். தமிழ் இணையப்பல்கலைக்கழக இயக்குநர் திரு.ப.அர.நக்கீரன், பேராசிரியர் சுதந்திரமுத்து, திரு.சானகிராமன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பணிகளை விவரித்தனர். மாணவர்களுக்குக் காட்சி விளக்கமும் தரப்பெற்றன.

பிற்பகல் நடைபெற்ற அமர்வில் முனைவர் மு.இளங்கோவன், திருவாட்டி.மிக்சிமோள் திரு.கண்ணதாசன், திரு.சாகுல் அமீது ஆகியோர் கருத்துரை வழங்கினர். தமிழ்த்துறைப் பேராசிரியர்களும், பிற துறைப் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.