வியாழன், 2 மார்ச், 2017

தொல்காப்பியத்தில் சிக்கல்கள் என்னும் தலைப்பில் தொடர்பொழிவு

முனைவர் இராச. திருமாவளவன்

புதுச்சேரியில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவு 02.03.2017 வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 8.15 மணி வரை நடைபெற்றது. புதுச்சேரி நீட இராசப்பையர் வீதியில் உள்ள செகா கலைக்கூடத்தில் நடைபெற்ற தொடர்பொழிவுக்குப் பேராசிரியர் கு. சிவமணி தலைமை தாங்கினார். வில்லிசை வேந்தர் இ. பட்டாபிராமன்  தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடினார். முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரையாற்றினார். முனைவர் மு. இளங்கோவன் அறிமுகவுரையாற்றினார்.

பேராசிரியர் கு. சிவமணி தொல்காப்பியச் சிறப்புகளை எடுத்துரைத்து, தொல்காப்பியர் காலம் குறித்தும், கடல்கொண்ட தென்னாடு தொடர்பாக ஆகமங்களிலும் வடமொழி நூல்களிலும் இடம்பெற்றுள்ள குறிப்புகளையும் எடுத்துரைத்தார்.

தமிழறிஞர் இராச. திருமாவளவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொல்காப்பியச் சிக்கல்கள் என்ற தலைப்பில் அரியதொரு ஆராய்ச்சி உரை நிகழ்த்தினார். தொல்காப்பியத்தில் பொதிந்துள்ள சிக்கல்கள் சிலவற்றை  அறிஞர்களின் கவனத்திற்கு முன்வைத்தார். தொல்காப்பிய நூலின் மூலம், உரையாசிரியர் கருத்துகள், இவற்றை விளக்கிக்காட்டினார். மேலும் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் இடம்பெற்றுள்ள நூல்மரபு நூற்பாக்களில் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தார். இவர்தம் உரையில் இடம்பெற்ற கருத்துகளை ஒட்டி அறிஞர்கள் உடன்பட்டும், உறழ்ந்தும் கருத்துரைத்தனர். தமிழாகரர் தெ. முருகசாமி, பேராசிரியர் விசயவேணுகோபால், முனைவர் தி. செல்வம், பாவலர் மு.இளமுருகன், முனைவர் சிவ. இளங்கோ, தமிழ்மாமணி சீனு. இராமச்சந்திரன், பாவலர் சீனு. தமிழ்மணி, புதுவைத் தமிழ்நெஞ்சன், கல்வித்துறையின் முன்னை இணை இயக்குநர் அ. இராமதாசு, திரு. தூ. சடகோபன், அறிவியல் அறிஞர் தாமரைக்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாவலர் மு. இளமுருகன் நன்றியுரை வழங்கினார்.

முனைவர் கு. சிவமணி அவர்களின் தலைமையுரை

தமிழாகரர் தெ. முருகசாமி

மு.இளங்கோவன்(அறிமுகவுரை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக