புதன், 5 டிசம்பர், 2018

புலவரைப் போற்றுவோம்! புலவரைப் போற்றுவோம்!



புலவர் இரா. கலியபெருமாள்

 தஞ்சாவூரில் அமைந்துள்ள .மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றுபவரும், முதுபெரும் புலவர் பெருமானும் ஆகிய முனைவர் இரா. கலியபெருமாள் அவர்களின் பிறந்தநாளான இன்று (திசம்பர் 5) ( பிறந்த ஆண்டு: 05.12.1936) அவர்தம் தமிழ் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் காணொளியை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைப்பதில் மகிழ்கின்றேன். ஈராண்டுகளுக்கு முன்னர் கரந்தை தமிழவேள் உமாமகேசுவரனார் கல்லூரி வளாகத்தில் ஒளிப்பதிவு செய்யப்பெற்ற இக்காணொளியை எனக்கு அமைந்திருந்த பல்வேறு பணிகளால் உடன் அணியப்படுத்த முடியவில்லை. அப்பொழுது ஒளிப்பதிவுக்கு உற்றுழி உதவிய என் அருமை நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் க. அன்பழகன் அவர்களுக்கும், எங்களின் அழைப்பை ஏற்று மூன்றரை மணிநேரம் நின்றகோலத்திலேயை ஒளிப்பதிவுக்கு ஒத்துழைத்து, உதவிய புலவர் இரா. கலியபெருமாள் ஐயாவுக்கும் மிகுந்த நன்றியன்.

 புலவர் இரா. கலியபெருமாள் அவர்கள் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு முன்னோடியான மாணவர்; ஆசிரியர்களுக்கு முன்மாதிரியான ஆசிரியர். இவர்தம் மனப்பாட ஆற்றலை இந்தக் காணொளி வழியாக அறியமுடியும். இறையனார் அகப்பொருளுரையையும், கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் திரைப்பட உரைவீச்சையும் புலவர் அவர்கள் மனப்பாடமாகச் சொல்லும் அழகில் தமிழ்ச் செழுமை புலப்படும். கரந்தைப் புலவர் கல்லூரியில் அக்காலத்தில் புகழோடு விளங்கிய புலவர் ந. இராமநாதனார், அடிகளாசிரியர், ச. பாலசுந்தரம், கு.சிவமணி ஐயா உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் வீறார்ந்த தமிழ்ப்புலமையைப் புலவர் அவர்கள் நன்றியுடன் குறிப்பிடுவதிலிருந்து அவர்தம் ஆசிரியப் பற்றுமை புலப்படும்.

 தமிழ்நாட்டரசும், தமிழ்ச் செல்வர்களும், தமிழமைப்புகளும் இவரைப் போன்ற தன்மானத் தமிழ்ப்புலவர்களைக் கொண்டாடுங்கள் என்ற பணிவான வேண்டுகோளை வைக்கின்றேன்.

 புலவர் இரா. கலியபெருமாள் ஐயா அவர்களின் பிறந்த நாளில் அவர்தம் தமிழ்த்திருவடிகளைப் போற்றி வணங்குகின்றேன்.

 புலவர் பெருமான் அவர்கள் தமிழ்போல் நீடு வாழி!

 புலவரின் காணொளியைப் பார்க்கவும் கேட்கவும் இங்கே அழுத்துக!

2 கருத்துகள்:

  1. உங்களின் சாதனைகளில் இதுவும் ஒன்று. ஐயாவைப் பற்றி உங்கள் மூலமாக அறிந்துகொள்வதில் பெருமையடைகின்றேன்.

    பதிலளிநீக்கு
  2. காணொலி கண்டு மகிழ்ந்தேன் ஐயா
    தங்களின் முயற்சி போற்றுதலுக்கு உரியது

    பதிலளிநீக்கு