நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
குறுவட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறுவட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 ஜூன், 2010

திருக்குறள் ஒலிப் பதிப்பு



திருக்குறள் தமிழர்களின் வாழ்வியல் மேன்மை காட்டும் நூலாகும். இதனை மேல்நாட்டு அறிஞர்கள் மொழிபெயர்ப்புகள் வழியாக வெளியுலகுக்கு அறிமுகம் செய்தனர்.

ஒலிப்பேழைகளாக(கேசட்) முன்பு திருக்குறள் உலகத் தமிழர்களுக்குக் கிடைத்தது.இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னிற்கும் தமிழர்கள் தங்கள் அறிவுத்திறமைகளால் திருக்குறளை ஒலிவடிவில் கேட்டு மகிழக் குறுவட்டுகளாக வெளியிட்டுள்ளார்கள்.

1330 அருங்குறட்பாக்களும் எட்டரை மணி நேரம் கேட்டு மகிழும் வகையில் உரையுடன் குறுவட்டில் பதிப்பித்துள்ளனர்.முன்னுரையும்,பால்பகுப்பும் சுட்டி,இயல் பகுப்பு உணர்த்தி,அரிய இசை முன்னோட்டமும்,அதிகாரத்தின் எண்ணும்,அதிகாரத் தலைப்பும்,குறளும் அதற்குரிய பொருளும் இசை நிறைவும் கொண்டு ஒவ்வொரு அதிகாரமும் இந்தக் குறுவட்டில் சிறப்புடன் பதிவு செய்யப்பெற்றுள்ளது.பின்னணி இசையும் மென்மையாக ஒலிக்கின்றது.

திருக்குறளை இனிய குரல்வளத்துடன் பொருள் விளங்கும்படி படித்து, கேட்பவர்களுக்குச் சலிப்பு ஏற்படாமல் பதிவு செய்துள்ளமை பாராட்டத்தகுந்த முயற்சியாகும்.

முனைவர் க.ப.அறவாணன் அவர்களின் திருக்குறள் உரை இந்த ஒலிப்பேழையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திரு.டெய்சன் அவர்களின் குரலில் ,ஒலிவல்லுநர் தினேசுகுமார்,(கிருபா எண்மியம்)ஒலிக்கோர்வை செய்ய, அமரர் இரா.இரவிச்சந்திரன் இசையில் இவர்களின் கூட்டுழைப்பில் இந்த ஒலிக் குறுவட்டு கோவையிலிருந்து செம்மொழி மாநாடு நடைபெறும் நாளில் வெளிவருவது பொருத்தமேயாகும்.

திருக்குறள் ஒலிக் குறுவட்டுகள் செம்மொழி மாநாட்டை ஒட்டி நடக்கும் தமிழ் இணையமாநாட்டு அரங்கில் கண்காட்சிக்கூடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.தேவையானவர்கள் குறிப்பாக அயல்நாட்டுப் பேராளர்கள் வாங்கிக்கொள்ளமுடியும்.

நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள்,அல்லது அலுவலகப் பணிகளில் ஈடுபடுபவர்கள் திருக்குறளைக் கேட்டபடி தங்கள் பணிகளைச் செய்ய இத்தகைய ஒலிப்பதிப்புகள் பயன்படும்.அயல்நாட்டுத் தமிழர்கள்,தமிழ் ஆர்வலர்கள் யாவருக்கும் பயன்பட இருக்கும் இந்த ஒலிக்குறுந்தட்டை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன்.
ஒரு குறுவட்டின் விலை (இந்திய உருவா) 150-00

தொடர்புக்கும்,விற்பனைக்கும்:
Universal e Publishers
contactus@universalepublishers.com
+91 96291 88882

வெள்ளி, 9 ஜனவரி, 2009

ம.இலெ.தங்கப்பா அவர்கள் எழுதிய பாடல்கள் தங்கப்பாப்பாவுக்குத் தங்கப்பாடல்கள் குறுவட்டு வெளியீடு



பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்கள் புதுச்சேரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.மரபுப்பாடல்கள் எழுதுவதில் வல்லவர்.சங்கப்பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் ஆற்றல் உடையவர்.சிறுவர்களுக்கு இவர் எழுதிய எங்கள் வீட்டுச் சேய்கள், இயற்கை விருந்து,மழலைப்பூக்கள் உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கன.

இப்பாடற் தொகுதியிலிருந்து சிறந்த பாடல்கள் 29 ஐத் தேர்ந்தெடுத்துத் தக்க
இசைக்கலைஞர்களைக் கொண்டு பாடுவித்துக் குறுவட்டாகவும் ஒலிநாடாவாகவும் வெளியிட உள்ளனர்.

இந்தப் பாடல்கள் பிறமொழிச்சொற்கள் கலவாமல் எழுதப்பட்டுள்ளன.பள்ளிக் குழந்தைகளுக்கு வாங்கியளிக்கலாம்.வீட்டுப் பிள்ளைகளுக்கு வாங்கிக் கேட்கச் செய்யலாம். பெரியவர்களும் கேட்டு மகிழலாம்.மழலைகளுக்கு உரிய அரிய பாடல்கள் இத்தொகுதியில் உள்ளன.

முன்விலையில் பதிந்து வாங்குபவர்களுக்குச் சலுகைவிலை உண்டு.குறுந்தகடு 70.00 உரூவா மதிப்பு. முன்பதிவில் 60.00 உரூவாவிற்குப் பெறலாம்.ஒலிநாடா 40.00 விலை.முன்பதிவில் 30.00 உரூவாவிற்குப் பெறலாம்.

தொடர்பு முகவரி :

வானகப் பதிப்பகம்
7,பதினொன்றாம் குறுக்கு,
அவ்வை நகர்,புதுச்சேரி - 605 008
தொலைபேசி 0413- 2252843
மின்னஞ்சல் : seruvenrachezhian@gmail.com

ஒலி வட்டும் குறுந்தகடும் 15.02.2009 மாலை புதுச்சேரியில் வெளியிட உள்ளனர்.